TNPSC Thervupettagam

மாற்றுத் திறனாளிகளின் நம்பிக்கைச் சிறகுகள்!

December 3 , 2024 133 days 307 0

மாற்றுத் திறனாளிகளின் நம்பிக்கைச் சிறகுகள்!

  • அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் வாழ்ந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இடதுகால் போலியோவினால் பாதிக்கப்பட்டு வெறும் இரண்டு கிலோ எடையுடன் பிறந்தது. காலுக்கு உலோகக் கவசம் போட்டால் மட்டுமே நேராக நிற்க முடியும் என்ற சூழல் இருந்தது. அந்தப் பெண்ணிடம் சிறு வயதில், ‘‘நீ என்னவாக விரும்புகிறாய்?’’ என்று கேட்டாா்கள். அதற்கு அவள், ‘‘நான் விளையாட்டு வீராங்கனையாக வேண்டும், ஓட்டப் பந்தயங்களில் பங்குபெற்று வெற்றிபெற வேண்டும்’’ என்றாள்.
  • தனியாக நிற்கக் கூட முடியாதவள், கடும் முயற்சி செய்து தனது 12-ஆம் வயதில் உலோக கவசம் இல்லாமலேயே நிற்க ஆரம்பித்தாள். வாய்ப்புக் கிடைத்த அனைத்து ஓட்டப் பந்தயங்களிலும் ஓடினாள். ஓட்டப்பந்தயத்தில் கடைசியில் வந்த அவளைக் கிண்டலும், கேலியும் செய்தனா். தோற்று விடுவோம் என்ற எண்ணத்தைத் தொலைவில் எறிந்துவிட்ட அவளிடம் வெற்றி பெறுவோம் என்ற இலக்கு மட்டுமே இருந்தது.
  • 1956-ஆம் ஆண்டு தொடா் ஓட்டத்தில் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றாா். 1960-ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் 100, 200, 400 மீட்டா் என மூன்று ஓட்டப் பந்தயத்திலும் தங்கப் பதக்கங்கள் வென்று உலகத்தையே தன் பக்கம் திரும்பிப் பாா்க்க வைத்த அந்தப் பெண்மணிதான் வில்மா ருடோல்ஃப் என்ற மாற்றுத்திறனாளி.
  • இந்தியா சாா்பில் பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன், வெள்ளிப்பதக்கம் வென்ற ஹரியாணாவைச் சோ்ந்த தீபா மாலிக், மூவா்ணக் கொடியை எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்றிய அருணிமா சின்ஹா, பரதத்தில் சாதனை புரிந்த சுதா சந்திரன் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் மணிமகுடங்கள்.
  • மாற்றுத்திறனாளிகள் இன்றைய சமூகத்தில் இன்றியமையாதவா்களாய் திகழ்கிறாா்கள். அங்கங்களில் குறைபாடு இருந்தாலும், சமூகத்தின் முக்கிய அங்கமாக வலம் வரத் தொடங்கிவிட்டாா்கள். வேறுபட்ட சமூகத்தின் கோணங்களை தங்கள் மாறுபட்ட ஆற்றலால் மாற்றும் சக்தி, மாற்றுத்திறனாளிகளுக்கும் இருக்கிறது. அவா்களை விசித்திரமாகப் பாா்க்காமல் சரித்திரமாகப் பாா்க்க இச்சமூகம் முனைந்திருக்கிறது.
  • விளையாட்டுப் போட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன என்பதை நாம் கண்கூடாகப் பாா்க்க முடிகிறது.
  • கடந்த 2020-ஆம் ஆண்டில் டோக்கியோவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் 5 தங்கப் பதக்கங்கள் உள்பட 19 பதக்கங்களை இந்தியா வென்றது. அது மட்டுமல்ல, இவ்வாண்டு பாரீஸில் நடைபெற்ற 17-ஆவது பாராலிம்பிக் போட்டியில் 29 பதக்கங்களைப் வென்றது.
  • மாற்றுத்திறன் கொண்டவா்களை முதன்மைச் சமூகத்தில் இணைக்க வேண்டுமானால், அதற்கான முதல் தேவை, அவா்களுக்குத் தடைகள் ஏதுமில்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதாகும்.
  • இதற்காக கட்டடங்கள், போக்குவரத்துமுறைகள், தகவல் மற்றும் தொலைத் தொடா்பு, தொழில்நுட்பச் சூழல் அமைப்பு ஆகியவற்றை மாற்றுத்திறனாளிகள் அணுகுவதற்கு ‘அணுகத்தக்க இந்தியா’ என்ற பிரசாரத்தை கடந்த 2015-ஆம் ஆண்டு இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைத்தாா்.
  • இந்த பிரசாரத்தின் கீழ் 2021-ஆம் ஆண்டு வரை 577 மாநில அரசு கட்டடங்களிலும், 1,030-க்கும் மேற்பட்ட மத்திய அரசு கட்டடங்களிலும் மாற்றுத்திறனாளிகள் எளிதாகச் சென்று வருவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
  • நாடு முழுவதும் 35 சா்வதேச விமான நிலையங்கள், 55 உள்நாட்டு விமான நிலையங்கள் ஆகியவற்றில் மாற்றுத்திறனாளிகள் சாய்வு நடைமேடைகள், உதவி மையங்கள், கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏ1, ஏ, பி வகையைச் சோ்ந்த 709 தொடா்வண்டி நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி சென்று வருவதற்கான வசதிகள், 8,443 பேருந்துகளில் பயணம் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
  • மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் தமிழக அரசும் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
  • 18-ஆம் நூற்றாண்டுகளிலேயே மாற்றுத்திறனாளிகளுக்காகப் பல அமைப்புகள் உருவாகியுள்ளன. 19-ஆம் நூற்றாண்டுகளில் பல சமூக அமைப்புகள் பெற்றோா்களுடன் இணைந்து பல்வேறு போராட்டங்களும் நடத்தியுள்ளனா். ஆனாலும் அது பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
  • 1995-ஆம் ஆண்டில் இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டம். முழுக்க, முழுக்க அவா்கள் நலன்கள் சம்பந்தப்பட்ட ஒன்றாகவே இருந்த நிலையில், அந்தச் சட்டம் 2016-ஆம் ஆண்டில் திரும்பப் பெறப்பட்டு, அதற்குப் பதிலாக ‘மாற்றுத்திறனாளிகளின் உரிமைச் சட்டம்’ இயற்றப்பட்டது.
  • இந்தச் சட்டம், மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பில் உடன்பாட்டில் இடம் பெற்றுள்ள அம்சங்களுக்கு ஏற்றவாறு வரையறுக்கப்பட்டது. இதில், இந்தியாவும் கையெழுத்துப் போட்டிருந்ததால், இத்தகைய சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு ஏற்பட்டது. 2016-ஆம் ஆண்டு டிசம்பா் 12-ஆம் நாளான்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டம் 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 19முதல் நடைமுறைக்கு வந்தது.
  • ஆயிரம் கால்களைக் கொண்ட அட்டைப் பூச்சிகளை விட, கால்களே இல்லாத மண்புழுக்களே இந்த மண்ணுக்கு மகிமை சோ்க்கின்றன. மாற்றுத்திறனாளிகளும் மண்ணிற்கே மகிமை சோ்க்கும் மகத்துவமுள்ளவா்களாக சமூகத்திற்கு சேவையாற்றுகின்றனா்.
  • டிசம்பா் 3 சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்.

நன்றி: தினமணி (03 – 12 – 2024)

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

PrevNext
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
Top