- நவீன காலத்தில் மேற்குலகின் பெண்ணுரிமைப் போராட்டங்களின் தாக்கம் ஆசியாவிலும் எதிரொலித்தது. இந்தியாவின் படிநிலைச் சாதியம் பெண்களிடம் வெவ்வேறு இன்னல்களை விளைவித்ததை, ‘இந்து ஸ்திரீகள் வீடென்ற தனி வெளிக்குள்ளும், திராவிடப் பெண்கள் பொது வெளியிலும் புழங் கினர்’ என்று 1901இல் ஒரு தமிழ் இதழ் குறிப்பிட்டது.
- முன்னவர்கள் குழந்தைத் திருமணம், விதவைக்கோலம் போன்ற ஆணாதிக்கத்தையும், பின்னவர்கள் மேலாடை அணியத் தடை, பாலியல் வன்முறை போன்ற சாதிய ஆணாதிக்கத்தையும் அனுபவித்தனர்.
- ஐரோப்பியப் பெண்களின் இருப்பும், கிறிஸ்துவ மிஷனரிகளின் சமூகச் செயல்பாடுகளும் பெண்ணுரிமைக்கான போராட்டங்களுக்கு வித்திட்டன. காங்கிரஸ், சுயமரியாதை இயக்கங்கள், ஆச்சாரச் சீர்திருத்த, சமூகச் சங்கங்கள் பெண்ணுரிமைக்காகச் செயல்பட்டன. பெண்களின்இன்னல்களையும் தீர்வுகளையும் கணக்கற்ற பக்கங்களில் வெளிப்படையாகவும் கூர்மையாகவும் தமிழ் அச்சு ஊடகங்கள் விவாதித்தன.
- பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் சாதியக் கட்டமைப்புப் பாரம்பரியத்திலிருந்து நவீனத்துக்குப் பரிணமித்ததால் அதற்கேற்ற ஆண் குழந்தைகளைத் தகவமைக்கும் நிலைக்குத் தாய்மார்களை உருமாற்ற, பெண்கள் கற்க வேண்டுமென முடிவுசெய்ததோடு, எதைக் கற்பிக்க வேண்டுமென்ற கேள்வியும் 1900களில் மேலெழுந்தது.
- குடும்பத்தைப் பாதுகாக்கவே பெண்கள் படைக்கப்பட்டதாகக் கருதிய நீதிபதி முத்துசாமி அய்யர், ‘சங்கீதமும் சுகாதாரமும் எழுத்தும் எண்ணும்’ பரிந்துரைத்தார். என்.ராகவாச்சாரியார் ஆங்கிலத்தையும், டி.வெங்கட்ராம அய்யர் தமிழையும் கற்பித்தல் மொழிகளாக 1905இல் முன்வைத்தனர்.
- இருபாலரும் இணைந்து பயில்வது உசித மன்று என்றதால், பெண்களுக்கெனத் தனிக் கல்வி நிலையங்கள் நிறுவப்பட்டு, பெண் ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். குடும்பத்துப் பெண்கள் கல்வி கற்றதால் ஐரோப்பியப் பெண்களுடனும் அப்போதைய ஆளுநரின் இணையருடனும் உரையாடியதைக் கண்டும் கேட்டும் இந்திய ஆண்கள் உள்ளூர மகிழ்ந்தனர்! இதைப் பெருமையாகக் கருதிய ஒரு பத்திரிகை, 1901இல் ஒரு பக்கச் செய்தி வெளியிட்டது.
- இருப்பினும், ஆங்கிலக் கல்வி கற்றால், ‘நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு’ அழியுமென 1923இல் மகேஸ்பரி எழுதினார். இவ்விவாதத்தில் பெண்களின் உடற்பயிற்சியை வலியுறுத்திய கட்டுரை 1905இலும், விளக்கப் படங்கள் 1924இலும், நூல் 1932இலும் வெளியாயின.
- கல்வியைத் தொடர்ந்து பிற பிரச்சினைகள் கையிலெடுக்கப்பட்டன. ‘பால்ய, இணக்க மற்ற, பலதாரத் திருமணங்களும், விதவை மறுமண மறுப்பு, விவாகரத்து செய்யும் அதிகார மறுப்பு போன்ற மூட வழக்கங்கள் பெண்களை இழிவாக்குகின்றன’ எனக் கூறிய பட்டாபிராம அய்யர், ‘ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சுதந்திரம் வழங்கினால் இப்பூவுலகம் தலைகீழாய்க் கவிழ்ந்துவிடும் என்ற எண்ணத்தால், அவர்களை அடக்கி மடக்கிவைப்பதற்கென இம்முறைகளைக் கையாள்கிறோம்’ என்றார்.
- இளம் விதவைகளின் எண்ணிக்கையானது 1911இல் பால் அருந்தும் பச்சிளங் குழந்தை முதல் 15 வயதுவரை 3,20,431இல் இருந்து, 1921இல் ஒரு வயது முதல் 30 வயதுவரை 11,63,720ஆக அதிகரித்ததை ‘பால்ய விவாஹம் இளம் பெண்களை விதவைகளாக உற்பத்தி செய்யும் தொழிற்சாலை’ என்று பட்டாபிராம அய்யர் சாடினார்.
- திருமணத்துக்குப் பின், ‘சகல விஷயங்களிலும் கெடுதல் இருந்தால் புருஷர்களை விவாகரத்து செய்வதற்கெனச் சட்டம் வேண்டும்’ என்றகுரல்கள் 1920களில் ஒலித்தன. ‘பெற்றோரின் அறியாமையால் அன்பில்லாக் கணவர்பால் விவாகம் செய்விக்கப்பட்டுத் தப்ப வழியின்றிமிகுந்த வருத்தத்திற்கும் கஷ்டத்திற்கும் ஆளாகின்றமையால் அவ்வித இடுக்கண்களிலிருந்து விடுதலை அடையப் பெண்களுக்கு விவாகரத்து முக்கியம்’ என மாலதி பட்டவர்த்தன் 1929 டிசம்பர் 6 அன்று ‘தி இந்து’ நாளிதழில் எழுதினார்.
- ‘விவாகரத்துச் சட்டத்தால் மனைவியும் மறுமணம் செய்யலாமென்ற உரிமையே நாம் அடையப்போகும் பயனாகும். நாணமும் நிர்மல வாழ்க்கையும் நம்முடன் பிறந்தவை. ஆதலால் இருமுறை விவாகம் செய்து இல்லறத்தை நடத்துவது வெட்கம்’ என்று 1929இல் ‘சிந்தாமணி’ இதழில் லக்ஷ்மி அம்மாள் விவாகரத்தை எதிர்த்தார். ‘விவாகரத்தைத் தேடுகிறவர்கள் காமுகர்கள்’ என்று ஒரு பத்திரிகை இழிவுபடுத்தியது.
- இக்காலத்தில், பெண்ணுக்குப் பரிசம் கொடுத்து மணமுடித்த பாரம்பரியப் பண்பாட்டுக்கு மாறாக, நவீனக் கல்விக்கும் வேலைக்கும் ஏற்றவாறு ஆண்களுக்கு வரதட்சிணையும் பெண்ணையும் கொடுத்து மணம் முடிக்கும் புதிய வழக்கமான வரதட்சிணைக்கு எதிரான சட்டம் வேண்டுமெனப் போராடினர்.
- நிலவுடைமைச் சாதிப் பெண்களின் சுதந்திரக் கண்ணோட்டத்திலேயே மேற்குறிப்பிட்ட சட்டங்கள் உருவானபோதிலும், அவை விவசாயம் உள்ளிட்ட உற்பத்தியில் ஈடுபட்ட பெண்களுக்கும் பலனளித்தன. அதேவேளை விக்டோரியா காஸ்ட், கோஷா மருத்துவமனை களில் புழங்குரிமை மறுப்பு, மேலாடை அணியத் தடை போன்ற ஒடுக்குமுறைகளை அனுபவித்த அப்பெண்களின் விடுதலைக்கான போராட்டத்தை அச்சமூகப் பெண்களும் ஆண்களும் நடத்தினர், சுயமரியாதை இயக்கம் துணைநின்றது.
- ‘ஆண்-பெண் கலப்புப் படிப்பு மிகக் கேவல மானது’ என்ற நிலையைப் பெண்ணுரிமை இயக் கங்களும் நவீனத்துவமும் மாற்றியதால் இக்காலத் தில் கல்வி, உடற்பயிற்சி, சிகையலங்காரக் கூடங்கள், அரசு, அரசாங்க நிறுவனங்கள் என மதச் சார்பற்ற பொதுவெளிகளில் இருபாலரும் தாராளமாகப் புழங்குகின்றனர். அதேவேளை, பொதுவெளியில் உற்பத்தியில் ஈடுபட்ட பெண்கள், தனிவெளிக்குள் இல்லத்தரசிகளாகச் சிறைபடும் தலைகீழ் நிலையும் புதிதாக விளைந்துள்ளது.
- குழந்தை மணத் தடைச் சட்டத்தின்படி ஆண் களுக்கு 18 வயதும் பெண்களுக்கு 14 வயதும் திருமண வயதாகத் தீர்மானித்து, 1930 ஏப்ரல் முதல் அமலுக்கு வந்தது. பின்னர் அது முறையே 21, 18 என ஆனது. எனினும், நெல்லை மாவட்டத்தில் 2021 ஜனவரி முதல் 2023 டிசம்பர் வரை 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் குழந்தை பெற்றது, குழந்தை மணங்கள் தொடர்வதைக் காட்டுகிறது.
- ஆனால், இவை நிலவுடைமை அல்லாத சாதிகளிடம் ஏற்பட்ட புதிய வழக்கம். சீர்திருத்தவாதிகளாலும் சுயமரியாதை இயக்கங்களாலும் பால்ய கைம்பெண்களும், பொருந்தா மணத்தால் வதைபடுவோரும் மறுமணம் செய்வது இயல்பாக மாறியுள்ளது. இவையெல்லாம் உடலைப் பற்றிய அறிவியல் புரிதலிலிருந்தே தோன்றின.
- சமகாலத்தில், பெண்களும் பொருளீட்டி குடும்பத்துக்குக் கூடுதலாகக் கொடுப்பதானது ஆண்களின் ‘புருஷ லட்சணம்’ அழிந்ததன் அடையாளமாகும். இருப்பினும், வரதட்சிணையைத் திருமணத்துக்கான நிபந்தனையாகக் கொண்டிருப்பதும் ஆணாதிக்கத்தின் சட்டவிரோதச் செயலாகும்.
- கல்வியறிவு, நிலையான பொருளாதாரம் எனச் சகலவற்றிலும் மனைவிகள் உயர்ந்தவர்களாக இருந்தாலும், ஏடிஎம் அட்டையைக் கணவர்களிடம் கொடுத்தல், அவர்களுக்குப் பணிந்தும் பயந்தும் அன்பாலும் எடுபிடி வேலைகளை ஓடியாடி ஓய்வின்றிச் செய்தல் போன்ற வடிவங்களில் தொடர்கின்ற ஆணாதிக்கத்துக்கு மெத்தப் படித்த, பாமரப் பெண்கள் என இருதரப்பினரும் அடிபணிந் துள்ளனர். அதேவேளை பெண்ணாதிக்கம் உருவெடுத்துள்ளதையும் மறுக்க இயலாது.
- இப்போக்கு பெண் விடுதலைக்குப் பொருளா தாரத் தற்சார்புடன் பண்பாட்டு மாற்றமும் அவசிய மெனக் காட்டுகிறது. சாதியைப் பாதுகாக்கப் பெண்ணுடலில் கற்பனையாகக் கட்டப்பட்டுள்ள ‘கற்பு’, ‘மானம்’ ஆகிய பண்பாட்டு வறட்டுத்தன மானது, காதல் மணம் புரிந்த பெண்களைச் சாதிஆணவத்தில் கொல்வதையும் சகிக்கப் பழக்கியுள்ளது. கல்வியறிவு இல்லாத காலனியக் காலத்தில் நடைபெற்ற விவாதங்கள்கூடஇக்காலத்தில் நிகழாதது, ஒருவிதப் புழுக்கத்தில் முறையான வடிகாலற்று இச்சமூகம் இயங்கு வதைக் காட்டுகிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (08 – 03 – 2024)