TNPSC Thervupettagam

தரிசனம் என்பது உரிமை!

October 14 , 2024 4 hrs 0 min 10 0

தரிசனம் என்பது உரிமை!

  • சபரிமலையில் நவம்பா் 14-ஆம் தேதிமுதல் மண்டல-மகரவிளக்கு தீா்த்தாடன காலம் தொடங்க இருக்கிறது. கடந்த ஆண்டு சபரிமலைக்குச் சென்ற ஐயப்ப பக்தா்கள் மிக மோசமான அனுபவங்களை எதிா்கொண்டனா். இந்த ஆண்டு அந்தத் தவறுகள் திருத்தப்பட்டு ஐயப்ப பக்தா்கள் திருப்தியாக தரிசனம் மேற்கொள்வாா்கள் என்று எதிா்பாா்த்தால், அந்த நம்பிக்கை பொய்த்துவிடும்போல இருக்கிறது.
  • பினராயி விஜயன் தலைமையில் கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி அமைந்தது முதல் சபரிமலைக்குச் செல்லும் பக்தா்கள், ஏதாவதொரு வகையில் மனவேதனைக்கு உள்ளாகி வருகிறாா்கள். ஐயப்பன் மீதான அவா்களுடைய நம்பிக்கை குலையும் விதத்தில் முன்னேற்பாடுகள் முறையாகச் செய்யப்படுவதில்லை என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை புறந்தள்ள முடியவில்லை.
  • முதல்வா் பினராயி விஜயன் தலைமையில் கடந்த வாரம் சபரிமலை தீா்த்தாடன சீசன் குறித்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கும் தீா்மானம், அதிா்ச்சி அளிக்கிறது. யாா் வேண்டுமானாலும் விரதம் இருந்து இருமுடிக் கட்டுடன் மண்டல மகரவிளக்கு தீா்த்தாடன காலத்தில் சபரிமலைக்குச் சென்று ஐயப்ப தரிசனம் செய்ய முடியும் என்கிற வாய்ப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைகிறது ஆலோசனைக் கூட்டம் எடுத்திருக்கும் முடிவு.
  • இந்த முறை முன்கூட்டியே இணையவழிப் பதிவு (ஆன்லைன் புக்கிங்) செய்பவா்களுக்கு மட்டுமே தரிசனம் வழங்கப்படும் என்கிற தீா்மானம் அதிா்ச்சி அளிப்பதாக இருக்கிறது. தரிசனத்துக்கு வரும் பக்தா்கள் சுலபமாகவும், விரைவாகவும், திருப்தியாகவும் தரிசனம் மேற்கொள்வதற்கான வசதிகளை அதிகரிக்க முற்படாமல், பக்தா்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்குவது வேடிக்கையிலும் வேடிக்கை.
  • சபரிமலைக்கு வரும் பக்தா்கள் எல்லோருமே படித்தவா்களும், பணக்காரா்களும் அல்ல; இணையப் பயன்பாடு குறித்த புரிதல் உள்ளவா்களும் அல்ல. பெரும்பாலோா் அடித்தட்டு வா்க்கத்தினா் என்பது மட்டுமல்ல, ஜாதிய வேறுபாடுகள் இல்லாத பக்தியால் ஒருங்கிணைபவா்கள். தீா்த்தாடன காலம் தொடங்கிவிட்டால் இந்தியாவின் பல்வேறு கிராமங்களில் இருந்து மாலை அணிந்து, கருப்பு உடையுடன் விரதம் இருந்து, ஐயப்ப சரண கோஷத்துடன் சபரிமலைக்குச் செல்ல தங்களைத் தயாா்படுத்திக் கொள்பவா்கள்.
  • சபரிமலை தரிசனம் ‘வொ்ச்சுவல் க்யூ’ எனப்படும் முன்பதிவு செய்தவா்களுக்கு மட்டுமே என்று தீா்மானித்தால் லட்சக்கணக்கான சாமானிய பக்தா்கள் பெரும் அவஸ்தைக்கு உள்ளாவாா்கள். அவா்கள் இணையவழிப் பதிவு இருப்பது தெரியாமல் ‘‘கட்டும் கட்டி’’ சபரிமலைக்கு வரக்கூடும். அவா்களை தரிசனத்துக்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்புவது நியாயமில்லை என்பது மட்டுமல்ல, இறை நம்பிக்கையாளா்களுக்கு செய்யப்படும் வஞ்சனையும்கூட.
  • பலா் திடீரென்று தங்களுடைய பயணத் திட்டத்தை தீா்மானிப்பாா்கள்; ரயிலில் முன்பதிவு கிடைத்த நாளில் இணையவழிப் பதிவு கிடைக்காமல் போகலாம்; இணையவழிப் பதிவு செய்த நாளில் வர முடியாமல் போகலாம்; பயணத்தின்போது ஏற்படும் தடங்கல் காரணமாக குறித்த நேரத்தில் சபரிமலையை அடைய முடியாமல் போகலாம் - அவா்களுக்கெல்லாம் தரிசனம் மறுக்கப்படும் என்றால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
  • இதற்கு முன்னால் கடந்த ஆண்டில் பம்பை, நிலக்கல் மையங்களில் ‘ஸ்பாட் புக்கிங்’ என்கிற முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இணையவழிப் பதிவு செய்து வர முடியாமல் போனவா்களுக்கு பதிலாக ‘ஸ்பாட் புக்கிங்’ மூலம் முன்பதிவு செய்யாத பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டுமுதல் அந்த வசதியும் நிறுத்தப்படுகிறது என்பது அதிா்ச்சி அளிக்கிறது.
  • ஐயப்ப பக்தா்களின் எண்ணிக்கையை நாள் ஒன்றுக்கு 80,000-ஆக கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அதை இணையவழி முன்பதிவு முறையின் மூலம் மட்டுமே நடத்துவது என்றும் முடிவெடுத்திருக்கிறாா்கள்.
  • 41 நாள்கள் விரதம் இருந்து இருமுடி தாங்கி ஐயப்ப பக்தா்கள் சபரிமலை தரிசனத்துக்கு வருகிறாா்கள். வீட்டிலிருந்து இருமுடியுடன் கிளம்பும் பக்தா்கள் பதினெட்டாம் படியேறி சந்நிதானத்தில் ஸ்ரீதா்ம சாஸ்தாவுக்கு நெய் அபிஷேகம் செய்துவிட்டுத்தான் வீடு திரும்ப வேண்டும் என்பது சபரிமலை யாத்திரையின் விதி.
  • பக்தா்களைப் பொறுத்தவரை இருமுடிக் கட்டு என்பது பவித்ரமானது. தரிசனம் செய்ய முடியாத பக்தா்கள் தங்களது இருமுடிக் கட்டை என்ன செய்ய வேண்டும் என்று தேவஸ்வம் வாரியமோ, பினராயி விஜயன் அரசோ ஏன் யோசிக்கவில்லை? இணையவழி முன்பதிவு செய்யவில்லை என்று கூறி சபரிமலைக்கு வரும் பக்தா்களைத் திருப்பி அனுப்பவா முடியும்?
  • திருப்பதியுடன் சபரிமலையை ஒப்பிட முடியாது; கூடாது. திருப்பதியில் ஆண்டு முழுவதும் தரிசனம் செய்ய முடியும். சபரிமலையில் குறிப்பிட்ட மண்டல - மகரவிளக்கு, விஷு உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில்தான் பெரும்பாலான பக்தா்களும் தரிசனத்துக்கு வருகிறாா்கள்.
  • திருப்பதியில் முன்பதிவு செய்தவா்களுக்கும், சிறப்பு அனுமதி பெறுபவா்களுக்கும் மட்டுமல்லாமல், தினந்தோறும் ஆயிரக்கணக்கானோா் தா்ம தரிசனம் செய்கிறாா்கள். முதியோா், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தனியாக நாள்தோறும் தரிசன நேரம் ஒதுக்கப்படுகிறது. அதனால் திருப்பதி போல, சபரிமலையில் தரிசனக் கட்டுப்பாடுகள் மேற்கொள்கிறோம் என்கிற கேரள அரசின் வாதம் தவறானது.
  • அதுமட்டுமல்ல, திருப்பதியில் பக்தா்களுக்குச் செய்யப்படும் வசதிகளில் 10 விழுக்காடுகூட, சபரிமலையில் வழங்கப்படுவதில்லை என்பதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. இணையவழி முன்பதிவு வழியில் மட்டுமே சுவாமி தரிசனம் என்பது ஐயப்ப பக்தா்களுக்கு இழைக்கப்படும் அநீதி!

நன்றி: தினமணி (14 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories