செயற்கை நுண்ணறிவு: நெருக்கடியா, நல்வாய்ப்பா?
- புதிய தொழில்நுட்பங்களின் வருகையால் வேலையிழப்பு உண்டாகுமா? மனித உழைப்புக்கு நிகரான ஒன்றைத் தொழில்நுட்பம் மூலம் முழுமையாகச் சாத்தியப்படுத்திட முடியுமா? உழைப்புச் சக்தியின் முக்கியத்துவத்தைத் தொழில்நுட்பம் தகர்த்துவிடுமா? இதுபோன்ற கேள்விகளைச் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் எழுச்சி தற்போது எழுப்பிவருகிறது.
சர்வதேசத் தாக்கம்:
- செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஏற்பட்டுவரும் அதிவேக வளர்ச்சி, உலக அளவில் பிரம்மாண்டமான அளவில் சமூகப் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தொழில், இதர சேவைத் துறைகளில் இன்று மனிதர்களால் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுவரும் பெரும்பாலான காரியங்களைக் கச்சிதமாகச் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட இயந்திரங்கள் (Intelligent Machines) இன்னும் சில ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 2025இன் இறுதிவாக்கில் ‘AI Workers’ என்னும் புதிய வகை இயந்திரங்கள் செயல்பாட்டுக்கு வந்துவிடும் என்று ‘ஓபன் ஏ.ஐ.’ நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்தப் புதிய வகை இயந்திரங்கள், சிக்கல் நிறைந்த இலக்குகளைக்கூடப் புரிந்துகொண்டு, தரவுகள் - சூழலின் அடிப்படையில் தாமே (மனிதர்களின் தலையீடின்றி அல்லது குறைந்தபட்ச மேற்பார்வையுடன்) முடிவுகளை மேற்கொண்டு செயல்படும் ஆற்றல் கொண்டவையாக இருக்கும்.
- தொழில்நுட்ப வளர்ச்சியின் பெரும் பாய்ச்சல் உலகப் பொருளாதாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. 2021 - 2022ஆம் ஆண்டு நிலவரப்படி செயற்கை நுண்ணறிவு தொடர்பாகக் கோரப்பட்டுள்ள காப்புரிமைகளின் (Patents) எண்ணிக்கை சர்வதேச அளவில் ஏறத்தாழ 62,000. இனிவரும் காலத்தில், செயற்கை நுண்ணறிவு தொடர்பான காப்புரிமைக் கோரிக்கைகள் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- 2022இல் ‘ஜெனரேட்டிவ் ஏ.ஐ.’ (Generative AI) துறையில் 3 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த உலகத் தனியார் முதலீடு (Global Private Investment) 2023இன் இறுதிவாக்கில், 25.2 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. 2021 முதல் 2023 வரையிலான இரண்டு ஆண்டுகளில், அனைத்து வகையான செயற்கை நுண்ணறிவுப் பிரிவுகளில் செய்யப்பட்டுள்ள கார்ப்பரேட் முதலீடு 761 பில்லியன் அமெரிக்க டாலர்.
நடைமுறைச் சிக்கல்கள்:
- தொழில் துறைகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பரவலாக ஏற்கப்பட்டு, நடைமுறைக்கு வர வேண்டும் என்றால், அதற்கான முழுமையான உள்கட்டமைப்பு வசதிகள் அவசியம். அதிலும் தரவுகள்தான் செயற்கை நுண்ணறிவுத் துறை உள்கட்டமைப்பில் (AI Infrastructure) மிக முக்கியமான இடத்தில் உள்ளன. மிகத் துல்லியமான வெளியீடுகளை (Outputs) தரக்கூடிய செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை (AI Models) சாதாரணத் தரவுகள், தீர்வுமுறைகள் (Algorithm) கொண்டு உருவாக்கிட முடியாது. அதற்கு உயர்தரத் தரவுகள் (High Quality Data) அவசியத் தேவை. அவற்றுக்கான பயன்பாட்டுச் செலவு நிறுவனங்களுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது.
தடுமாறும் உழைப்புச் சந்தை:
- செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் காரணமாக வருங்காலத்தில் உழைப்புச் சந்தையில் பெரும் தடுமாற்றம் ஏற்படும் என்ற கருத்தைச் சர்வதேச அமைப்புகளும், சமூகஅறிவியலாளர்களும் தெரிவிக்கின்றனர். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் பின்தங்கி உள்ள வளரும் நாடுகளில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் காரணமாக வேலையிழப்பு ஏற்படக்கூடிய அபாயம் மிக அதிகமாக இருப்பதாகச் சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) கூறுகிறது.
- செயற்கை நுண்ணறிவு இயந்திரமயம் (Automation due to AI) மூலம் உலக அளவில் ஏறத்தாழ 7.5 கோடி வேலை பறிபோகும் என்று சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளின் உழைப்புச் சந்தையிலும் நிலைமை மோசமாகும் என்று தொழில் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
- இந்தியப் பொருளாதாரத்தில் சேவைத் துறையின் பங்களிப்பு முதன்மையாக இருப்பதால், செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்த இருக்கும் விளைவுகள் கடுமையாக இருக்குமோ என்ற அச்ச உணர்வு நிலவுகிறது. வங்கி, காப்பீடு, இதர நிதிச் சேவைகள், தகவல் தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப் பயன்பாட்டின் தவிர்க்க இயலாத நிலையைப் பார்த்து வருகிறோம்.
- தனியார் துறை, சந்தை சக்திகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப் பயன்பாட்டினைத் தொடர்ந்து அதிகரித்தால், நாஸ்காம் அமைப்பின் மதிப்பீட்டின்படி, 2027இல் இந்திய செயற்கை நுண்ணறிவுச் சந்தையின் சராசரி ஆண்டு வருவாய் வளர்ச்சி விகிதம் (CAGR) 25 முதல் 35% வளர்ச்சியை அடையும்.
- அதேநேரத்தில், அபரிமிதமான உழைப்புச் சக்தி கொண்ட இந்தியா போன்றதொரு நாட்டில், நீடித்த வேலையிழப்பு என்னும் நிலை பெரும் நெருக்கடியை உருவாக்கும் அபாயமும் இருக்கிறது. இந்தியப் பொருளாதார ஆய்வறிக்கை 2023-2024இல் குறிப்பிட்டிருப்பதுபோல், ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 78.5 லட்சம் வேலைகளை விவசாயம் அல்லாத துறைகளில் இந்திய அரசாங்கம் உருவாக்கினால் மட்டுமே, அதிகரித்துவரும் உழைப்புச் சக்தியைத் திறம்படச் சமாளித்திட முடியும்.
பொருளாதார ஏற்றத்தாழ்வு:
- தொழில் புரட்சி தொடங்கி நம் காலத்துத் தொழில்நுட்ப வளர்ச்சி வரை, அனைத்து மாற்றங்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வை ஓர் உள்ளார்ந்த அம்சமாகவே கொண்டுள்ளன. தொழில்நுட்ப முன்னேற்றத்தால் உற்பத்தித்திறன், லாபம் அதிகரித்தாலும் அவற்றிலிருந்து தொழிலாளர்கள் உடனடியாக எந்தவிதப் பலனையும் பெற முடிவதில்லை. புதிய தொழில்நுட்பத்தின் வருகை காரணமாக வேலையிழப்பைச் சந்திக்கும் தொழிலாளர்கள், தங்களின் வாழ்வாதாரத்துக்கான மாற்று வேலையைப் பெறுவதற்கு மிக நீண்ட காலம் ஆகிறது.
- இடைப்பட்ட காலத்தில் அந்தத் தொழிலாளர்கள் பெரும் பொருளாதாரச் சிக்கலில் சிக்கித் துன்பத்துக்கு உள்ளாகிறார்கள். இந்த இயங்குமுறையை முதல் தொழிற்புரட்சிக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் (1790 - 1840) உலகம் உணர்ந்தது. இந்தத் தேக்கநிலைக் காலக்கட்டத்தை ஏங்கல்ஸ் பாஸ் (‘Engel’s Pause’) என்று குறிப்பிடுகிறோம். இத்தகையதொரு தேக்கநிலையைச் சமாளித்திட உரிய நிறுவனக் கட்டமைப்புகள் மூலம் உழைப்பு, உற்பத்தித்திறன், மூலதனம் ஆகியவற்றை மிகக் கவனமாகக் கையாளுதல் வேண்டும்.
- பிரிட்டனில் ஏற்பட்ட தொழிற்புரட்சிக்குப் பிந்தைய காலக்கட்டத்தில், மனித உழைப்பின் மீது இயந்திரமயமாக்கல் (Automation) என்னும் தொழில்நுட்பம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து பிரெடரிக் ஏங்கல்ஸ் தெரிவித்த கருத்துகள் இன்றைய கேள்விகளுக்குப் பதில்களைப் பெற உதவிகரமாக உள்ளன.
- காலாவதியான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் தொழிலாளர்களுக்குப் புதிய தொழில்நுட்பம் அல்லது இயந்திரமயமாக்கம் வேலையிழப்பையே உருவாக்கும். அதேநேரம், புதிய தொழில்துறைகளும், தொழில்நுட்பங்களும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று ஏங்கல்ஸ் கூறினார்.
முன்னோக்கிய பயணம்:
- செயற்கைத் தொழில்நுட்ப ஆராய்ச்சி - மேம்பாடு என்பது தற்போது வெகு சில தனியார் நிறுவனங்களிடையே குவிந்துள்ளது. இத்தகைய நிலை தொடர்ந்து அதிகரித்தால், தொழில்நுட்பப் பயன்பாட்டின் பலன்களும் தனியார் நிறுவனங்களின் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள மட்டுமே பயன்படும்.
- வளரும் நாடுகளின் சமூகப் பொருளாதார இலக்குகளை அடைந்திட அவை பயன்படாத நிலை ஏற்படலாம். எனவே, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப் பயன்பாடு குறித்த கொள்கைகளை உலக நாடுகள் சமூகப் பொருளாதாரக் கண்ணோட்டத்துடன் வகுத்துக்கொள்வது அவசியம்.
- இந்தியா போன்றதொரு நாட்டில், தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு ஏற்ற கல்விக் கட்டமைப்புகள், திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கு முதலீடு, நிதி ஒதுக்கீடு அதிகரித்திட வேண்டும். தொலைநோக்குச் சிந்தனை கொண்ட கொள்கை அறிக்கைகள் தயாரிக்கப்பட வேண்டும். உரிய நிறுவனக் கட்டமைப்புகளை உருவாக்கிக்கொள்வதன் மூலம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி, முன்னோக்கிய பயணத்தைத் தொடர முடியும்.
நன்றி: இந்து தமிழ் திசை (20 – 02 – 2025)