TNPSC Thervupettagam

யூடியூப் அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி எப்போது?

September 19 , 2024 8 days 31 0

யூடியூப் அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி எப்போது?

  • தனியார் யூடியூப் அலைவரிசைகளில் வெளியாகும் நிகழ்ச்​சிகள் அடிக்கடி சர்ச்​சைக்கு உள்ளாகின்றன. ஆபாசப் பேச்சு, அவதூறு போன்ற​வைதான் இதுபோன்ற சர்ச்​சைகளுக்கு வழிவகுக்​கின்றன.
  • சமீபத்திய ஒரு நேர்காணலில் தமிழ் சினிமா நடிகைகள் குறித்து ஆபாசமாகப் பேசியதற்காக மருத்​துவர் காந்த​ராஜ், யூடியூப் ஊடகர் முக்தார் ஆகியோர் மீது பொதுவெளியில் ஆபாசமாகப் பேசுதல், பெண்களின் கண்ணி​யத்​துக்கு இழுக்கு விளைவித்தல் உள்ளிட்ட சில குற்றங்​களைத் தண்டிப்​ப​தற்கான சட்டப் பிரிவு​களின் கீழ் வழக்குகள் பதிவுசெய்​யப்​பட்​டுள்ளன. நடிகையும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பாலியல் அத்து​மீறல்கள் தொடர்பான உள்ளகப் புகார் குழுவின் தலைவருமான ரோஹிணி, சென்னை நகரக் காவல் ஆணையர் ஏ.அருணிடம் அளித்த புகாரின் அடிப்​படையில் இந்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்ளது.

நச்சுக் கருத்​தாளர்கள்:

  • காந்த​ராஜ், முக்தார் இருவரும் ஆபாசமாகப் பேசுவது இது முதல் முறையல்ல. பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களை நேர்காணல் எடுத்​துள்ள முக்தார், பெரும்​பாலும் மூத்த ஆண் பிரபலங்​களிடம் அவர்களுடைய கடந்த காலக் காதல்கள், உறவுகள் தொடர்பாக இரட்டை அர்த்தம் தொனிக்கும் வகையிலான கேள்வி​களைக் கேட்பார். காந்தராஜ் இதற்கு முன்பு பல பேட்டிகளில் அதிர்ச்சி அளிக்​கக்​கூடிய நச்சுத்​தன்மை வாய்ந்த கருத்து​களைப் பேசியிருக்கிறார்.
  • சில ஆண்டு​களுக்கு முன்பு யூடியூப் அலைவரிசை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஆண்களுக்கு இடையிலான தன்பால் உறவினால் எய்ட்ஸ் நோய் பரவுகிறது என்று அறிவியலுக்குப் புறம்பான கருத்தை அவர் உதிர்த்​தார். இந்த நேர்காணல் பரபரப்​பாகப் பேசப்​பட்டதை அடுத்து, தொடர்ந்து பல யூடியூப் அலைவரிசைகளில் அவர் நேர்காணல் அளித்து​வரு​கிறார். பெரும்​பாலும் சினிமா, அரசியல் பிரபலங்கள் குறித்து அதிர்ச்​சிகரமான, ஆதாரமற்ற, நச்சுத்​தன்மை வாய்ந்த கருத்து​களையும் வெளிப்​படுத்து​கிறார்.
  • ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள சினிமா துறையிலும் அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்​தி​யிருக்கும் சூழலில், தமிழ் சினிமாவில் நிகழும் பாலியல் அத்து​மீறல் குறித்த விவாதம் அதிகரித்​துள்ளது. நடிகை ராதிகா உள்ளிட்ட சிலர் இது குறித்துத் துணிச்சலான கருத்து​களைப் பதிவுசெய்​துள்ளனர். தமிழ் சினிமாவைப் பெண்களுக்குப் பாதுகாப்​பானதாக மாற்று​வதற்கான பணிகளில் ரோஹிணி உள்ளிட்ட நடிகைகள் முனைப்புடன் ஈடுபட்டு​வரு​கின்​றனர். அதேநேரம், ஹேமா கமிட்டி விவகாரத்தை சில யூடியூப் ஊடகங்கள் ஆபாசக் குப்பைகளை அதிகரிப்​ப​தற்கான வாய்ப்​பாகவும் பயன்படுத்து​கின்றன.
  • தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடிவரும் பெண்களிடம் பாலியல் உறவைக் கோரும் ஆண் தயாரிப்​பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், முகவர்கள் போன்றோரை உரிய ஆதாரத்​துடன் அம்பலப்​படுத்துவதாக இந்த உரையாடல்கள் நிகழ்ந்தால் வரவேற்​கலாம். ஆனால், வாய்ப்பு​களைப் பெறுவதற்காக நடிகைகள் பாலியல் சமரசம் செய்து​கொள்​கிறார்கள் என்கிற ரீ​தியிலான பேச்சுக்களே அதிகமாக இருப்​பதுதான் பிரச்​சினை. இவ்வாறு பேசிய​தால்தான் காந்த​ராஜ், முக்தார் மீது இப்போது வழக்குப் பதிவு செய்யப்​பட்​டுள்ளது.

அம்பலப்​படுத்தும் பாவனை:

  • பல தமிழ் யூடியூப் அலைவரிசைகள், அரசியல் - காட்சி ஊடகப் பிரபலங்கள், குறிப்பாக சினிமா நடிக-நடிகையர் தொடர்பான அந்தரங்க விஷயங்கள் பற்றி விவாதிக்கும் நிகழ்ச்​சிகளை நம்பியே இயங்கிவரு​கின்றன. இவை யூடியூப் அலைவரிசைகளில் பதிவேற்​றப்​படு​வதோடு ஃபேஸ்​புக், இன்ஸ்​டகிராம் ரீல்களிலும் யூடியூப் ஷாட்களிலும் அதிகமாகப் பகிரப்​படு​கின்றன.
  • ஒரு காலத்தில் சில அச்சுப் பத்திரி​கை​களில் நடிகர் நடிகையரைப் பாலியல்​ரீ​தி​யாகத் தொடர்​புபடுத்திக் கிசுகிசுக்கள் வெளியிடப்​பட்டன. ஆனால், அவற்றில் சம்பந்​தப்பட்ட நடிகர் நடிகையரின் பெயர்கள் நேரடி​யாகக் குறிப்​பிடப்​படாது. ஆனால், இன்றைய யூடியூப் அலைவரிசைகளில் பேசுவோர் பிரபலங்​களின் பெயர்களை வெளிப்​படை​யாகச் சொல்லி பாலியல்​ரீ​தியிலான அவதூறுகளை முன்வைக்​கின்​றனர்.
  • தனியார் தொலைக்​காட்சி நிகழ்ச்சித் தொகுப்​பாளினி ஒருவர் பிரபல ஊடக நிறுவனம் ஒன்றில் தனது பணியைத் தக்கவைத்​துக்​கொள்​வதற்காக பாலியல் சமரசம் செய்துகொண்டதாக ஒருவர் பேசும் காணொளி சமூக ஊடகங்​களில் அண்மையில் பகிரப்​பட்டு​வரு​கிறது. அந்த நபர் அந்தத் தொகுப்​பாளினியின் பெயரை வெளிப்​படை​யாகச் சொல்கிறார். ஊடக நிறுவனத்தின் பெயரைப் பூடகமாகக் குறிப்​பிடு​கிறார். ஆண்கள் யாருடைய பெயரையும் குறிப்​பிட​வில்லை. இவரது குற்றம் காந்த​ராஜ், முக்தார் செய்ததற்கு எந்த விதத்​திலும் குறைந்​ததல்ல.
  • இத்தகைய ஊடகங்கள் திரைத் துறையிலும் பிற காட்சி ஊடகத் துறைகளிலும் நிகழும் பாலியல் அத்து​மீறல்களை அம்பலப்​படுத்தும் பாவனையில் பெண் பிரபலங்கள் மீதான பாலியல் அவதூறுகளை அள்ளித் தெளித்துப் பார்வை​யாளர்​களின் மலினமான உணர்வு​களுக்குத் தீனிபோடு​கின்றன. அத்தோடு, சமூகத்தில் நிலைபெற்று​விட்ட பெண்களுக்கு மட்டுமேயான ஆணாதிக்க ஒழுக்க மதிப்​பீடுகளை வலியுறுத்து​கின்றன.
  • காந்த​ராஜ்-​முக்தார் பேசியது பெரிய அளவில் சர்ச்​சை​யாகி​விட்​டதால் இவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவுசெய்​யப்​பட்​டுள்ளது. ஆனால், இதேபோல் திரைத் துறையினர் பற்றி ஆபாசமாகப் பேசும் பலர் யூடியூப் பிரபலங்களாக உலாவந்​து​கொண்​டிருக்​கின்​றனர். காந்த​ராஜ், முக்தார் மீது எடுக்​கப்​பட்​டுள்ள நடவடிக்கை இத்தகையோ​ருக்கான பாடமாக அமைந்தால் நல்லது​தான்.

சுயதணிக்கை:

  • அரசு நடவடிக்கைகளைத் தாண்டி, ஊடக நிறுவனங்​களும் ஊடகர்​களும் பொறுப்பு​ணர்​வுடன் நடந்து​கொள்வது அவசியம். பயில்வான் ரங்கநாதன் ஒருமுறை திரைத் துறைப் பிரபலங்கள் குறித்துத் தான் பேசுபவை அனைத்தும் உண்மைகளே என்பதால், தான் செய்வதில் எந்தத் தவறும் இல்லை என்று குறிப்​பிட்​டார். உண்மை​யாகவே இருந்​தாலும் ஒருவரின் அந்தரங்க வாழ்க்கை குறித்துப் பொதுவெளியில் பேசுவது முற்றிலும் அநாகரி​க​மானது. இதை யூடியூப் ஊடகர்கள் மட்டுமல்​லாமல், ஊடகப் பயனாளர்​களும் உணர வேண்டும்.
  • பிறரின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான தகவல்களை ஒளிபரப்புவதை அறவே தவிர்க்கும் வகையில் யூடியூப் ஊடகங்கள் சுயபரிசீலனையும் சுயதணிக்கையும் செய்து​கொள்ள வேண்டும். இன்று பதின்​பரு​வத்தை அடையாத சிறார்​களும் யூடியூப் அலைவரிசைகளையும் சமூக ஊடகங்​களையும் கணிசமாகப் பயன்படுத்து​கிறார்கள்.
  • இத்தகைய ஆபாசக் கருத்துகள் அவர்களைச் சென்று சேர்வது நாளைய சமூகத்தை எந்த அளவு பாதிக்கும் என்பதை யோசித்துப் பார்த்​தாவது ஊடக நிறுவனங்​களும் ஊடகர்​களும் ஆபாச, அவதூறுப் பேச்சுக்​களி​லிருந்து வெளியே வர வேண்டும். அப்படி தார்மிக நியாயம் இல்லாமல் செயல்​படு​பவர்கள் மீது சட்டப்​படியான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்​கப்பட வேண்டும்​!

நன்றி: இந்து தமிழ் திசை (19 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories