TNPSC Thervupettagam

உயிரித் தொழில்நுட்பத் துறையில் உச்சம் தொடுவது எப்போது?

August 13 , 2024 7 hrs 0 min 17 0

உயிரித் தொழில்நுட்பத் துறையில் உச்சம் தொடுவது எப்போது?

  • “2025 ஆம் ஆண்டுக்குள் உலகின் முதல் ஐந்து உயிரி உற்பத்தி மையங்​களில் (Biomanufacturing centres) ஒன்றாக இந்தியா மாறும்” - கடந்த ஆண்டு நடைபெற்ற உயிரித் தொழில்​நுட்பம் குறித்த சர்வதேச மாநாட்​டில், மத்திய அறிவியல் - தொழில்​நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறிய வார்த்​தைகள் இவை. அமைச்​சரின் விருப்பம் வரவேற்​கப்பட வேண்டியதுதான் என்றாலும், இந்த இலக்கை எட்ட இந்தியா பயணிக்க வேண்டிய தூரம் மிக அதிகம்​.

காரணம் என்ன?

  • அமெரிக்கா, கனடா, சுவிட்​சர்​லாந்து போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்​போது, உயிரித் தொழில்​நுட்​பத்தில் நாம் இன்னும் முழுமைபெறாத நிலையிலேயே இருக்​கிறோம் என்பதே நிதர்​சனம். நம் நாட்டில் உயிரித் தொழில்​நுட்பம் படித்து​வரும் மாணவர்​களின் திறன் மேம்படுத்​தப்​படு​வதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதுதான் இதற்கெல்லாம் முக்கியக் காரணம்.
  • 20 அல்லது 25 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரித் தொழில்​நுட்பப் படிப்பு படித்​தால், அதிகச் சம்பளத்தில் உயிரி உற்பத்தி / மருந்து தயாரிக்கும் நிறுவனங்​களில் நல்ல வேலைவாய்ப்பைப் பெறலாம் என்ற கருத்து நிலவியது. பல அறிவியல் - பொறியியல் கல்லூரிகள், நுண்ணு​யிரியல் (Microbiology), உயிரித் தொழில்​நுட்​பவியல் (Biotechnology), உயிரிவேதி​யியல் (Bio-chemistry) போன்ற படிப்புகளை இளநிலை / முதுநிலையில் வழங்க ஆரம்பித்தன.
  • இந்தப் பாடப் பிரிவுகள் அனைத்தும் அரசின் உதவியின்றிச் சுயநிதிப் பாடப் பிரிவு​களாகத் தொடங்​கப்​பட்டன. ஆசிரியர்​களுக்கான சம்பளம், செய்முறையைக் கற்றுக்​கொடுப்​ப​தற்குத் தேவையான கருவிகள், வேதிப்​பொருள்கள் மாணவர்​களின் கல்விக் கட்டணத்​திலிருந்தே வாங்கப்​பட்டன. இவற்றால் பெரிய பலன் கிடைத்​து​விட​வில்லை. ஏனெனில், உயிரித் தொழில்​நுட்​பவியல் சார்ந்த படிப்பு​களுக்கு அடிப்படை ஆய்வக வசதிகளை ஏற்படுத்​துவதே மிகவும் செலவு பிடிக்கும் ஒன்றாகும்.
  • இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 40,000 மாணவர்கள் உயிரியல் சார்ந்த துறையில் படித்து வெளியே வருகிறார்கள். அவர்களில் 5%க்கும் குறைவான மாணவர்களே அதே துறையில் வேலைவாய்ப்பைப் பெறுகிறார்கள். மற்ற மாணவர்கள் வேறு ஏதேனும் படிப்பு​களைப் படித்து, வேறு வேலைக்குச் செல்கிறார்கள்.
  • இதற்கு மிக முக்கியமான காரணம், அவர்கள் படித்த படிப்​புக்கும் சந்தையின் தேவைக்கும் உள்ள மிகப் பெரிய இடைவெளி. உயிரித் தொழில்​நுட்பத் துறை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் புதிய தொழில்​நுட்​பங்​களைப் புகுத்​திக்​கொண்டே இருக்​கிறது. அதற்கு இணையாக மாணவர்​களின் பாடத்​திட்​டமும் அவர்களின் செயல் திறனும் மேம்பட​வில்லை என்றால், அந்தத் துறையில் வேலைவாய்ப்பைப் பெறுவது மிகக் கடினம்.

புதுமை பெறாத பாடத்திட்டங்கள்:

  • இந்தியா​வில், ஒரு சில முன்னணிக் கல்வி நிறுவனங்கள் தவிர, பல அறிவியல் - பொறியியல் கல்லூரி​களில் உயிரித் தொழில்​நுட்பம் சார்ந்த செய்முறைகளைக் கற்றுக்​கொள்ள அடிப்​படையான ஆய்வக வசதிகள்கூட இல்லை என்பதே உண்மை. அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளில் அடிப்​படைப் பயிற்சி​களுடன், புதிய தொழில்​நுட்​பங்கள் எல்லாம் உடனடி​யாகப் பாடத்​திட்​டத்தில் சேர்க்​கப்​பட்டு, மாணவர்கள் சிறப்​பாகப் பயிற்று​விக்​கப்​படுவது கவனிக்​கத்​தக்கது.

புதிய பயிற்சி நிறுவனங்கள்:

  • உயிரித் தொழில்​நுட்பம் படிக்கும் மாணவர்​களின் இந்தப் பிரச்​சினையை அறிந்த சில தனியார் நிறுவனங்கள், படிப்பை முடித்த மாணவர்​களுக்கான செய்முறைக்கு என்று தனிப் பயிற்சி பெறுவதற்குப் புதிய பயிற்சி ஆய்வகங்​களைத் தொடங்​கி​யிருக்​கின்றன.
  • மாணவரின் விருப்​பத்துக்கு ஏற்ப ரூ.20,000 முதல் ஒரு சில லட்சங்கள் வரை செலவுசெய்து டெல்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் பொன்ற நகரங்​களில் உள்ள இந்தத் தனியார் ஆய்வகங்​களில் இந்தச் செய்முறைகளைக் கற்றுக்​கொள்​ளலாம் என்கிற நிலை உருவாகியிருக்கிறது.
  • எனினும், படிப்பை முடித்த பிறகும் இந்தச் சிறப்புப் பயிற்​சியைப் பெறுவதற்குத் தேவையான செலவும் கால விரயமும் மாணவர்​களுக்கு மிகப்​பெரும் இழப்பே. அப்படியே இந்த நிறுவனங்​களில் சேர்ந்து பயிற்சி பெற்றாலும் வெறும் 20 அல்லது 30 நாள்களுக்குக் கொடுக்​கப்​படும் பயிற்​சியில் மூலம் வேலைவாய்ப்பைப் பெறும் அளவுக்கு மாணவர்கள் எந்தத் திறனையும் வளர்த்துக்​கொள்ள முடியாது.
  • தவிர, ஆய்வகத்தை உருவாக்கவோ அல்லது வேதிப்​பொருள்களை வாங்கவோ இவ்வளவு பெரிய தொகையைச் செலவுசெய்ய எந்தக் கல்லூரியும் முன்வரப்​போவதில்லை. மாணவர்​களின் கல்விக் கட்டணத்​தையும் அவர்கள் அதிகரித்தாக வேண்டும். ஏற்கெனவே அதிகக் கல்விக் கட்டணத்தைச் செலுத்தும் மாணவர்​களால் இதற்கு மேலும் செலவழிக்க முடியாது.
  • இத்தகைய செய்முறைகளைச் சொல்லிக்​கொடுக்கத் தற்போதுள்ள பேராசிரியர்​களுக்கும் பெரிதாகப் பயிற்சிகள் இல்லை. புதிய தொழில்​நுட்​பங்​களைப் பயிற்று​விக்க ஒவ்வொரு கல்லூரிக்கும் வல்லுநர்கள் கிடைப்​பதும் கடினம்.

தீர்வு என்ன?

  • உயிரித் தொழில்​நுட்பப் படிப்புகளை வழங்கும் தனியார் கல்லூரி​களுடன் அரசும் இணைந்து செய்முறைப் பயிற்சி அல்லது திறன் மேம்பாட்டு மையங்களை ஒவ்வொரு மாவட்​டத்​திலும் அமைத்து, இத்தகைய படிப்பு​களைப் படிக்கும் மாணவர்​களுக்கு - அவர்கள் படிக்​கும்போதே - பயிற்சி அளிப்பதே சிறந்த தீர்வாகும். தமிழக அரசு, அடிப்​படைக் கருவிகளை வாங்கு​வதற்கும் உள்கட்​டமைப்பு வசதிகளை உருவாக்​கவும் கணிசமான முதலீட்டைச் செய்து, இந்தத் துறையில் பயிற்​சிபெற்ற வல்லுநர்​களைப் பணியமர்த்த வேண்டும்.
  • உயிரியல் துறையில் நுண்ணு​யிரியல், உயிரித் தொழில்​நுட்​பவியல், உயிர் வேதியியல் போன்ற பல பிரிவுகள் இருந்​தா​லும், இத்துறைகளுக்கான செய்முறைகள் ஒன்றுக்​கொன்று மிகவும் தொடர்​புடையவை. ஆகவே, அடிப்படை வசதிகளுடன் ஒரு பயிற்சி மையம் அமைத்​தாலே, உயிரியல் பாடப்​பிரிவில் பயிலும் எல்லா மாணவர்​களும் அதில் பயிற்சி பெற்றுவிட முடியும்.
  • முன்னோட்டமாக தமிழக அரசு ஒரு சில திறன் மேம்பாட்டு மையங்களை ஏற்படுத்தி, அதன் செயல்​பாட்டை ஆய்வு செய்​ய​லாம். அதன் வெற்றியைப் பொறுத்து மற்ற மாவட்​டங்​களுக்​கும் அதை விரிவுபடுத்​தலாம். திறமையான உ​யிரித் தொழில்​நுட்​பவிய​லா​ளர்களை உரு​வாக்கக்​ கணிசமான முதலீட்​டைச் செய்​தால், நம்​மவர்​களும் இத்​துறை​யில் சாதிப்​பார்கள்​ என்​ப​தில்​ சந்தேகமில்லை!

நன்றி: இந்து தமிழ் திசை (13 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories