TNPSC Thervupettagam

பெண்கள் மீதான வன்முறை

August 28 , 2024 10 hrs 0 min 8 0

பெண்கள் மீதான வன்முறை

  • மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்​தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்​துவ​மனையில் பயிற்சி மருத்​துவ​ராகப் பணியாற்றிவந்த முதுநிலை மருத்துவ மாணவி ஒருவர், ஆகஸ்ட் 9ஆம் தேதி மருத்​துவமனை வளாகத்தில் வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்யப்​பட்டுக் கொல்லப்​பட்​டார். நாடு முழுவதும் இச்சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்​தியது. இந்தக் கொடூரக் குற்றத்​துக்கு நீதி கேட்டு மருத்​துவர்கள், கல்லூரி மாணவர்கள், மக்கள் போராட்​டத்தில் இறங்கினர்​.
  • இச்​சம்​பவத்தின் தாக்கம் சிறிதும் குறையாத நிலையில், அசாமில் சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்​கப்​பட்டது, அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
  • தமிழகத்​தி​லும், கிருஷ்ணகிரி மாவட்​டத்தில் என்சிசி பயிற்சி வழங்கு​வ​தாகப் பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்​தலுக்கு உள்ளாக்​கப்​பட்டது கடும் அதிர்​வலையை ஏற்படுத்தியது. இவ்வாறு, இந்தியாவில் தொடர்ச்​சி​யாகப் பெண்கள் மீது ஏவப்படும் பாலியல் வன்முறைகள், சீண்டல்கள் பெண்களின் பாதுகாப்​புக்குப் பெரும் அச்சுறுத்​தலாகி இருக்கின்றன.

குற்றங்​களும் குற்றவாளி​களும்:

  • தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் 2023இல் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் 2022இல் பெண்கள் மீதான வன்முறை 4% அதிகரித்​திருப்​ப​தாகச் சுட்டிக்​காட்​டப்​பட்​டிருந்தது. 2022இல், பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்​களின் எண்ணிக்கை 4,45,256. இந்த எண்ணிக்கை 2021இல் 4,28,278ஆக​வும், 2020இல் 3,71,503 ஆகவும் இருந்தது.
  • பாலியல் வன்கொடுமையை மட்டும் எடுத்​துக்​கொண்​டால், 2012இல் டெல்லி நிர்பயா சம்பவத்​துக்குப் பிறகு, பாலியல் குற்றங்களைத் தண்டிப்​பதற்கான சட்டங்கள் வலுப்​படுத்​தப்​பட்டன. பாலியல் வல்லுறவு என்பதற்கான வரையறையும் விரிவுபடுத்​தப்​பட்டது. பாலியல் குற்றங்களை விசாரிப்​ப​தற்கான சிறப்பு நீதிமன்​றங்கள் உருவாக்​கப்​பட்டன. ஆனால், இந்த வகையிலான குற்றங்கள் அதிகரித்​துக்​கொண்​டுதான் இருக்​கின்றன. 2012இல் 25,000 பாலியல் வல்லுறவு வழக்குகள் பதிவாகின. 2022இல் அந்த எண்ணிக்கை 31,000 ஆக அதிகரித்​துள்ளது.
  • பெண்கள் மீதான குற்றச் சம்பவங்​களில் கணவர் அல்லது அவரது உறவினர்​களின் மூலம் அரங்கேறும் குடும்ப வன்முறையே முதன்​மையாக உள்ளது. 31.4% பெண்கள் தங்கள் கணவர் வீட்டில் இத்தகைய சித்ர​வதைக்கு உள்ளாகின்​றனர். 2022இல் வரதட்​சிணைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 13,479 வழக்குகள் பதிவுசெய்​யப்​பட்​டுள்ளன. இந்தப் பட்டியலில், பெண் கடத்தல் (19.2%), பெண்கள் மீதான தாக்குதல் (18.7%), பாலியல் வல்லுறவு (7.1%) போன்ற குற்ற நிகழ்வுகள் குறிப்​பிடப்​பட்​டிருக்​கின்றன.

சட்டங்​களும் நடைமுறையும்:

  • பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்​களைத் தடுத்திடப் பல்வேறு சட்டங்கள் இந்தியாவில் இயற்றப்​பட்​டுள்ளன. வரதட்சிணை தடைச் சட்டம் (1961) வரதட்சிணை பெறுவதையோ கொடுப்பதையோ தடை செய்கிறது.
  • பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்​தப்​படுவதை பாலியல் தொழில் தடுப்புச் சட்டம் (1956) தடுக்​கிறது. பெண்களை அநாகரி​க​மாகக் காட்சிப்​படுத்து​வதைத் தடுக்கும் சட்டம் 1986 (THE INDECENT REPRESENTATION OF WOMEN (PROHIBITION) ACT1986), திரைப்​படம், விளம்பரம் போன்ற​வற்றில் பெண்களை அநாகரிகமான முறையில் சித்தரிப்​பதைத் தடுக்​கிறது.
  • ஒரு பெண் தனது கணவர் வீட்டில் பாதுகாப்பாக வாழ்வதற்கான அம்சங்​களை ‘குடும்ப வன்முறையி​லிருந்து பெண்களைப் பாதுகாத்தல் சட்டம் (2005)’ வலியுறுத்து​கிறது. பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டமும் (2013) அமலில் உள்ளது. எனினும் இச்சட்​டங்களை நடைமுறைப்​படுத்து​வதில் நிலவும் சிக்கல்​களினால் பாதிக்​கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்​பதில் தாமதம் ஏற்படு​கிறது.

தாமதமாகும் நீதி:

  • இந்தியாவில் பொதுவாகவே குற்ற​வியல் வழக்குகளை விசாரிப்​பதில் காவல் துறை - நீதிமன்​றங்​களிடம் சுணக்கம் நிலவு​கிறது. பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை விசாரிக்க, அனுபவம் பெற்ற காவல் துறை அதிகாரி​களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால் வழக்கு விசாரணை​யிலும், குற்றப்​பத்​திரிகை தாக்கல் செய்வ​திலும் சிக்கல் ஏற்படு​கிறது.
  • அடுத்து நீதிமன்ற விசாரணை; ஒரு வழக்கு விசாரணைக்குக் குறைந்​த​பட்சம் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளை நீதிமன்​றங்கள் எடுத்​துக்​கொள்​கின்றன. மேல் முறையீட்டுக்கு வழக்கு கொண்டு​செல்​லப்​பட்​டால், அது முடிவடைய 10 - 15 வருடங்கள் ஆகக்கூடும். இதனால் பாதிக்கப்பட்ட பெண், வழக்கைத் தொடர முனைப்பு காட்டாத நிலை ஏற்படு​கிறது.
  • 2022 நிலவரப்படி, இந்தியாவில் 801 மாவட்​டங்​களில் 4.4 லட்சம் பாலியல் துன்புறுத்தல் சார்ந்த வழக்குகள் நிலுவையில் இருப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. வழக்குகளை விரைந்து முடிக்க விரைவு நீதிமன்​றங்கள் இயங்கினாலும், அவை வழக்குகளை முடிப்​பதில் ஆர்வம் காட்டு​வ​தில்லை என்கிற குற்றச்​சாட்டைச் சட்ட நிபுணர்​களும் முன்வைக்​கின்​றனர்.

பிற நாடுகளில்:

  • உலகளவில் மூன்று பேரில் ஒரு பெண் ஏதேனும் ஒரு வகையில் பாலியல் துன்புறுத்​தலுக்கு உள்ளாக்​கப்​படுவதாக உலகச் சுகாதார அமைப்பு கூறுகிறது. தென் ஆப்ரிக்​காவில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றன. ஆப்கானிஸ்​தான், காங்கோ, சோமாலியா உள்ளிட்ட நாடுகளில் பெண்கள் மீதான வன்முறைகள் கூடுதலாக உள்ளன.
  • உலக நாடுகளில் குடும்ப வன்முறைக்கு எதிராக​வும், பணியிடங்​களில் பாலியல் துன்புறுத்​தலைத் தடுக்​கவும் சட்டங்கள் வகுக்​கப்​பட்​டுள்ளன. எனினும் இச்சட்​டங்கள் எல்லாம் பெண்கள், சிறுமிகள் மீதான வன்முறை​களைத் தடுக்​கின்றனவா என்றால், இல்லை என்றே உலகச் சுகாதார அமைப்பு பதிலளிக்​கிறது. இச்சட்​டங்​களில் நிலவும் குளறு​படிகள் காரணமாகக் குற்றவாளி​களுக்குத் தண்டனையை உறுதி​செய்​வதில் கால தாமதம் எற்படுவதாக அவ்வமைப்பு கூறுகிறது.

தீர்வுகள்:

  • வன்முறை, பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றங்கள் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்து​வதுடன் அவர்களின் சமூகப் பங்களிப்​பையும் குறைக்​கின்றன. இதனால் பல்வேறு உரிமை​களைப் பெண்கள் இழக்கின்​றனர். இந்நிலையைச் சீரமைக்கச் சமூகத்தில் பாலினச் சமத்துவம், பொருளா​தாரத் தற்சார்பு, காவல் துறை, நீதிமன்றம் போன்ற​வற்றில் பெண்களுக்குச் சம வாய்ப்பு என ஆரோக்​கியமான சூழல் உருவாவதை அரசு உறுதிப்​படுத்த வேண்டும்.
  • கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரத்தில் பெண்கள் தன்னிறைவைப் பெற வழி ஏற்படும்​போது, குடும்ப வன்முறையில் அவர்கள் சிக்கும் சாத்தியம் குறைகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்​களைத் தடுத்திடக் காவலர்கள் பற்றாக்குறை உடனடி​யாகச் சரி செய்யப்பட வேண்டும். குற்ற​வியல் சட்டங்களை மேம்படுத்தி, பாலியல் வழக்கு​களில் குற்றம்​சாட்​டப்​படும் குற்றவாளிகளுக்கு விரைவாகத் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (28 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories