TNPSC Thervupettagam

பிழையற எழுத உதவும் எழுத்து வரிசை

June 13 , 2023 390 days 486 0
  • ,ங,ச,ஞ – எனும் வரிசைக்கு அர்த்தம் உண்டு. உயிர் எழுத்து நமக்குத் தெரியும். மெய் எழுத்துகள் எவை என்று தெரிந்திருந்தாலும், வரிசையாகச் சொல்லும்போது தடுமாறுவோம். மெய்யெழுத்து வரிசைக்கு அர்த்தம் உண்டு என்பதைப் புரிந்துகொண்டால் மறக்காது, எழுத்துப் பிழைக் குழப்பம் தீரவும் வாய்ப்புள்ளது. க்-ங், ச்-ஞ், ட்-ண், த்-ந், ப்-ம் எனப் பத்து எழுத்துகள் -- வல்லினத்தை அடுத்து மெல்லினம் என —வரிசை அமையும். ய்,ர்,ல்,வ்,ழ்,ள் ஆறும் வரிசையாக இடையில் வருவது இடையினம். மீண்டும் ற்-ன். மொத்தம்-18. இதில் ஒரு நுட்பம் உண்டு.
  • தமிழ்ச் சொற்களில் ‘க’ எனும் உயிர்மெய் இடம்பெறும் சொற்களுக்கு முன் அமையும் மெய்யெழுத்து ‘ங்’ ஆகவே இருக்கும். உதாரணம் ‘சங்கம்.’ அதனால், எழுத்து வரிசை முதலில் ‘க்’, அடுத்து ‘ங்’ என அடுக்கப்பட்டுள்ளது.
  • ‘ச’ இடம்பெறும் சொல்லில், ‘ஞ்’ முன்னிற்கும் (நெஞ்சு), அதனால்தான் ‘ச்’ எழுத்தை அடுத்து ‘ஞ்’ வைக்கப்பட்டுள்ளது. ‘ட’-வுக்கு முன் ’ண்’ வரும் - துண்டு, ‘ற’-வுக்கு முன் ‘ன்’ வரும்- தென்றல். இவ்வாறே ‘த்-ந்’ (பந்து), ‘ப்-ம்’ (அம்பு) எழுத்துகளும் அடுத்தடுத்து அடுக்கப்பட்டுள்ளன.
  • இந்த வரிசைக்குக் காரணம் தமிழ் எழுத்து மரபே இதன் அடிப்படை. தமிழ்ச் சொற்களின் அமைப்பு முறை. என்ன ஒரு நுட்பம்! பாட நூல்களில் இவற்றை ‘இன எழுத்துகள்’ என்று மட்டும் சொல்லித் தந்திருப்பார்கள். அதைத் தாண்டிய வரிசை நுட்பத்தில் தமிழ் மரபு உள்ளது.
  • மண்டபம் என்பதில் “மூனு சுழி 'ண' வா, ரெண்டு சுழி 'ன' வா" என்று சந்தேகம் வரும்போது, அடுத்த எழுத்து ‘ட' வருகிறதா? அப்படியெனில் இது ‘டண்ணகரம்’ (ண) என்றும், தென்றல் என்பதில் இதே சந்தேகம் வந்தால் அடுத்த எழுத்து 'ற' வருகிறதா? அப்படியெனில் இது ‘றன்னகரம்’ (ன்) என்றும் புரிந்துகொண்டால் இன்னும் எளிது.
  • ஆனால், இது ‘நான்கு’, ‘வான்மதி', ‘என்னப்பா' ‘கண்ணம்மா' போன்ற சொற்களில் இந்த விதி பொருந்தவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கு, தொடர் வாசிப்பு அவசியம். இலக்கணத்தைவிட நடைமுறைக்கு முன்னுரிமை கொடுத்துத்தான் தொல்காப்பியத்துக்குப் பாயிரம் (முன்னுரை) எழுதினார் பனம்பாரனார். “வழக்கும் செய்யும் ஆயிரு முதலின்..” என வழக்கு மரபை அவர் முன்வைத்தார். மொழி, ஓடும் நீர் போன்றது, ஒவ்வொரு முறை குளிக்கும் போதும் புதிய நீரில்தானே குளிக்கிறோம்.
  • கல் கின்று ஆர்=கற்கின்றார். ஆனால், செல் கின்று ஆர்=செல்கின்றார். இந்த இரண்டு சொற்களும் ஏன் இவ்வாறு மாறுகின்றன என்பதை இலக்கணத்தை விடவும் வழக்கின் மூலமே புரிந்து கொள்ள முடியும். தமிழ்ச் சொற்களிடையே அதிகம் புழங்கி இருந்தால், பிழை நேராது, தமிழ் இனிது.

நன்றி: தி இந்து (13 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories