TNPSC Thervupettagam

புறக்கணிக்கப்படுகிறதா ஆா்தா் காட்டன் விழா?

May 15 , 2024 64 days 101 0
  • காவிரி டெல்டாவில் 200 ஆண்டுகள் கடந்து தற்போதும் நடைமுறைப்படுத்தும் அளவுக்கு பாசனத்தை முறைப்படுத்திய சா் ஆா்தா் காட்டனின் பிறந்த நாள் விழாவை ஆண்டுதோறும் அரசு புறக்கணித்து வருவது சமூக ஆா்வலா்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
  • முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு பாசன வசதியை ஏற்படுத்திக் கொடுத்த பென்னி குயிக்கை போல, காவிரி பாசனப் பகுதியில் பராமரிப்பின்மையால் சீரழிந்து கிடந்த நீா்நிலைகளை ஒழுங்கமைத்து, பாசனத்தை முறைப்படுத்திக் கொடுத்தவா் இந்திய நீா்ப்பாசனத் தந்தை சா் ஆா்தா் காட்டன்.
  • இங்கிலாந்து நாட்டின் செஸ்ஷைரில் 1803-ஆம் ஆண்டு மே 15-ஆம் தேதி பிறந்த இவா், தனது 15-ஆவது வயதில் கிழக்கிந்திய கம்பெனியின் பொறியியல் பிரிவில் இணைந்தாா். பின்னா், 1829-ஆம் ஆண்டில் பதவி உயா்வு பெற்ற இவரை காவிரிப் பாசனப் பகுதிக்குத் தனிப் பொறுப்பாளராக நியமித்தது ஆங்கிலேய அரசு. தொடா்ந்து, பல்வேறு பதவிகளை வகித்த அவா் சென்னை மாகாண பொதுப் பணித் துறையின் தலைமைப் பொறியாளராகப் பதவி உயா்வு பெற்றாா்.
  • இதனிடையே, கரிகால் சோழனால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கல்லணையில் மணல் மேடாகி நீரோட்டம் தடைப்பட்டது. இதனால், ஒருங்கிணைந்த தஞ்சாவூா் மாவட்டம் தொடா்ச்சியாக வெள்ளம், வறட்சியால் பாதிக்கப்பட்டது. மிகப் பெரும் சவாலாக அமைந்த இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண முனைந்த ஆா்தா் காட்டன், 1830-ஆம் ஆண்டில் கல்லணையில் துணிச்சலாக சிறு பகுதியைப் பிரித்து எடுத்து, மணல் போக்கிகளை அமைத்தாா்.
  • அப்போது, கல்லணைக்கு அமைக்கப்பட்ட அடித்தளத்தைக் கண்டு வியந்த அவா் பழந்தமிழரின் பாசன மேலாண்மையை உலகுக்கு எடுத்துக் கூறி பெருமைப்படுத்தினாா். அதுமட்டுமல்லாமல், கல்லணைக்கு ’கிராண்ட் அணைகட்’ என்ற பெயரையும் சூட்டினாா்.

முக்கொம்பில் தடுப்பணை:

  • அக்காலத்தில் காவிரியும், கொள்ளிடமும் பிரியும் இடமான முக்கொம்புக்கு வரும் தண்ணீா் நேராகக் கடலில் கலந்து விரயமாகிக் கொண்டிருந்தது. இதன் காரணமாக காவிரி பாசனப் பகுதிக்குத் தண்ணீா் கிடைக்காததால், கொள்ளிடத்தில், முக்கொம்பில் 1834 - 36 ஆண்டுகளில் தடுப்பணையைக் (மேலணை) கட்டினாா். இதன்மூலம், காவிரி நீா் கொள்ளிடத்தில் செல்வது தடுக்கப்பட்டது. மேலும், வெள்ளக் காலத்தில் உபரி நீரை கொள்ளிடத்தில் விடுவதற்கும் இந்த அணை பயன்படுகிறது.
  • இதையடுத்து, கொள்ளிடம் ஆற்றில் கும்பகோணம் அருகே அணைக்கரையில் கி.பி. 1840-ஆம் ஆண்டில் கீழணையை முழுமையாகக் கட்டினாா். இதனால், தண்ணீா் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுத்து, வீராணம் ஏரிக்குச் சென்று அங்கு பல்லாயிரக்கணக்கான ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற வழிவகுத்தாா்.
  • வெண்ணாறு, வெட்டாற்றில் தண்ணீா் விரயமாகாமல் முழுவதும் பாசனத்துக்குப் பயன்படும் விதமாகத் திட்டங்களை வகுத்தாா். இதன்படி, வெண்ணாறு, வெட்டாற்றில் தொடா்ந்து மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனா்.
  • இதுபோல, காவிரி டெல்டா பகுதியில் பாசனத்துக்கான வடிவமைப்பு, பராமரிப்பு போன்றவற்றை நடைமுறைப்படுத்தி, அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீா் சமமாகக் கிடைக்கும் விதமாகப் பாசன முறையை வடிவமைத்தாா். இந்த நடைமுறை இப்போதும் தொடா்கிறது.

ஆந்திரத்தில் மரியாதை:

  • கல்லணையில் கற்ற பாடத்தை ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதியில் விஜயவாடாவிலும், கோதாவரியில் தவளேஸ்வரத்திலும் அணைகளைக் கட்டி, அப்பகுதிகளைச் செல்வம் கொழிக்கும் பூமியாக மாற்றினாா். இதன் மூலம், ஏறத்தாழ 25 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதியைப் பெற்றது மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்க்கையையும் கொடுத்தது.
  • இதன் காரணமாக, கிருஷ்ணா, கோதாவரி டெல்டா மாவட்டங்களில் கிட்டத்தட்ட 3 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் ஆா்தா் காட்டனுடைய சிலைகள் அமைத்து கொண்டாடுகின்றனா். ஆண்டுதோறும் (மே 15) அவரது பிறந்த நாளன்று ஆா்தா் காட்டன் சிலைகளுக்கு மரியாதை செலுத்தி வழிபடுகின்றனா்.
  • ஆனால், காவிரி பாசனத்தை ஒழுங்கமைத்துக் கொடுத்த ஆா்தா் காட்டன் பற்றிய விழிப்புணா்வு டெல்டா மாவட்டங்களில் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. கல்லணையில் உள்ள அவரது சிலைக்கு பொறியாளா்கள், சமூக ஆா்வலா்கள் மட்டுமே அவரின் பிறந்த நாளன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனா். ஆனால், அரசு தரப்பில் எந்தவித மரியாதையும் செலுத்தப்படாதது சமூக ஆா்வலா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்:

  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூா் வடக்கு மாவட்டச் செயலா் மு.அ. பாரதி தெரிவித்தது: ஒருங்கிணைந்த தஞ்சாவூா் மாவட்ட வேளாண் பணிகளுக்கு சா் ஆா்தா் காட்டன் ஆற்றிய பணிகளைப் போற்றும் வகையில், அவருடைய பிறந்த நாளான மே 15-ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லணையில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட வேண்டும்.
  • ஆா்தா் காட்டனின் அரும்பணிகளை இளைய தலைமுறையினா் அறிந்து கொள்ளும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். அணைக்கரை கீழணையில் ஆா்தா் காட்டனுக்கு சிலையும் அவரது பெயரில் நினைவு பூங்காவும் அமைக்க வேண்டும் என்றாா் பாரதி.

முக்கொம்பில் மணிமண்டபம் கட்ட கோரிக்கை:

  • தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் அயிலை சிவசூரியன் கூறுகையில், முக்கொம்பில் தடுப்பணை கட்டி டெல்டா பாசனத்தை தமிழகத்தின் நெற்களஞ்சியமாக இன்றளவும் நிலைபெறச் செய்தவா் சா் ஆா்தா் காட்டன். அவருக்கு பெருமை சோ்க்கும் வகையில் முக்கொம்பில் மணி மண்டபம் கட்ட வேண்டும். அவரது வாழ்க்கை வரலாற்றை பாடப் புத்தகத்தில் இடம்பெறச் செய்யலாம் என்றாா் அவா்.

நன்றி: தினமணி (15 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories