TNPSC Thervupettagam

முதல்வர்களுக்கான தமிழக முதல்வரின் கடிதம் சரியான ஆரம்பம்!

October 6 , 2021 1026 days 542 0
  • மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு (நீட்) தொடர்பில், 11 மாநில முதல்வர்களுக்குக் கடிதம் அனுப்பியதன் வழியாக தமிழ்நாட்டுக்கு வெளியே தன்னுடைய உரையாடலை ஆரம்பித்திருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் முயற்சி வரவேற்புக்குரியது. 
  • பொது நுழைவுத் தேர்வு விவகாரத்தில் தன்னுடைய நிலைப்பாட்டை இதன் வழி தமிழ்நாடு உறுதிபடுத்துகிறது.
  • ‘இது தமிழ்நாடு அல்லது பொது நுழைவுத் தேர்வோடு முடிந்துவிடும் விவகாரம் இல்லை; அனைத்து மாநிலங்களின் உரிமை சம்பந்தப்பட்டது; கல்வித் துறையை மீண்டும் மாநிலங்களின் அதிகாரத்தில் முழுமையாகக் கொண்டுவருவதற்கானது; முக்கியமாக இந்நாட்டின் கூட்டாட்சியின் எதிர்காலம் தொடர்பிலானது’ என்பதை இந்தக் கடிதம் துல்லியமாக வெளிப்படுத்துகிறது.
  • மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை ஏன் தமிழ்நாடு எதிர்க்கிறது, எந்தெந்த  வகையில் அது பாதிப்புகளை உணர்கிறது என்பதை அழகாகவே முதல்வரின் கடிதம் விவரித்திருக்கிறது.
  • “நுழைவுத் தேர்வு அடிப்படையிலான சேர்க்கை செயல்முறையானது, சமூகத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களைப் பாதித்துள்ளதா என்பதை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவைத் தமிழ்நாடு அரசு நியமித்தது. அந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையை இக்கடிதத்துடன் இணைத்து அனுப்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ள முதல்வர், ஏ.கே.ராஜன் குழுவின் அவதானிப்புகளையும், பரிந்துரைகளையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
  • ஏ.கே.ராஜன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில், ‘தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம் 2021’ என்ற சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டதைத் தெரிவித்திருக்கும் அவர், அதன் நகலையும் இந்தக் கடிதத்தோடு இணைத்திருக்கிறார்.
  • ஒன்றிய அரசின் இத்தகு தேர்வு முயற்சியே கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று சாடியிருக்கும் முதல்வர், “மாநில அரசுகளால் நிறுவப்பட்டு, நடத்தப்பட்டுவரும் மருத்துவ நிறுவனங்களில், சேர்க்கைமுறையை முடிவுசெய்யும் மாநில அரசுகளின் உரிமைகளைப்  பறிப்பதன் மூலம் அரசமைப்பு அதிகாரச் சமநிலை மீறப்படுகிறது என்பதே எங்கள் நிலைப்பாடு; மாநில அரசுகள் தங்கள் அரசமைப்பு உரிமையையும், நிலைப்பாட்டையும் நிலைநிறுத்த வேண்டும் என்று கருதுகிறோம்; நமது அரசமைப்பில் கூறப்பட்டுள்ளபடி, கல்வித் துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் உரிமையை மீட்டெடுக்க மாநில முதல்வர்கள் அனைவரும் ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
  • இந்த முக்கியமான பிரச்சினையில் அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்நோக்குகிறேன்” என்று தன் கடிதத்தை முடித்திருக்கிறார்.
  • கடிதத்தை அனுப்பியதோடு அல்லாமல், ஒவ்வொரு மாநில முதல்வரையும் திமுகவின் நாடாளுமன்றக் குழு சந்தித்து இது தொடர்பில் உரையாடும் என்று முதல்வர் அறிவித்திருப்பது நல்ல முடிவு.
  • வெறும் தேர்தல் நேரப் பேச்சாக இந்த விவகாரத்தைத் திமுக அணுகப்போவதில்லை என்பதையும், ஆத்மசுத்தியுடனான அக்கறையுடன் மாநிலத்தின் உரிமைப் போராட்டத்தைத் தன்னுடைய அரசு முன்னெடுக்கிறது என்பதையும் உறுதியான சமிக்ஞையாகவே இந்தக் கடிதமும், அறிவிப்பும்  வெளிப்படுத்துகின்றன.
  • தமிழக முதல்வர் இப்போது பாஜக ஆளாத மாநிலங்களின் முதல்வர்களுக்கு மட்டும் கடிதம் அனுப்பியிருக்கிறார்; பாஜக மாநில முதல்வர்களுக்கும் அவர் கடிதம் அனுப்ப வேண்டும். அவர்களோடும் உரையாடுவது அவசியம்.
  • பொது நுழைவுத் தேர்வு விவகாரம் தேசிய அளவிலான விவாதமாக வளர்த்தெடுக்கப்பட்டு, ஏனைய மாநிலங்களும் தமிழகத்தோடு கை கோக்காத வரை நம் மக்கள் என்ன பேசினாலும், அதற்குப் பெரிய பலன்கள் கிடைக்காது. இப்போதைய உத்தியை நீடித்து, ஒரு தொடர் உரையாடலாக முன்னெடுத்துச் செல்வது அந்த வகையில் நல்ல முயற்சி.

எல்லோருக்கும் புலப்படும்

  • சமீப காலமாகவே மாநில முதல்வர்கள் சக முதல்வர்களுக்குக் கடிதம் எழுதுவது ஒரு போக்காகிவருகிறது.
  • கேரள முதல்வர் பினராயி விஜயன், ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் ‘கோவிட் தடுப்பூசியை இந்திய அரசே கொள்முதல்செய்து, எல்லோருக்கும் விலையில்லாமல் வழங்க வேண்டும்’ என்பது தொடர்பிலும், வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அந்த மாநிலத்தின் தலைமைச் செயலர் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்தும் சக முதல்வர்களுக்குக் கடிதம் எழுதியது நினைவுக்குவருகிறது.
  • இந்தக் கடிதங்கள் எல்லாவற்றையுமே கோக்கக் கூடிய அம்சம் உண்டென்றால், அது கூட்டாட்சியுணர்வு.
  • மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வானது, இந்நாட்டின் கூட்டாட்சியுணர்வுக்கு வெடி வைக்கிறது என்பதை முதல்வரின் கடிதம் கூர்மைப்படுத்துகிறது.
  • இப்படி ஒரு கடிதம் எப்போதோ தமிழ்நாடு அரசால் எழுதப்பட்டிருக்க வேண்டும்; எல்லா மாநில முதல்வர்களோடும் இந்த விவகாரம் கலந்து பேசப்பட்டிருக்க வேண்டும்.
  • அப்படி நடந்திருந்தால், ஆண்டுகள் கணக்கில் தமிழ்நாடு மட்டும் தனக்குத்தானே இதைப் பேசிக்கொண்டிருக்கும் அவலம் நேர்ந்திருக்காது.
  • தமிழ்நாடு அரசு அடுத்தகட்டத்தில், அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் பயனளிக்கும் மாற்று சேர்க்கை நடைமுறைகள், அத்தகைய மாற்றுவழிகளைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அத்தகைய நியாயமான மற்றும் சமமான முறைகளைச் செயல்படுத்த எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் இவற்றையும் தேசிய அரங்கில் விளக்கி உரக்கப் பேச வேண்டும்.
  • வெற்றிகரமான ஒரு மாற்றுத் தீர்வு அப்படி முன்வைக்கப்படும்போது, எல்லோரையும் உள்ளடக்கும் தமிழ்நாட்டின் தொலைநோக்கு எல்லோருக்கும் புலப்படும்!

நன்றி: அருஞ்சொல் (06 - 10 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories