TNPSC Thervupettagam

சமத்துவ அரசியலும் தேச வளர்ச்சியும்

February 19 , 2025 3 days 24 0

சமத்துவ அரசியலும் தேச வளர்ச்சியும்

  • ஒரு நாட்டின் வளர்ச்சி அல்லது வீழ்ச்சிக்குக் காரணம் என்ன என்பதை 2024ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற டேரன் அசெமோக்லு, சைமன் ஜான்சன், ஜேம்ஸ் ராபின்சன் கண்டறிந்தனர். இதற்கான ஆய்வை ஐரோப்பிய நாடுகளின் காலனிகளில் அவர்கள் நடத்தினர்.
  • அனைத்துத் தரப்பினரின் வளர்ச்சியையும் உள்ளடக்கிய சமூக, அரசியல், பொருளாதார அமைப்புகள் (inclusive Socio-political, economic institutions), ஒரு நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கின்றன. சுரண்டலை ஊக்குவிக்கும் அமைப்புகள் (Extractive Institutions) நாட்டின் ஏற்றத்தாழ்வுகளை நிரந்தரமாக அதிகரிக்கின்றன. சமூக, அரசியல் மாற்றமின்மைக் கொள்கை சுரண்டலை ஊக்கப்படுத்துகிறது என்பதை ஆய்வு மூலம் அவர்கள் உறுதிப்படுத்தினர்.
  • இதே கருத்தை உலக வங்கியும் உறுதி​செய்​கிறது. நாட்டின் தனிமனித வருமானத்தை லஞ்சக் கட்டுப்​பாடு, மக்களின் குரலுக்குச் செவிசாய்க்கும் அரசு, அரசின் செயல்​திறன், நிலையான அரசியல்​தன்மை, வன்முறையற்ற சமூகம், சீரான சட்டம் ஒழுங்கு போன்ற காரணிகள் தீர்மானிக்​கின்றன.
  • சுரண்டல் அமைப்புகள் மக்களை ஏழைகளாக்கி, வளங்களைச் சுரண்டி, வளர்ச்​சியைத் தடுக்​கின்றன. மேட்டிமைக் குடிகள் தாங்கள் தொடர்ந்து வளம்பெற இந்த அமைப்பு​களைக் கட்டமைத்​துள்ளனர். அனைவருக்கும் பொருளாதார வாய்ப்புகளை வழங்கும் அமைப்பு, ஜனநாயகபூர்வமான அரசு, அனைவருக்கும் சமமான, தரமான கல்வியை உறுதி​செய்யும் அமைப்புகள் எப்படி உருவாகி வந்தன, அவை உலகின் போக்கில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தின என்பதை ஆய்வுகள் தெரிவிக்​கின்றன.

அடிமை முறை ஒழிந்தது:

  • ஐரோப்​பா​வில், 14ஆம் நூற்றாண்டு வரை நிலப்​பிரபுத்துவம் இருந்தது. முதலா​ளி​களின் கட்டுப்​பாட்டில் தொழிலா​ளிகள் இருந்​தனர். கூலி குறைவு. அதன் மீதும் வரி விதிக்​கப்​பட்டது. தொழிலா​ளிகள் நிலங்​களை​விட்டு வெளியே செல்ல முடியாது. அது ஒரு சுரண்டும் பொருளா​தாரச் சமூகமாக இருந்தது. பிளேக் கொள்ளை நோய் (Bubonic Plague) 1346இல் ஐரோப்பாவை அழித்தது. ஏராளமான தொழிலா​ளிகள் இறந்தனர். தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. தொழிலா​ளர்கள் கூலி அதிகம் கேட்டதால் வேறுவழி​யின்றிக் கூலி உயர்த்​தப்​பட்டது. பிரிட்டன், மேற்கு ஐரோப்​பாவில் அடிமை முறைக்குக் கொள்ளை நோய் முடிவு​கட்​டியது.
  • இதன் விளைவாக, அனைவருக்​குமான பொருளாதார அமைப்பு உருவானது. மேலும், முதலீடு​களும் வர்த்​தகமும் கண்டு​பிடிப்புகளும் ஊக்கு​விக்​கப்​பட்டன. சந்தைப் பொருளா​தாரம் வளர்ந்தது. புதிய சிந்தனை​களுக்கும் கண்டு​பிடிப்பு​களுக்கும் காப்புரிமை வழங்கப்​பட்டது. சொத்துரிமை வழங்கப்​பட்டது.
  • சட்டம் ஒழுங்கு பேணப்​பட்டது. கட்டுப்​பாடற்ற வரி (Arbitrary taxation) விதிப்பு நிறுத்​தப்​பட்டது. ஏகாதிபத்​தியம் (Monopoly) நிறுத்​தப்​பட்டது. சாலைகள், கால்வாய்கள், ரயில்வே போன்ற அடிப்​படைக் கட்டமைப்பு வசதிகள், தொழில் வளர்ச்​சிகள் ஏற்பட்டன. தொழில்​நுட்பம் வளர்ந்தது. தொழில் புரட்சியை நோக்கி நகர்ந்தது. பழமையி​லிருந்து விடுதலை கிடைத்தது.

முடிவுக்கு வந்த மன்னராட்சி:

  • 1688இல் பிரிட்​டனில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. தேவால​யங்கள், அரசர், அமைச்​சர்கள், மேட்டிமைக் குடிகளின் அதிகாரம் குறைக்​கப்​பட்டது. அதிகாரம் பாராளு​மன்​றத்​துக்கு மாற்றப்​பட்டது. அரசு தனித்து இயங்கியது. மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்​பட்டது. அரசின் நடவடிக்கையில் மக்கள் தலையிட முடிந்தது.
  • இது சீர்மிகு புரட்சி (Glorious Revolution) ஆகும். இந்தப் புரட்​சி​யானது பன்முகத்​தன்மை வாய்ந்த சமூகத்தை (Pluralistic society) கட்டமைத்தது. இது உலகில் முதன்​முதலில் அனைவருக்​குமான அரசியல் நிறுவனத்தை (Inclusive Political Institutions) உருவாக்​கியது. சொத்துரிமை, நிதிச் சந்தை, வெளிநாட்டு வர்த்​தகம், மேலும் தொழில் துறைக்கான தடைகளை இந்தச் சீர்மிகு புரட்சி நீக்கியது. அது பொருளா​தாரத் தேவைகளை​யும், சமூகத்தின் குறிக்​கோள்​களையும் எட்டுவதாக அமைந்தது.

மாற்றத்தை ஏற்படுத்திய புரட்சி:

  • 1789ஆம் ஆண்டுவரை ஃபிரான்ஸ் சர்வா​திகார மன்னரின் கீழ், பிரபுக்கள் (The Aristocrats), மதகுரு​மார்கள் (The clergy), மற்றவர்​கள்​/​விவ​சா​யிகள் (The Peasants) என மூன்று பிரிவுகள் இருந்தன. ஒவ்வொரு​வருக்கும் தனித்​தனிச் சட்டங்கள். பிரபுக்கள், மதகுரு​மாரிடம் அதிக நிலம் இருந்தது. இவர்கள் வரி கட்டத் தேவையில்லை. விவசா​யிகள் அதிக வரி கட்ட வேண்டும். மன்னர், பிரபுக்கள், மதகுரு​மார்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்​தனர்.
  • அரசியல் அதிகாரம் அவர்களின் கையில் இருந்தது. கிராமங்​களில் வாழ்க்கை இன்னும் மோசமாக இருந்தது. அடிமைகள் உற்பத்​தியைப் பெருக்​கினர். பிரெஞ்சு புரட்சி ஏற்பட்ட பின்னர் புதிய அரசமைப்புச் சட்டம் உருவானது. தேசிய சட்டமன்றம், நிலப் பிரபுத்துவ (feudal system) முறையை ஒழித்தது. சொத்துள்ளவர்​களிட​மிருந்து வரி வசூல் செய்யப்​பட்டது.
  • பிரபுக்​களும் மதகுரு​மார்​களும் வரி செலுத்​தினர். இப்பு​ரட்சி ஐரோப்பா எங்கும் பரவியது. அது சர்வா​தி​காரத்தை ஒழித்தது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றானது. நிலப்பிரபுத்துவம், உற்பத்திச் சங்கங்கள் ஒழிக்​கப்​பட்டன. 1793இல் ராணுவத்தில் கட்டாய வேலைக்கு மக்கள் அமர்த்​தப்​பட்​டனர்.
  • பிரெஞ்சு ராணுவம் பெரிதாக வளர்ந்தது. மேற்கு ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரி​யாவைக் கைப்பற்றியது. அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பொருளாதார நிறுவனங்கள் ஐரோப்​பாவில் உருவாகின. பிரெஞ்சு புரட்சி எட்டாத ஹங்கேரி, ரஷ்யா, போலந்து, ஸ்பெயின் போன்ற நாடுகள் பெரும்​பாலும் தேக்க நிலையில் இருந்தன.
  • 17ஆம் நூற்றாண்டு வரை ஜப்பானில் மன்னராட்​சி-அடிமை முறை இருந்தது. 1853இல் மேத்யூ சி பெரி அமெரிக்கப் போர்க்​ கப்​பல்​களைக் கொண்டு​வந்து எடோ (டோக்​கியோ) துறைமுகத்தின் முன்பு வர்த்​தகத்​துக்​காகப் போரிட்​டார். டொங்குவா அரசாட்​சிக்கு எதிராக, மெஜ்ஜி அரசியல் புரட்சி ஏற்பட்டது. அது அனைவரையும் உள்ளடக்கிய அரசமைப்பை உருவாக்​கியது. அது பொருளாதார வளர்ச்​சி​யையும் ஏற்படுத்​தியது. அதன் மூலம் ஜப்பான் பெரும் வளர்ச்சியை அடைந்தது.
  • 1933இல் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் அமெரிக்க அதிபர் ஆனார். பொருளா​தாரம் பெரும் மந்த நிலையில் (Great Depression) இருந்தது. 25% தொழிலா​ளிகள் வேலையில்​லாமலும் வறுமை​யிலும் இருந்​தனர். தொழில் உற்பத்தி இல்லை. முதலீடுகள் இல்லை. அப்போது புதிய ஒப்பந்​தத்தை ரூஸ்வெல்ட் கொண்டு​வந்​தார்.
  • தேசியத் தொழில் துறை மீட்புச் சட்டம் கொண்டு​வந்​தார். பொதுப்​பணித் துறை மாபெரும் சாலைகளை அமைத்தது. சமூகப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்​பட்டது. குழந்தைகள், வேலையில்​லாதவர்கள், மாற்றுத்​திற​னாளிகள் நலன்கள் பாதுகாக்​கப்​பட்டன. தேசியத் தொழிலா​ளிகள் உறவு சட்டம், தொழிலாளர் சங்கங்களை அமைக்​கவும் அவர்கள் நலன்களைப் பேசவும் வழிவகை செய்தது.

நாடுகள் பின்தங்கக் காரணம்:

  • புவியியல் அமைப்பு, பண்பாடு, சுயநலநோக்கு கொண்ட தலைவர்கள் மட்டுமே நாடுகளின் வளர்ச்​சி​யின்​மைக்குக் காரணமாக இருப்​ப​தில்லை. சரியாகக் கட்டமைக்​கப்படாத சமூக, அரசியல், பொருளாதார அமைப்பு​களும் காரணமாக உள்ளன. அமெரிக்​காவில் ஏழ்மை​யானவர்​களுக்கும் சுகாதாரம், கல்வி, பொதுச்​சேவைகள் சமமாகக் கிடைக்​கின்றன. ஆனால், மெக்ஸிகோவில் அவ்வாறு இல்லை.
  • இரண்டாம் உலகப் போருக்கு முன்பு வட கொரியா​விலும் தென் கொரியா​விலும் பொருளா​தா​ரமும் சமூகக் கட்டமைப்பும் ஒன்றாக இருந்தன. இன்றைக்கு வட கொரியாவின் பின்தங்கிய நிலைக்குச் சமமற்ற அரசியல் பொருளாதார அமைப்புகளே காரணம்.
  • தொழில் புரட்​சி​யி​னால், ஏற்பட்ட நன்மை​களால் இந்தியா அதிக அளவில் பயனடைய​வில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்திய சாதிய முறை அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்​சிக்கு உதவவில்லை என்றும் சாதிய அடுக்​குமுறை நாட்டின் வளர்ச்சியை மட்டுப்​படுத்​தி​யதோடு, தொழில்​நுட்பக் கண்டு​பிடிப்பு உட்பட பல்வேறு தளங்களிலும் தேக்கநிலையை ஏற்படுத்​தி​யுள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்​காட்டு​கின்​றனர். அனைவரின் வளர்ச்​சி​யையும் உள்ளடக்கிய அரசியல் பொருளாதார நிறுவனங்கள் உள்ள நாடுகளில் சமூகம் சமவளர்ச்​சி​யடைகிறது.
  • அவை புதிய தொழில்​நுட்​பத்​துக்கான முதலீடுகள், பொருளாதார, அரசியல் வளர்ச்​சிக்கான திறன்களை மேம்படுத்​துதல் போன்ற​வற்றுக்கு வாய்ப்புகளை வழங்கு​கின்றன. மேலும் அரசியல் அதிகாரப் பகிர்வு பன்மைத்து​வத்தை வளர்க்​கிறது. இது சட்டம் ஒழுங்கு, சொத்துரிமை, சந்தைப் பொருளா​தா​ரத்​துக்குச் சம வாய்ப்பை வழங்கு​கிறது. இந்த வரலாற்றை உணர்ந்​து​கொண்​ட​வர்கள் சமத்துவ அரசியலின் முக்கி​யத்து​வத்​தையும் புரிந்​து​கொள்​வார்கள்!

நன்றி: இந்து தமிழ் திசை (19 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories