TNPSC Thervupettagam

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் தமிழாக்கம்: பெரியாரின் பங்களிப்பு

May 6 , 2023 427 days 426 0
  • கார்ல் மார்க்ஸ்-பிரெடெரிக் எங்கெல்ஸ் எழுதிய ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’, இந்திய மொழிகளில் வங்க மொழியில்தான் முதன்முதலில் மொழியாக்கம் செய்யப்பட்டது.
  • வங்காளத்தில் கம்யூனிஸ்ட் குழுவை நிறுவிய முசாபர் அகமதுவை ஆசிரியராகக் கொண்டிருந்த ‘கணவாணி’ என்னும் ஏட்டில் சவுமயேந்திரநாத் தாகூரால் (ரவீந்திரநாத் தாகூரின் நெருங்கிய உறவினர்) மொழிபெயர்க்கப்பட்ட அறிக்கை, 1926இல் ஆறு இதழ்களில் வெளியிடப்பட்டது.
  • வங்க மொழிக்கு அடுத்ததாக, உருது மொழியில் ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ மொழியாக்கம் செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரும் இஸ்லாமிய அறிஞருமாகிய மவுலானா அபுல் கலாம் ஆசாத்தால் நிறுவப்பட்டதும் அவரை ஆசிரியராகக் கொண்டிருந்ததுமான ‘அல்-ஹிலால்’ எனும் வார ஏட்டின் 1927 நவம்பர் 4, 11, 18ஆம் நாளைய இதழ்களில், ‘அறிக்கை’யின் முதல் இரு பிரிவுகளின் (பூர்ஷ்வாக்களும் பாட்டாளிகளும், கம்யூனிஸ்ட்டுகளும் பாட்டாளிகளும்) உருது மொழியாக்கம் நான்கு பகுதிகளாக வெளியிடப்பட்டன.
  • அடுத்ததாக, மராத்தி மொழியாக்கமும் தமிழாக்கமும் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் வெளிவந்தன. கங்காதர் மொரேஸ்வர் அதிகாரி, மீரட் சதி வழக்கில் சிறையிலிருந்த போது 1930-31இல் மராத்தியில் மொழிபெயர்த்தார். இது 1931 அக்டோபரில் வெளியிடப்பட்டு ஆறணா விலைக்கு விற்கப்பட்டது. அந்த மொழியாக்கம் 160 பக்கங்களைக் கொண்டிருந்தது.

தமிழாக்கம்

  • 1931 அக்டோபர் மாதத்தில் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’யின் முதல் தமிழாக்கம் வெளிவந்தது. பெரியார் ஈ.வெ.ரா.வின் சுயமரியாதை இயக்க வார ஏடான ‘குடிஅரசு’, 1931 அக்டோபர் 4 முதல் தொடர்ச்சியாக ஐந்து இதழ்களில் ‘சமதர்ம அறிக்கை’ என்னும் தலைப்பில் அறிக்கையின் முதல் பிரிவின் (பூர்ஷ்வாக்களும் கம்யூனிஸ்ட்டுகளும்) தமிழாக்கத்தை வெளியிட்டது.
  • மொழிபெயர்ப்பாளரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆயினும் முதல் பகுதி பெரியாரின் அறிமுக உரையுடன் வெளியிடப்பட்டது. இன்றும் பொருத்தப்பாடுடைய அந்த அறிமுக உரையில் பெரியார் எழுதியது: ‘உலக அரசாங்கங்களிலெல்லாம் ரஷிய ஜார் அரசாங்கமே மிக்க கொடுங்கோன்மையாக நடைபெற்று வந்திருக்கின்றது. அதனாலேயே அங்கு சமதர்ம முறை அனுபவத்திற்குக் கொண்டுவர வேண்டியதாயிற்று.
  • இந்த நியாயப்படி பார்த்தால், அவ்வித சமதர்ம உணர்ச்சி உலகில் ரஷியாவைவிட இந்தியாவிற்கே முதன்முதலாக ஏற்பட்டிருக்க வேண்டியதாகும், இங்கு அனேகவித சூழ்ச்சிகள் நடைபெற்று வந்திருப்பதாலும் சூழ்ச்சிக்காரர்கள் இந்திய மக்களை வெகுஜாக்கிரதையாகவே கல்வி அறிவு, உலக ஞானம், சுயமரியாதை உணர்ச்சி முதலியவைகள் பெறுவதற்கு மார்க்கம் அல்லாமல், காட்டுமிராண்டித்தன்மையில் வைத்து வந்ததோடு, கடவுள் பேராலும் மதத்தின் பேராலும் ஏற்படுத்தப்பட்ட உணர்ச்சியானது, அடிமையாக இருப்பதே கடவுள் சித்தமென்றும், மோட்ச சாதனமென்றும் புகட்டி வந்ததாலும், உலகில் சமதர்ம உணர்ச்சி முதன்முதலில் இந்தியாவிலேயே ஏற்பட்டிருக்க வேண்டியது மாறி, ரஷியாவுக்கு முதல் ஸ்தானம் ஏற்பட வேண்டியதாயிற்று.’
  • ‘... ஆனால், உலகில் சமதர்ம உணர்ச்சிக்கு விரோதமான தன்மையில் மற்ற தேசத்துக்கும் இந்தியாவுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருந்து வருகின்றது. அதென்னவென்றால், மற்ற நாடுகளில் ஒரு விஷயம்தான் முக்கியமாய்க் கருதப்படுகின்றது. அதாவது முதலாளி (பணக்காரன்) வேலையாள் (ஏழை) என்பதுவேயாகும். ஆனால், இந்தியாவிலோ மேல்சாதியார் - கீழ்ச்சாதியார் என்பது ஒன்று அதிகமாகவும் முதன்மையானதாகவும் இருப்பதால், அது பணக்காரன்-ஏழை தத்துவத்திற்கு ஒரு கோட்டையாக இருந்து காப்பாற்றிக்கொண்டு வருகிறது’ (‘குடிஅரசு’ 04.10.1931).
  • கம்யூனிஸ்ட் அறிக்கை’யின் முதல் பிரிவின் தமிழாக்கத்தின் கடைசிப் பகுதியை வெளியிட்ட ‘குடிஅரசு’, 01.11.1931ஆம் நாளைய இதழ், அறிக்கையின் பிற பிரிவுகளின் மொழியாக்கமும் வெளிவரும் என்று அறிவித்தது.
  • ஆனால், 1931 டிசம்பர் 13 அன்று, பெரியார் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டு பல மாதங்களுக்குப் பிறகே திரும்பிவந்ததால், பிற பிரிவுகளின் மொழியாக்கம் ஏதும் வரவில்லை. சோவியத் ஒன்றியத்தில் பெரியார் 14.02.1932 முதல் 17.05.1932 வரை தங்கி அங்கே ஏற்பட்டுவந்த சமூக, பொருளாதார, பண்பாட்டு மாற்றங்களை அறிந்துவந்தார்.
  • கம்யூனிஸ்ட் அறிக்கை’யின் முழுமையான முதல் தமிழாக்கம், எம்.இஸ்மத் பாஷாவால் செய்யப்பட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூல் வெளியீட்டகமான ‘ஜனசக்தி பிரசுராலய’த்தால் 1948இல் வெளியிடப்பட்டது. 16 பக்க அறிமுக உரையுடன் கூடிய 91 பக்க மொழியாக்கம், ‘கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை’ எனத் தலைப்பிடப்பட்டது.
  • பெரியார், சோவியத் ஒன்றியத்துக்குப் பயணம் மேற் கொண்டதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பே போல்ஷ்விக் புரட்சி குறித்த கட்டுரைகள் ‘குடிஅரசு’, ‘ரிவோல்ட்’ ஆகிய சுயமரியாதை ஏடுகளில் வெளிவந்துள்ளன. சோவியத் ஒன்றியப் பயணத்துக்குப் பிறகு மதம் பற்றி கார்க்கிக்கு லெனின் எழுதிய கடிதம், ‘டால்ஸ்டாய்: ரஷியாவின் நிலைக்கண்ணாடி’ என்னும் லெனின் கட்டுரை ஆகியவை பெரியார் ஈ.வெ.ரா.,எஸ்.ராமநாதன் ஆகியோரால் தமிழாக்கம் செய்யப்பட்டுப் பயன்படுத்தப்பட்டதற்கும் சான்றுகள் உள்ளன. எனவே, ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’யின் தமிழாக்கத்தை இருவரும் சேர்ந்து செய்திருப்பர் என ஊகிக்க வாய்ப்புண்டு.

நன்றி: தி இந்து (06 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories