TNPSC Thervupettagam

சென்னை மருத்துவக் கல்லூரி இன்னும் சிறக்க வேண்டாமா?

March 10 , 2025 4 hrs 0 min 13 0

சென்னை மருத்துவக் கல்லூரி இன்னும் சிறக்க வேண்டாமா?

  • நியூயார்க்கிலிருந்து வெளியாகும் ‘சிஈஓ வேர்ல்டு’ இதழில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவக் கல்லூரிகள் தர வரிசைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த மருத்துவக் கல்லூரிகள் பட்டியல் வெளியாகியுள்ளது.
  • மருத்துவக் கல்வியின் தரம், மாணவர் சேர்க்கைத் தகுதிகள், சிறப்புத் துறைகள், உலகளாவிய நன்மதிப்பு, மருத்துவ ஆராய்ச்சி நடவடிக்கைகள், மாணவர்களின் மனத் திருப்தி, ஓராண்டுக்கான கல்விக் கட்டணம் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்து, மருத்துவக் கல்லூரிகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அதில் 99.06 மதிப்பெண்கள் பெற்று அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவக் கல்வி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.
  • 22ஆவது இடத்​தில் டெல்லி எய்ம்ஸ் கல்வி நிறு​வன​மும், 46ஆவது இடத்​தில் வேலூர் சிஎம்சி மருத்​துவக் கல்லூரி​யும், 55ஆவது இடத்​தில் புதுச்​சேரி ஜிப்மர் மருத்​துவக் கல்லூரி​யும் உள்ளன. 60ஆவது இடத்​தில் 78.77 மதிப்​பெண்​களுடன் சென்னை மருத்​துவக் கல்லூரி (எம்.எம்​.சி.) உள்ளது. வரலாற்றுச் சிறப்பு​மிக்க இக்கல்​லூரியை முன்னணி வரிசைக்​குக் கொண்டுவர அரசு செய்ய வேண்​டியது என்ன?

பற்றாக்​குறை​யும் குறை​பாடு​களும்:

  • சென்னை மருத்​துவக் கல்லூரி​யில் எம்பிபிஎஸ், எம்டி, எம்எஸ், டிஎம், எம்சிஎச் உள்ளிட்ட படிப்பு​களைப் படிக்​கும் மாணவர்​களின் எண்ணிக்கை 3,072. ஆனால், எய்ம்​ஸில் 2,559, வேலூர் சிஎம்​சி​யில் 1,139, ஜிப்​மரில் 1982 ஆகவும் மாணவர்கள் எண்ணிக்கை உள்ளது. மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ற அளவுக்​குப் போதிய மருத்துவ ஆசிரியர்கள் இல்லாதது, மாணவர்​களுக்​கும் மருத்​துவர்​களுக்​கும் சிரமத்தை ஏற்படுத்து​கிறது.
  • சென்னை மருத்​துவக் கல்லூரி மருத்​துவ​மனை​யில் தினசரி புறநோ​யாளிகள் எண்ணிக்கை 21,512. எய்ம்ஸ், சிஎம்சி வேலூர், ஜிப்​மரில் முறையே 14,335, 9,198, 4,814. எம்.எம்.சி. மருத்​துவ​மனை​யில் உள்நோ​யாளிகள் எண்ணிக்கை 8,869ஆக உள்ளது. எய்ம்ஸ், வேலூர் சிஎம்சி மற்றும் ஜிப்​மரில் முறையே 3,325, 2,037, 2,231. எய்ம்ஸ் உள்ளிட்ட மற்ற கல்லூரி​களுடன் ஒப்பிடும்​போது, எம்.எம்.சி-​யில் மருத்துவ ஆசிரியர்கள் - மாணவர்கள் விகித​மும், மருத்​துவர்கள் - நோயாளிகள் விகித​மும் மிகக் குறைவு. இங்குள்ள மருத்​துவர்​களுக்​குப் பிற மருத்​துவ​மனை​களில் அயல் பணி (Deputation) தரப்​பட்​டுள்​ளது. இதனால் இங்கு பணிச்​சுமை மேலும் அதிகரித்​துள்ளது.

மருத்துவ ஆராய்ச்சி:

  • பொது​வாக, ஆராய்ச்சிப் பணிகளுக்கு என்றே தனியாக மருத்​துவர்கள் நியமிக்​கப்பட வேண்​டும். ஆனால், எம்.எம்.சி-​யிலோ அவ்வாறு நியமிக்​காமல், இருக்​கின்ற மருத்​துவர்களே அதையும் செய்ய வேண்டி உள்ள​தால், ஆராய்ச்சிகளைப் பெரிய அளவில் முனைப்புடன் செய்ய முடிவதில்லை. நான்​காவது பணியாக, மருத்​துவக் காப்​பீட்டுத் திட்டப் பணியும் மருத்​துவர்கள் மீது சுமத்​தப்​பட்​டுள்​ளது. முதலமைச்​சரின் விரிவான மருத்​துவக் காப்​பீட்டுத் திட்டம் (CMCHIS) போன்ற மருத்​துவக் காப்​பீட்டுத் திட்டம் டெல்லி எய்ம்​ஸில் கிடை​யாது.
  • ஆனால், தமிழகத்​தில் அரசு மருத்​துவ​மனை​களில் இந்தக் காப்​பீட்டுத் திட்டம் மக்களுக்​கும் மருத்​துவர்​களுக்​கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்து​கிறது. வாரந்​தோறும் செவ்​வாய்க்​கிழமை இதற்கான ஆய்வுக் கூட்டம் டீன் அல்லது மருத்துவ இயக்​குநர் தலைமை​யில் நடத்​தப்​படு​வதுடன், ஆண்டு முழு​வதும் இலக்கு வைத்து நோயாளி​களைச் சேர்ப்​ப​தற்கு மருத்​துவர்கள் அதீத முயற்சி எடுக்க வேண்​டும்.
  • ஒருபுறம் நோயாளிகள் காப்​பீடு அட்டை வாங்கு​வதற்காக அலைய வேண்டி உள்ளது. இதனால், நோயாளி​களுக்​குச் சிகிச்சை அளிப்​ப​தை​யும், மாணவர்​களுக்​குப் பாடம் நடத்து​வதை​யும் செய்ய வேண்டிய மருத்​துவர்​களுக்கு வீணாகக் காலவிரயம் ஏற்படு​கிறது. அது மட்டுமன்றி மருத்​துவர்​கள், நோயாளிகள் இடையே தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்படு​கின்றன.

மிகக் குறைவான நிதி ஒதுக்​கீடு:

  • 2022 - 23ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்​கீட்​டில் எய்ம்ஸ் மருத்​துவ​மனை​யுடன் ஒப்பிடு​கை​யில், எம்.எம்.சி-க்கு மிகக் குறைவான நிதி தரப்​பட்​டுள்​ளது. ஊதியத்​துக்காக எய்ம்ஸ் மருத்​துவ​மனைக்கு ரூ.2,237 கோடி ஒதுக்​கப்​பட்​டிருக்​கும் நிலை​யில், எம்.எம்.சி-க்கு ஒதுக்​கப்​பட்ட நிதி ரூ.1,069 கோடி​தான். கல்விக் கட்டமைப்பு, இதர பராமரிப்புச் செலவு​களுக்காக எய்ம்​ஸுக்கு ரூ.1,311 கோடி ஒதுக்​கப்​பட்​டிருக்​கிறது. எம்.எம்.சி-க்கு ரூ.431 கோடி மட்டுமே ஒதுக்​கப்​பட்​டிருக்​கிறது.
  • சென்னை மருத்​துவக் கல்லூரியைப் பொறுத்​தவரை, அதனுடன் இணைந்த எழும்​பூர் மகப்​பேறு மருத்​துவமனை (IOG), எழும்​பூர் குழந்தைகள் நல மருத்​துவமனை (ICH), எழும்​பூர் கண் மருத்​துவமனை (RIO), அயனாவரம் மன நல ஆராய்ச்சி மையம் (IMH) என ஒவ்வொன்​றும் தனித்து​வத்​துடன் இயங்​கிவரு​கின்றன. இதைத் தவிர, சென்னை மருத்​துவக் கல்லூரி​யில் மருத்​துவம், அறுவைசிகிச்சை உள்ளிட்ட பல்வேறு துறைகள் வலுவான கட்டமைப்புடன் இயங்​கிவரு​கின்றன.
  • தமிழகத்​தில் மருத்​துவர்​களுக்கு நீண்ட காலமாக உரிய ஊதியம் மறுக்​கப்​படு​கிறது. அதுவும் எய்ம்​ஸுக்கு இணையான ஊதியம் தரப்பட வேண்​டும் என தேசிய மருத்துவ ஆணையம் (NMC) அறிவுறுத்திய பிறகும் தமிழக அரசு அதைச் செயல்​படுத்​தவில்லை.

அரசு செய்ய வேண்​டியவை:

  • போதிய மருத்​துவர்​கள், மருத்​துவப் பணியாளர்கள் (Human Resource) இன்றி எதையுமே சாதிக்க முடியாது. அனைத்​துச் சிறப்பு - உயர் சிறப்புத் துறை​களில் போதிய எண்ணிக்கை​யில் பேராசிரியர்​கள், இணைப் பேராசிரியர்​கள், உதவிப் பேராசிரியர்கள் நியமனம் செய்​யப்பட வேண்​டும். போதிய செவிலியர்​கள், மருத்​துவப் பணியாளர்கள் நியமிக்​கப்பட வேண்​டும். ஒவ்வொரு துறைக்​கும் தேவையான அளவு நோயாளிகள் படுக்கை வசதி​கள், கருவி​கள், சுகா​தா​ரமான கழிப்பறை வசதிகள் செய்து தரப்பட வேண்​டும்.
  • மருத்​துவர்​கள், பட்டமேற்​படிப்பு மருத்​துவர்கள் - பயிற்சி மருத்​துவர்​களுக்​குப் போதிய உறைவிட வசதி (Quarters) ஏற்படுத்​தித் தர வேண்​டும். மேலும், அவர்​களின் பாது​காப்பை அரசு உறுதிப்​படுத்த வேண்​டும். நாட்​டிலேயே குறைவான ஊதியம் தரப்​படும் நிலை​யிலும் மருத்​துவர்கள் இங்கு சாதனைகள் புரிந்துவருகின்​றனர். இந்த நிலை​யில், மருத்​துவர்களின் ஊதியக் கோரிக்கையை - அதுவும் இருக்கிற அரசாணையை நடைமுறைப்​படுத்த அரசு முன்​வந்​தால் மருத்​துவர்​களின் பங்களிப்பும் ஆர்வ​மும் மேலும் கணிசமாக அதிகரிக்​கும்.
  • விளையாட்டுத் துறை​யில் சர்வதேச அளவில் வெற்றி பெறு​பவர்​களுக்​குப் பெரும் பரிசுத் தொகை​யும் அங்கீ​கார​மும் தமிழக அரசு சார்​பில் வழங்​கப்​படு​வதைப் போலச் சிறப்​பாகப் பணிபுரி​யும் மருத்​துவர்​களுக்​கும் உரிய அங்கீ​காரம் வழங்​கப்பட வேண்​டும். தமிழக முதல்வர் ஏற்கெனவேவாக்​குறுதி அளித்​த​வாறு, மறைந்த முன்​னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறப்​பித்த அரசாணை 354இன்படி 12 ஆண்டு​களில் ஊதியப்​பட்டை நான்கை வழங்க வேண்​டும்.
  • இதற்கு அரசுக்கு ஆண்​டுக்​குக் கூடு​தலாக ரூ.300 கோடி மட்டுமே தேவைப்​படு​கிறது. ஆரோக்​கியமான பணிச்​சூழல், உரிய அங்​கீகாரம், தகு​திக்​கேற்ற ஊ​தி​யம் ​போன்றவை இருந்​தால், சென்னை மருத்​துவக் கல்​லூரியை மட்டுமல்ல, அனைத்து அரசு மருத்​துவக் கல்​லூரி​களை​யும்​ ​முன்​வரிசைக்​கு​க்​ ​கொண்​டு​வர முடியும்​.

நன்றி: இந்து தமிழ் திசை (10 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories