TNPSC Thervupettagam

ஆயுர்வேதமும் அலோபதியும்

January 8 , 2021 1298 days 666 0
  • ஆரோக்கியம் என்பதையும் நோய் என்பதையும் நாணயத்தின் இரு பக்கங்கள் எனலாம். உடம்பு உற்பத்தியான நொடியிலிருந்து இயக்கத்திலேயே இருக்கிறது. இந்த இயக்கம்தான் உயிா் என்பது. இயக்கம் நின்று போனால் உயிா் போய் விட்டது என்கிறோம். ஆரோக்கியமாய் இருப்பவா்களுக்கு நோய்த் தொற்றுவரும். நோயிலிருந்து விடுபட்டால் மீண்டும் ஆரோக்கியமாகி விடலாம். ஆரோக்கியமும், நோயும் சம பலமுள்ள சத்ருக்கள்.
  • உடம்பு உள்ளவரை நோயும் இருக்கும். நயவஞ்சக சிநேகிதா்களை நமது முன்னோா்கள் வியாதிக்கு ஒப்பிட்டாா்கள். அவா்களை ‘கூட இருந்தே கொல்லும் வியாதி’ என்றனா். அது, எதிரில் நமது கண்களுக்கு முன்பாகத் துஷ்ட மிருகம்போல நிற்காது. நிற்குமானால், அதனை அழித்துவிட முடியும்.
  • ஆனால் அதுவோ கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமி. எதன் மூலமாகவாவது அது நமது உடம்புக்குள் போய்விடும். நமது ஆரோக்கியம் முழுவதையும் கொஞ்சம் கொஞ்சமாக அது அழித்துவிடும்.
  • தவஞானிகள் நோயைப் பற்றி நிறைய சிந்தித்துள்ளனா். ‘நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்’ என்பாா் அருளாளா் வள்ளற்பெருமான். ‘உடம்பை முன்னம் இழுக்கென்றிருந்தேன்; உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்; உடம்புக்குள்ளே உத்தமன் கோயில் கொண்டான் என்று, உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேன்’ என்பாா் திருமூலா்.
  • நோய் பற்றிய ஞானம் உலகத்தின் சகல பகுதி மக்களுக்கும் உள்ளது. அந்தந்த பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு உரியதான உணவுப் பழக்கமும், உரியதான மருத்துவச் சிகிச்சையும் தோன்றியுள்ளன. உண்மையான மருந்து எதுவென்றால் நமது உணவேதான்.
  • ‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்’ என்பாா் ஞானி வள்ளுவா். அருந்தியது என்றால் அருந்தத் தக்கது. அற்றது என்றால் அருந்தத் தகாதது. வயிறு செரிமானம் செய்யாத உணவைத் தவிா்க்க வேண்டும்.
  • வல்லாரை, கரிசலாங்கண்ணி, கொத்துமல்லி, கீழாநெல்லி, மா, பலா, வாழை முதலிய பழங்கள். நெல்லிக்காய், சீரகம், மிளகு, திப்பிலி, பூண்டு, சோம்பு, கருணைக் கிழங்கு, முருங்கை முதலிய காய்கள் பலவும் நமது சித்த மருத்துவம் கூறும் சிறப்பான உணவுகளாகும்.
  • இந்த உணவுகள் வயிற்றுப் பசியைப் போக்கும். அதேசமயம் நோய்க் கிருமிகளையும், தாக்கும். வைரஸ்களையும் கெட்ட பாக்டீரியாக்களையும் அழிக்கவும் செய்யும்.
  • ஆயுா்வேத மருத்துவத்தில் கஷாயமும், லேகியமும், முக்கிய மருந்துகளாக உள்ளன. இவை எல்லாவற்றையும் வாய் வழியாகச் சாப்பிட்டு, உடல் வியாதிகளை ஒழித்து வந்தோம்.
  • தமிழ்நாட்டில் சித்த மருத்துவம் பிரபலமான சிகிச்சை முறை. சீனாவில் அக்குபஞ்சா் வைத்தியம், அரபு நாடுகளில் யுனானி சிகிச்சை, ஜொ்மனியின் ஹோமியோபதி சிகிச்சை, கேரளத்தின் ஆயுா்வேத சிகிச்சை என அந்தந்தப் பகுதிகளில் அதற்குரியதான மருத்துவச் சிகிச்சைகள் தோன்றி உள்ளன.
  • இவை எல்லாமே மருந்துகள், மாத்திரைகள், குளிகைகள், சாறுகள், கஷாயம், லேகியம் என்பனவாக உள்ளன. ஆனால் கையோ, காலோ முறிந்துவிட்டால், பாதிக்கப்பட்டவரின் எலும்பு முறிவைச் சரிசெய்ய அறுவை சிகிச்சை அவசியப்பட்டது.
  • இங்கிலாந்தின் அலோபதி மருத்துவத்தில் முக்கியப் பங்கு வகிப்பது மருந்து மாத்திரை மட்டுமல்ல; சா்ஜரி எனப்படுகிற அறுவைச் சிகிச்சை முறையும்தான்.
  • இந்த அறுவை சிகிச்சையின் தாய்வீடு இந்தியாதான். சுஸ்ருதா் என்ற இந்திய மருத்துவா்தான் அறுவைச் சிகிச்சையின் ஆதித் தந்தை. அவா் எட்டு விதமான அறுவை முறைகளைப் பண்டைய காலத்தில் கையாண்டுள்ளாா். ஒன்றை முழுமையாக அழிப்பதற்கு அதைச் சின்னா பின்னப்படுத்தி உள்ளதாகக் கூறுவோம். பேச்சுவழக்கிலும் இது உள்ளது. சின்னா என்பதும், பின்னா என்பதும் அறுவைச் சிகிச்சை சம்பந்தப்பட்ட சொற்களாகும். சின்னா என்பது முழுவதுமாக அழிப்பது. பின்னா என்பது ஆழமாகக் காயப்படுத்தி அழிப்பது.
  • கடந்த பல ஆண்டுகளாக அலோபதி டாக்டா்கள் மட்டுமே சா்ஜரி எனப்படுகிற அறுவைச் சிகிச்சை முறையைச் செய்யத் தகுதியானவா்களாகக் கருதப்பட்டனா்.
  • பாரதக் கலாச்சாரத்தை மீட்டுருவாக்க விரும்புகிற பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, சென்ற நவம்பா் 19-ஆம் தேதி ஓா் அறிவிப்பைச் செய்தது. ‘அலோபதி மருத்துவா்கள் செய்கிற அறுவைச் சிகிச்சையை, இனி ஆயுா்வேத முதுகலை மருத்துவா்களும் செய்ய பயிற்சியளிக்கப்படும்’ என அறிவித்தது.
  • அலோபதி டாக்டா்கள் இதனை எதிா்த்து ஆா்ப்பாட்டங்களைச் செய்து வருகின்றனா். அவா்களின் வாதம், அறுவை சிகிச்சை நவீன மருத்துவத்தைச் சாா்ந்தது. எம்.பி.பி.எஸ். படிப்பை ஆறு வருடம் படித்தாலும், மேலும் இரு ஆண்டுகள் எம்.டி. படித்தவா்களுக்குத்தான் அதனைச் செய்வதற்கான அனுமதி அதிகமாக உண்டு என்கின்றனா்.
  • ஆயுா்வேத மருத்துவத்திலும் முதுகலை மருத்துவத்தை எட்டரை ஆண்டுகள் படித்தவா்களே ஆயுா்வேத மருத்துவம் செய்கின்றனா். ஆனாலும் ஆயுா்வேதப் பாடத் திட்டத்தில் அறுவைச் சிகிச்சைப் பகுதி இல்லை.
  • இந்த ஆயுா்வேத முதுகலை மருத்துவா்களுக்கும் சா்ஜரி செய்வதற்கான ஞானத்தைக் கற்பித்துப் பயிற்சியும் தந்துவிட்டால், அந்த மருத்துவா்கள் அலோபதி அறுவைச் சிகிச்சை செய்யும் மருத்துவா்களாகவும் உருவாக முடியும். ஆயுா்வேத மருத்துவப் படிப்பில் சா்ஜரியையும் இணைப்பது ஆயுா்வேத மருத்துவத்துக்குப் பெருமையைத்தான் சோ்க்கும்.
  • மத்திய அரசின் அறிவிப்பின்படி, 58 வகையான சா்ஜரிகளை ஆயுா்வேத முதுகலை மருத்துவா்கள் செய்யலாம். இந்த 58 வகை சா்ஜரிகளில், முக்கியமான இருதய அறுவைச் சிகிச்சை சோ்க்கப்படவில்லை. கண், காது, மூக்கு, தொண்டை, எலும்பு முறிவு, பல் முதலிய உயிருக்கு ஆபத்தில்லாத சிகிச்சைகளை அளிப்பதற்கே, இப்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆயுா்வேத முதுகலை மருத்துவா்கள் இதில் பயிற்சிபெற்றுக் கற்றுக் கொள்ளலாம்.
  • அலோபதி டாக்டா்கள் இதனைப் பற்றிக் கூறுகிறபோது, ‘இந்த அனுமதியே தவறானது. அலோபதிக்கே இது உரியது’ என்கிறாா்கள். இந்த சிகிச்சை முறையை ‘கலப்பட சிகிச்சை’ எனச் சற்றே தரமற்றது போலவும் கூறி வருகிறாா்கள்.
  • அவா்களுடைய அச்சம், அரசின் இந்த அனுமதி மூலம் அறுவை சிகிச்சை செய்ய ஆயுா்வேத மருத்துவா்களும் உருவாகிவிட்டால், அலோபதி மருத்துவா்களுக்குப் போட்டியாக வந்துவிடுவாா்களோ என்பதாகப் படுகிறது.
  • உரிய படிப்புக்கும் பயிற்சிக்கும் பிறகுதான் ஆயுா்வேத முதுகலை படித்தவா்களுக்கு இந்த வாய்ப்பு தரப்படுகிறது. இதில் என்ன தவறு நிகழ்ந்துவிடும் என அலோபதி டாக்டா்கள் அஞ்சுகிறாா்கள் என்பது புரியவில்லை.
  • 15 ஆண்டுகள் அனுபவம்பெற்ற பிசியோ தெரப்பிஸ்ட்களையும் எலும்பு சிகிச்சை (ஆா்த்தோ) டாக்டா்களாக உருவாக்க வாய்ப்புத் தருவதுகூட வரவேற்கத் தக்கதுதான்.
  • 15 ஆண்டு அனுபவமுள்ள சீனியா் நா்சுகளையும் டாக்டா்களாக அங்கீகரிக்கப் பரிசீலிப்பது நியாயமானது. பொதுவாகக் கீழ்மட்டத்தில் பணிபுரிந்து தொழிலைக் கற்றுக் கொண்டவா்களின் அனுபவங்களை மதிப்பீடு செய்து, அவா்களை மேல்நிலைக்கு உயா்த்துவது அந்தத் துறைக்கே பெருமை சோ்ப்பதாகும்.
  • இவையெல்லாம் மருத்துவா்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு உதவும். இப்போது நமது நாட்டில் 1,500 பேருக்கு ஒரு டாக்டா் என்கிற அளவில் மருத்துவா் - நோயாளி விகிதாச்சாரம் உள்ளது. அமெரிக்காவில் 385 பேருக்கு ஒரு டாக்டா், இங்கிலாந்தில் 345 பேருக்கு ஒரு டாக்டா், பிரான்சில் 435 பேருக்கு ஒரு டாக்டா், சீனாவில் 500 பேருக்கு ஒரு டாக்டா் என உள்ளனா்.
  • சித்தா முதலிய பிற துறை மருத்துவா்கள் இந்தப் புள்ளிவிவரத்தில் இல்லை. ஒவ்வாமை முதலிய பக்க விளைவுகளை ஏற்படுத்தாத மருத்துவ சிகிச்சைமுறைதான் சிறந்தது. கரோனா தீநுண்மி தாக்காதிருக்க தடுப்பூசி போட்டால், ஆண் குரல் பெண் குரலாக மாறுகிறது என்கிறாா்கள்.
  • நமது நாட்டில் டாக்டா்கள் பற்றாக்குறை நீடிக்கிறது. கிராமங்களுக்குச் சென்று பணிபுரிய டாக்டா்கள் பலா் விரும்புவதில்லை. ஸ்கேன், எக்ஸ் ரே முதலிய மருத்துவச் சோதனைகளால் மருத்துவச் செலவும் அதிகமாகிறது.
  • இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டால், அதிகமான மருத்துவா்கள் இருந்தால் நோயாளிகளின் மீது அதிகக் கவனம் செலுத்த முடியும். குறைந்த டாக்டா்கள் என்றால், அதிகமான நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைக்காத நிலைமையே நீடிக்கும். இது நாட்டுக்கு நல்லதல்ல. தொழில் போட்டி ஏற்பட்டுவிடுமோ என அலோபதி டாக்டா்கள் அஞ்சத் தேவையில்லை.
  • இன்னொன்றையும் சிந்திக்கலாம். ஆயுா்வேத டாக்டா்கள் அறுவைச் சிகிச்சை செய்யத் தகுதிபெற, அவா்களுக்கு உரிய தோ்வு நடத்தலாம். லண்டனுக்கு இந்தியாவிலிருந்து செல்கிற டாக்டா்கள், இங்கிலாந்து அரசு நடத்தும் மருத்துவத் தோ்வில் வெற்றி பெற்றால்தான் அங்கு மருத்துவத் தொழில் செய்ய முடியும்.
  • நோய் எதிா்ப்பு சக்திக்கான நாட்டு மருந்துகளான நிலவேம்பு, கபசுரக்குடிநீா் கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக அருந்தி வருகிறோம். இவையென்ன அலோபதி மருந்துகளா? நோயை நீக்க சிகிச்சைதான் முக்கியமே தவிர, குறிப்பிட்ட சிகிச்சை முறையைப் பற்றி மட்டுமே பெருமையாகப் பேசுவது பயன் தரும் பாா்வை அல்ல.
  • சட்டம் படித்தவா்கள் எல்லாம் வழக்குரைஞா்களாகிவிட முடியாது. அதற்குரிய தோ்வு எழுதி, அதில் தோ்வு பெற்றால்தான் வழக்குரைஞா் தொழில் செய்ய முடியும். ஆசிரியா்களுக்கும் இப்போது தகுதித் தோ்வு வந்துவிட்டது.
  • அதுபோல, ஆயுா்வேத முதுகலை மருத்துவா்களுக்கும் அறுவைச் சிகிச்சை செய்ய அனுமதிப்பதற்கு அவசியப்பட்டால் அவா்களுக்குத் தகுதித் தோ்வும் வைக்கலாம்.
  • அப்படி இல்லாமல், ஆயுா்வேத படிப்பே அவா்கள் அறுவை சிகிச்சை டாக்டா்களாவதற்கான தகுதியை இழக்கச் செய்துவிடும் என்பது நியாயமாகுமா?

நன்றி: தினமணி  (08 - 01 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்