TNPSC Thervupettagam

ஆகஸ்ட் 1 – 7 - தாய்ப்பால் வாரம்: தாய்ப்பால் வங்கியின் அவசியம்

August 5 , 2023 396 days 218 0
  • தாய்ப்பாலே குழந்தைகளுக்கான முதல் தடுப்பு மருந்து; அதில் இம்யூனோகுளோபுலின் ஏ எனும் நோய் எதிர்ப்புப் புரதம் இருக்கிறது. குழந்தைக்குச் சளி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட எவ்வித நோய்த் தொற்றும் ஏற்படாமல் இது பாதுகாக்கிறது. மற்ற நோய்களுக்கான எதிர்ப்பாற்றலையும் தருகிறது. மேலும், தாய்ப்பால் குழந்தைகளுக்கான தன்னிகரற்ற உணவாகவும் உள்ளது. குழந்தைக்குத் தேவையான கொழுப்பு, சர்க்கரை, புரதம், வைட்டமின் ஏ, சி, கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட எல்லாச் சத்துகளும் தாய்ப்பாலில் அடங்கியுள்ளன.
  • குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்கவேண்டியது தாயின் முழுமுதல் கடமை. சிசேரியன் அறுவைப் பேறு மேற்கொண்ட தாய்மார்கள் மயக்கம் தெளிந்த பின்னர் தாய்ப்பால் கொடுக்கலாம். பால் சரிவரச் சுரக்காத தாய்மார்களின் குழந்தைகளுக்கும், ஆதர வற்ற குழந்தைகளுக்கும், குறை மாதக் குழந்தைகளுக்கும், எடைக் குறைவாகப் பிறந்த குழந்தைகளுக்கும், எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கிடைக்கச் செய்யும் விதமாகத் தாய்ப்பால் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.

எவ்வாறு செயல்படுகிறது?

  • தாய்ப்பால் வங்கிகள், பச்சிளம் குழந்தைகளுக்குப் பால் ஊட்டும் செயற்கை அன்னையாக விளங்குகின்றன. தாய்ப்பால் வங்கிகளில், தாய்மார்களின் ஒப்புதலோடு தாய்ப்பால் தானமாகப் பெறப்படுகிறது.
  • முதலில், தாய்மார்களிடமிருந்து பிரஸ்ட் பம்ப் மூலம் தாய்ப்பால் எடுக்கப் படும். உரிய பரிசோதனைகளுக்குப் பிறகு அந்தத் தாய்ப்பாலானது அஜிடேட்டரில் 62 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் முப்பது நிமிடம் வைக்கப்படும். அதன் பின்னர் ஃபிரீஸரில் சேமித்து வைக்கப் படும்.
  • நோய்க் கிருமிகள் எதுவும் இல்லை என்பது உறுதியான பிறகு அது குளிர்பதனப் பெட்டியில் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாக்கப்படும். இறுதியாக, அறை வெப்பநிலைக்குக் கொண்டுவரப்பட்டு தாய்ப்பால் தேவைப்படும் குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிறது.

யாரெல்லாம் தானம்செய்யலாம்?

  • நோய்த்தொற்று இல்லாத ஆரோக்கியமான தாய்மார்கள்
  • சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டு தாய்ப்பால் அருந்த இயலாத குழந்தைகளின் தாய்மார்கள்
  • தன் குழந்தையின் தேவைக்கும் அதிகமாகப் பால் சுரக்கும் தாய்மார்கள்.

யார் தாய்ப்பால் தானம் செய்யக் கூடாது?

  • எச்.ஐ.வி. மஞ்சள் காமாலை, எச்.சி.வி. போன்ற நோய்த்தொற்று உள்ள தாய்மார்கள்
  • மார்பகத் தொற்றுநோய் உள்ளவர்கள்
  • கீமோதெரபி சிகிச்சையில் உள்ள தாய்மார்கள்

யாருக்குக் கொடுக்கப்படுகிறது?

  • குறைமாதக் குழந்தைகள்
  • நோய்வாய்ப்பட்டுத் தீவிர சிகிச்சையில் உள்ள தாய்மார்களின் குழந்தைகள்
  • கைவிடப்பட்ட ஆதரவற்ற குழந்தைகள்

ஏதேனும் ஆபத்து உள்ளதா?

  • தாய்ப்பால் தானம் தருபவர்களுக்கு எந்த உடல் உபாதைகளும் ஏற்படாது. ரத்ததானம் போன்று தாய்ப்பால் தானமும் ஓர் உன்னதமான சேவைதான். ரத்ததானத்தைப் போல் இல்லாமல் இந்தச் செயலை ஒரு தாயால் மட்டுமே செய்ய முடியும் என்பதே இதன் கூடுதல் சிறப்பு.
  • தானமாகப் பெற்ற தாய்ப்பாலால் குழந்தைக்கு நோய் ஏற்படச் சாத்தியமுள்ளதா? - தாய்ப்பால் வங்கியிலிருந்து பெறப்படும் தாய்ப்பால் தரமானதாக, பாதுகாப்பானதாக, நோய்க்கிருமிகள் தாக்கம் இல்லாமல் இருக்கத் தேவையான தடுப்பு முறைகள் அனைத்தும் மேற்கொள்ளப் படுவதால், தானமாகப் பெறப்படும் தாய்ப்பால் பாதுகாப்பானது. ஆயினும் சில கிருமிகள் பரவச் சாத்தியம் உண்டு.

தாய்ப்பால் எத்தனை நாள் சேமிக்கப்படுகிறது?

  • தாயிடமிருந்து பெறப்படும் தாய்ப்பால், மைனஸ் 20 டிகிரி (-20) குளிரில் பதப்படுத்தப்படு கிறது. ஆறு மாதம் வரை அதனைப் பதப்படுத்த முடியும்.
  • வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தாய்ப்பாலை எவ்வாறு தொடர்ந்து கொடுப்பது? - ஆறு மாதம் வரை தாய்ப்பாலே குழந்தைகளுக்கு ஒரே உணவு. தாய்ப்பாலைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாவது கொடுப்பது குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு ஆரம்பக்கட்டத்தில் தேவைப்படும் கொழுப்பு அமிலங்களும் சிஸ்டீன், டாரின் ஆகிய அமினோ அமிலங்களும் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளன.
  • இதிலுள்ள லைசோசைம் எனும் என்சைம் நோய்க் கிருமிகளை அழித்துவிடுகிறது; உடலிலிருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது. உடல் வளர்ச்சி, எலும்பு வளர்ச்சி, தசை வளர்ச்சி, பல் வளர்ச்சி எனக் குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்குத் தாய்ப்பால் தான் உதவ முடியும்.
  • வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தங்கள் வேலை நேரத்தால் குழந்தைகளுக்கு முறையாகத் தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் உள்ளனர். ஆனால், இப்படித் தாய்ப்பால் கொடுப்பதைத் தாய்மார்கள் தவிர்க்கக் கூடாது. தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல்; தாய்க்கும் பல நன்மைகள் கிடைக்கின்றன.
  • முக்கியமாக, தாய்ப்பால் தரும்போது கருத்தரிக்கும் வாய்ப்பு குறைகிறது. பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் உதிரப்போக்கு கட்டுப்படுத்தப்படுகிறது. மார்பகப் புற்றுநோய், சூலகப் புற்றுநோய் போன்றவை ஏற்படும் ஆபத்து குறைகிறது.
  • வேலைக்குச் செல்லும் தாய்மார்கள், தினமும் தாய்ப்பாலை ஒரு பாத்திரத்தில் சேமித்து வீட்டில் உள்ள குளிர்பதனப் பெட்டியில் வைத்துவிட்டுச் செல்லலாம். இவ்வாறு தாய்ப்பாலை மார்பகத்திலிருந்து எடுத்துச் சேமித்து வைக்கப் பல்வேறு கருவிகள் தற்போது விற்கப் படுகின்றன.
  • பின்னர். குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்ட அந்தத் தாய்ப்பாலை வீட்டில் உள்ளவர்கள் குழந்தைக்குக் கொடுக்கலாம். வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தாய்ப்பாலை எடுத்து குளிர்பதனப் பெட்டியில் 24 மணி நேரம் வரை வைத்துப் பயன்படுத்தலாம். மேலும், அறை வெப்ப நிலையில் நான்கு மணி நேரம் வரை கெடாமல் இருக்கும். தாய்ப்பாலை நேரடியாகச் சூடுபடுத்தக் கூடாது.

எங்கெல்லாம் தாய்ப்பால் வங்கிகள் உள்ளன?

  • தமிழகத்தில் தாய்ப்பால் வங்கி 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுப் பல்வேறு இடங்களில் தற்போது இயங்கி வருகிறது. இந்தத் தாய்ப்பால் வங்கிகளில் அனைத்துத் தாய்மார்களும் தானம் செய்யலாம். மக்களிடம் இந்தத் தாய்ப்பால் வங்கிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து இந்தத் திட்டம் எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனை உள்படத் தமிழகத்தில் உள்ள பிற மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் விரிவு படுத்தப்பட்டது. சில தனியார் மருத்துவமனைகளிலும் தாய்ப்பால் வங்கிகள் உள்ளன. இதன் மூலம் பல பச்சிளங் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.

நன்றி: இந்து தமிழ் திசை (05 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories