TNPSC Thervupettagam

தகவல்களை வெளியிடுவது அரசுகளின் கடமை

December 20 , 2019 1676 days 1240 0
  • தகவல் அறியும் உரிமைச் சட்டம் காரணமாக அரசின் திட்டங்கள், அவற்றின் நிலைகுறித்து மக்களுக்கு முன்பைவிட நிறைய தெரிய ஆரம்பித்துள்ளன. ஆனால், இந்தச் சட்டம் குறித்தும், அரசு தெரிவிக்க வேண்டிய தகவல்கள் எவை என்பது குறித்தும் தொடர்ந்து குழப்பங்களும் தயக்கங்களும் நிலவுகின்றன.
  • யாராவது கேட்க வேண்டும் என்று காத்திருக்காமல், அரசே ஒவ்வொரு திட்டம் குறித்தும் தகவல்களைத் தொடர்ந்து வெளியிட வேண்டும் என்கிறது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 4-வது பிரிவு. ஆனால், இப்படி நடப்பது வெகு அபூர்வம்தான்.
  • பயனற்ற கேள்விகளை மக்கள் கேட்கிறார்கள் என்றும், சில தரவுகளைத் தெரிந்துகொள்வதற்கான தகுதி கேட்பவர்களுக்கு இல்லை என்றும் முன்வைக்கப்படும் வாதம் ஏற்புடையதல்ல. தகவலைக் கேட்கும் விண்ணப்பதாரர், அந்தத் தகவல் தனக்கு ஏன் தேவைப்படுகிறது என்று காரணம் சொல்லத் தேவையில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 6(2) பிரிவு தெளிவாகக் கூறுகிறது.

தகவல் உரிமை

  • அரசிடம் தகவலைக் கேட்க ஒரு குடிநபர் அத்துடன் சம்பந்தப்பட்டவராகவோ பாதிக்கப்பட்டவராகவோதான் இருக்க வேண்டும் என்றால், அதிகாரிகள் தங்கள் நோக்கப்படி விளக்கம் அளித்து, ‘உங்களுக்கு இந்தக் கேள்வியைக் கேட்கும் தகுதி கிடையாது’ என்று நிராகரித்துவிடக்கூடும்.
  • நிராகரிக்கும் அளவு படிப்படியாகக் குறைந்து 2018-19-ல் 4.7% ஆகியிருக்கிறது. கேட்பவருக்குத் தகுதி இருக்கிறதா என்று பார்க்கத் தொடங்கினால், விண்ணப்பங்களை நிராகரிக்கும் அளவும் அதிகரித்துவிடும். அதற்கு இடம் தரக் கூடாது.
  • தகவல் அறியும் உரிமைக்குப் பெரிய இடையூறாக இருப்பது மத்திய, மாநில தகவல் ஆணையங்களில் நிரப்பப்படாமல் உள்ள காலியிடங்கள்தான்.

தீர்ப்பு

  • இது தொடர்பாகத் தாக்கலான மனுவை அனுமதித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று உறுப்பினர் அமர்வு, காலியிடங்களை விரைந்து நிரப்புமாறு மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. தகவல்களைக் கொடுக்க அதிகார வர்க்கம் தயங்குகிறது, அதனாலேயே செயலற்ற தன்மையும் நிலவுகிறது என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சுட்டிக்காட்டியிருக்கிறார்.
  • மத்திய தகவல் ஆணையருக்கு 2018 நவம்பரில் ‘வெளிப்படையான செயல்பாட்டுத் தணிக்கை அறிக்கை’ தரப்பட்டது. உங்களுடைய நிறுவனம் தொடர்பான தரவுகளைத் தாருங்கள் என்று 2,092 பொது அதிகாரிகளிடம் கேட்கப்பட்டது. அவர்களில் 838 பேர் (40%) மட்டும் பதிலளித்தனர். பொது அதிகாரிகளில் 35% பேர் அளித்த தரவுகள் திருப்திகரமாக இல்லை.

புள்ளிவிவரம்

  • தங்களுடைய நிறுவனத்தின் செயல்கள், ஒதுக்கப்பட்ட நிதி, செயல்படுத்திய திட்டங்கள், இவற்றுடன் இணைந்த பிற தகவல்களைத் தர பொது அரசு அமைப்புகள் தவறிவிட்டன. மத்திய தகவல் ஆணையத்திலும், மாநில தகவல் ஆணையர் இல்லத்திலும் ஊழியர் பணியிடங்கள் தொடர்ந்து காலியாகவே இருக்கின்றன.
  • மத்திய தகவல் ஆணையத்தில் மட்டும் 4 பதவிகள் நிரப்பப்படவில்லை, 33,000 மனுக்கள் தேங்கிவிட்டன. உச்ச நீதிமன்றம் இதைச் சுட்டிக்காட்டியிருப்பதால் மத்திய, மாநில அரசுகள் இந்தக் குறைகளைக் களைய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (20-12-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories