ஏ.ஐ. பந்தயத்தில் இந்தியாவுக்கு எந்த இடம்?
- செயற்கை நுண்ணறிவு (AI) உலகைக் கடந்த சில வாரங்களாகக் கலக்கிக்கொண்டு இருக்கிறது, சீனச் செயலி ஒன்று. பெயர் டீப்-சீக் (DeepSeek). ஆழ்நோக்கு என்று பொருள் சொல்லலாம். கணினிகள் வெகு காலம் கணக்கிடும் கருவியாகவே இருந்தன. இரண்டாவது கட்டத்தில் சமூக வலைதளங்களின் பயன்பாடு மிகுந்தது.
- இது மூன்றாவது கட்டம். கணினிக்குள் ஓர் அறிவுத் தளத்தை நிறுவி, பெருமளவில் தரவுகளை நிரப்பி, அதை அறிவார்ந்த இயந்திரமாகச் செயல்பட வைக்கிற செயற்கை நுண்ணறிவின் காலமிது. மனித மூளை கோடிக்கணக்கான நியூரான்களாலும் அதன் சிக்கலான இணைப்புகளாலும் இயங்குகிறது.
- இதைப் பிரதியெடுத்து உருவாக்கப்பட்டதுதான் ஆழ்கற்றல் (deep learning) என்னும் தொழில்நுட்பம். செயற்கை நியூரான்களாலும் அதன் வலையமைப்பாலும் உருவாக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பம்தான் செயற்கை நுண்ணறிவை இயக்குகிறது. ஆகவே, இந்தப் புதிய சீனச் செயலிக்கு ‘டீப்-சீக்’ (ஆழ்நோக்கு) எனும் பெயர் பொருத்தமானது.
சிலிக்கான் நாடி:
- ஜனவரி 27ஆம் தேதிக்கு முன்புவரை சந்தையில் முன்னணியில் இருந்தது ‘ஓபன் ஏ.ஐ.’ நிறுவனத்தின் ‘சாட் ஜிபிடி’ என்னும் செயலி. 2022இல் நிறுவப்பட்டது. மெட்டா எனும் செயலி காலத்தால் முந்தையது (2015), ஃபேஸ்புக்கால் நிறுவப்பட்டது. ஜெமினியும் கோபைலட்டும் காலத்தால் பிந்தியவை (2023).
- முறையே கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் உருவாக்கியவை. இந்தச் செயற்கை நுண்ணறிவுச் செயலிகளுக்கு இடையிலான ஓர் ஒற்றுமை துலக்கமானது. இவை அனைத்தும் சிலிக்கான் பள்ளத்தாக்கிலிருந்து இயங்குபவை. அதுதான் கணினித் தொழில்நுட்பத்துக்கும் சமூக வலைதளங்களுக்கும் தலைமையகம். இந்த அமெரிக்க மேலாதிக்கத்தைத்தான் ‘டீப்-சீக்’ அசைத்திருக்கிறது
- டீப்-சீக் மற்ற செயற்கை நுண்ணறிவுச் செயலிகளுக்கு இணையான ஆற்றல் கொண்டது. மற்ற செயலிகளைப் போலவே மனிதனின் அறிவுச் செயல்பாட்டை விஞ்சக்கூடியது. ஆனால், இரண்டு வேறுபாடுகள் டீப்-சீக்கைத் தனித்து நிறுத்துகின்றன. முதலாவதாக, இதை உருவாக்க 6 மில்லியன் டாலர் (ரூ.525 கோடி) செலவானதாக அந்த நிறுவனம் தெரிவிக்கிறது. இது அமெரிக்கச் செயலிகளைவிட 20 முதல் 30 மடங்கு சகாயமானது.
- இரண்டாவது - டீப்-சீக் தனது நிரல்களைப் பொதுவெளியில் பகிர்ந்துகொண்டிருக்கிறது (open source). இதைப் பயனர்கள் தரவிறக்கி அவரவர் பயன்பாட்டுக்கு இணங்க மேம்படுத்திக்கொள்ளலாம். மாறாக, ஓபன் ஏ.ஐ. பெயரளவில் திறந்த மூலம் எனப்பட்டாலும், உண்மையில் மூடுண்ட புத்தகமாகவே (closed source) இருக்கிறது. மற்ற அமெரிக்கச் செயலிகளும் அப்படித்தான். ஆக, விதிப்படியே விளையாடி சிலிக்கான் விக்கெட்டுகளை வீழ்த்த முனைகிறது சீனா.
அமெரிக்காவின் எதிர்வினை:
- டிரம்ப் பதவியேற்ற இரண்டு நாள்களிலேயே செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டுக்காகத் தனியார் துறைக்கு 500 பில்லியன் டாலர் (ரூ.44 லட்சம் கோடி) வழங்கினார். வருங்காலத் தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவில்தான் இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
- அப்போது அவருக்குத் தெரியாது - அடுத்த ஐந்து நாட்களுக்குள் டீப்-சீக் அரங்கேறும். அது அமெரிக்காவின் முற்றுரிமையைக் கேள்விக்குள்ளாக்கும் என்று. அமெரிக்கா அதிர்ச்சியடைந்தது. என்றாலும் புதிய செயலி சக்தி வாய்ந்தது என்பதை டிரம்ப் மறுக்கவில்லை. டீப்-சீக் அமெரிக்காவை விழித்துணர வைத்திருக்கிறது என்றார்.
ஏ.ஐ. சந்தையில் இந்தியா:
- ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட ஓர் ஆய்வின்படி அமெரிக்கா, சீனா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு அடுத்து நான்காவது இடத்தில் நிற்கிறது இந்தியா. மத்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இதைப் பெருமையுடன் குறிப்பிட்டார். இந்தியாவுக்குச் சாதகமாக இரண்டு அம்சங்களையும் குறிப்பிட்டார். ஒன்று, இங்கே கணினித் தொழில்நுட்பம் சார்ந்த அறிவுப்புலம் செழுமையுடன் விளங்குகிறது. இரண்டு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த அடிப்படை மாதிரிகளை உருவாக்கத் தனிச்சிறப்பான சிப்புகள் (chips) வேண்டும்.
- இதை என்விடியா (Nvidia) என்கிற அமெரிக்க நிறுவனம் தயாரிக்கிறது. இந்தச் சிப்புகளை இந்திய அரசு வாங்கி வைத்திருக்கிறது; அவை ஆய்வாளர்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்படும். அடுத்த 10 மாதங்களுக்குள் இந்தியா ஒரு புதிய செயற்கை நுண்ணறிவுச் செயலியை உருவாக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். அமைச்சர் குறிப்பிடும் இரண்டு அம்சங்களும் இந்தியாவுக்குச் சாதகமானவைதாம். ஆனால், அடிப்படையில் இந்தியாவுக்கு முன் சில தடைக்கற்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான மூன்று அம்சங்களைப் பரிசீலிப்போம்.
ஆய்வுப் புலத்தில் அலட்சியம்:
- முதலாவதாக, ஆய்வுப் புலத்தின் மீது இந்திய அரசுக்கு இருக்கும் பாராமுகம். நமது உள்நாட்டு உற்பத்தியில் 0.6% மட்டுமே ஆய்வுப் பணிகளுக்காகச் (R&D) செலவிடப்படுகிறது. அதே வேளையில் சீனா செலவிடும் விகிதம் 2.5%, அமெரிக்கா 3.5%. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பை (4.3 டிரில்லியன் டாலர்) அமெரிக்கா (29 டிரில்லியன் டாலர்), சீனா (18.5 டிரில்லியன் டாலர்) ஆகிய நாடுகளின் மதிப்போடு ஒப்பிடவும் வேண்டும். அதாவது, நமது உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் நாம் 0.6% செலவிடும்போது, அமெரிக்கா அவர்களது உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 3.5% செலவிடுகிறது. ஆகவேதான் இந்தியாவில் புதிய கண்டுபிடிப்புகள் அரிதாகிவிட்டன.
உள்கட்டமைப்பில் இல்லை தற்சார்பு:
- இரண்டாவதாக, உள்கட்டமைப்பு. இங்கே உள்கட்டமைப்பு என்பது இணையம், செமி கண்டக்டர், திறன்பேசி, கணினி முதலானவற்றைக் குறிக்கும். இவற்றின் மூலப்பொருள்கள் பலவற்றுக்கு சீனா உள்படப் பல அயல்நாடுகளைச் சார்ந்துதான் நாம் இயங்கிவருகிறோம்.
- அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்ட என்விடியா சிப்புகளை பைடன் அரசு சீனாவுக்கு வழங்கவில்லை. தடை விதித்தது. டீப்-சீக், அதற்கு முந்தைய தலைமுறையைச் சார்ந்த ஆற்றல் குறைந்த சிப்புகளால் உருவானது. சீனாவின் தற்சார்பு மிக்க உள்கட்டமைப்பால் இந்தச் சவாலை எதிர்கொள்ள முடிந்தது.
கற்றவர் தாண்டும் கரை:
- மூன்றாவதாக, இந்தியாவில் உருவாகும் திறன் வாய்ந்த அறிவாளர்கள் பலர் அயல் நாடுகளுக்குப் போவதும் அங்கே கொடி நாட்டுவதும் நடக்கிறது. வாட்ஸ்அப்பில் அடிக்கடி ஒரு பட்டியல் வரும். அமெரிக்காவின் தலைசிறந்த கணினி நிறுவனங்களுக்குத் தலைமை தாங்குகிற இந்தியர்களின் பட்டியல். சத்யா நாதெள்ளா (மைக்ரோசாஃப்ட்), சுந்தர் பிச்சை (கூகுள்) என்று அப்பட்டியல் நீளும்.
- சரி, இப்படி ஒரு பட்டியலை ஏன் சீனர்கள் வெளியிடுவதில்லை? இந்தக் கேள்விக்கான பதில் சமூக வலைதளங்களில் இருக்கிறது. நாம் அதிகமும் பயன்படுத்தும் கூகுள், வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், டிவிட்டர் (எக்ஸ்), யூடியூப், அமேசான் முதலான தளங்களின் உயிர்நாடி சிலிக்கான் பள்ளத்தாக்கில் இருக்கிறது.
- சீனர்கள் இந்த அமெரிக்கத் தளங்களைப் பயன்படுத்துவதில்லை. மாறாக, மேற்கூறிய தளங்களுக்கு ஈடாக முறையே ‘பெய்டு’, ‘வீ சாட்’, ‘பெங் யூ’, ‘வெய் போ’, ‘யூ கூ’, ‘அலிபாபா’ முதலான தளங்களைப் பயன்படுத்துகிறார்கள். இவை அனைத்தும் சீனர்களின் சொந்தத் தயாரிப்புகள். விளைவு, திறன் மிகுந்த சீன அறிவாளர்களுக்குச் சீனாவிலேயே போதிய வேலையும் வாய்ப்பும் கிடைக்கின்றன. சீனப் பயனர்களின் மதிப்புமிக்க தரவுகள் கடல் தாண்டி அந்நியர்களின் கைகளை அடைவதில்லை.
என்ன செய்யலாம்?
- நாம் நமது நாட்டில் கல்வியையும் அதன் வழியாக அறிவியல் நோக்கையும் வளர்த்தெடுக்க வேண்டும். அறிவியல் கண்ணோட்டத்தின் அவசியத்தை மனிதநேயத்துக்கு நிகராக நிறுத்துகிறது நமது அரசமைப்புச் சட்டம். அறிவியல் நோக்கு வளர்ந்தால் நமது அறிவுப்புலமும் ஆய்வுப்புலமும் வலுவாகும். அறிவியல் உள்கட்டமைப்பு வேர்பிடிக்கும், வளரும். நமது அறிவாளர்களின் திறன் இந்தத் திருநாட்டை வளப்படுத்தும். அப்போது புதிய செயற்கை நுண்ணறிவுச் செயலிகள் இங்கேயே உருவாகும்.
நன்றி: இந்து தமிழ் திசை (17 – 02 – 2025)