பிளஸ் 2 மதிப்பெண் சிக்கல் - பேசப்பட வேண்டிய பிரச்சினை
- 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கிவிட்டது. தேர்வை எழுதும் 8.21 லட்சம் பேரில் பலர், 11ஆம் வகுப்பில் அடியெடுத்து வைத்தது முதலே, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கவனம் செலுத்திவருகிறார்கள். மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களுடன் அரசு இயந்திரத்தின் கவனமும் இதில் கணிசமாக இருக்கிறது.
- 12ஆம் வகுப்பு மதிப்பெண்களுக்காக மாணவர்கள் செலுத்தும் உழைப்பு மகத்தானது. “உலகின் மிகக் கடினமான வேலை இந்தியாவின் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு” என்று கல்வியாளர் ஆயிஷா இரா.நடராசன் குறிப்பிடுகிறார். ஒரு வேள்வியைப் போல் இந்தத் தேர்வு பார்க்கப்படுகிறது.
- ஒரு மாணவருக்கு எவ்வளவு வேண்டுமானாலும் திறமை, ஆற்றல், அறிவு, புத்திக்கூர்மை இருக்கலாம். அது மதிப்பெண்ணாக மலராவிட்டால், அதனால் பயனில்லை என்று ஆழமாக நம்பப்படுகிறது. மாணவர்களின் மதிப்பெண்கள் அவர்களது திறன்களுக்கு மட்டுமல்ல, ஆசிரியர், கல்வி நிறுவனங்கள், ஆளும் அரசு ஆகியவற்றின் திறனாக, வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. இதற்கெல்லாம் என்ன காரணம்?
மதிப்பிழந்த மதிப்பெண்:
- முன்பெல்லாம், 12ஆம் வகுப்பே மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் கருவியாக இருந்துவந்தது; உயர் கல்விக் கனவுகளுக்கு வடிவம் கொடுப்பதாக இருந்தது. ஜே.ஈ.ஈ., நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் அறிமுகமான பிறகு, மருத்துவக் கல்வி பயிலவும், ஐஐடி உள்ளிட்ட இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் பயிலவும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் மதிப்பிழந்துபோனது.
- ஆனால் தமிழ்நாடு பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம் போன்ற படிப்புகளுக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண்ணே பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வை மட்டுமே நம்பி அல்லும் பகலும் உழைத்த ஒரு மாணவர், அதில் வெற்றியடைய முடியவில்லை என்றால், வேறு எந்த நல்ல பாடத்தையும் தேர்வுசெய்து படிக்க முடியாமல் வீழ்ச்சி அடையும் சூழல் நிலவுகிறது.
- ஒருபுறம் ஜே.ஈ.ஈ., நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கும் தயாராக வேண்டும்; இன்னொருபுறம் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்விலும் நிறைய மதிப்பெண்கள் எடுத்து வெற்றி வாகை சூட வேண்டும் எனில், அது இயல்பாக நடைபெற முடியாத காரியம். இரட்டைக் குதிரைச் சவாரி அது. எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லை எனில், என்ன செய்வது, யாரைச் சபிப்பது, எதை நொந்துகொள்வது? 12ஆம் வகுப்பு படித்துவரும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மிகப் பெரிய சோதனை இது.
- இந்தப் பரிசோதனையில் வெற்றிபெற இயலவில்லை எனில், அது வாழ்நாள் வேதனை. பாதிப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு. மீதமுள்ள படிப்புகளுக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் என்கிற நிலை, தற்போது படித்துவரும் மாணவர்களை இருதலைக்கொள்ளி எறும்பாக மாற்றுகிறது. இது அவர்களுக்கு விதிக்கப்பட்ட பெரும் தண்டனை என்றால் மிகையாகாது.
தொடரும் விவாதங்கள்:
- ஜே.ஈ.ஈ., நீட் மட்டுமல்ல; ஒட்டுமொத்த உயர் கல்விக்கும் நுழைவுத் தேர்வுகள் வரவிருக்கின்றன. அப்போது இந்தச் சிக்கல் தீர்ந்துவிடும். 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மதிப்பெண்கள் ஓர் அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு போன்ற கருவியாகிவிடும். அப்போது எல்லாருக்கும் ஒற்றைக் குதிரைப் பயணம்தான்.
- ஆனால் இந்தக் குதிரையேற்றப் பயிற்சி, பள்ளியில் மட்டும் வழங்கப்படுவதல்ல; பள்ளிக்கு வெளியே குடிசைத் தொழில் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை இந்தத் தொழில் வளர்ந்து நிற்கிறது. பணத்துக்கு ஏற்பக் குதிரைகளும் பயிற்சியாளர்களும் காத்திருக்கின்றனர்.
- சரி, அப்படியென்றால் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எதற்கு என்கிற கேள்வி எழலாம். அப்படியான ஒரு பொதுத் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் தேவையா என்கிற கேள்வியும் உருவாகலாம். 12ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்கூட, நுழைவுத் தேர்வில் வெற்றி பெறலாம் அல்லவா? எனவே, இவர் 12ஆம் வகுப்பு படித்துள்ளார் என்று ஒரு சான்றிதழ் போதும். தேர்வு எதற்கு, மதிப்பெண்கள் எதற்கு என்ற நிலை காலப்போக்கில் உருவாகலாம். அதனை நோக்கி நகர விவாதங்கள் உருவாகலாம். ஆம், சரிதானே என்றும் நமக்குத் தோன்றும்.
- 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுக்குப் பயன்பாடு சிறிதும் இல்லை என்கிற ஒரு நிலை வந்தால், கற்றல்-கற்பித்தல், கற்போர் நிலை, கற்பிப்போர் நிலை எப்படி இருக்கும்? பாடங்கள் தாண்டி, பாடத்திட்டங்கள் தாண்டி, மதிப்பெண்களைக் கடந்து கல்வியில் கற்றல் - கற்பித்தல் சில விழுமியங்களைத் தருகிறது; பயிற்றுவிக்கிறது. அவை தனிமனித வாழ்வுக்கும், சமூக வாழ்வின் விழுமியங்களுக்கும் விதிகளுக்கும் பயன்படுபவை.
- அது ஆசிரியர் மட்டுமே தரும் உபதேசம் மூலம் கற்றுக்கொள்வது அல்ல. பள்ளி என்கிற சமூக நிறுவனத்துக்கு வரும் மாணவர்கள் சக மாணவர்களிடம் பழகுதல், உரையாடல், அவதானித்தல் மூலம் கிடைப்பது. பாடங்கள் சார்ந்த இதர கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் மூலம் மாணவர்கள் உள்வாங்கிக்கொள்வது.
- இத்தகைய கற்றல் அனுபவங்கள் மாணவர்கள் மனதில் பதிந்து அவர்களுக்குத் தேவையான நேரத்தில், தேவையான வகையில் பயன்படுத்திக்கொள்ள உதவும். அது மட்டுமல்ல, மதிப்பெண்கள் இல்லாமல் இதர கலைகளைக் கற்றுக்கொள்ள மட்டுமே பாடசாலைகளை வெற்றிகரமாக நடத்திட இயலுமா என்கிற கேள்வியும் வலுவாக எழுகிறது. அதற்கான பாடத்திட்டம், கலைத் திட்டம் எவ்வாறு இருக்கும், எவ்வாறு வடிவமைப்பது என்கிற கேள்விகள் மிக முக்கியமானவை.
- மதிப்பெண்கள் இல்லாத ஒரு பள்ளியை, பாடத்திட்டத்தைச் செம்மையாக வடிவமைத்துவிடுகிறோம் என்று கற்பனை செய்துகொள்வோம். உயர் கல்வி நுழைவுத் தேர்வுப் பயிற்சிகள் பள்ளிக்கு வெளியே பரந்து விரிந்து செயல்படும் நிலையில் அனைத்துப் பயன்மிக்க பாடங்கள், பணம் ஈனும் பாடங்கள், ஆற்றலை அபிவிருத்தி செய்யும் பாடங்கள், ஆளுமையை வளர்க்கப் பயன்படும் பாடங்கள் என எல்லாமே பள்ளிக்கு வெளியே நடைபெறும் தனிப் பயிற்சிகள் வழியாகத்தானே தீர்மானிக்கப்படும்? அப்போது எவ்வளவு வலுவான இடஒதுக்கீட்டின் வழியாகவும் அந்தந்த இடஒதுக்கீட்டுப் பிரிவின் கீழ் பொருளாதார பலம் வாய்ந்தவர்கள் மட்டுமே பயன் பெறுவார்கள்.
- தனிப்பயிற்சி பெற வழி இல்லாதவர்கள் பள்ளிக் கல்வியில் எவ்வளவு சமூகப் பொறுப்புகளைக் கற்றுக் கையில் வைத்திருந்தாலும், உன்னதமான உயர் கல்வி நிறுவனங்களை எட்டிப் பார்க்கவே முடியாது. இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணாவிட்டால், அதன் வழியாக உருவாகும் சமூகச் சீர்கேடுகள் தனிப்பயிற்சிகள், தனித் திறன்கள் வழியாக முன்னேற்றம் அடைந்தவர்களையும் நிம்மதியாக வாழ விடாது. குன்றாத வளர்ச்சிக்குக் குறைவு ஏற்படாத வகையில் கல்விக் கணக்கீடுகள் அமைய வேண்டும்.
- இதனைத் தாண்டி மேலும் முக்கியமான கணக்கீடு ஒன்று இருக்கிறது. இந்தியா போன்ற - மாநிலங்கள் நிறைந்த மத்திய அரசில், மாநிலப் பாடத்திட்டங்கள், கலைத்திட்டங்கள், மாநிலக் கல்வி வாரியங்கள் ஆகியவை சந்தடி இல்லாமல் காணாமல் ஆக்கப்பட்டுவிடும்.
- அல்லது இருந்தும், இல்லாததுபோல் இருக்கும். கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும் என்கிற கோரிக்கை பொருளற்றதாகப் போய்விடும். இதனால் ஏதேனும் நீண்ட காலப் பின்விளைவுகள், பக்க விளைவுகள் ஏற்படுமா என்பதையும் சமூகப் பற்றாளர்கள், கல்வியாளர்கள் ஆழமாகப் பரிசோதனை செய்ய வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (13 – 03 – 2025)