TNPSC Thervupettagam

இன்பத்தின் நினைவூட்டல்: நர்த்தகி நடராஜ் பேட்டி

January 8 , 2024 195 days 199 0
  • பரத நாட்டியக் கலைஞர் நர்த்தகி நடராஜ் தன்னுடைய பெயருக்கு ஏற்ப ஆடவல்லான் உலகோடு பிணைந்திருப்பவர். நர்த்தகி நடராஜின் ஆளுமை உருவாக்கத்தில் தஞ்சாவூருக்கும் பெரிய கோயிலுக்கும் பெரும் பங்குண்டு. சோழர் காலம் எப்படி இன்றைக்கும் தமிழ் நடன உலகுக்கு முக்கியமான தொடுபுள்ளியாக இருக்கிறது என்று இங்கே பேசுகிறார். ‘சோழர்கள் இன்றுநூலில் இடம்பெற்றுள்ள முக்கியமான பேட்டிகளில் ஒன்று இது.

இள வயதில் தஞ்சையைத் தேடி வந்தவர் நீங்கள். எது தஞ்சையில் உங்களை இழுத்தது?

  • நான் பிறந்து வளர்ந்தது மதுரை. தீ என்றால் சுடும், நீர் என்றால் குளிரும் என்றுணர்ந்த சிறு பிராயத்திலேயே நான் ஒரு திருநங்கை என்பதையும் உணர்ந்துவிட்டேன். இருபாலை ஒருபால் உடலில் உணர்ந்தபோது என் உடல் நாட்டியத்தோடு தன்னை இணைத்துக்கொண்டது இயல்பாக நடந்தது. சின்ன வயதிலேயே ஆட ஆரம்பித்தேன். குருநாதர் ஒருவரைக் கொண்டு நடனத்தைப் பயில வேண்டும் என்ற அறிதலும் இல்லை; ஒருவேளை அப்படி அறிந்திருந்தாலும் முறையாகக் கற்றுக்கொள்ளும் சூழலும் இல்லை. சினிமா பார்த்துதான் நடனம் கற்றுக்கொண்டேன். வைஜெயந்திமாலாவும் பத்மினியும் எனக்கு மானசீக ஆசிரியர்களாக இருந்தார்கள்.
  • பதின்பருவத்தில் விவரம் தெரிந்தபோது தஞ்சாவூர் இழுத்தது. வைஜெயந்திமாலாவின் குருநாதர் கே.பி.கிட்டப்பா பிள்ளை தஞ்சையைச் சேர்ந்தவர் என்றும், தமிழ் நாட்டிய மரபு தஞ்சையில் மையம் கொண்டிருந்தது என்றும் நான் கேள்விப்பட்ட விஷயம் தஞ்சை என்னை இழுக்க முக்கியமான காரணமாக இருந்தது. தஞ்சை பெரிய கோயிலின் நாட்டியச் சிற்பங்களைப் பார்த்தபோது என் உடலுக்குள் நான் பொங்கி நெகிழ்ந்தேன்.

கலை மையமான அன்றைய தஞ்சை சமூகத்தின் மையத்தில் நாட்டியம் எப்படி அமர்ந்தது?

  • அதற்குச் சோழர்களுக்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும். நம்முடைய ஆதி நடன மரபு என்பது வெறியாட்டங்களில் இருக்கிறது. ஆனால், சிலப்பதிகாரக் காலகட்டத்திலேயே நாட்டியத்துக்கு என்று துல்லியமான இலக்கணம் உருவாகிவிட்டிருப்பதைப் பார்க்கிறோம். சிலப்பதிகாரத்தில் இயல், இசை, நாடகம் என மூன்றும் வருகின்றன. காவிரிப்பூம்பட்டினத்தின் இந்திர விழாவில் மாதவியின் நாட்டிய அரங்கேற்றத்தைப் பார்த்து வியந்து, ‘தலைக்கோல்பட்டத்தைச் சோழ மன்னர் வழங்குகிறார் என்று நாம் வாசிக்கும்போதே, மாதவி பதினோரு வகைக் கூத்துகளை அறிந்தவள் என்றும் வாசிக்கிறோம். அதாவது, ஒரு நாட்டிய மங்கைக்கு எண், எழுத்து, நான்கு பண்கள், ஐந்து இயல்கள், பதினோரு கூத்துகள் தெரிந்திருக்க வேண்டும் என்ற இலக்கணத்தைக் குறைந்தது 1,500 ஆண்டுகளுக்கு முந்தைய சிலப்பதிகாரக் காலத்தில் வகுத்திருக்கிறார்கள்.
  • தமிழ்ச் சமூகத்தின் ஆதி நடனங்களின் சேர்க்கைப் பிழிவுதான் பரத நாட்டியம். அதன் வடிவம் தொடர்ந்து மெருகேறிவந்திருக்கிறது. இலக்கியங்களில் இதை ஒரு செய்தியாக, விவரிப்பாகப் பார்க்க முடிகிறதே அன்றி, நம்மால் சாஸ்வதமாகக் காட்சிப்படுத்திக்கொள்ள முடியவில்லை.
  • சிலப்பதிகாரத்தில்கூட மாதவியின் நடனத்தை இளங்கோவடிகள் வர்ணிக்கும் வரிகளை நீங்கள் ஒருவகையில் காட்சிப்படுத்திக்கொள்ளலாம்; நான் ஒருவகையில் காட்சிப்படுத்திக்கொள்ளலாம். ராஜராஜன் காலத்தில்தான் அந்தக் காலத்தின் நடன பாவங்கள் இப்படித்தான் இருந்தன என்று நமக்குத் துல்லியமாகத் தெரியவருகிறது.
  • பெருவுடையார் கோயிலின் கருவறையின் சுற்றுச்சுவர்களில் செதுக்கப்பட்டிருக்கும் கர்ணங்கள் வேறு எங்குமே நமக்குக் காணக் கிடைக்காத அற்புதங்கள். ஒருவர் நடனம் ஆடுவதை நூறு புகைப்படங்களாக எடுத்து வைத்து, பிற்காலத் தலைமுறையினருக்குக் காட்டுவதற்கு  இணையானது இது. நாட்டியத்துக்கு என்று அடிப்படை அம்சம் ஒன்று இருக்கிறது. நாளுக்கு நாள் அதை எவ்வளவு விரித்துக்கொண்டு வேண்டுமானாலும் போகலாம். ஆனால், சிற்பத்தில் அதைப் பார்க்கும்போது 108 கர்ணங்களில் அடிப்படையான கர்ணங்கள் இவைதான் என்பதற்கு அங்கே கல்லில் சாட்சியம் இருக்கிறது. சிற்பங்கள் வெளிப்படுத்தும் பாவங்களைப் பார்க்கும்போது, அக்காலகட்டத்தின் கலைஞர்கள் அடைந்திருந்த நுட்பம் புரிபடுகிறது. தொடர்ச்சியான செயல்பாட்டின் வழியாகத்தான் இந்த நுட்பத்தை அடைய முடியும்.
  • சிலப்பதிகாரத்தில் முற்காலச் சோழர் நகரமான காவிரிப்பூம்பட்டினத்தில்தான் மாதவி ஆடுவதாகக் காட்டுகிறார் இளங்கோவடிகள். பிற்காலச் சோழர் காலத்தில், பெருவுடையார் கோயிலில் நாட்டியமாடும் பெண்கள் மட்டுமே நானூறு பேர் இருந்திருக்கிறார்கள். கலையைப் பேணிப் பாதுகாப்பதைச் சோழர்கள் ஒரு மரபாகக் கொண்டிருந்தார்கள் என்றும் இதைப் பார்க்க முடியும். இந்த மரபின் உச்சத்தில்தான் கலைகளின் மையமாகத் தஞ்சை முகிழ்ந்திருக்க வேண்டும்.
  • கலைகளின் மையத்தில் நாட்டியம் எப்படி அமர்ந்திருக்க முடியும் என்றால், அங்குள்ள ஏனைய எல்லாக் கலைகளும் நாட்டியத்தோடுதான் ஒட்டியிருக்கின்றன. சோழர் காலத்தில் வரையப்பட்ட ஓவியங்களையோ, சிற்பங்களையோ பார்க்கும்போது, தனித்தனியே பார்த்துப் பெருமூச்சு விடுகிறோம். ‘அடேயப்பா! எப்பேர்ப்பட்ட ஓவியம்…’, ‘அடேயப்பா! எப்பேர்ப்பட்ட சிலை…’ அப்படிப் பார்க்கக் கூடாது. பெருவுடையார் கோயிலில் பார்க்கும் ஓவியத்திலும் சிற்பத்திலும் அபாரமான நடனம் இருக்கிறது; அந்த நடனத்தின் பின்னணியில் நம்மால் இன்றைக்குக் கேட்க முடியாவிட்டாலும் உணரக்கூடிய இசை இருக்கிறது. உண்மையில் அங்குள்ள சிற்பங்கள் புகைப்படங்களைப் போன்றவை; ஓவியங்கள் காணொளிகள் போன்றவை; எல்லாமே நிகழ்த்துக் கலைகளைத்தான் விவரிக்கின்றன. நாட்டியத்தோடுதான் வெகுஜன மக்கள் எளிதில் ஒன்ற முடியும். அவர்களும் சேர்ந்து அனுபவித்துக் கொண்டாட முடியும். பெருவுடையார் கோயில் பல கலைகளின் சங்கமம். ஆனால், இவ்வளவுக்கும் மேல் சென்றடைய வேண்டிய இடத்தைத்தான் தத்துவமாக அந்தக் கோயில் வெளிப்படுத்துகிறது. அந்தத் தத்துவம் வேறெதுவும் இல்லை; இன்பம், இன்பம், இன்பம்!

நாம் இன்றைக்கு ஆன்மிகத்தை இன்பத்திலிருந்து பிரித்துவிட்டோம். இறையுணர்வைத் துறவோடு மட்டுமே பிணைத்துப் பார்க்கிறோம். கொண்டாட்டமும்கூட ஆன்மிகத்தின் ஒரு வழி. ஆனால், இன்றைய ஆன்மிகத்தில் இன்பத்தைத் துய்த்தல் ஓர் அபச்சாரம். நம் மரபு அப்படி இல்லை என்பதைத்தான் பெரிய கோயிலும் சொல்கிறது என்கிறீர்களா?

  • எல்லாக் கலை வெளிப்பாடுகளும் இன்பம் மிகுவதையும், இன்பம் குறைவதையுமே பேசுகின்றன. சிருங்காரம்தான் இன்பத்தின் ஆதி இறை வெளிப்பாடு. சோழர்கள் வாழ்க்கையைக் கொண்டாடித் தீர்த்தவர்கள். இன்பத்தை இறை உணர்வின் ஒரு பகுதியாகப் பார்ப்பதிலும் மக்களோடு அதைப் பகிர்ந்துகொள்வதிலும் அவர்களுக்குத் தயக்கமே இல்லை. பெரிய கோயிலில் மட்டும் இல்லை; பல கோயில்களிலும் இதைப் பார்க்க முடியும். திருலோகி சுந்தரேசுவரர் கோயில் சிற்பங்கள் சோழர் காலத்தியவைதான். காமத்தின் உச்ச வெளிப்பாட்டை அங்கே பார்க்க முடியும்.
  • இது நம் தமிழ் மரபில் வெகு இயல்பாக இருந்திருக்கிறது. இறைவனைக் காதலால் மட்டும் அல்லாது காமத்தின் வழியாகவும்தான் அடைகிறாள் ஆண்டாள். நாம் தற்குறிகள், உண்மையில் பிற்போக்கர்கள். திருக்குறளிலேயே காமத்துப்பாலைப் பற்றிப் பேசுவதைத் தவிர்ப்பவர்கள்தானே நாம்? பெரிய கோயில் வழி சோழர்கள் நமக்கு அன்றைய இன்பத்தையே நினைவூட்டுகிறார்கள்.

ஆடவல்லான் சிலை சோழர் காலக் கலையின், தத்துவத்தின் உச்ச வெளிப்பாடாகப் பார்க்கப்படுகிறது. நீங்கள் ஆடவல்லான் வெளிப்படுத்தும் உணர்வாக எதைக் காண்கிறீர்கள்? 

  • இடமும் காலமும் இணைவதைத்தான் பிரபஞ்ச இயக்கம் என்கிறார்கள், இல்லையா? அது வேறொன்றும் இல்லை. இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் உயிர் சக்திக்கான ஊற்று சக்தி எதுவோ அதையே வெளிப்படுத்துகிறான் ஆடவல்லான்; அதனால்தான் அவளையும் தூக்கிக்கொண்டு ஆடுகிறான். அது ஆனந்தத்தின் தாண்டவம். அவன் உணர்த்தும் செய்தி ஒன்றே ஒன்றுதான்இன்பம், இன்பம், இன்பம்!
  • ‘சோழர்கள் இன்று’ நூலிலிருந்து...

நன்றி: அருஞ்சொல் (08 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories