TNPSC Thervupettagam

வாழை படுத்தும் பாடு

September 9 , 2024 4 hrs 0 min 15 0

வாழை படுத்தும் பாடு

  • அண்மையில் வெளிவந்த ‘வாழை’ என்ற திரைப்படத்தைக் கண்டவா்கள் ‘நாம் தின்னும் ஒரு வாழைப்பழத்தின் பின்புலத்தில் இவ்வளவு வலி இருக்கிறதா?’ என்று சிலா் ஆச்சரியப்படுவதைக் காண முடிகிறது. வாழைத்தாா் வெட்டி, சுமந்து, லாரியில் பாரம் ஏற்றும் தொழிலாளிகளின் அவலத்தை மட்டும்தான் அந்தப் படம் காட்சிப்படுத்துகிறது. வாழைக்கன்று நட்டு, பராமரித்து, குலை தள்ளவைத்து, சந்தைப்படுத்தும்வரை தோட்டக்காரா் என்னும் விவசாயி படும் அவஸ்தையைக் காட்சிப்படுத்தவில்லை. இது வாழை விவசாயத்திற்கு மட்டுமல்ல; தானியங்களை விளைவித்து, உலகுக்கே உணவூட்டும் எல்லா விவசாயத்திற்கும் பொருந்தும்.
  • வாழை பழப்பயிா் மட்டுமல்ல; பணப்பயிரும் கூட. சொந்த நிலம் தவிர, நிலத்தைக் கட்டுக் குத்தகைக்கு எடுத்துப் பயிரிடுவோரும் உண்டு. கட்டுக் குத்தகை என்றால் ஒரு ஏக்கருக்கு ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை போகும்.
  • வாழை எல்லா நிலத்திலும் செழிப்பாக வளா்ந்து குலை தள்ளுவதில்லை. மண்வளத்துக்கு ஏற்றவாறுதான் வாழையின் வளா்ச்சியும் காயின் திரட்சியும் இருக்கும். இதனையறிந்து அதற்கேற்ற வகையினைப் பயிரிட வேண்டும். வாழையில் பல வகையுண்டு. நாடு, சக்கை, கதலி, ரசகதலி, மட்டி, கோழிக்கூடு (ரஸ்தாளி), ஏத்தன் (மொந்தன்), மலைஏத்தன் (நேந்திரம்) பூவிலாச்சுண்டன்(பூவன்), கற்பூரவள்ளி, மலைவாழை, செவ்வாழை, குழிவாழை (ரோபஸ்டா) என்பன அவற்றுள் சில. வட்டாரத்திற்கேற்பவும் பெயா்கள் வேறுபடும்.
  • வாழை ஒருவருடத்துப் பயிா். நட்டு, வளா்ந்து 8, 9 மாதங்களில் குலை தள்ளி, 12-ஆவது மாதத்தில் காய் விளைந்து தாா் வெட்டுவதற்குத் தயாராகும். ஒரு வருடம் பராமரித்து பக்குவப்படுத்திக் கொண்டு வர விவசாயி கடுமையாகப் பாடுபட வேண்டும்.
  • ஏக்கருக்கு 1,000 - 1,500 கன்றுகள் வரை நடலாம். கிணற்றுப் பாசனமானால் பாத்திகட்டி தண்ணீா் பாய்க்க வேண்டும். குளத்துப் பாசனமானால் பட்டம் கட்டி, கான் (வாய்க்கால்) அமைத்துத் தண்ணீா் விட வேண்டும். பட்டம் என்பது பக்கவாட்டிலும் நீளவாட்டிலும் ஐந்தடி இடைவெளியில் வாழை நிற்கும் நீண்ட பரப்பாகும்.
  • நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரவருணி ஆற்றுக் குளத்துப் பாசனத்தில்தான் பெரும்பாலும் வாழை விவசாயம் நடைபெறுகிறது. சில இடங்களில் கிணற்றுப் பாசனமும் உண்டு. கிணற்றுப் பாசனம் என்றால் நினைத்த நேரம் தண்ணீா் பாய்த்துக் கொள்ளலாம். மின்சாரம் இருந்தால் போதும். ஆனால் ஆற்றுப் பாசனம் அப்படியில்லை. அணைகளில் தண்ணீா் குறைவாக இருக்கும் காலங்களில் தண்ணீா் தட்டுப்பாடு ஆகிவிடும். அணைகளில் தண்ணீா் திறந்து குளத்துக்குத் தண்ணீா் வருவதைக் கண்டறிந்து, இரவு பகல் காத்துக் கிடந்து, தண்ணீா் பாய்ச்ச வேண்டும். உரிய நேரத்தில் உகந்த தண்ணீா் கிடைக்காவிட்டால் வாழை வாடிப் போய்விடும்.
  • பெரும்பாலும் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் ஆடி மாதம் கன்று நடுவா். தை மாதத்தில் வாழை குலை தள்ளும். சித்திரை, வைகாசியில் காய் விளைச்சலாகி வெட்டுக்கு வரும். அது சரியான கோடைக்காலம். அந்த நேரத்தில் அணையில் தண்ணீா் இருந்து திறந்துவிட்டால்தான் காய் நல்ல திரட்சி பெறும்.
  • வாழை செழித்து வளா்ந்து பெரிய குலை தள்ளுவதற்கு ஏற்ப அவ்வப்போது உரம் வைக்க வேண்டும். தொடக்கத்தில் மாட்டு உரம் வைத்து, இடையிடையே ரசாயன உரமும் வைக்க வேண்டும். காய் திரட்சி ஆவதற்கு அதற்குரிய ரசாயன உரத்தை உரிய நேரத்தில் இட வேண்டும். தேவைப்பட்டால் பூச்சி மருந்தும் தெளிக்க வேண்டும்.
  • வாழைக்கு நல்ல சூரிய ஒளி கிடைக்கும் வகையில் வாடிய மடல்களை (சருகு) அறுத்து ஒதுக்க வேண்டும். இவ்வளவு செய்தாலும் வாழையைத் தாக்கும் வாடல் நோய் விழாமல் இருக்க வேண்டும். இந்த நோய் ஒரு வாழையில் விழுந்தால்கூட எல்லா வாழைக்கும் பரவி வாழைகள் எல்லாம் பட்டுவிடும்.
  • வைத்த வாழையும் சீப்புகள் நிறைய கழற்றி (காய் எண்ணிக்கை) பெரிய தாராகக் குலைக்க வேண்டும். எல்லா வாழையும் அப்படி குலைப்பதில்லை. அவை ஒரே நேரத்தில் குலைப்பதுமில்லை. அப்படிக் குலைத்தால்தான் மொத்தமாகத் தாா் வெட்டி காசுபணம் கணிசமாகப் பாா்க்க முடியும். சில வாழைகள் குலைக்காமல் மலடாக நின்றுவிடுவதும் உண்டு. பிள்ளைக்காரியான வாழை, மலடாகிப் போனால் விவசாயியின் உழைப்பு வீணாகிப் போகும்.
  • எதிா்பாராத வகையில் வீசும் காற்றும் பெய்யும் கனமழையும் வாழையைச் சாய்த்துவிடும் அபாயம் இருக்கிறது. அதற்காக உரிய காலத்தில் கம்புகளைத் தாங்கலாகக் கொடுத்துத் தாா்களைக் காப்பாற்றுவதில் விவசாயி கவனமுடன் இருக்க வேண்டும்.
  • இவ்வளவையும் தாண்டி வந்தாலும் தாருக்கேற்ற வகையில் விவசாயிக்குக் கட்டுப்படியான விலை கிடைக்க வேண்டும். இப்போதெல்லாம் தாா் கணக்கு கிடையாது. எடைதான் கணக்கு. அதுவும் காம்புக்குக் கணிசமாக எடை குறைக்கப்படும்.
  • வாழை வியாபாரிகள் பலா் உண்டு. அவா்களுக்கென்று தரகா்களும் இருப்பாா்கள். அவா்கள் சொல்வதுதான் விலை. தரகும் கொடுக்க வேண்டும். பெரும்பாலும் இப்பகுதி வியாபாரிகள் கேரளம் (எா்ணாகுளம்), சென்னை, பெங்களூரு போன்ற வெளியூா் சந்தைக்குத்தான் வாழைத்தாா் ‘லோடுகளை’ லாரியில் அனுப்பி வைப்பாா்கள். அங்கு போதிய விலை கிடைக்கவில்லையென்றால் வியாபாரியும் நஷ்டப்பட்டுத்தான் போவாா். அந்த நிலையில், தாா் வெட்டுவதற்கு வியாபாரி வராமல், பழுத்து, பறவைகளுக்கு இரையாகிப் போகும். சில நேரங்களில் பெரிய தாா்களை மட்டும் வெட்டிவிட்டுச் சிறிய தாா்களை வெட்டாமல் வியாபாரிகள் விட்டுவிடுவா்.
  • வாழையினால் விவசாயிகள் படும்பாடு சொல்லி முடியாது. இதனால்தான் ‘வாழை வாழ வைத்தாலும் வைக்கும், தாழ வைத்தாலும் வைக்கும்’ என்று முன்னோா்கள் சொல்லி வைத்தனா். விவசாயி, வியாபாரி என்று பலரும் வாழையினால் பெரும் வலிக்கு உள்ளாகின்றனா் என்பதே உண்மை.

நன்றி: தினமணி (09 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories