TNPSC Thervupettagam

கவிஞர் சக்திக்கனல் நாட்டுப்புறக் காவியம் தந்த கவிஞர்

September 7 , 2024 4 hrs 0 min 11 0

கவிஞர் சக்திக்கனல் நாட்டுப்புறக் காவியம் தந்த கவிஞர்

  • க​விஞர் சக்திக்கனல் கடந்த வாரம் காலமானார். 1931இல் பிறந்த சக்திக்​கனல், தனது நெடிய வாழ்வில் பரவலான இலக்கிய, பண்பாட்டு ஈடுபாடு​களைக் கொண்டிருந்​தாலும் தமிழ்​நாட்டின் தனிப்​பெரும் நாட்டார் காப்பியமான அண்ணன்மார் கதையின் எழுத்து வடிவத்தை உருவாக்​கியவர் என்கிற முறையில் மிகுந்த கவனம் பெற்றவர். ‘அண்ணன்மார் சுவாமி கதை’ புத்தகம் 1971இல் வெளிவந்தது. தமிழில் வெளியான ஒரே நாட்டார் காப்பியம் அண்ணன்மார் கதை.
  • சக்​திக்கனல் ‘அண்ணன்மார் சுவாமி கதை’யை 1971இல் வெளியிடு​வதற்கு முன்பே 1965இல் அமெரிக்​காவைச் சேர்ந்த ஆய்வாளர் பிரெண்டா பெக் அக்கதையின் வாய்மொழி வடிவத்தைச் சேகரித்​திருந்​தார். அமெரிக்​கா​விலிருந்து இங்கு வந்து தாராபுரத்தை அடுத்த ஓலப்பாளையம் என்னும் கிராமத்தில் தங்கி, எரிசனம்​பாளையம் ராமசாமி என்பவர் பாடிய கதையைப் பதிவுசெய்திருந்​தார். ஆனால், அதன் உரைநடை வடிவம் 1992இல்தான் வெளிவந்தது. 1971இல் வெளிவந்த சக்திக்​க​னலின் புத்தகம் கொங்குப் பகுதியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்​தியது.
  • கோவை வானொலி நிலையம் 1977 அக்டோபர் 2இல் ‘நாட்டுப்பு​றத்​திலே’ என்னும் பகுதியில் இக்கதையைப் பாட்டு வடிவத்தில் ஒலிபரப்​பியது. கவிஞர் புவியரசுவின் தொகுப்பு​ரை​யுடன் அண்ணன்மார் கதையின் மிகச்​சிறந்த பாடகரான பூளவாடி பொன்னுசாமி குழுவினர், தொடர்ந்து சில வாரங்​களுக்குப் பாடிய​போது, அது மக்களிடம் செவ்வியல் காப்பி​யங்​களுக்கு நிகரான செல்வாக்கைப் பெற்றது. நீண்ட காலக் காலனிய மரபைக் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில், வாய்மொழிப் பண்பாடுதான் மக்கள் பண்பாடாக இருக்க முடியும் என்ற கருத்தை நிரூபிப்​பதுபோல் அது இருந்தது.
  • வாய்மொழிப் பண்பாடு ஓர் இனத்தின் வாழ்க்கை முறையை மட்டுமல்​லாமல் காலப்​போக்கில் அது சந்தித்த சோதனை​களையும் சொல்வது. ஒரு கதை வாயிலாக அதன் வரலாறு சொல்லப்​படும்​போது, ஒட்டுமொத்த இனமே தன்னை அதில் அடையாளம் காண்கிறது. இத்தகையதொரு அடையாளத்தைத் தமிழ்ப் பண்பாட்டுக்குக் கொடுத்த முன்னோடிகளில் ஒருவர் சக்திக்​கனல்.
  • தமிழின் ஒரே நாட்டுப்புறக் காப்பியம் ‘அண்ணன்மார் கதை’தான். மற்றவையெல்லாம் கதைப்​பாடல்கள். இப்போது வழக்கொழிந்து போனவை. ஒரு நாட்டுப்புறக் காப்பி​யத்​திற்கு மூன்று வடிவங்கள் உண்டு. ஒன்று, வாய்மொழி வடிவம். இரண்டாவது, நிகழ்த்து வடிவம். மூன்றாவது, சடங்கு வடிவம். இதில் முதலாவது வடிவம், மற்ற இரண்டு வடிவங்​களையும் புரிந்​து​கொள்ள உதவுகிறது. அந்த வகையில் சக்திக்​க​னலின் புத்தகம் முக்கி​யத்துவம் பெறுகிறது.
  • ‘அண்ணன்மார் கதை’ மீது சக்திக்கனல் கொண்ட ஈடுபாடு, அவரது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்​திருந்தது. அந்தக் கதையைப் பாட்டாகப் பாடும் பல குழுக்​களுடன் அவர் தொடர்​பு​கொண்​டிருந்​தார். கதை நாயகர்​களைக் கடவுள் நிலைக்கு உயர்த்தும் மனப்பாங்கு அவருக்கு இருந்தது. அதனாலேயே தனது புத்தகத்​திற்கு அண்ணன்மார் சுவாமி கதை (1971) என்று பெயரிட்​டார். தொடர்ந்து அவர் எழுதிய புத்தகங்​களின் தலைப்பு​களிலும் (மசைச்சாமி குன்றுடையான் – 2007, அண்ணன்மார் சுவாமி கும்மி-2018) அண்ணன்மார் ‘சாமி’களாகவே இருந்தார்கள்.
  • மு.கருணாநிதி அண்ணன்மார் கதையை நாவலாக எழுதி​ய​போது, அவருக்கு சக்திக்கனல் பெரிதும் உதவினார். கலைஞரின் நாவல் ‘பொன்னர்​-சங்கர்’ (1988) கொங்கு மக்களிடையே வரவேற்பு எதையும் பெறவில்லை. கருணாநி​தியின் நாவல் ‘பொன்னர்​-சங்கர்’ என்னும் திரைப்​படமாக எடுக்​கப்​பட்டு, 2011இல் வெளியானது. சக்திக்கனல் ஏட்டுச்​சுவடியி​லிருந்து அண்ணன்மார் கதையைப் பதிப்​பித்​திருந்​தா​லும், இடையிடையே தன் சொந்தச் சரக்கையும் அவர் சேர்த்திருக்​கிறார் என்று பிரெண்டா பெக் குற்றம்​சாட்​டினார் (The Three Twins: The Telling of a South Indian Folk Epic:1982).
  • ஆனால், கதையின் மையக்​கருத்தைச் சிதைக்​காமல் நாட்டார் காப்பியம் தனது வளர்ச்சிப் போக்கில் இணைத்தல், நீக்கல்​களைச் செய்து​கொள்​ளலாம் என நாட்டுப்பு​ற​வியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அந்த நோக்கில் பார்த்​தால், சக்திக்​க​னலின் கவித்துவம் அப்புத்​தகத்தில் பல இடங்களில் வெளிப்​படு​வதைப் பார்க்​கலாம். பல தனித்த மரபுகள் சேர்ந்து கலந்ததுதான் இந்தியப் பண்பாடு. இதைப் புரிந்​து​கொள்​வதற்கான தனது பங்களிப்பைச் செய்தவர் சக்திக்​கனல். இதற்காகவே அவரை நன்றியோடு நாம் நினைவுகூர வேண்டும்​.

நன்றி: இந்து தமிழ் திசை (07 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories