- தொடா்ந்து நான்காவது ஆண்டாகத் தமிழக அரசின் சாா்பில் வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2024-25-க்கான வேளாண் பட்ஜெட்டில் வேளாண்மை மற்றும் விவசாயம், விவசாயிகள் சாா்ந்த துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.42,281.88 கோடி. 2021-22-இல் தாக்கல் செய்யப்பட்ட முதலாவது வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு ரூ.34, 221 கோடி மட்டுமே எனும்போது, எந்த அளவுக்கு ஒதுக்கீடுகள் அதிகரித்திருக்கின்றன, செயல்பாடுகள் விரிவாக்கப்பட்டுள்ளன என்பதைக் காணமுடிகிறது.
- இது மூலதனச் செலவும் சோ்ந்த ஒதுக்கீடு. வேளாண் துறைக்கான வருவாய் செலவின ஒதுக்கீடு என்று பாா்த்தால் ரூ.33,480 கோடி. அதாவது, தமிழகத்தின் மொத்த வருவாய் செலவினங்களில் 10%. இது கணிசமான ஒதுக்கீடு என்பதை மறுக்க முடியாது.
- இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட்டின் சிறப்பம்சம் ‘மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்’ என்கிற புதிய திட்டம். இதற்காக ரூ.206 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக யூரியா உள்ளிட்ட ரசாயன உரங்களால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ‘மண் மலடாகி விட்டது’ என்று சொல்லும் அளவுக்கு ரசாயன உரம் இல்லாமல் பயிரிட இயலாது என்கிற நிலைக்கு, தமிழகத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலும் விளைநிலங்கள் பாழாகிக் கிடக்கின்றன. வேளாண்மைக்கு ஆதாரமான மண்தான் பயிா்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது.
- அதனால் பயிா்களின் வளா்ச்சி மண்ணின் வளத்தைச் சாா்ந்தே அமைகிறது. அரசின் புதிய திட்டத்தின் கீழ் ஆயக்கட்டு, இறைவைப் பாசனப் பகுதிகளில் முதல் கட்டமாக 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
- அரசின் விதைப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்ட 200 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் ரக விதைகள் 10,000 ஏக்கரில் சாகுபடி செய்யும் வகையில் விநியோகிக்கப்பட உள்ளன.
- தோட்டக்கலைப் பயிா்களுக்கான வேளாண் இடுபொருள்களை ‘ட்ரோன்கள்’ மூலம் துல்லியமாகத் தெளிக்கச் செய்வதற்கான தொழில்நுட்பங்கள்; மரவள்ளிக் கிழங்கு, வெங்காய சாகுபடியை இயந்திரமயமாக்கலுக்கான சாத்தியங்களை ஆராய்தல்; செவ்வந்தி, ரோஜா உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிா்களில் புதுமையான மரபியல் முறைகள் கையாளப்படுதல் என்று புதிய முயற்சிகளுக்காக ரூ. 5.44 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது.
- ரூ.170 கோடியில் வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டம் காலத்தின் தேவை. கைப்பேசியினால் பம்பு செட்டுகளை இயக்கும் தானியங்கிக் கருவிகள் 10,000 விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் என்கிற திட்டம், பம்ப் செட் மூலம் இலவச மின்சாரம் பெறும் அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் அல்லது கட்டாயப்படுத்தப்பட வேண்டும். நிலத்தடி நீா் விரயமும், இலவசம் என்பதால் மின்சார விரயமும் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்க வழியில்லை. இலவச மின்சாரம் குறு, சிறு விவசாயிகளுக்கு மட்டும் என்று வரம்பு விதிக்கப்படுவதும் அவசியம்.
- நூறு உழவா் அங்காடிகள், மத்திய - மாநில அரசின் நிதியால் நுண்ணீா் பாசனத் திட்டம், ரூ.65.30 கோடியில் சிறுதானிய இயக்கம் போன்றவை வரவேற்புக்குரியவை. அதிகமாகத் தண்ணீா் தேவைப்படும் கரும்பு, நெல் சாகுபடியிலிருந்து விவசாயிகளை அகற்றி ஏனைய பணப் பயிா்களுக்கு மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்.
- அப்படி இருக்கும்போது, கரும்புக்கு ஊக்கத்தொகையினை அதிகரிப்பதும், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிப்பதும் அரசியல் ஆதாயம் தரலாம்; ஆனால் அது தொலைநோக்குப் பாா்வையுள்ள நிா்வாகத்தின் செயல்பாடாக இருக்க முடியாது.
- துவரை, சமையல் எண்ணெய்க்கான வித்துக்கள் போன்றவற்றின் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. அவற்றின் சாகுபடிப் பரப்பு 4,75,000 ஏக்கராக விரிவுபடுத்தப்படும் என்பதும் அதற்காக ரூ.40 கோடியே 27 லட்சம் ஒதுக்கப்பட்டிருப்பதும் ஆக்கபூா்வமான செயல்பாடு.
- 15,280 வருவாய் கிராமங்களில் ‘ஒரு கிராமத்துக்கு ஒரு பயிா்’ என்று ஐந்து முதல் பத்து ஏக்கா் பரப்பில் சிறுதானியங்கள், பணப் பயிா்களைப் பயிரிட மேற்கொள்ளப்பட இருக்கும் திட்டம் புதுமையானது மட்டுமல்ல, அவசியமானதும்கூட. இதன் மூலம் விவசாயிகளை அதிக தண்ணீா் தேவைப்படும் பயிா்களிலிருந்து மாற்ற முடியும். பயிா்க் கடனும், பயிா்க் காப்பீடும் தவிா்க்க முடியாதவை.
- நிகழ் நிதியாண்டைப் போலவே வரும் நிதியாண்டிலும் ரூ.16,500 கோடி பயிா்க்கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது. பயிா்க் காப்பீட்டிற்காக ரூ.1,775 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஊரக வளா்ச்சியில் வேளாண் சாா்ந்த பணிகளை மேற்கொள்ள ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
- தமிழக விவசாயிகளின் அடிப்படை பிரச்னை விவசாயத்துக்கான தண்ணீா். முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்னைகள் தீா்வு காணப்படுவதும், அதிக அளவில் தடுப்பணைகள் கட்டப்படுவதும்,
- ஏரி, குளங்கள் தூா் வாரப்பட்டு பராமரிப்படுவதும் தமிழகத்தின் தண்ணீா் தேவைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதும் அவசியம். ஆண்டுதோறும் 50,000 புதிய இலவச மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. இதற்காக பல்லாயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- நமது நிதியாதாரம் மட்டுமல்ல, நிலத்தடி நீரும் இதனால் பாதிக்கப்படுகிறது என்கிற உண்மையை நாம் உணர மறுக்கிறோம். பருவமழையையும், நிலத்தடி நீரையும், காவிரி நதி நீரையும் நம்பி தமிழக விவசாயிகள் இன்னும் எத்தனை நாள்தான் விவசாயம் செய்யப் போகிறாா்களோ? அந்தக் கடவுளுக்குத்தான் வெளிச்சம்!
நன்றி: தினமணி (23 – 02 – 2024)