TNPSC Thervupettagam

விடைபெற்ற விஜயகாந்த்

December 29 , 2023 203 days 155 0
  • தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவு: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வியாழக்கிழமை காலை காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவு தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “நுரையீரல் அழற்சி காரணமாக அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்துக்கு மருத்துவப் பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் காலமானார்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அவருக்கு கரோனா தொற்று பாதிப்பும் உறுதி செய்யப்பட்டிருந்தது.

விஜயகாந்த் எப்படி ‘கேப்டன்’ ஆனார்

  • தமிழ் சினிமாவில் பொதுவாக 100வது படம் வெற்றிப்படமாக அமைவது என்பது எந்த நடிகருக்கும் இதுவரை எட்டாக் கனி. இதற்கு ஒரே விதி விலக்காக இருந்தது விஜயகாந்த் மட்டுமே. 1991ல் விஜயகாந்த்தின் 100-வது படமான கேப்டன் பிரபாகரன் ரிலீஸ் ஆகி மகத்தான வெற்றி பெற்றது.
  • 1999-ம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயகாந்த், நட்சத்திர கலைவிழா உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி அதுவரை இருந்த நடிகர் சங்கத்தின் கடனை அடைத்தார். நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காக ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்து, பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார்.
  • 2002-ம் ஆண்டு காவிரி பிரச்சினை உச்சத்தில் இருந்தபோது, அனைத்து நட்சத்திரங்களையும் ஒன்றிணைத்து மாபெரும் போராட்டத்தை நெய்வேலியில் நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்தார். இப்படி தலைமைப் பண்பிலும் வெற்றிக்கொடி நாட்டினார். 'கேப்டன்' என்கிற பெயர் முதலில் அவரது சினிமா ஆளுமைக்காக தொடங்கி பின்னர் தலைமைப் பண்புக்காகவும் அழைக்கப்பட்டு பின்னர் பொது உரையாடலில் கேப்டன் என்பது விஜயகாந்தின் அடையாளமாகவே மாறிபோனது நினைவு கூரத்தக்கது.

சினிமா சாதனைகளும் அரசியல் பயணமும்

  • 153-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜயகாந்த், 1984-ல் மட்டும் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடிக்கும் அளவுக்கு பிஸியான நடிகராக வலம் வந்தார். ‘செந்தூரப்பூவேபடத்திற்காக தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற விஜயகாந்த், தமிழக அரசின் எம்.ஜி.ஆர்.விருது, கலைமாமணி விருது உட்பட பல விருதுகளை பெற்றிருக்கிறார்.
  • 2000 ஆம் ஆண்டு தனது ரசிகர் மன்றதுக்கென தனிக் கொடியை அறிமுகப்படுத்தினார். 2001ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தை சேர்ந்த பலரும் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதுவே அவரது அரசியல் வருகைக்கு அஸ்திவாரமாக அமைந்தது.
  • 2005ஆம் ஆண்டு மதுரையில் மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்தி தனது தேமுதிக கட்சியை அதிகாரபூர்வமாக தொடங்கினார். கட்சி ஆரம்பித்து ஒரே ஆண்டில் சட்டமன்ற தேர்தலில் 232 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டவர், விருதாச்சலம் தொகுதியில் அபார வெற்றிபெற்றார். அதுவரை யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்டு வந்த விஜயகாந்த், 2011ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்து 29 தொகுதிகளில் வென்று எதிர்கட்சி தலைவர் நாற்காலியில் அமர்ந்தார்.
  • விஜயகாந்துக்கு அரசியலில் ஆர்வம் இருந்த அளவுக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை. மிகவும் சுறுசுறுப்பாக, மேடைப்பேச்சுகளின்போது அனல் பறக்கவிட்ட விஜயகாந்த்தின் உடல்நிலையில் மெல்ல மெல்ல மாற்றங்கள் தெரிய தொடங்கின. எதிர்கட்சிகளை நோக்கி சிங்கம் போல மேடையில் கர்ஜித்த அவரது தடுமாற்றத்தைக் கண்டு தொண்டர்களும், ரசிகர்களும் கலங்கிப் போனார்கள். 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து சந்தித்த தேமுதிக, போட்டியிட்ட 104 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று நான்கு தொகுதியில் மட்டுமே போட்டியிட்ட தேமுதிக அனைத்திலும் படுதோல்வியடைந்தது.
  • சினிமாவில் தனக்கென ஒரு பாதையையும் ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி, அரசியலில் தனி முத்திரை பதித்த விஜயகாந்த்தின் மறைவு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்துக்குமே பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.

கண்ணீர் மழையில் கோயம்பேடு

  • சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், தேமுதிக கட்சியினர், பொதுமக்கள் பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தின் வாசலில் திரண்ட கட்சியினர், பொதுமக்கள் என பலரும் கண்ணீர் மல்க விஜயகாந்தின் உடலை காணக் கூடினர். இதனால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேற முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
  • விஜயகாந்தின் உடல் வெள்ளிக்கிழமை மாலை வரை பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்படும் என்றும், மாலை 4.30 மணியளவில் தேமுதிக அலுவகத்தில் விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
  • விஜயகாந்த் இறுதிப் பயணத்துக்கு முழு அரசு மரியாதை: முதல்வர்: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் குறிப்பில், “நல்ல உள்ளத்திற்கு சொந்தக்காரரான நண்பர் விஜயகாந்த் திரையுலகிலும் பொதுவாழ்விலும் தனது கடும் உழைப்பினால் வெற்றிகரமான முத்திரைகளைப் பதித்த சாதனையாளர்.
  • நடிகராக, நடிகர் சங்கத் தலைவராக, அரசியல் கட்சித் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஏற்றுக்கொண்ட பணி எதுவாக இருந்தாலும் அதில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன்னைச் சார்ந்த அனைவருக்கும் உறுதுணையாக இருந்தவர். குடும்ப நண்பராக என்னிடம் பழகியவர். கலைஞர் கருணாநிதியின் மீது என்றென்றும் தனிப்பாசம் கொண்டவர். கேப்டன் எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அன்பு நண்பர் விஜயகாந்த்தின் மறைவு தமிழ்நாட்டிற்கும் திரையுலகிற்கும் பேரிழப்பாகும். விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
  • தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரின் இல்லத்துக்கு நேரில் சென்ற விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் ..வேலு, மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, டி.ஆர்.பாலு ஆகியோர் சென்றனர்.

நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியவர்

  • பிரதமர் மோடி: விஜயகாந்த் மறைவு குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், "தமிழ் சினிமாவின் ஆளுமைகளின் ஒருவரான விஜயகாந்த் தனது சிறந்த நடிப்பின் மூலம் கோடிக்கணக்கான இதயங்களை கவர்ந்துள்ளார். அரசியல் தலைவராக தமிழக அரசியலில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
  • இதனிடையே, “கேப்டன் என்று அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்த் தனது திரை மற்றும் ஆஃப்ஸ்கிரீன் பாத்திரங்கள் மூலம் மக்களிடையே தேசபக்தியை தூண்டினார்என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

வேதனை அளிக்கிறது

  •  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: "சிறந்த நடிகரும், அர்ப்பணிப்புள்ள தலைவரும், சிறந்த மனிதநேயவாதியுமான விஜயகாந்த்தின் மறைவு வேதனை அளிக்கிறது. சினிமா, அரசியல், சமூக சேவை ஆகியவற்றில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும்" என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
  • தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்தைபசிப்பிணி தீர்த்த பொன்மன வள்ளல்என்று அஞ்சலி செலுத்துவோம்என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

தவிர்க்க முடியாத இடத்தை வென்றெடுத்தவர்

  • தலைவர்கள் புகழஞ்சலி: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பொதுவாழ்விலும், கலைத்துறையிலும் செயற்கரிய பல செயல்கள் செய்துள்ள, மக்களால் அன்போடு கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
  • நான்மாட கூடல் நகரில் வளர்ந்து தனது சொந்த முயற்சியாலும் உழைப்பாலும் திரை உலகில் உச்சத்தைத் தொட்ட உன்னத கலைஞர் அவர். ஏழை எளிய மக்களுக்கு உதவும் கொடை உள்ளம் படைத்தவர். தமிழ் மொழி, இன உணர்வுடன் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு என்றும் ஆதரவு வழங்கினார்" என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறிப்பிட்டுள்ளார்.
  • "தமிழ்த் திரையுலகிலும், அரசியலிலும் தமக்கென தவிர்க்க முடியாத இடத்தை வென்றெடுத்தவர் விஜயகாந்த். அரசியலைக் கடந்து அவர் மீது எனக்கு தனிப்பட்ட அன்பு உண்டு; அவருக்கும் என் மீது மரியாதை உண்டு. மிகுந்த இரக்க குணமும், மனிதநேயமும் கொண்டவர். திரைத் தொழிலாளர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என அனைவர் மீதும் எல்லையில்லாத அன்பும், அக்கறையும் காட்டியவர்" என்று பாமக நிறுவனர் ராமாதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
  • தனிப்பட்ட முறையில் பழகுவதற்கு இனிய பண்பாளர். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். சகோதர பாசத்துடன் உபசரித்து உற்சாகப்படுத்துபவர்என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.
  • எளிய மக்களுக்கு உதவும் நல்ல உள்ளம்” - தலைவர்கள் புகழஞ்சலி: "விஜயகாந்த் தனது உழைப்பால் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை ஏழை, எளிய மக்களுக்கு உதவும் நல்ல உள்ளம் படைத்தவர். நடிகர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டவர்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
  • அரசியலையும், திரை வாழ்வையும் கடந்து விஜயகாந்த் மிகவும் அற்புதமான மனிதர். அனைவரிடமும் அன்பு காட்டியவர். அவர் உயிரிழந்து விட்டார் என்பதை நம்ப முடியவில்லை; தாங்க முடியவில்லைஎன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
  • சாமானியனாக சினிமாவுக்குள் நுழைந்து தன் புரட்சிகரமான கருத்துக்கள் மூலம் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்ததோடு, தமிழக அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்தவர்என்று என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
  • தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர். எளியோருக்கு நீளும் உதவிக்கரம் கொண்டிருந்தவர். எதற்கும் அஞ்சாத துணிச்சல் அவரது அடையாளமாக இருந்ததுஎன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

மிஸ் யூ கேப்டன்

  • திரையுலக பிரபலங்கள் புகழஞ்சலி: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். "எனது நண்பர் கேப்டன் விஜயகாந்த்தின் மறைவு மிகுந்த துயரமும், வேதனையும் அளிக்கின்றது. அவரின் மறைவு எங்கள் தமிழ் திரைப்படத் துறைக்கு பேரிழப்பாகும் என்று இயக்குனர் பாரதி ராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.
  • மிகவும் அன்பான மற்றும் அக்கறையுள்ள மனிதர்களில் ஒருவரின் காலமானதைக் கேட்டு வருத்தமடைந்தேன். மிஸ் யூ கேப்டன் நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார். கேப்டன் உங்கள் இரக்க குணத்தை எப்போதும் நினைவு கூர்வேன் என்று நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.
  • அலை ஓசை இருக்கும் வரை உங்கள் நினைவோசை இருக்கும் கேப்டன். மிஸ் யூ கேப்டன் விஜயகாந்த் என்று இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

நன்றி: இந்து தமிழ் திசை (29 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories