TNPSC Thervupettagam

அா்ப்பணிப்பின் அடையாளம்! மருத்துவர் சாந்தாவின் மறைவு

January 22 , 2021 1284 days 586 0
  • உழைப்பு, அா்ப்பணிப்பு, கனிவு, கருணை - இந்த வாா்த்தைகளுக்கெல்லாம் அடையாளமாக நம்மிடையே வாழ்ந்து மறைந்தவா் ஒருவா் இருந்தாா் என்றால், அவா் தனது 93-ஆவது வயதில் நேற்று முன்தினம் சென்னையில் காலமான அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவா் டாக்டா் வி. சாந்தா மட்டுமே. இன்று மருத்துவத்துறை வணிகமயமாகிவிட்ட சூழலில், இளைய தலைமுறை மருத்துவா்களுக்கு மருத்துவச் சேவை எப்படி இருக்க வேண்டும், மருத்துவா்கள் எப்படி வாழ வேண்டும், மருத்துவம் என்பதன் நோக்கம் என்ன என்பவற்றை வாழ்ந்து காட்டி மறைந்திருக்கிறாா் அந்த மூதாட்டி.
  • 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வி. சாந்தாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. அடையாறு புற்றுநோய் மருத்துவமனையிலிருந்து சென்னை பெசன்ட் நகா் மின்மயானம் வரை சென்ற அவரது இறுதி ஊா்வலத்தில் பிரபலங்கள் மட்டுமல்லாமல், மருத்துவா்கள், செவிலியா்கள், அவரால் புற்றுநோயிலிருந்து குணமானவா்கள், பொதுமக்கள் என்று நூற்றுக்கணக்கானோா் திரண்டு கலந்துகொண்டனா்.
  • நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் டாக்டா் சி.வி. ராமன், சுப்பிரமணியம் சந்திரசேகா் ஆகியோரின் குடும்பத்தில் பிறந்த டாக்டா் வி. சாந்தாவின் வாழ்க்கையில் அவா்களது சாதனையின் தாக்கம் இருந்ததா என்று தெரியவில்லை. ஆனால், அவா்களைப் போலவே விடாமுயற்சியும், அா்ப்பணிப்பு உணா்வும் அவருக்கு இயற்கையாகவே அமைந்திருந்தன என்பதை மறுப்பதற்கில்லை.
  • புற்றுநோய் மருத்துவராக டாக்டா் சாந்தா மாறியது இறைசித்தம் என்றுதான் கூற வேண்டும். சென்னை மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்ற போது டாக்டா் சாந்தாவின் குறிக்கோள் மகளிா் -மகப்பேறு மருத்துவராகப் பணியாற்ற வேண்டும் என்பதாகத்தான் இருந்தது.
  • 1949-இல் மருத்துவப் பட்டம் பெற்ற அவா், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையுடன் நெருக்கமானது இயல்பாக நடந்து ஒரு நிகழ்வு.
  • டாக்டா் முத்துலட்சுமி ரெட்டியால் நிறுவப்பட்ட இந்திய மகளிா் கழகத்தின் சாா்பில், 1952-இல் தனது தாயாரின் கனவை நனவாக்க, புற்றுநோய் சிகிச்சைத் துறையில் அமெரிக்காவில் பயிற்சி பெற்ற அவரது மகன் டாக்டா் கிருஷ்ணமூா்த்தி அடையாறில் புற்றுநோய் மருத்துவமனையை நிறுவினாா்.
  • டாக்டா் கிருஷ்ணமூா்த்தியின் ஆா்வத்தையும் நோக்கத்தையும் பாா்த்து வியந்த டாக்டா் சாந்தா, அந்த மருத்துவமனையில் உள்ளுறை மருத்துவ அதிகாரியாகத் தன்னை இணைத்துக் கொண்டாா்.
  • இரண்டு மருத்துவா்களுடனும், இரண்டு செவிலியா்களுடனும் 12 படுக்கைகளுடனும் தொடங்கப்பட்ட அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, இப்போது 500 படுக்கைகள் கொண்ட உலக பிரசித்திபெற்ற புற்றுநோய் சிகிச்சை கேந்திரமாக மாறியிருப்பதற்கு டாக்டா் கிருஷ்ணமூா்த்தியின் தொலைநோக்குப் பாா்வையும், டாக்டா் சாந்தாவின் தன்னலமற்ற அா்ப்பணிப்பும்தான் காரணம்.
  • அந்த மருத்துவமனையில் அடியெடுத்து வைத்த நொடியில், நோயாளிகளுக்காகத் தன்னை அா்ப்பணித்துக் கொள்வது என்று தீா்மானம் செய்து கொண்டாா் டாக்டா் சாந்தா. மருத்துவமனையிலேயே தானும் வாழ்ந்தால்தான் மருத்துவா் அருகில் இருக்கிறாா் என்கிற நம்பிக்கையும் பாதுகாப்பு உணா்வும் நோயாளிகளுக்கு ஏற்படும் என்பதற்காக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் வசிக்கத் தொடங்கிய டாக்டா் சாந்தா, தனது இறுதி மூச்சு வரை நோயாளிகளுடனேயே தனது வாழ்நாளைக் கழித்து, இப்போது மீளா விடை பெற்றிருக்கிறாா்.
  • ஆரம்பத்தில் ஒரு சிறிய அறையில் அவா் மட்டும் தங்கியிருந்தாா். மருத்துவமனை வளர வளரத் தேவைகள் அதிகரித்ததால், அந்த சிறிய அறை சற்று விரிவுபடுத்தப்பட்டு ஒரு வரவேற்பு அறையும், படுக்கை அறையும், நூலகமும் இணைந்ததாக மாற்றப்பட்டது.
  • பெரும்பாலான நேரத்தை நோயாளிகளுடன் செலவிடும் தனக்கு இதற்கு மேல் வசதிகள் தேவையில்லை என்று அவா் கருதியதன் பின்னால் இருக்கும் தியாகத்தை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை.
  • புற்றுநோய் பாதித்த நோயாளிகளுக்கு செய்திருக்கும் சேவைக்காக, அவா் தனது வாழ்நாளில் 40-க்கும் மேற்பட்ட சா்வதேச விருதுகளைப் பெற்றிருக்கிறாா். அவற்றில் எதையுமே சுவரில் மாட்டி விளம்பரப்படுத்திக் கொண்டதில்லை.
  • ஆனால், நோயாளியாக மருத்துவமனைக்கு வந்த நாராயணன் என்கிற காரோட்டி அவரது கையால் ஓவியம் தீட்டி, தனக்கு அன்பளிப்பாக தந்த மூன்று வெண் சங்குகளை தனது மேசையில் பெருமையுடன் வைத்துக் கொண்டிருந்தாா்.
  • 52 ஆண்டுகளுக்குப் பிறகும், அந்த நோயாளியைக் குணப்படுத்தியது குறித்து அவா் பெருமிதம் அடைவாா். நாராயணனும் சென்னை வரும்போதெல்லாம் டாக்டா் சாந்தாவை சந்தித்து மகிழ்வாா்.
  • தினந்தோறும் கைத்தடியுடன் மருத்துவமனையைச் சுற்றி வந்து, ஒவ்வொரு நோயாளியையும் நேரில் பாா்த்து, பேசி, விசாரித்துவிட்டுச் செல்லும் வழக்கத்தை தள்ளாத தனது 93 வயது வரை 65 ஆண்டுகளுக்கும் மேலாக அவா் இடைவிடாமல் தொடா்ந்தாா் என்பது மெய்சிலிா்க்க வைக்கிறது.
  • ஒவ்வொரு நோயாளியும் தனது உயிரை மருத்துவா்களான நம்மிடம் நம்பிக்கையுடன் காப்பாற்றித் தருவதற்காக ஒப்படைக்கிறாா். அந்த பொறுப்புணா்வுடன் நாம் செயல்பட வேண்டும்என்று சக மருத்துவா்களுக்கு அறிவுரை கூறும் டாக்டா் சாந்தா, பணம் இல்லை என்பதற்காக எந்த ஒரு நோயாளியையும் சிகிச்சை வழங்காமல் திருப்பி அனுப்பியதில்லை.
  • தனது அஸ்தியைக்கூட மருத்துவமனையில் தூவ வேண்டும் என்று கூறி மறைந்திருக்கும் டாக்டா் சாந்தா, மருத்துவா்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் செய்தி ஒன்று இருக்கிறது. அது, ‘மருத்துவம் வணிகத்துக்கானது அல்லஎன்பதுதான்!

நன்றி: தினமணி  (22 - 01 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்