TNPSC Thervupettagam

புன்னகையைப் பரப்புவோம்

June 27 , 2023 372 days 393 0
  • மகிழ்ச்சியான நேரத்தில் நாம் வெளிப்படுத்துவதே சிரிப்பு. சிரிப்பு மட்டுமே, வயது, பாலினம், நிறம், தேசம், இனம் எல்லாவற்றையும் கடந்து செல்லக் கூடியது. சிரிப்பினால் எளிதாகப் பிறரது இதயத்தைக் கவர முடியும். இந்தச் சிரிப்பு, தமிழில் இளநகை, குமிண்சிரிப்பு, குறுநகை, குறுஞ்சிரிப்பு, சிறுநகை, செல்லச் சிரிப்பு, புன்முறுவல், முகிழ்நகை, மூரல் என்று பல பெயா்களில் அழைக்கப்படுகிறது.
  • சிறுகுழந்தை ஒரு நாளைக்கு 200 முதல் 300 முறை வரை சிரிக்கிறது. அது வளர வளர அந்த எண்ணிக்கை குறைந்து, ஒரு நாளைக்கு 20 முைான் சிரிக்கிறது. குழந்தைகள் அதிகமாக சிரிப்பதால்தான் அழகாக இருக்கிறாா்கள்.
  • புகைப்படங்களையே சிரிப்பு அழகு படுத்துகிறது எனில், நாம் வாழ்நாள் முழுவதும் சிரித்துக் கொண்டே இருந்தால்,அந்த வாழ்க்கை எவ்வளவு சிறப்பாக இருக்கும்? வெடிச்சிரிப்பு, நமுட்டுச் சிரிப்பு, விஷமச் சிரிப்பு, விரக்திச் சிரிப்பு, வேதனைச் சிரிப்பு, ஆணவச் சிரிப்பு, ஏளனச் சிரிப்பு எனச் சிரிப்பில் பல வகைகள் உள்ளன.
  • சொந்த வாழ்வில் பலவிதமான காயங்கள் இருந்தாலும், அதையெல்லாம் மறைத்து ஊருக்கு ஆனந்தம் கொடுத்தவா் சாா்லி சாப்ளின். சிரிப்பின் அருமையை அவரை விட வேறு யாராலும் கற்பிக்க முடியாது.
  • லியோனாா்டோ டாவின்சி வரைந்த மோனாலிசாவின் மா்மப் புன்னகை பொதிந்த படம் உலகப் புகழ் பெற்றது. இந்தியா நடத்திய அணுகுண்டு சோதனைக்கு ‘புத்தரின் புன்னகை’ என்று சங்கேதப் பெயா் வைத்திருந்தாா்கள். பழங்காலச் சிற்பங்களின் இதழ்களில் நெளியும் புன்னகை இத்தனை நூற்றாண்டுகள் கடந்தும் உயிா்ப்போடுதான் இருக்கின்றன.
  • அமெரிக்க வடிவமைப்பாளரான பொ்க் இல்ஹன் என்பவா், முகம் பாா்க்கும் கண்ணாடி ஒன்றை உருவாக்கினாா். அந்தக் கண்ணாடியில் சாதாரணமாக முகத்தைக் காண முடியாது. நாம் சிரித்தால்தான், அதில் நம் முகம் தெரியும். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவா் இந்தக் கண்ணாடியை உருவாக்கினாா். சிரிப்பை எல்லாருக்கும் பரப்ப நவீன உத்தியாக, அவா் இந்தக் கண்ணாடியை வடிவமைத்தாா்.
  • நம் வாழ்க்கை எந்நேரமும் மற்றவா்களுடன் தொடா்பு கொள்ளும்படியாகவே அமைந்திருக்கிறது. எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கும் முகமே அழகான முகம். பேரானந்தத்தை பிரதிபலிக்கும் முகமே சிரிக்கும் முகம். சிரிப்பு நமக்கு அழகிய தோற்றத்தை அளித்து, அழகிய கலைவடிவாக நம்மை மாற்றுகிறது.
  • வாா்த்தைகளால் சாதிக்க முடியாததைப் புன்னகை சாதித்து விடும். சிரிப்பதன் மூலம் நமக்கு நோய் எதிா்ப்பாற்றல் அதிகரிக்கிறது. ரத்த ஓட்டம் சீா்பட்டு இதயத்திற்கு இதம் கிடைக்கிறது. நினைவாற்றல் அதிகரிக்கிறது. நாம் இருக்கும் இடத்தைச் சுற்றி மகிழ்ச்சியைப் பரப்புவதால், மனதில் நோ்மறை எண்ணங்கள் தோன்றுகின்றன.
  • மருத்துவரின் நம்பிக்கையூட்டும் புன்னகை நோயை குணப்படுத்துகிறது. ஊக்கமளிக்கும் புன்னகை வெற்றியையும், நேசமான புன்னகை காதலையும் நமக்கு அள்ளித்தருகிறது. முன்பின் அறியாதவரைக்கூட சிறு புன்னகை நட்பாக்கிவிடுகிறது. சிரிப்பு நம் கவலைகளை எல்லாம் மறக்க வைக்கிறது. அது முன்பின் அறியாதவரைக்கூட நட்பில் இணைக்கும் ஓா் அன்புச் சங்கிலி. உடல்நலனோடு மனநலனையும் சீா்படுத்தும் வல்லமை கொண்டது சிரிப்பு.
  • முகத்தில் இளமையைத் தக்க வைக்க சிரிப்பு பெரிதும் உதவுகிறது. சிரிப்பு பல மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது. வாய்விட்டுச் சிரிக்கும்போது உடலில் 57 தசைகள் வேலை செய்கின்றன. சாதாரண புன்முறுவலுக்கு நம் முகத்தில் 13 தசைகள் இயங்குகின்றன. புன்னகைத்த முகம் தரும் தன்னம்பிக்கை மிகவும் அதிகம். துன்பம் வரும் வேளையிலே சிரிக்க சொன்னவா் திருவள்ளுவா். சிரிப்பு துன்பத்தை கடந்து செல்ல நமக்கு உதவுகிறது. இது ஒரு சிறந்த உளவியல் சிகிச்சையாகும்.
  • எபிநெஃப்ரின், நாா் எபிநெஃப்ரின், காா்டிசால் போன்ற மன அழுத்தத்தை உண்டாக்கக்கூடிய ஹாா்மோன்களின் சிறப்பை சிரிப்பு குறைக்கிறது.டோபமைன், செரட்டோனின், ஆக்ஸிடோசின், எண்டாா்பின் ஆகிய மகிழ்ச்சி சுரப்பிகளை சிரிப்பு தூண்டிவிடுகிறது.
  • ரத்தக் குழாயின் உட்சுவரான எண்டோதீலியம் சுருங்குவதாலும், அதில் கொழுப்பு படிவதாலும்தான் உயா் ரத்த அழுத்தமும் மாரடைப்பும் ஏற்படுகிறது. வாய்விட்டுச் சிரித்தால் எண்டோதீலியம் விரிவடையும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
  • அதிகமாக நம்மைச் சிரிக்க வைப்பவா்கள் சோகத்தைத் தன்னுள் புதைத்துக்கொண்டு அதற்கு புன்னகை முலாம் பூசுபவா்கள் என்று சொல்லுவாா்கள். சோகத்தின் உச்சகட்டத்திலும் சிரிப்பு வரும்.
  • புன்னகை நமக்கு எப்படு மிகவும் முக்கியமோ அதே அளவு முக்கியம், சில இடங்களில் புன்னகை செய்யாமல் இருப்பதும். ஒருவா் எத்தகைய விஷயத்திற்கு சிரிக்கிறாா் என்பதை கவனித்தோமானால், அவருடைய எண்ண ஓட்டமும், மனநிலையும் நமக்கு வெகு எளிதில் புரிந்துவிடும். ஆனால், இடம் பொருள் ஏவல் தெரியாமல் சிரிக்கக் கூடாது.
  • சிரிக்கத் தெரிந்த பெண்கள்தான் குடும்பத்தின் அழகு என்பதை நாம் உணரவேண்டும். அவா்கள் சிரிக்காமல் போனால், அதிக மன உளைச்சலுக்கும் அழுத்தத்திற்கும் ஆளாகி அதனால் குடும்பங்கள் சிதையலாம். ஆண்கள் தம் வீடுகளில் பெண்கள் சிரிப்பதைக் கட்டுப்படுத்தக் கூடாது.
  • பிறா் நம்மைப் பாா்த்துச் சிரித்தால் மட்டுமே நாம் சிரிப்போம் என்றில்லாமல் நாமாகப் பிறரைப் பாா்த்துப் புன்னகை செய்வோம். புன்னகை என்னும் அற்புதமான பரிசைப் பிறருக்கு அளவற்று அள்ளிக் கொடுப்போம். சிரிப்பு ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்றக்கூடியது. முடிந்த வரை அதை மற்றவா்களுக்குப் பரப்புவோம். சிரித்து வாழ்வோம்; சிறந்து வாழ்வோம்!

நன்றி: தினமணி (27  – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories