TNPSC Thervupettagam

சோழர்களின் கலை முதலீடு நமக்குப் பாடம்

January 6 , 2024 196 days 154 0
  • நவீனத் தமிழ் ஓவியர்களில் முக்கியமான ஒருவரான ட்ராட்ஸ்கி மருது, பண்டைய தமிழ்ச் சமூகத்தின் மாந்தர்களைத் தொடர்ந்து தன்னுடைய ஓவியங்களில் வெவ்வேறு ரூபங்களில் கொண்டுவருபவர். மருதுவின்வாளோர் ஆடும் அமலைநூல் ஒரு முக்கியமான முயற்சி. தமிழ்ப் பெருமன்னர்களை இந்த நூலில் முற்றிலும் மாறுபட்ட வகையில் வரைந்திருந்தார் மருது. அரசர்கள் என்றாலே, உடல் முழுவதும் ஆபரணங்களும், கவசங்களும் பூட்டிய மனிதர்கள் எனும் பிம்பத்தை உடைத்து, அவர்களை இயல்பான தோற்றத்துக்கு உருமாற்றியிருந்தார்.
  • முன்பு மன்னர்களின் பின்னணியிலிருந்த பிரமாண்டமான மாட மாளிகைகள், கோட்டைக் கொத்தளங்கள், மன்னர்கள் உடனிருந்த படையினரின் டாம்பீகம் எல்லாமும் மருதுவின் ஓவியங்களில் காணாமல் போயின. முக்கியமாகத் தமிழ் மன்னர்களின் தோற்றம் தமிழ் மக்களின் தோற்றத்தைப் பிரதிபலித்தது. தமிழ் ஓவியத்தைப் பற்றிப் பேசிய மருது சோழர் காலத்துக்கு நகர்ந்தார். ‘சோழர்கள் இன்றுநூலில் இடம்பெற்றுள்ள முக்கியமான பேட்டிகளில் ஒன்று இது.

வரலாற்றை எப்படிப் பார்க்க வேண்டும் என்ற பார்வையின் ஆரம்பப் புள்ளியாக உங்களுக்கு எது அமைந்தது?

  • இளவயது முதலாகவே மெல்ல உருவாகியிருக்க வேண்டும். என்னுடைய அப்பா மருதப்பன் காந்தி, ட்ராட்ஸ்கி, பெரியார் என்று பயணப்பட்டவர். இது வீட்டில் இருந்த குழந்தைகளான எங்கள் வாழ்விலும் தாக்கம் செலுத்தியது. சரித்திரத் திரைப்படங்களைப் பார்க்கும்போது, ‘தூங்கச் செல்லும்போதுகூடவா இவ்வளவு நகைகளையும் உடைகளையும் போட்டுக்கொண்டு ராஜா, ராணிகள் படுப்பார்கள்?; புழுக்கமாக இருக்காதா?’ என்று சின்ன வயதில் தோன்றும். அதுதான் ஆரம்பப் புள்ளியாக இருக்க வேண்டும். ஓவியங்களையோ, சிற்பங்களையோ உள்ளது உள்ளபடி வெளிப்படுத்துதல் உலகில் எந்தச் சமூகத்திலும் எடுத்தவுடன் நிகழ்ந்துவிடவில்லை என்றாலும், படிப்படியாக அதை நோக்கி எல்லோருமே நகர்ந்திருக்கிறார்கள்.
  • பொதுவாக, நம்முடைய மரபானது குறியீட்டுத்தன்மையின் செல்வாக்கு நிரம்பியது. உதாரணத்துக்கு, சோழர் காலச் சிலைகளை எடுத்துக்கொள்வோம். அவை எதுவும் அந்தக் காலத்து மனிதர்களை அப்படியே பிரதிபலிப்பது இல்லை. மாறாக, சிற்ப இலக்கண லட்சணங்களுடன் உருவாக்கப்பட்ட அந்தச் சிலைகள் சில உள்ளார்ந்த பண்பையும் அடையாளங்களையும் மட்டும் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், விஜயநகர காலச் சிற்பங்களில் நாயக்கருக்குத் தொப்பை இருப்பதைப் பார்க்கிறோம். இது எப்படி நடந்தது? ஐரோப்பியர்களின் வருகை இங்கே உண்டாக்கிய தாக்கத்தின் விளைவாக நடந்தது.
  • ஐரோப்பாவிலும் இந்தப் போக்கு மெல்ல மெல்லத்தான் வந்தது. ஆரம்ப கால ஓவியங்கள் எல்லா மனிதர்களையும் பகட்டாகவே வெளிப்படுத்தின. பிற்பாடுதான் ஓவியங்களுக்குள் சாமானிய மனிதர்கள் நுழைந்தார்கள்.
  • அடுத்து, வரலாற்று மாந்தர்களைச் சித்தரிப்பதிலும் ஒரு கவனம் வந்தது. இங்கே தமிழ்நாட்டில் நடந்த பிரச்சினை என்னவென்றால், இந்த மாற்றத்துக்கான காலகட்டத்தில் நாடகங்களும் சினிமாவும் நம்முடைய கற்பனையை ஆக்கிரமித்துக்கொண்டன.
  • சென்னை என்னவோ தென்னக நாடக, சினிமாவின் மையமாக இருந்தாலும், இங்கு இருந்த ஸ்டுடியோக்களில் கணிசமான ஆரம்ப காலத் தொழில்நுட்பக் கலைஞர்கள்குறிப்பாக கலை இயக்குநர்கள்கல்கத்தாவிலோ பம்பாயிலோ வேலை பார்த்தவர்கள். அவர்கள் அன்றைக்கு அங்கே பரவலாக இருந்த மத்திய இந்தியாவின் பாணி ஆடை, அரங்கத் தோற்றத்தை அப்படியே இங்கே கை மாற்றிவிட்டார்கள். இது நம்முடைய பொதுப் புத்தியில் ஆழ்ந்து நிலைத்துவிட்டது. அரசர்களை இப்படிப் பகட்டான தோற்றத்தில் பார்த்துப் பழகிய மனம், அந்தக் கால வரலாற்றையும் மிகையுணர்வு சார்ந்ததாகப் பார்க்கப் பழக்கிக் கொடுத்துவிட்டது. நான் இதை உடைக்க நினைத்தேன்.

சோழர் காலக் கலையைத் தமிழ் வரலாற்றில் நீங்கள் எங்கே வைப்பீர்கள்

  • இரண்டு புரிதல் நமக்கு வேண்டும். முதலாவது, மன்னராட்சிக் காலகட்டத்தில், சோழர்கள் காலத்தில்தான் கலைகளின் உச்சத்தை நாம் தொட்டோம் என்ற புரிதல்; இரண்டாவது, அது ஒரு நீண்ட மரபின் விளைச்சல் என்ற புரிதல். அந்த வகையில் சோழர்களோடு பாண்டியர்கள், சேரர்கள் என்று எல்லா அரச குடிகளுக்குமே நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
  • தஞ்சைப் பெரிய கோயில் போன்ற ஓர் அபாரமான கட்டுமானத்தை உருவாக்கும் நுட்பத்தைத் திடீரென்று ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் எந்தச் சமூகமும் அடைந்துவிட முடியாது. உதாரணத்துக்கு, தஞ்சைக் கோயிலுக்கு முன்னோடியாகக் காஞ்சிபுரம் கோயிலைப் பார்க்கிறோம். இந்த விஷயத்தில் சோழர்களுக்கு முன்னோடியாகப் பல்லவர்களைப் பார்க்கிறோம். இப்படித்தான் ஒவ்வொரு விஷயத்திலும்! எல்லோரா ஓவியங்களுக்கும் தஞ்சை சோழர் ஓவியங்களுக்கும் இடையே சில ஒற்றுமைகளைப் பார்க்க முடியும். தஞ்சைக் கோயிலுக்கும் ஆங்கோர் வாட் கோயிலுக்கும் இடையே சில ஒற்றுமைகளைப் பார்க்க முடியும். இதன் மூலம் நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன? சமூகங்களுக்கு இடையே அவ்வளவு பயணங்கள், பரிவர்த்தனைகள் நடந்திருக்கின்றன.
  • பயணங்களில் பெரும் வளர்ச்சியைச் சோழர்கள் காலத்தில் நாம் அடைந்திருக்கிறோம். கடல் கடந்தும்கூட எங்கெல்லாம் வாணிபத்துக்குத் தமிழர்கள் சென்றார்களோ அங்கெல்லாம் அறிவைக் கொடுத்தும் எடுத்தும் வந்திருக்கிறார்கள். சோழர் தடங்களில் நான் பயணித்திருக்கிறேன். உள்நாட்டில் மட்டும் அல்லாது, இலங்கையில் ஆரம்பித்து இந்தோனேசியா வரை. பல சமூகங்களுடன் நமக்கு நடந்திருக்கிற கலாச்சாரப் பகிர்வு என்னைப் பிரமிக்க வைக்கிறது.
  • சோழர் காலத்தில் மிகுந்த கவனம் பெறுவது எதுவென்றால், கலைக்கு அவர்கள் கொடுத்த முக்கியத்துவம். தங்களுடைய செல்வத்தின் முக்கியமான ஒரு பகுதியைக் கலையிலும் தொடர்ந்து முதலீடு செய்திருக்கிறார்கள். பத்தாண்டுகள், இருபதாண்டுகள், முப்பதாண்டுகள் இப்படியெல்லாம் தொடர்ந்து ஏதாவது வேலைகள் நடந்திருக்கின்றன. இருபதாண்டுகள் தொடர்ந்து ஒரு கோயில் கட்டுமானத்தில் பணியாற்றும் சிற்பிக்கு எத்தகைய நுட்பம் கூடிவரும், பாருங்கள்! அதேசமயம், ஒரு கோயிலை எடுத்துக்கொண்டால் அதைத் தங்கள் பெருமையை வெளிப்படுத்தும் வெற்று அழகியல் சின்னமாகச் சோழர்கள் அமைக்கவில்லை. பல்வேறு அறிவுகளும் சங்கமிக்கும், உயிர்ப்பாகச் செயல்படும் பண்பாட்டு மையமாகக் கோயில்களை உருவாக்கி இருக்கிறார்கள்.
  • ஓவியங்கள், சிற்பங்கள், இசை, நாட்டியம் இவ்வளவையும் அங்கே செல்லும் ஒரு சாமானியர் துய்க்க முடியும். நாம் இன்றைக்கு, கோயில்களை வெறும் சடங்கு சார்ந்த மதக் கட்டுமானங்களாக உருமாற்றிவிட்டோம். குறுகிய பார்வைக்கு அப்பாற்பட்டு கோயில்களைக் காண வேண்டும். வெற்று வழிபாட்டு மனநிலைக்கு அப்பாற்பட்டு கோயில்களை அணுகும்போதுதான் நான் சொல்லவருவதை உணர முடியும். கலையை ஒருவகையில் மக்களுடைய அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக்கக்கூடச் சோழர்கள் முயன்றிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

சோழர் காலத்திலிருந்து இன்றைய கலைக்கு நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான அம்சம் என்ன?

  • சமூக அளவில் கலைகளுக்கான முக்கியத்துவம். சிந்தனை அளவில் காட்சிப்படுத்தலுக்கான - விஷுவலைசேஷனுக்கான முக்கியத்துவம். எவ்வளவு படிமங்கள், தோற்றங்களை அந்தக் காலகட்டத்தைக் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்; ஒரு தூணைக்கூட எவ்வளவு கலாபூர்வமாகச் சிந்தித்திருக்கிறார்கள்; பொதுவெளியில் கலைக்கான இடம் என்னவாக இருந்திருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்; நம்மிடம் அந்த அறிவு மரபு இன்றும் இருக்கிறது; நம்மால் பெற்றுக்கொள்ள முடியும்; நாம் சோழர்களிடமிருந்து இந்த அறிவுத் தாவலை, பரிமாற்றங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்!
  • -‘சோழர்கள் இன்று’ நூலிலிருந்து...

நன்றி: அருஞ்சொல் (06 – 01– 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories