பெண்ணியப் பார்வையில் ஒரு தீர்ப்பு
- சென்னை உயர் நீதிமன்றம், ஜனவரி 23 அன்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை வழங்கியிருக்கிறது. சென்னை அம்பத்தூரில் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் மூவர், அங்கு பணியாற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு அலுவலர் தங்களுக்குப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக விசாகா குழுவில் புகார் அளித்துள்ளனர்.
- பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை - தீர்வு) சட்டம், 2013இன்படி பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்புக்காகச் சில ஏற்பாடுகளைச் செய்வது கட்டாயம். விசாகா குழுப் பரிந்துரைகளின்படியான ‘உள் விசாரணைக் குழு’ அமைத்தல் அவற்றில் ஒன்று.
அசெளகரியத்தை ஏற்படுத்துதல்:
- அந்த வகையில் மேற்கண்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திலும் விசாரணைக் குழு செயல்படுகிறது. அங்கு பாதிக்கப்பட்ட பெண்கள் மூவரும் புகார் அளித்துள்ளனர். இதை விசாரித்த குழு, குற்றம் இழைக்கப்பட்டது உண்மை என்ற முடிவுக்கு வந்தது. அந்த அடிப்படையில், குற்றம் இழைத்த அலுவலருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்கக் கூடாது என்று நிர்வாகத்துக்குப் பரிந்துரை செய்தது.
- இதை எதிர்த்து, அந்த அலுவலர் சென்னையில் உள்ள தொழிலாளர் நல நீதிமன்றத்தை நாடினார். ‘தனது தரப்பை விளக்கப் போதுமான வாய்ப்பு வழங்கப்படவில்லை’ என்பது அவரது வாதம். இதையடுத்து, விசாகா குழு அறிக்கையைத் தொழிலாளர் நீதிமன்றம் ரத்துசெய்தது. இதை எதிர்த்த அந்தத் தகவல் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது.
- இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘பெண் ஊழியர்களின் பின்னால் நின்றுகொண்டு தொட்டுப் பேசுவது, கைகுலுக்கக் கட்டாயப்படுத்துவது, உடைகளின் அளவுகளைக் கேட்பது என்று அந்த அலுவலர் தொந்தரவு கொடுத்திருக்கிறார். மேலாளர் என்கிற முறையில் கண்காணிக்கவே இவ்வாறெல்லாம் செய்தார் என்பதை ஏற்க முடியாது.
- பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவது, விரும்பத்தகாத செயல்களைச் செய்வது ஆகியவைகூட, பாலியல் துன்புறுத்தல்கள்தாம். எனவே, விசாகா குழுவின் பரிந்துரை செல்லும்’ என்று தீர்ப்பு அளித்தது.
- அத்தீர்ப்பை வழங்கிய நீதிபதி மஞ்சுளா, ‘பணித்தளத்தில் பெண்கள் ஒரு நடத்தையை எப்படி உணர்கிறார்கள் என்பதுதான் முக்கியம். துன்புறுத்துபவரின் நோக்கங்களைப் பார்க்க வேண்டியதில்லை’ என்று குறிப்பிட்டார்.
- இந்த நடைமுறைகள் எல்லாம் சட்டப்படியாக இருந்தாலும்கூட, ஓர் உளவியல் பின்னணியும் இதில் உண்டு. ‘நீங்கள் எந்த நோக்கில் என்னைப் பின்தொடர்ந்தாலும், அது எனக்கு வசதி குறைவாக இருக்கிறது’ என்று ஒரு பெண் சொல்லிவிட்டால், அது மதிக்கப்பட வேண்டும். ‘நான் யதார்த்த மாகத்தான் நடந்துகொண்டேன்’ என்று எவரும் சப்பைக்கட்டு கட்ட முடியாது.
பாதிக்கப்பட்டவரின் கோணம்...
- இயற்கையாகவே பெண்கள் கூர்மையான உள்ளுணர்வு கொண்டவர்கள். ரயிலில், பேருந்தில், கூட்டமாக மக்கள் திரளும் இடங்களில் ஒரு சிறிய தீண்டல், ஒரு வக்கிரப் பார்வை, ஒரு சிறிய அணுகல்கூட, அவர்களுக்கு எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்துவிடும். அதனால்தான், தங்களுக்கு வசதிப்பட்ட இடத்தை நோக்கி அவர்கள் நகர முயல்வர். அசௌகரியத்தின் அளவு அதிகரிக்கும்போது அது எதிர்ப்பாக உருவாகிறது. இந்த உள்ளுணர்வும் பாதுகாப்பு உணர்வும் மதிக்கப்பட வேண்டும்.
- அந்தப் பார்வையில்தான் பணியிடத்தில் பாலியல் தொந்தரவுகளைத் தடுக்கும் சட்டம் உருவாக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவரின் கோணத்தில் இருந்து பிரச்சினையைப் பார்க்கும் தன்மை (Empathy) இந்தச் சட்டத்துக்கு இருக்கிறது. இச்சட்டத்தைக் கையாளும் அனைவரும் அதே பார்வையுடன் இருக்க வேண்டும் என்றும் அது வலியுறுத்துகிறது.
தொழிலாளர் சட்டம்:
- இப்போது அந்த அலுவலரின் பார்வையிலிருந்து இப்பிரச்சினையைப் பார்க்கலாம். அவர் ஒரு தொழிலாளி. எனவே, தனது தொழில்ரீதியிலான பிரச்சினையை (விசாகா குழுவின் அறிக்கை மீதான நடவடிக்கையை எதிர்த்து) தொழிலாளர் நீதிமன்றத்துக்கு எடுத்துச்சென்றார்.
- பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரித்து, அவர்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யச் சில சட்டங்கள் எப்படி இருக்கின்றனவோ, அதேபோலத் தொழிலாளர்களின் பக்கம் நின்று, அவர்களுக்கான சட்டப்படியான உரிமைகளை நிலைநாட்ட தொழிலாளர் சட்டங்கள் போராடுகின்றன.
- ‘தொழிலாளர்களின் உரிமையும் மனித உரிமைதான்’ என்ற கோணத்தில் தற்போது விரிவான பொருளில், உலகளாவிய அளவில் ஒரு பார்வை உருவாகியிருக்கிறது. தொழிலாளர் நலச் சட்டங்கள் அனைத்திலும் காணப்படும் அடிநாதம் - ‘தொழிலாளி ஒருவர் மீது எவ்விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். தனது தரப்பை விளக்க அவருக்குப் போதுமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்’ என்பதுதான். சென்னை உயர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை பல்வேறு தொழிலாளர் வழக்குகளில் இது அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது.
- ஒரு தொழிலாளியின் பின்னால் அவரது குடும்பம், பொருளாதாரம், சமூகத்தகைமை என்று எல்லாமே இருக்கிறது என்பதுதான் தொழிலாளர் சட்டங்களை இயற்றிய அம்பேத்கரின் கரிசனப் பார்வை. ஆனால், இதை ஒருவர் பொது நீதிக்கு எதிராகப் பயன்படுத்திவிட முடியாது. அதேபோல, சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினருக்கான சட்டங்களை ஒன்றுக்கொன்று எதிராகவும் நிறுத்த முடியாது. எடுத்துக்காட்டாக, பெண்களுக்கான சட்டங்களைத் தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக நிறுத்த முடியாது.
பொன் விதி:
- தொழிலாளர்களுக்கான சட்டங்களில்கூடப் பெண்கள், கர்ப்பிணிகள், சிறு குழந்தைகளுடன் பணிக்கு வரும் பெண் ஊழியர்கள் ஆகியோரின் நலனுக்காகச் சிறப்புப் பிரிவுகளை உருவாக்கி வைத்திருக்கிறோம். அதேபோல, பெண்களுக்கான சட்டங்கள் - தொழிலாளர் சட்டங்கள் என்கிற இரண்டில் எது மேலானது (prevailed) என்கிற கேள்வியும் இங்கு எழுப்பப்பட முடியாது. எனவேதான், தொழிலாளர் உரிமை என்ற சொல்லின் பின்னால் பாலியல் துன்புறுத்தல் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் ஒளிந்துகொள்ள முடியாது என்பதை உயர் நீதிமன்றம் பட்டவர்த்தனமாக எடுத்துரைத்திருக்கிறது.
- விசாரணைக் குழுவாக இருந்தாலும் சரி, தொழிலாளர் சட்டங்களின்படியிலான விசாரணையாக இருந்தாலும் சரி... குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தனது தரப்பை விளக்கப் போதுமான வாய்ப்புகள் தந்தாக வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அது உச்ச நீதிமன்றம் வரை மேல்முறையீடு செய்யப்பட்டாலும் இதுதான் பொன் விதி.
- ஆக, குறிப்பிட்ட வழக்கில் தன் தரப்பை விளக்கப் போதுமான வாய்ப்புகளைத் தரவில்லை என்று அந்த அலுவலர் முறையிடலாமே ஒழிய, ‘நாங்கள் அசௌகரியமாக உணர்கிறோம்’ என்று பெண் ஊழியர்கள் சங்கடப்படும் அளவுக்குப் பணியாற்றவோ கண்காணிக்கவோ எவ்வித உரிமையும் அவருக்கு வழங்கப்பட மாட்டாது.
- எனவே, எந்தச் சட்டங்களின்படி பார்த்தாலும் சரி, உளவியல், சமூகவியல் பார்வையில் பார்த்தாலும் சரி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி துல்லியமான ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார். இனிவரும் காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றமிழைப்போர் எவ்விதமான சட்டங்களின் நிழலிலும் ஒளிந்து கொள்ள முடியாது.
- சட்டங்களை வெறும் சொற்களாகப் புரிந்து கொண்டு கையாளாமல் அவற்றின் நோக்கத்தை, ஜீவனை, ரத்தமும் சதையுமாகப் புரிந்துகொள்ளும்போதுதான் நீதியின் கதவுகள் முழுமையாகத் திறக்கின்றன. அதற்கு இந்தத் தீர்ப்பு சரியான உதாரணம்!
நன்றி: இந்து தமிழ் திசை (03 – 02 – 2025)