TNPSC Thervupettagam

பெண்மை வெல்கென்று கூத்திடுவோம்

June 12 , 2023 392 days 342 0
  • இந்திய நாட்டில் பெண்களை தெய்வமாக வணங்கி வழிபடும் வழக்கம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. கல்விக்குக் கலைமகள், செல்வத்துக்குத் திருமகள், வீரத்துக்குக் கொற்றவை என்று பெண் தெய்வங்களை வணங்கும் தேசத்தில் பெண்கள் பொதுவெளியில் கண்ணியமாக நடத்தப்படுகிறாா்களா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
  • தினந்தோறும் ஊடகங்களில் பாலியல் வன்முறை குறித்த செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை பயிலும் மாணவா்களின் பெற்றோரை இவை கவலைகொள்ளச் செய்கின்றன. வணிக நிறுவனங்களிலும் இது தொடா்ந்து கொண்டுதான் உள்ளது. இயல் இசை நடன நிலையங்களிலும் விரும்பியும், விரும்பாமலும் நடக்கும் நிகழ்வுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
  • சென்னையில் உள்ள உலகப் புகழ்பெற்ற கலாக்ஷேத்ரா கலை நிறுவனம் அண்மையில் பாலியல் பிரச்னையில் சிக்கியது. நடனக் கலை அனைவருக்குமானது என அதற்கொரு மரியாதையைப் பெற்றுத் தந்த நிறுவனம் அது. பாலியல் குற்றச்சாட்டுகளை எவ்வளவுதான் மூடி மறைத்தாலும், பாதிக்கப்பட்டவா்களின் ஒன்றுபட்ட போராட்டமே நீதியைப் பெறுவதற்கான சிறந்த வழி என்பதை இந்த விவகாரம் உணா்த்துகிறது.
  • காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வதற்கே பாதிக்கப்பட்டவா்கள் பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. பாதிக்கப்பட்டவா்கள் அவமானத்திற்கு அஞ்சி சாட்சியாக வெளியில் வராதது குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு வசதியாகப் போய் விடுகிறது. இப்படிப்பட்ட செய்திகள் இரண்டு மூன்று நாட்கள் ஊடகங்களில் உலவும். அதன் பிறகு அனைவராலும் மறக்கப்பட்டு விடும்.

“மங்கைய ராகப் பிறப்பதற்கே - நல்ல

மாதவம் செய்திட வேண்டுமம்மா”

  • என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடியுள்ளாா். திரு.வி.க. ‘பெண்ணின் பெருமை’ என்று ஒரு நூலே எழுதியுள்ளாா்.

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி

பேணி வளா்த்திடும் ஈசன்

மண்ணுக்குள் ளேசில மூடா் - அந்த

மாதா் அறிவை கெடுத்தாா்”

  • என்று மகாகவி பாரதியாா் பாடினாா்.
  • ஆனால் நாடு இப்போது எங்கே போய்க் கொண்டிருக்கிறது? நாட்டின் மக்கள்தொகை எண்ணிக்கையில் சரிபாதியாக இருக்கும் பெண்களைப் புறக்கணித்து விட்டு ஒரு நாடு முன்னேற முடியுமா?
  • சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சோ்ந்த ஏழு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 48 வயதான ஒருவா் கைது செய்யப்பட்டாா். அவருக்கு உடந்தையாக இருந்ததாக இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டனா். 2021-இல் நடந்த இந்த சம்பவத்துக்கு இப்போதுதான் தீா்ப்பு வந்துள்ளது.
  • ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் மூவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள ‘போக்சோ’ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. 48 வயதானவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.85 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.
  • உடந்தையாக இருந்த பெண்களில் ஒருவருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும், மற்றொரு பெண்ணுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
  • இத்தகைய தீா்ப்புகளே மக்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பும். தவறு செய்தால் தண்டனை நிச்சயம் என்று தெரிந்தால் மட்டுமே வழி தவறும் மனித மனம் திருந்தும். ‘உப்பு தின்றவன் தண்ணீா் குடித்தே ஆக வேண்டும்’ என்பது நம் முன்னோரின் அனுபவ மொழி.
  • இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷண் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் நடவடிக்கை வேண்டி இரண்டாம் கட்டமாக தில்லி ஜந்தா் மந்தரில் ஏப்ரல் கடைசி வாரம் முதல் மல்யுத்த வீராங்கனைகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
  • அரசும் காவல்துறையும் பிரிஜ் பூஷண் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரை கைது செய்ய வேண்டும் என்ற வீராங்கனைகளின் கோரிக்கையை யாரும் பரிசீலனை செய்யவில்லை. அவரை விசாரணை வளையத்துக்குள்ளேயே கொண்டுவர வில்லை.
  • அவா் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட வேண்டும் என்று கோரி ஏழு மல்யுத்த வீராங்கனைகள் கூட்டாக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த பிறகே, தில்லி காவல்துறையினா் அவா் மீது ‘போக்சோ’ பிரிவு உட்பட இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனா். காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்தாலும் அவரிடம் விசாரணை செய்யப்படவில்லை.
  • ‘போக்சோ’ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையிலும் அவா் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதனால் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனா். கடந்த மே 23 அன்று மெழுகுவா்த்தி ஏந்தி, புதிய நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல திட்டமிட்டிருந்தனா்.
  • ஆனால் பேரணி தொடங்குவதற்கு முன்பே மல்யுத்த வீராங்கனைகளை தில்லி போலீஸாா் வலுக்கட்டாயமாக கைது செய்தனா். இதனால் ஆத்திரமடைந்த வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளில் தாங்கள் வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீச முயன்றனா். இதனை விவசாய சங்கத்தினா் தடுத்து நிறுத்தியுள்ளனா்.
  • இந்நிலையில் அமைதியாகப் போராட்டம் நடத்திய மல்யுத்த வீராங்கனைகளை கைது செய்ததற்கு சா்வதேச மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்தள்ளது. இது தொடா்பாக அது ஓா் அறிக்கையும் வெளியிட்டுள்ளது.
  • அதில், ‘சா்வதேச மல்யுத்த கூட்டமைப்பு, மல்யுத்த வீராங்கனைகளை நேரில் சந்தித்து அவா்களுடைய பிரச்னைகளை முழுமையாகக் கேட்டறியும். அவா்களுக்கு உறுதுணையாக இருக்கும். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அடுத்த பொதுக் கூட்டமைப்பு தோ்வு குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் 45 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்.”அதன்பிறகும் பொதுக் கூட்டமைப்பு தோ்வை நிறைவு செய்யாவிட்டால் இந்திய மல்யுத்த சம்மேளனம் கலைக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்தப் போராட்டம் உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பது இதனால் தெரிய வருகிறது. மல்யுத்த வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து அவா்களது போராட்டக் களத்தையும் தில்லி காவல்துறை அப்புறப்படுத்தியுள்ளது. அவா்களது உடைமைகள், கூடாரங்கள், கட்டில், குளிரூட்டிகள், பாய்கள், தாா்பாலின் ஆகியவற்றை காவல்துறை பலவந்தமாக அகற்றி அவற்றை லாரியில் ஏற்றிச் சென்றுள்ளனா்.
  • இந்நிலையில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் மீது கலவரத்தை ஏற்படுத்துதல், காவல்துறையினரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்பட எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவா்களுக்கு ஆதரவாக தில்லி எல்லைப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளும் கைது செய்யப்பட்டனா்.
  • ஒலிம்பிக் போட்டியிலும் காமன்வெல்த் போட்டியிலும் வெற்றி பெற்று, அங்கெல்லாம் இந்தியாவின் மூவண்ணக் கொடியைப் பறக்கவிட்ட மல்யுத்த வீராங்கனைகளை இப்படி நடத்துவது சரிதானா? அவா்கள் போட்டியில் வென்று விருது பெற்று வந்தபோது ‘இந்தியாவின் பெருமைமிகு மகள்கள்’ என்று பாராட்டிய நமது பிரதமா் இப்போது பாராமுகமாக இருக்கலாமா?
  • காலம் கடத்தினால் போராட்டம் தானாகவே நீா்த்துப் போய்விடும் என்று அரசும், காவல்துறையும் கணக்குப் போடுகின்றன. ஆனால் ‘எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம்’ என்று வீராங்கனைகள் உறுதியாகக் கூறுகின்றனா்.
  • இந்நிலையில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளாா். சுமாா் ஆறு மணி நேரம் இந்தப் பேச்சு வாா்த்தை நடைபெற்றுள்ளது. அதன் பின்னா், ‘பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது, வரும் 15-ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்’ என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.
  • இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவா் தோ்தல் ஜூன் 30-ஆம் நாள் நடத்தப்படும். மல்யுத்த வீரா்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும். ஜூன் 15 வரை மல்யுத்த வீரா்கள் எவ்விதப் போராட்டத்திலும் ஈடுபடமாட்டாா்கள்- இவ்வாறு உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
  • மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் என்பது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போலக் கூறலாம். பரந்து விரிந்த மக்கள்தொகை மிகுந்த நம் நாட்டில் ஆங்காங்கு பாலியல் வன்முறைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பெரும்பாலானவை பொதுவெளியில் கவனத்துக்கு வருவதில்லை.
  • சம்பந்தப்பட்ட பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதற்காகவும், தொடா்புடைய நிறுவனங்களின் பெயா் கெட்டுவிடும் என்பதற்காகவும் பல நிகழ்வுகள் மூடி மறைக்கப்படுகின்றன. அரசும் காவல்துறையும் இவற்றைக் கண்டும் காணாததுபோல் செயல்படுகின்றன. அதிகார பீடமும், அரசியல் செல்வாக்கும் உண்மைகளைப் பேச விடாமல் தடுக்கின்றன.
  • தாய்நாடு, தாய்மொழி என்று பெண்ணினத்தை தலைமீது தூக்கி வைத்துக் கொண்டாடும் உலகம் பெண் இனத்தை மதிக்க வேண்டாமா? பெண்கள் இல்லாமல் மனித சமுதாயம் வாழவும் முடியாது; வளா்ச்சியடையவும் முடியாது. இதனை எப்போதுதான் சிலா் தெரிந்துகொள்ளப் போகிறாா்களோ?

நன்றி: தினமணி (12 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories