- ஐக்கிய நாடுகள் அவை எடுத்த முடிவின் அடிப்படையில் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 21 உலகத் தாய்மொழி நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதன் பின்னே ஒரு வரலாறு இருப்பதை மறுக்க முடியாது. அதேவேளையில், உலகின் பழமையான மொழியாகவும் செவ்வியல் இலக்கியங்களைக் கொண்ட மொழியாகவும் தொடர்ச்சியாக இயங்கிவருகின்ற மொழியாகவும் இருக்கின்ற தமிழ் மொழியைப் போற்றும் வகையில் ஒரு நாள் நமக்குத் தேவை. இதற்கு வலுவான காரணிகள் உண்டு.
மொழிப்போர் வரலாறு:
- மேற்கு பாகிஸ்தானுக்கும் கிழக்கு பாகிஸ்தானுக்கும் உருது மொழியே ஆட்சி மொழி என்று பாகிஸ்தான் அரசு அறிவித்ததை அடுத்து கடும் முரண்பாடு தோன்றியது. 1952இல், அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் (இன்றைய வங்கதேசம்), ‘எங்களுக்கு வங்க மொழியே ஆட்சி மொழி; பாகிஸ்தான் திணிக்கும் உருது மொழியை ஆட்சி மொழியாக ஏற்க முடியாது’ என்று அறிவித்து, வங்காளிகள் நடத்திய உருது மொழி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த நான்கு மாணவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், அவர்கள் உயிர்நீத்த நாளான பிப்ரவரி 21 உலகத் தாய்மொழி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- 1971இல் இந்தியாவின் உதவியுடன் இறையாண்மை உள்ள ஒரு தேசமாக மலர்ந்த வங்கதேசம், தாய்மொழியின் உரிமைக்காகப் போராடி உயிர் நீத்த போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 1998இல் ஐக்கிய நாட்டு அவையில் கோரிக்கை வைத்தது; உலக நாடுகளையும் ஏற்பளிக்கச் செய்தது.
- இதைவிடச் சிறந்த நினைவஞ்சலியை எந்த நாடும் செய்துவிட முடியாது. அந்த ஏற்பளிப்பை வங்கதேசம் வெற்றிகரமாகப் பெற்றுக்கொண்டது. 1999இல் ஐக்கிய நாடுகள் அவையின் இசைவுக்குப் பின்னர் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 21 ‘உலகத் தாய்மொழி நாள்’ என அனைவரும் கொண்டாடக்கூடிய ஒரு சூழல் உருவாகியுள்ளது.
- பிப்ரவரி 21 என்பது தமிழ்நாட்டு மொழிப்போர் வரலாற்றிலும் மிக முக்கியமான நாளாகும். 1938இல் பள்ளிகளில் கட்டாய இந்தியை மதராஸ் (சென்னை) மாகாணத்தின் பிரதமர் ராஜகோபாலாச்சாரியார் தலைமையிலான அரசு புகுத்தியபோது, அதை எதிர்த்து, மூன்று ஆண்டுகள் போராட்டங்கள் நடைபெற்றன. இறுதியில், 1940 பிப்ரவரி 21ஆம் நாளில்தான் மதராஸ் மாகாண ஆளுநர் ஜான் எர்ஸ்கின் பள்ளிகளில் கட்டாயமாக இருந்த இந்தியை நீக்கினார். ஆக, தாய்மொழிக் காப்புக்காக நிகழ்ந்த மொழிப்போரில் தமிழகத்தைவிட வங்கதேசம் மூத்தது அல்ல.
- நாட்டு விடுதலைக்கு முன்பாகவே, கட்டாய இந்தியை எதிர்த்து 1938 முதல் போராட்டம் நடந்தது. 1939இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் 1,271 பேர் கைதானார்கள். (இவர்களில் பெண்கள் 73, குழந்தைகள் 32). கடும் எதிர்ப்பைக் கண்ட சென்னை மாகாணப் பிரதமர் ராஜாஜி, 125 பள்ளிகளில் மட்டுமே கட்டாய இந்தி என்றும், அதுவும் 6 முதல் 8ஆம் வகுப்புவரை கற்பிக்கப்படும் என்றும், தேர்வில் தேர்ச்சி பெறத் தேவையில்லை என்றும் அறிவித்தார்.
- ஆனால், கட்டாய இந்திக்கு எதிர்ப்பு வலுத்தது. 1939 ஜனவரி 15 அன்று இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டிருந்த நடராசனும், மார்ச் 13ஆம் நாளில் தாளமுத்துவும் சிறையிலேயே உயிர்நீத்தனர். இவ்வாறாகத் தாய் மொழிக் காப்புக்கு முதல் களப்பலிகளை 1939இலேயே தமிழ்ச் சமூகம் அளித்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
- ‘இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழி என்பது, இந்திய அரசமைப்புச் சட்டம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, 15 ஆண்டுகள் கழித்து நடைமுறைக்கு வரும்’ என்பது அரசமைப்புச் சட்ட அவையால் ஏற்கப்பட்டிருந்தது. அதன்படி, 1965 சனவரி 26ஆம் தேதி இந்தி அதிகாரபூர்வமான ஒரே ஆட்சி மொழி என்று நடைமுறைக்கு வர இருந்த சூழலில், தமிழகத்தில் மீண்டும் ஒரு பெரும் மொழிப்போர் மூண்டது.
- இந்தித் திணிப்பை ஏற்க முடியாது என்று தொடர்ந்து போராடி வந்த தமிழர்களின் குரல், அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவை சிந்திக்க வைத்தது. அதன் விளைவாகத் தமிழ்நாட்டு மக்கள் விரும்பும் வரை இந்தி மொழி கட்டாயப் பாடமாக வைக்கப்பட மாட்டாது என நாடாளுமன்றத்தில் அவர் உறுதியளித்தார்.
மொழி காக்கும் நடவடிக்கைகள்:
- மொழிகள் இல்லாமல் உலகில் அறிவுப் பரிமாற்றம் சாத்தியமில்லை. மொழிகள், மனிதர்களுக்குக் கிடைத்த பெரும் சொத்து. அந்தச் சொத்துகளைக் காப்பாற்ற வேண்டியது மானுடச் சமூகத்தின் கடமை. உலகின் தொன்மையான மொழிகளை மக்கள் கொண்டாடி மகிழ்வதோடு, அழிந்துபோகாமல் அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்க்கும் பணிகளை அந்தந்த தேசிய இன மக்கள் தொடர்ந்து செய்துவருகிறார்கள். ஒவ்வோர் ஆண்டிலும் ஆகஸ்ட் மாதத்தில் முழு நிலவு நாள் உலக சம்ஸ் கிருத நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு, அம்மொழியை அழிவில் இருந்து காக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்த கருத்தரங்குகள், ஆய்வரங்குகள், விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
- அதுபோலவே 1949 செப்டம்பர் 14ஆம் நாளன்று, இந்திய அரசமைப்பு நிர்ணய அவையில் இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தியை ஏற்க முடிவு செய்யப்பட்டது. இந்த நாளை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் செப்டம்பர் 14ஆம் நாள் இந்தி மொழி நாளாகவும், செப்டம்பர் 14-21 இந்தி மொழி வாரமாகவும் மத்திய அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாளில் மத்திய அரசு அலுவலகங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் விழாக்கள், கருத்தரங்குகள், ஆய்வரங்குகள் எனப் பல செயல்பாடுகள் நடத்தப்பெற்று, இந்தி மொழியை மேலும் வளர்த்தெடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
- ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அலுவல் மொழிகளான அரபி, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்ய மொழி, ஸ்பானிய மொழி ஆகிய மொழிகளைக் கொண்டாடுவதற்காகச் சிறப்பு நாள்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆனால், உலகத் தமிழ் மொழி நாள் என ஒன்று இதுவரை தமிழ்நாடு அரசு, மத்திய அரசு, வேறு அமைப்புகளால் அறிவிக்கப்படவில்லை. ஐ.நா. அவை அல்லது மத்திய அரசு இதுபோல் அறிவிக்காவிடினும் தமிழ்நாடு அரசு உலகத் தமிழ் நாள் என்கிற ஒன்றை அறிவிக்க வேண்டும் என உலகில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகள் கோரிக்கைவிடுத்துவருகின்றன.
- வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு, கொரியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இயங்கிவரும் தமிழ் அமைப்புகள், இந்தியாவின் பல்வேறு பகுதியில் இயங்கிவரும் தமிழ்ச் சங்கங்கள் சார்பிலும் தமிழ் மொழியுணர்வை முதன்மை நோக்கமாகக் கொண்டு பாடிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளான ஏப்ரல் 29ஆம் நாளை ‘உலகத் தமிழ் மொழி நாள்’ எனக் கொண்டாடி வருகின்றனர். தமிழ் மொழியைக் காக்கக் குரல் கொடுக்கும் தமிழ்நாடு அரசு, இது தொடர்பாக ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். தமிழ் மொழிக்கு உரிய மதிப்பை நிலைநாட்டும் வகையில் அந்த நடவடிக்கை அமைய வேண்டும்
- பிப்ரவரி 21: உலகத் தாய்மொழி நாள்
நன்றி: இந்து தமிழ் திசை (21 – 02 – 2025)