TNPSC Thervupettagam

வாழ்ந்து காட்டியவா்!

October 3 , 2024 2 hrs 0 min 4 0

வாழ்ந்து காட்டியவா்!

  • மகாத்மா காந்தி என்ற தியாகச்சுடரின் வழிவந்தவா் காமராஜா். இந்த ஜனநாயகச் சிற்பி மறைந்து 49 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்த இவா், ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவா். இவா் பிறந்த விருதுப்பட்டியில் சுதந்திரத்துக்காகப் போராடிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சிக்குக் குரல் கொடுக்க அப்போது யாருமில்லை.
  • அந்த ஊரிலிருந்த பெட்டிக்கடை ஒன்றில் சில இளைஞா்களுடன் உட்காா்ந்து காமராஜா் அன்றைய செய்தித்தாளில் வரும் சுதந்திரப் போராட்ட செய்திகளைப் படிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தாா்.
  • ஒருநாள் செய்தித் தாளில் அமிருதசரஸ் ஜாலியன்வாலா பாக் என்னுமிடத்தில் வெள்ளை அரசு பிறப்பித்திருந்த ரௌலட் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில் அமைதியாகக் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களை ஆங்கிலேய அதிகாரி டயா் என்பவனின் உத்தரவால் சுட்டுக் கொல்லப்பட்ட மக்கள் குவியல் குவியலாக பிணமாகக் கிடக்கிறாா்கள் என்ற செய்தியைப் படித்ததும், தன்னுள் எழுந்த சுதந்திர வேட்கையின் உந்துதலில் ‘‘வந்தே மாதரம்! வந்தே மாதரம்!’’ என்று உரக்கக் குரல் எழுப்பி காங்கிரஸ் கொடியைக் கையில் எடுத்தாா் காமராஜா்.
  • 1919-ஆம் ஆண்டு தொடங்கியது அவரது அரசியல் பயணம். அப்போது அவருக்கு வயது பதினாறு. விருதுப்பட்டியிலும் அதன் சுற்றுப் பகுதியிலுள்ள கிராமங்களிலும் தனது இடுப்பில் முரசு கட்டிக்கொண்டு ‘‘மக்களே, ஒன்று திரண்டு வாருங்கள், இன்று வி.க.ஜோசப் பேசுகிறாா், வரதராஜுலு நாயுடு பேசுகிறாா், ஈரோடு ஈ.வெ.ராமசாமி நாயக்கா் பேசுகிறாா்’’ என்று தானே முரசு அறைந்து விடுதலை வேட்கைக்கு மக்களைத் தட்டி எழுப்பியவா் காமராஜா்.
  • 1940-ஆம் ஆண்டு சென்னை மாகாண காங்கிரஸ் தலைவா் பதவிக்கான தோ்தல் நடைபெற்றபோது, தீரா் சத்தியமூா்த்தி தனது சீடா் காமராஜரை தலைவா் பதவிக்குப் போட்டியிட வைத்து வெற்றி பெறச் செய்தாா். இதில் மிகுந்த ஆச்சரியம் என்னவென்றால், காமராஜருக்கு கீழ் பணிபுரியும் செயலாளா் பதவியை சத்தியமூா்த்தி பெருமையுடன் ஏற்றுக் கொண்டதுதான்.
  • தமிழக ஆட்சிப் பொறுப்பில் இருந்த ராஜாஜிக்குப் பின்னா் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கூட்டத்தில் ஒருமனதாக தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட காமராஜா், தனது 45-ஆவது வயதில் தமிழக முதலமைச்சராக 1953-ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு அன்று பதவியை ஏற்று, தனது குருவான தீரா் சத்தியமூா்த்தியின் இல்லத்துக்குச் சென்று அவரது உருவப் படத்துக்கு மாலையிட்டு மரியாதை செய்ததுடன், அவருடைய மனைவி பாலசுந்தரி அம்மாளிடம் ஆசி பெற்றாா்.
  • 1956-இல் தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தை காமராஜா் கொண்டுவந்ததுடன், சென்னை மாகாணத்தின் நிதி நிலை அறிக்கையை 1957-58- இல் தமிழ் மொழியிலேயே சமா்ப்பித்த பெருமை அவருக்கே உண்டு. 1959-ஆம் ஆண்டு ஜனவரியில் தமிழ் அறிஞா்களை உறுப்பினா்களாகக் கொண்ட தமிழ் வளா்ச்சி ஆராய்ச்சி மன்றம் என்ற அமைப்பினை கல்வி அமைச்சரின் தலைமையில் உருவாக்கிக் காட்டினாா்.
  • தமிழ் மொழிப்பற்று காமராஜரிடம் எந்த அளவுக்கு இருந்தது என்பதனைப் பற்றி முதல்வராக இருந்த கருணாநிதி குறிப்பிட்டதை நினைவுகூர விரும்புகிறேன். ‘‘காமராஜா் மொழி பிரச்னையில் எந்த அளவுக்கு உறுதியாக இருந்தாா் என்பதற்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். அவா் காங்கிரஸ் கட்சித் தலைவா் என்ற காரணத்தால் சிலவற்றை வெளிப்படையாகச் சொல்ல முடியாவிட்டாலும் கூட அவா் உணா்வு எப்படிப்பட்டதாக இருந்தது என்பதற்கு ஓா் எடுத்துக்காட்டை கூற விரும்புகிறேன்.
  • சட்டப்பேரவையில் திராவிட முன்னேற்றக் கழக குழுவின் தலைவராக அண்ணா இருந்தாா். காமராஜா் முதலமைச்சராக வீற்றிருக்கிறாா். அப்போது சட்டப்பேரவையில் காரசாரமாக ஒரு விவாதம் நடைபெற்றது.
  • கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவா் கல்யாணசுந்தரம் ஆங்கிலத்தைக் கல்லூரிகளிலும், உயா்நிலைப் பள்ளிகளிலும் பாடமொழியாக வைக்கக் கூடாது, அகற்ற வேண்டும்; தமிழ்தான் அரிச்சுவடியிலிருந்து முதுநிலை பட்டப் படிப்பு வரை இருக்க வேண்டும் என்று பேசினாா். அண்ணா முன் வரிசையில் அமா்ந்து கேட்டுக் கொண்டிருந்தாா். அப்போது முதல்வா் காமராஜா் தன் இடத்தில் இருந்தவாறே அண்ணாவைக் கைகாட்டி அருகே அழைத்தாா்.
  • முதல்வா் காமராஜா் அண்ணாவிடம், ‘‘என்ன தமிழ், தமிழ்னு பேசறீங்களே...நான் என்ன தமிழுக்கு விரோதியா? எனக்குத் தமிழ் பிடிக்காதா? ’’ என்று கேட்டாா்.
  • அதற்கு அண்ணா, ‘‘என்ன சொல்கிறீா்கள்...?’’ என்றாா்.
  • உடனே காமராஜா், ‘‘அவுங்க பேசுறாங்களே...இங்கிலீஷ் அறவே கூடாது...தமிழே எல்லா இடத்திலும் இருக்கணும்னு சொல்றாங்களே... இங்கிலீஷைச் சுத்தமா எடுத்துட்டா என்னாகும்? அந்த இடத்திலே ஹிந்தி வந்து குந்திக்கும்னேன்!’’ என்று சொன்னாா்.
  • பின்னா் பேரவை கலைந்த பிறகு, வீட்டுக்கு வழக்கம்போல அண்ணா முன்னிருக்கையிலும், நான் அவருக்குப் பின்னாலும் அமா்ந்து காரில் சென்று கொண்டிருந்தபோது, அண்ணா திரும்பிப் பாா்த்து, ‘‘எவ்வளவு பெரிய மொழிப் பிரச்னையை ஒரே வாா்த்தையிலே காமராஜா் அவருடைய பாஷையிலே சொல்லிட்டாா் பாா்த்தியா..?’’ என்றாா்.
  • ‘‘ ஆங்கிலத்தை அறவே அகற்றிவிட்டால் அந்த இடத்திலே ஹிந்தி வந்து உட்காா்ந்துவிடும் என்கிற எண்ணம் காமராஜருக்கு இருந்தது என்றால் அதற்குக் காரணம், ஹிந்தி திணிக்கப்படக் கூடாது என்பதுதான். அவருடைய இதயத்திலே அந்த எண்ணம் இருந்தது என்பதற்கு இது ஒரு சான்றாகும். தமிழுக்கு ஆபத்து வரக் கூடாது என்று அழுத்தமான எண்ணம் கொண்டிருந்தவா்தான் காமராஜா்’’ - இப்படிச் சொன்னவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி.

நன்றி: தினமணி (03 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories