- ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஜி.நாகராஜன் எழுதிய ‘நாளை மற்றுமொரு நாளே’ நாவல், காலம் கடந்து இன்றும் அழியாச் சுடராக நிலைபெற்றிருக்கிறது. காலவெளியில் இந்நாவல் ஒரு புதிய புனைவுப் பாதைக்கான ஒளியோடு மேலும் மேலும் பிரகாசிக்கிறது.
- ‘ஞானரதம்’ மாதாந்திரச் சிற்றிதழில் 1973 ஜனவரியிலிருந்து டிசம்பர் வரையான 12 இதழ்களில் இந்த நாவல் தொடராக வெளிவந்தது. பின்னர் தனது படைப்புகள் புத்தக வடிவம் பெறுவதற்கென்றே அவர் உருவாக்கிய ‘பித்தன் பட்டறை’ பதிப்பகத்தின் வெளியீடாக 1974இல் நூல் வடிவம் பெற்றது. இப்புத்தகத்தின் இரண்டாம் பதிப்பை 1983இல் ‘க்ரியா' வெளியிட்டது. அதன் பின்னரே நாவல் பரவலான கவனிப்புக்கு உள்ளானது. 2010இல் பெங்குவின் பதிப்பக வெளியீடாக ‘டுமாரோ ஒன் மோர் டே’ என்கிற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளிவந்தது. மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா ‘நாள மற்றுமொரு நாள் மாத்ரம்’ என்கிற தலைப்பில் மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
- ‘நாளை மற்றுமொரு நாளே’ நாவலில் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்நிலைகளை ஜி.என்., இது இப்படியாக இருக்கிறது என்று மட்டும் விலகி நின்று காட்டுகிறார். எவ்வித அசட்டு அபிமானமோ பச்சாதாபமோ அதன்மீது அவர் கொள்ளவில்லை. மேலும், அந்த உலகை, பொதுவாகத் தமிழ்ப் படைப்பிலக்கியத்தில் செய்யப்படுவதைப் போல, ஆன்மிகத் தளத்துக்கோ, மீட்சிப் பாதைக்கோ நகர்த்த முனையும் சிறு பிரயாசைகூட இவரிடம் வெளிப்படுவதில்லை. இக்கதையாடல் முறை நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஓர் அபூர்வமான நிகழ்வு. அத்தகையதொரு படைப்பு மனோபாவத்தை முதன்முறையாகத் தமிழ்ப் படைப்புலகம் அறிந்துகொண்டது அப்போதுதான். மேலும், கலையுணர்வுக்கு அப்பாற்பட்ட நோக்கங்களிலிருந்து பூரண விடுதலை பெற்றவராக இவர் இருந்துகொண்டிருப்பது இவருடைய படைப்புலகைப் பிரகாசிக்க வைக்கிறது.
- திருவாளத்தான் வேலைகள் செய்து வாழும் கந்தனின் ஒரு நாளையவாழ்க்கையை அகப்படுத்தியிருக்கும் நாவல் இது. கார்கோடை நகரில் ஒரு ஞாயிற்றுக்கிழமை அது. தன் குடிசையில், காலைக் கனவிலிருந்து விழித்தெழும் கந்தன், மறுநாள் காலை லாக்கப்பில் மீண்டுமொரு அதிகாலைக் கனவிலிருந்து விழித்தெழுவது வரையான ஒரு நாளின் சம்பவங்களும், கிளைக் கதைகளுமாக நெய்யப்பட்டு கந்தனின் கடந்த 12 ஆண்டுக் கால வாழ்க்கையை வடிவமைத்திருக்கும் நாவல் இது.
- காலையில் எழுந்தவுடன் உடல் தெம்படைவதற்கும் இயங்குவதற்கும் அந்நாளை எதிர்கொள்வதற்கும் கந்தனுக்குச் சாராயம் தேவைப்படுகிறது. அந்த ஒரு நாளில் அவன் பலமுறை அங்கங்கே தெம்பேற்றிக் கொள்கிறான். எழுந்தவுடன் குடிசையில் உருட்டிப் புரட்டி சாராயம், பின் விறகுக் கடைக்குப் போய் ஜிஞ்சர், சலூன் சென்று சவரம், வீட்டுக்குத் திரும்பி மீனாவுடன் காலைப் புணர்ச்சி, பின் குளித்துவிட்டுச் சலவை செய்த எட்டு முழ வேட்டியும் சில்க் சட்டையும் அணிந்துகொண்டு, உறையோடு கூடிய ஸ்பிரிங் கத்தியை இடுப்பில் சொருகிக்கொண்டு கந்தன் குடிசையை விட்டுக் கிளம்பும்போது மணி கிட்டத்தட்ட ஒன்பதரை. பின்னர் வெளியே அவன் அந்த நாளில் மேற்கொள்ளும் காரியங்களில் அவனுடைய வாழ்க்கை முறையும் எதிர்ப்படும் நிலைமைகளைச் சாதுர்யமாகக் கையாளும் திறனும் வெளிப்பட்டபடி இருக்கின்றன.
- “நீங்க வாழ்க்கைலே எதைச் சாதிக்கணும்னு திட்டம் போட்டிருக்கீங்க?” என்று கேட்கும் முத்துச்சாமியிடம், “எந்தத் திட்டம் போட்டு சொர்ணத்தம்மா வயத்துல வந்து பொறந்தேன்?” என்று சிரித்தபடி கூறும் கந்தன்; “எல்லார் பிழைப்பும் அப்படியோ இப்படியோ பிடுங்கித் தின்னறதுதான்” என்று கருதும் கந்தன்; தூங்கிக்கொண்டிருந்த தன்மீது பானையை வீசியெறிந்து, உடைத்துநொறுக்கிவிட்டு, சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடிப்போய்விட்ட மகன் சந்திரனைப் பற்றி நினைக்கும்போது;‘அவன் சுயநலத்தில்தான் எத்தனை அழகு? சுயநலத்தை மறைக்கமுயன்றால்தான் அசட்டுத்தனமாகவோ விகாரமாகவோ தோன்றுகிறது’ என்று சிலாகித்துக் கொள்ளும் கந்தன்; தன் கனவொன்றில் சந்திரனைத் தற்செயலாகத் தெருவில் பார்க்கும்போதுகூட அவனிடம் பேசவோ, வீட்டுக்கு அழைத்து வரவோ எண்ணம் கொள்ளாத கந்தன் என அந்த நாளில் கந்தன், யோசனையாகவும் அதை நிறைவேற்றும் முகாந்திரமாகவும் ஒரு காரியம் மேற்கொள்கிறான். அது படைப்பையும் கந்தனையும் புது வெளிச்சத்தில் துலங்கச் செய்கிறது.
- 12 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நல்ல ஏற்பாடாக இருக்குமென்று எண்ணி, பாலியல் தொழிலாளியாக வாழ்ந்த மீனாவைத் தற்செயலாகக் கோயிலில் சந்தித்த மாத்திரத்திலேயே அவளை மணக்க விரும்பி மணந்துகொள்கிறான். பின்னர் தன் திருவாளத்தான் தனங்களோடும், மீனாவைப் பாலியல் தொழில் புரியவைத்தும், இவ்வளவு கால வாழ்க்கையை வாழ்ந்த கந்தன், அன்று காலை தன் உடல் நலம் மோசமாகிக்கொண்டு வருவதை உணர்கிறான். அப்போது மீனா குறித்து, ‘இதுக்கு ஏதாவது ஏற்பாடு செய்யறதுதான் நல்லது’ என்று யோசனை கொள்கிறான். அன்று மாலையே அவன் தரகர் அந்தோணியை அவர் வீடு சென்று சந்திக்கிறான். அவர்களுக்கிடையே நடக்கும் உரையாடலின் ஒரு பகுதி:
- “... சரி இப்ப என்ன விஷயம்” என்றார் அந்தோணி.
- “அதான் சொன்னேனே, மீனா விஷயமா...”
- “மீனாவுக்கு இப்ப என்ன?”
- “நல்லாத்தான் இருக்கு. எனக்குத்தான் ஒடம்புக்கு முன்னே மாதிரி இல்லே. மீனாவை ஒரு நல்ல இடமாப் பாத்து ஒரு ஏற்பாட்டைப் பண்ணிட்டா, எனக்குக் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்” என்றான் கந்தன்.
- “போடா, பைத்தியக்காரா, மீனா தங்கமான பொண்ணு. அது இல்லாட்டி நீ இன்னும் குட்டிச்சுவராப் போவே”
- “நா எப்படியும் போறேன். அது எங்காச்சும் நல்லா இருந்தாப் போதும்’’
- கந்தன் தான் வாழும் வாழ்விலிருந்து தனக்கான தார்மீக நியதிகளைக் கொண்டிருக்கிறான் என்பதை இவ்வுரையாடல் வெளிப்படுத்துகிறது. சம்பிரதாய ஒழுக்கநெறிகளை உதாசீனப்படுத்தும்போதும் அந்த எளிய மனம்
- கொள்ளும் அறவுணர்வின் முன் நம்மை மானசீகமாக மண்டியிடச் செய்கிறது இந்த நாவல்.
- வாழ்க்கையை அவதானிப்பதிலும், அதன் எண்ணற்ற முகங்களை அறிவதிலும், வாழ்க்கையே பிரதானம் என்ற அவருடைய வேட்கை அவருடைய வாழ்விலும் எழுத்திலும் வெளிப்பட்டபடி இருக்கிறது. ‘நாளை மற்றுமொரு நாளே’ நாவலுக்கு முகப்பாக அவர் நாவலாசிரியர் தாமஸ் வுல்ஃபினது மேற்கோள் ஒன்றை ஆங்கிலத்தில் முன்வைத்திருக்கிறார். அந்த மேற்கோள் ஜி.என்.னின் வேட்கையை நாம் அறியவும், அவருடைய படைப்புலகைப் புரிந்துகொள்ளவும் நமக்கு உதவுகிறது.
- அந்த மேற்கோளின் தமிழாக்கம்: “கடவுள் எப்போதும் அவருடைய சொர்க்கத்தில் இருப்பதில்லை; உலகத்தில் எல்லாமே எப்போதும் சரியாக இருப்பதில்லை. எல்லாமே மோசமென்பதில்லை, அதே சமயம் எல்லாமே நல்லதென்பதுமில்லை; எல்லாமே அசிங்கமில்லை, அதே சமயம் எல்லாமே அழகென்பதுமில்லை. வாழ்க்கை, வாழ்க்கை, வாழ்க்கை - அது மட்டுமே பெறுமதியானது; அது காட்டுமிராண்டித்தனமானது; குரூரமானது; கருணையானது; மேன்மையானது; உணர்ச்சிமயமானது; சுயநலமானது; பெருந்தன்மையானது; மடத்தனமானது; அசிங்கமானது; அழகானது; வலி நிரம்பியது; குதூகலமானது - இவை எல்லாமும் அதற்கு மேலும் கொண்டதுதான் வாழ்க்கை. இவை எல்லாவற்றையும் நான் நிச்சயம் அறிவேன் - அதற்காக அவர்கள் என்னைச் சிலுவையில் அறைந்து கொன்றாலும் சரி” இந்தக் கலை மனம் இயக்கிய கலைஞன்தான் ஜி.என். அதன் பரிபூரணக் கலை வெளிப்பாடுதான் ‘நாளை மற்றுமொரு நாளே’.
நன்றி: இந்து தமிழ் திசை (16 – 02 – 2025)