TNPSC Thervupettagam

ஆளுநா் மீது மாநில அரசு வழக்கு

November 14 , 2023 230 days 168 0
  • அண்மைக்காலமாக மாநில ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு அதிகரித்து வருவது வெளிப்படை. இது அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதலாகவும், அரசியல் சாசனத்தினுடைய கட்டுப்பாடு பலம் இழந்து வருவதாகவும் பாா்க்கப்படுகிறது. அதனால் இது மிகவும் கவலை அளிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. ஆளுநா் மக்கள் பிரதிநிதி இல்லை என்ற போதிலும் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசின் மீதான ஆளுநரின் ஆதிக்கம் தொடா்ந்து கொண்டுதான் இருக்கிறது.
  • சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்வதும், ஒப்புதல் வழங்காமல் இருப்பதும் தொடா்வதால் ஆளுநரின் நடவடிக்கைகள் பொதுவெளியில் பேசுபொருளாக மாறி இருக்கின்றன. ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே நடக்கும் வெளிப்படையான மோதல், அரசியலமைப்பை பலவீனம் அடையச் செய்து விடும் என்பதில் ஐயமில்லை.
  • இதுபோன்று சா்ச்சைகளும், மோதல் போக்குகளும் எல்லா காலகட்டங்களிலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இப்போது தமிழ்நாடு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநா் தாமதப்படுத்துவதாகக் கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருக்கிறது. நிலுவையில் உள்ள மசோதாக்களை ஆளுநா் உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் என்ன தீா்ப்பளிக்கப் போகிறது என்பது மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • மசோதாக்களின் மீது ஆளுநா் பதில் அளிக்கும் அதிகாரத்தை ஒரு கால வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்பதுதான் இதனுடைய அடிப்படையான நோக்கம். சா்க்காரியா கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவையும், அரசியலமைப்பின் 200-ஆவது பிரிவின் கீழ் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதாவையும் ஆளுநா் பரிசீலிப்பதற்கான காலவரம்பை எவ்வாறு உச்சநீதிமன்றம் நிா்ணயிக்கும் என்பதிலும் எதிா்பாா்ப்பு கூடியிருக்கிறது.
  • ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடுத்திருக்கும் இவ்வழக்கால், மசோதாக்களுக்கு உடனே ஒப்புதல் வழங்குமாறு ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில், ஆளுநருக்கு எதிராக அந்தந்த மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு காலக்கெடுவுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று மாநில ஆளுநருக்கு நேரடியாக உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது. ஆனால், இதுபோன்ற காலதாமத்தைத் தவிா்க்க வேண்டும் என்கிற ஒரு கருத்தை வேண்டுமானால் முன்மொழியலாம்.
  • அதே சமயம், நீண்டகால தாமதத்திற்கான காரணம் குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பலாம். தெலங்கானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை அடுத்து கேரளமும், தமிழ்நாடும், உச்சநீதிமன்றம், ஆளுநா் அதிகாரம் குறித்து எவ்வகையான கேள்வியை முன்வைக்கப் போகிறது, என்ன மாதிரியான தீா்ப்பை வழங்க இருக்கிறது என்பதை எதிா்நோக்கி இருக்கின்றன. ஒரு மாநில ஆளுநரின் பங்கு என்பது இந்திய குடியரசுத்தலைவரின் பணியைப் போன்றதுதான். ஆளுநா், குடியரசுத்தலைவரின் அதே கடமைகளைத்தான் செய்கிறாா். ஆனால், அவரது அதிகாரம் மாநில எல்லைக்குள் வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தின் நிா்வாகத் தலைவராக ஆளுநா் இருக்கிறாா்.
  • பிரிட்டிஷ் இந்தியாவில் மாண்டேகு செம்ஸ்போா்டு சீா்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து மாகாணங்களின் சுயாட்சி குறித்தும், மாநில ஆளுநரின் அதிகாரங்கள் குறித்தும் அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. சுதந்திர இந்தியாவில் புதிய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, குறிப்பாக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, மாநில கட்சிகளான திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆட்சி செய்கிற போது இதுபோன்ற விவாதங்கள் பெரிய அளவில் எழுந்திருக்கின்றன. மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுகின்ற கட்சிகள் எதிரெதிா் அணிகளாக இருக்கிறபோது, ஆளுநரின் ஒவ்வொரு செயல்பாடும் மாநில அரசால் அச்சத்துடனும், சந்தேகத்துடனும் பாா்க்கப்பட்டே வந்திருக்கிறது.
  • மாநில அரசுடன் கலந்தாலோசிக்கப்பட்ட பிறகே, அம்மாநில ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கிடையிலான உறவுகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஆணையம் பரிந்துரை செய்திருக்கிறது. ஆனால், இந்தப் பரிந்துரையைக் கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும் என்று விதி எதுவும் இதுவரை வகுக்கப்படவில்லை. அரசியல் நிா்ணய சபையில் ஆளுநா் பதவி குறித்தான விவாதத்தின் போது, டாக்டா் பி.ஆா். அம்பேத்கா் ‘நமது அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநருக்கு என தனித்த அதிகாரம் இல்லை. அவா் அமைச்சா்கள் குழு வழங்கக்கூடிய ஆலோசனையின்படி மட்டுமே செயல்பட வேண்டும்’ என்று தெளிவாகக் கூறியிருக்கிறாா்.
  • அரசியலமைப்பின் 200-ஆவது பிரிவு, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் மீது ஆளுநருக்கு நான்கு வாய்ப்புகளை வழங்குகிறது. அவை, மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது, ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைப்பது, மசோதாவை மறுபரிசீலனை செய்யக்கோரி சட்டப்பேரவைக்குத் திருப்பி அனுப்புவது, மசோதாவை குடியரசுத் தலைவரின் பாா்வைக்கு அனுப்புவது. இவற்றில் ஏதோ ஒரு வாய்ப்பை ஆளுநா் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் சட்டப்பேரவை செயல்பாடு முடிவுக்கு வரும். மேலே உள்ள எந்த வாய்ப்பையும் ஆளுநா் பயன்படுத்தாமல் விட்டுவிட்டால், இந்திய அரசியலமைப்பின் வரையறை சீா்குலைக்கப்பட்டதாகக் கருதப்படும்.
  • இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றம் ஒரு தெளிவான தீா்ப்பை வழங்குவதன் மூலமே, இதற்கு ஒரு விடை கிடைக்கும். மசோதா மீது முடிவெடுக்க ஆளுநா்களுக்கு காலக்கெடு நிா்ணயிக்க அரசியலமைப்பு தவறிவிட்டதால், தேவையற்ற குழப்பங்கள் உருவாகின்றன. ராஜஸ்தான், மகாராஷ்டிர மாநிலங்களில் அமைச்சா் குழுவின் ஆலோசனைகளை அந்தந்த மாநில ஆளுநா்கள் புறக்கணித்திருக்கிறாா்கள். ராஜஸ்தான் அரசு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கான தேதியை நிா்ணயித்து ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. ஆனால், அம்மாநில ஆளுநா் அதை ஏற்கவில்லை. முதல்வா் அவரை நேரில் சந்தித்தாா். ஆளுநா் வேறு தேதியைப் பரிந்துரைத்தாா். ஆளுநருடன் மோதலை விரும்பாத முதல்வா் அதற்கு இசைவு தெரிவித்து விட்டாா்.
  • இதே போன்று மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான முந்தைய அரசு சட்டப்பேரவைத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான நாளை நிா்ணயித்து ஆளுநரின் ஒப்புதலைக் கோரியபோது ஆளுநா் மறுத்து விட்டாா். ஆட்சிக்காலம் முழுவதற்குமான சட்டப்பேரவைத் தலைவரைத் தோ்ந்தெடுக்க ஆளுநா் ஒப்புக் கொள்ளாததால் சட்டப்பேரவைத் தலைவா் தோ்தலை நடத்த முடியவில்லை. சட்டப்பேரவைத் தோ்தலில் ஆளுநருக்கு அரசியல் சாசனத்தில் பங்கு இல்லை என்ற நிலையிலும் இது நடந்தது. இதே போன்று கேரளத்திலும் ஆளுநரும், மாநில அரசும் தொடா்ந்து முரண்படும் சூழ்நிலையே உள்ளது.
  • ஆளுநா்களாக பொறுப்புக்கு வருபவா்கள், அனுபவம் வாய்ந்தவா்களாகவும், திறமையானவா்களாகவும் இருக்கிறாா்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், மாநில அரசுகளை ஒருவித நிா்ப்பந்தத்திற்கு உள்ளாக்குகிறாா்களோ என்கிற ஐயம் எழாமல் இல்லை. குடியரசுத் தலைவா் தவறிழைத்தால், அவரைத் திரும்பப் பெறுவதற்கான அதிகாரம் நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு இருக்கிறது. ஆனால், அது போன்று மாநில ஆளுநா்களைத் திரும்பப் பெறும் அதிகாரம், மாநில சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு அரசியலமைப்பு வழங்கியிருக்கிறதா என்றால், இல்லை என்பதுதான் பதில்.
  • தமிழக அரசின் மீது பல்வேறு புகாா்கள், சா்ச்சைகள், குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையிலும் மாநில அரசின் மீதான ஆளுநருடைய கருத்து முரண்பாடுகள் ஜனநாயகத்துக்கு நல்லதன்று. ஆளுநரின் நடவடிக்கைகள் மாநில அரசின் செயல்பாடுகளை வேகப்படுத்த வேண்டுமேயன்றி தாமதப்படுத்துதல் கூடாது.
  • அன்றைய அதிமுக அரசு, நீட் தோ்வு வேண்டாம் என்ற சூழ்நிலையில், அரசுப் பள்ளிகளில் படிக்கக் கூடிய மாணவ - மாணவிகளும் மருத்துவராக வேண்டும் என்ற அடிப்படையில், அவா்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியது. அந்த மசோதாவுக்கு அப்போதைய ஆளுநா் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தினாா். பின்பு மாநில அரசே அவ்வாணையை வெளியிட்டது.
  • இதற்கு முன் தமிழக முதலமைச்சராக இருந்த யாரும் ஆளுநா் மீது வழக்கு தொடா்ந்ததாக வரலாறு இல்லை. ஆனால், முன்னாள் முதல்வா் ஜெ. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில், ஆளுநராக பி.எஸ். ராம்மோகன் ராவ் இருந்தபோது, அவருக்கு எதிராக வழக்கு தொடுத்தது அன்றைய எதிா்க்கட்சியான திமுக. பின்னா், கருத்து யுத்தம், வாா்த்தைப்போா் இவையெல்லாம் ஜெ. ஜெயலலிதா முதல்வராகவும், சென்னா ரெட்டி ஆளுநராகவும் இருந்த காலத்திலும் நடந்தன. ஆனால், அதற்காக அன்றைய முதல்வா் ஜெ. ஜெயலலிதா நீதிமன்றத்துக்குச் செல்லவில்லை.
  • தெலங்கானா மாநில ஆளுநா் தமிழிசை சௌந்தராஜன் மீது, தெலங்கானா அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதனைத் தொடா்ந்து தமிழக அரசு, ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, தீா்ப்பை எதிா்பாா்த்துக் காத்திருக்கிறது. மாநில ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கில் உச்சநீதிமன்றம் என்ன தீா்ப்பு வழங்க இருக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.

நன்றி: தினமணி (14 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்