TNPSC Thervupettagam

உழைப்பும் மூலதனமும் ஒன்றிணைய வேண்டும்

May 8 , 2022 822 days 476 0
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சீதாராம் யெச்சூரி, கேரள மாநிலம், கண்ணூரில் நடந்த அகில இந்திய 23-ஆவது கட்சி மாநாட்டில் பேசியபோது, "உலக கோடீஸ்வரர்களின் மொத்த செல்வக் குவிப்பு, 2020-இல் சுமார் ரூ. 75 லட்சம் கோடி (10.2 டிரில்லியன் டாலர்).
  • இந்த ரூ.75 லட்சம் கோடி என்பது இந்திய அரசின் இரண்டு வருட வரி வருமானமாகும். 10 உலகப் பணக்காரர்களின் செல்வத்தின் அதிகரிப்பு சென்ற 2021-இல் 413 பில்லியன் டாலர். இந்தியாவில் உள்ள செல்வத்தில் 57 சதவிகிதத்தை முதல் 10 பணக்காரர்கள் பெற்றிருக்கிறார்கள். அடிமட்டத்தில் உள்ள ஏறக்குறைய 65 கோடி மக்களுக்கு நாட்டின் செல்வத்தில் வெறும் 13 சதம் மட்டுமே இருக்கிறது' என்று கூறினார்.
  • உலக கோடீஸ்வரர்களின் சொத்து அதிகரிப்பு 10.2 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்பது, அச்சடிக்கப்பட்ட அமெரிக்க டாலராகவே அடுக்கி வைக்கப்பட்டுள்ளதா? அல்லது அந்த அளவு மதிப்புள்ள தொழிற்சாலைகளாக அவை உள்ளனவா?
  • நிச்சயம் அவை வெறும் டாலர் காகிதங்களாக இருக்க முடியாது. 10.2 டிரில்லியன் மதிப்புள்ள அமெரிக்க டாலர், தனியார் தொழிற்சாலைகளாக உள்ளன.
  • தொழிற்சாலை என்றால் குறிப்பிட்ட ஓர் இடத்தில் அது கட்டப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றே புரிந்துகொள்ள வேண்டும். தொழிற்சாலை உருவாக வேண்டுமானால் அதற்கு மூலதனம் வேண்டும். அடுத்து அந்தத் தொழிற்சாலைக்கான இடம் தேவை. மூன்றாவதாக தொழிலாளர்களுக்கு அது வேலை தர வேண்டும். இம்மூன்றையும் ஒருங்கிணைப்பவர் யார்? முதலாளி என்ற ஒருவர்தான். தொழிற்சாலை உற்பத்தி செய்தால் அது லாபம் சம்பாதிக்க வேண்டும். அந்த லாபம் அமெரிக்க டாலர் மதிப்பில் சேமிப்பாகிறது. அந்த சேமிப்பு மீண்டும் முதலீடு செய்யப்படுகிறது. டாலர் காகிதங்களாக அடுக்கி வைக்கப்படுவதில்லை.
  • உதாரணமாக, ஒரே ஓர் ஆலை மட்டுமே நடத்தி வந்த தொழிலதிபர், சில வருடங்களில் இரண்டு ஆலைகளை நடத்துபவராக வளர்கிறார். முதல் ஆலையில் சம்பாதித்த லாபம், இரண்டாம் ஆலைக்கு முதலீடாகிறது. ஓர் ஆலையில் மட்டுமே வேலை செய்துவந்த தொழிலாளர்கள் 100 பேர் என்றால், இரண்டு ஆலைகள் என்றால் 200 பேர் வேலை செய்வார்கள். தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, தொழிற்சாலையின் இருப்பிடமும் பரவுகிறது. மூலதனமும் அதிகரிக்கிறது. தொழிலாளர்களின் எண்ணிக்கையும் கூடுகிறது. முதலாளிக்கு லாபம் போல தொழிலாளிக்கு ஊதியம் உரியதாகிறது.
  • 200 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த மாமேதை கார்ல் மார்க்ஸின் கண்டுபிடிப்பு முக்கியமானது. முதலாளிமார்கள் தொழிலாளிகளைச் சுரண்டி, கூடுதல் லாபம் சம்பாதிக்கிறார்கள் என்கிற உண்மையை அவர் கண்டுபிடித்தார். சம்பளம் கொடுத்து உழைப்பைப் பெறுகிற முதலாளி, அந்த உற்பத்தியிலேயே அவருக்கு ஓரளவுக்கு லாபமும் கிடைக்கிறது. அதே தொழிலாளர்களைக் கூடுதல் நேரம் வேலை செய்ய வைத்து, அக்கூடுதல் நேர வேலைக்கு சம்பளம் தராமல் வேலை வாங்குகிறார். அந்த உபரி உழைப்பு சம்பளமில்லாமல் பெறப்படுகிற உழைப்பு. முதலாளிக்குக் கிடைக்கிற இலவச உழைப்பு.
  • சம்பளமில்லாத அந்த உழைப்பினால் கிடைக்கும் உற்பத்திப் பொருள்களுக்கும், சம்பளம் தரப்பட்ட உற்பத்திப் பொருள்களுக்கும் ஒரே விலைதான் நிர்ணயிக்கப்படுகிறது. ஒன்று சம்பளம் தந்து பெறப்பட்ட லாபம். இரண்டாவது சம்பளம் இல்லாத உற்பத்தியிலிருந்து பெறப்பட்ட லாபம். இந்த லாபம்தான் உபரி லாபம்.
  • சம்பளம் தராமல் பெறுகிற உழைப்பை கார்ல் மார்க்ஸ் "சுரண்டல்' என்று கூறினார்.
  • முதலாளித்துவத்தின் வயிற்றிலிருந்துதான் தொழிலாளி வர்க்கமே பிறக்கிறது என்கிறது மார்க்ஸியம். இது மறுக்க முடியாத உண்மை. முதலாளி இல்லையென்றால், மூலதனம் திரட்ட முடியாது. தொழிலாளி என்பவரும் உருவாக வாய்ப்பில்லை. நிலவுடைமைச் சமூகத்தில் ஜமீன்தார்கள் ஆதிக்க சக்திகளாக இருந்தார்கள். அவர்களிடம் கூலி வேலை பார்த்த விவசாயிகள் அடிமைகளாக இருந்தனர். அவர்களுக்கு வர்க்க உணர்வோ, போர்க்குணமோ இல்லை. காரணம், அவர்கள் பல இடங்களில் சிதறிக் கிடந்தனர்.
  • நிலவுடைமைக்கு அடுத்து உருவான முதலாளித்துவ சமூகத்தில்தான், தொழிற்சாலைகள் ஒரே இடத்தில் நிறுவப்பட்டன. தொழிலாளர்களும் அவற்றில் திரண்டனர். உழைப்பும் அங்குதான் உருவாகியது. உபரி உழைப்பும் அங்குதான் கிடைத்தது. தொழிலாளி சுரண்டப்படுவதும் அங்குதான் நிகழ்ந்தது. லாபத்திலிருந்தும் சுரண்டலிலிருந்தும் திரண்டதுதான் மூலதனம் ஆகும். "நிலவுடைமை சமூகத்தோடு ஒப்பிட்டால், முதலாளித்துவ சமூகம் முற்போக்கானது என்பதை காணலாம்' என்று கார்ல் மார்க்ஸ் கூறியுள்ளார்.
  • இப்போதுள்ள நிலை என்ன? உடல் உழைப்பு என்பது மாறி முழுவதும் எந்திரமயமாகிவிட்டது. மின்சக்தியின் உபயோகத்தால் உழைப்பு எளிதாகி விட்டது. தொழிலாளர் பிரச்னைகளுக்கென்றே தனியாக தொழிலாளர் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. தொழிலாளர் ஆரோக்கியத்துக்கு என தொழிலாளர் மருத்துவமனைகள் உள்ளன. தொழிலாளர்களுக்கும் ஆயுள் காப்பீடு உள்ளது. குடும்பநல, வருங்கால வைப்பு நிதி உள்ளது. பணிக்கொடை (கிராஜுட்டி) வசதி உள்ளது. சம்பளத்துடன் கூடிய விடுமுறை உள்ளது. பெண் ஊழியர்களுக்கு பேறு கால விடுமுறை உள்ளது.
  • மார்க்ஸ் கால தொழிலாளர்களையும், இன்றைய தொழிலாளர்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது. இன்றைய நிலையில் தொழிலாளர்களின் உழைப்பு உறிஞ்சப்படுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் ஓய்வுபெறுகிற தொழிலாளர்களும் ஆரோக்கியமாகவே ஓய்வு பெறுகிறார்கள். ஒரு காலத்தில் அவர்கள் நிராகரிக்கப்பட்டவர்களாக இருந்தனர். இன்று அவர்கள் தவிர்க்க முடியாதவர்களாக உள்ளனர். இன்றைய ஜனநாயக அரசுகள் எல்லாமே ஏறக்குறைய மக்கள் நல அரசுகளாகவே உள்ளன. அந்த அரசுகளின் மனப்போக்கு அதிகமாக மாறியும் உள்ளது. அதனால்தான் தொழிலாளிகளைப் பாதுகாப்பதற்கு என்றே தனியாக தொழிலாளர் நல அமைச்சகமே உள்ளது.
  • அரசு மாறியுள்ளதுபோல முதலாளிமார்களின் மனப்போக்கும் மாறியுள்ளதாகத்தான் கருத வேண்டும். மேற்கு வங்கத்தில் அன்றைய முதல்வர் ஜோதிபாசு வங்காள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருமாறு தொழிலதிபர் ரத்தன் டாடாவை அழைத்ததை நினைவுகூர வேண்டும். டாடாவின் நானோ சிறு கார் தொழிற்சாலை அப்படித்தான் அங்கு தொடங்கப்பட்டது. தொழிற்சாலை தொடங்குவதற்கு முன்பாக ரத்தன் டாடா அந்த இடத்தில் ஒரு புற்றுநோய் மருத்துவமனையைக் கட்டித் திறந்துவைத்தார். எதற்காக? சுரண்டல் முதலாளி அல்ல அவர். தொழிலாளர்களின் சுக, துக்கங்களில் பங்கெடுக்கக் கூடிய பாங்குள்ளவர் என்பதால்தான்.
  • இவர்களை முதலாளிகள் என்று இப்போது சொல்வதில்லை. முதலீட்டாளர்கள் என்று அழைக்கிறோம். முதலாளிகள் வேறு; முதலீட்டாளர்கள் வேறு. முதலீட்டாளர்களுக்கு தங்கள் முதலீடு பலன் தர வேண்டும் என்பதில் அக்கறை இருக்கத்தான் செய்யும். அந்தப் பலன்தான் லாபம். முதலீட்டாளர்களிடம் மூலதனம் மட்டுமே உள்ளது. தொழிலாளர்களிடம் உழைப்பு மட்டுமே உள்ளது. இவை இரண்டையும் ஒருங்கிணைத்துவிட்டால் முதலாளிகள் சுரண்டல்வாதிகளான வலதுசாரியாக விமர்சிக்கப்பட மாட்டார்கள். தொழிலாளிகளும் சுரண்டப்படுகிற இடதுசாரிகளாக மாட்டார்கள்.
  • இடதுசாரி, வலதுசாரி என்ற இருவேறு முரண்பட்ட வர்க்கங்களுக்கும் இன்றைய விஞ்ஞான யுகத்தில் இடம் இருக்கிறதா என்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். ரோபோ என்கிற இயந்திர மனிதனையே விஞ்ஞானம் உருவாக்கிவிட்டது. செயற்கை அறிவாளி மனிதனையும் உருவாக்க முடியும் என்று விஞ்ஞானம் நிரூபித்துள்ளது. இந்த இயந்திர மனிதன் போனஸ் கேட்க மாட்டான். விடுமுறையோ சம்பள உயர்வோ கேட்க மாட்டான்.
  • விஞ்ஞானம் இங்கேதான் விபரீதமானதாக மாறுகிறது. இந்த விபரீதத்தைக் கட்டுப்படுத்தியாக வேண்டும். இனிவரும் காலத்தில் இயந்திர மனிதன் மூலமாகவே சுரண்டலை ஒழித்துவிடலாமா? அப்படி ஒழிப்பது இந்த வாழ்க்கையில் சுயத்தை அறிய உதவுமா? நமது இலக்கியம், இசை, ஓவியம், காதல், குழந்தைமை, தாய்மை இவை அனைத்தையும் விஞ்ஞானம் ஒழிக்குமாறு விட்டுவிடலாமா? கூடவே கூடாது.
  • விஞ்ஞானத்தின் வளர்ச்சியினால் சுபிட்சமடைய வேண்டிய மனித இனம், துக்கப்பட வேண்டிய துரதிருஷ்ட நிலைக்கு ஆளாகியிருக்கிறது. உதாரணத்திற்கு நமது கைப்பேசிக்கான மின்கோபுரங்களின் மின்காந்த அலைகள் சிட்டுக் குருவிகளை ஒழித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. நாய்களை ஒழிப்பதற்கே நாம் சட்டம் இயற்றியிருக்கிறபோது, சிட்டுக் குருவிகளை இப்படி ஒழிப்பது பற்றி சிந்தித்திருக்கிறோமா?
  • போக்குவரத்து வாகனப் பெருக்கத்தால் கரிமங்களின் வெளியீடு பெருகி, பூமியின் வெப்பநிலை கொதிநிலையை நெருங்குவதால், இந்தப் பூமியே வாழத் தகுதியற்றதாகி விடுமோ என்ற அபாயம் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு அவசியமாகக் கடிவாளம் போடத்தான் வேண்டியுள்ளது.
  • தாயின் கர்ப்பத்தில் உள்ள சிசுவை ஆணா, பெண்ணா என முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும். அப்படி அறிவதை சட்ட விரோதம் என்று அரசு எச்சரிக்கை செய்கிறது. இதுதான் விஞ்ஞானத்திற்குப் போடப்படுகிற கடிவாளம். இந்தப் பின்புலத்தில் உலக நாடுகளுக்கிடையே, பாரம்பரியத்தையும் நவீனத்தையும் சரியாகப் பாதுகாக்கிற நாடாக நமது பாரதம் எழுந்து நிற்கிறது. பிரதமர் நரேந்திர மோடி இதில் பிரகாசிக்கிறார். கரோனா காலத்தில் இந்தியாதான் அதிகமான நாடுகளுக்கு தடுப்பூசிகளை இலவசமாக ஏற்றுமதி செய்தது.
  • இப்போது பக்கத்து நாடான இலங்கை படும் துயரத்தைப் பார்த்து, கோடிக்கணக்கில் நிதி வழங்கியதோடு, உணவுப் பொருள், எரிபொருள், சமையல் வாயு ஆகிய அனைத்தையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. இதேபோல உக்ரைன் மக்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டதைப் பார்த்து அங்கு உடனடியாக சண்டை நிறுத்தப்பட வேண்டும் என்று உரத்த குரலில் முழங்குபவர் பாரத பிரதமர்தான்.
  • உலக நாடுகள் அனைத்தும் பாரதத்தைக் கொண்டாடுகிற காலம் வெகுதொலைவில் இல்லை என்பதை மட்டும் இந்தியர்களாகிய நாம் புரிந்துகொண்டால் போதும்.

நன்றி: தினமணி (08 – 05 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்