TNPSC Thervupettagam

ஊரடங்குக் கட்டுப்பாட்டில் மாற்றம் தேவை!

May 19 , 2021 1169 days 501 0
  • திமுக அரசு பதவியேற்றதும் அமலாக்கிய ஊரடங்கு பல வகைகளில் மெச்சக்கூடியதாக இருந்தது; ஏனெனில், பெருந்தொற்று காலகட்டத்தில் மக்களின் உயிரைக் காத்திடல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் மக்களின் வாழ்வாதாரங்களையும் காத்திடுவது ஆகும்.
  • மக்களை அலைக்கழிக்காமல் போதிய அவகாசம் தந்தது ஆகட்டும்; அன்றாடம் நண்பகல் 12 மணி வரை கடைகள் இயங்கும் என்ற ஊரடங்கு காலக் கடைகளுக்கான நேர நிர்ணயம் ஆகட்டும்; அத்தியாவசிய சேவைகளின் பட்டியலில் நடைபாதைப் பூக்கடைகள் வரை உள்ளடக்கப்பட்டது ஆகட்டும்; மேம்பட்ட மனிதாபிமான அணுகுமுறை அதில் வெளிப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக மக்களில் ஒரு பகுதியினர் இதன் அருமையை உணரவில்லை.
  • சாலைகளில் ஊரடங்கு நேரங்களிலும் ஏராளமானோர் சகஜமாகத் திரிந்தார்கள். அது தடுத்து நிறுத்தப்பட வேண்டிய அவசியத்தைப் பலரும் சுட்டிக்காட்டியது முதல்வர் ஸ்டாலின் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் வெளிப்பட்டது.
  • விளைவாக ஊரடங்கைத் தீவிரமாக்க தமிழக அரசு உத்தரவிட்டதும் நியாயமானது. ஆனால், ஊரடங்கைத் தீவிரப்படுத்துதல் எனும் பெயரில் அன்றாட இயக்க நேரத்தை காலை 10 மணிக்குள் சுருக்கியதும், அனுமதிக்கப்பட்ட சேவைகளின் பட்டியலைச் சுருக்கியதும் சரியான நடவடிக்கைகளாக இல்லை.
  • ஊரடங்கைத் தீவிரப்படுத்த காவல் துறை இப்போது ஏராளமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
  • முன்புபோல அல்லாமல், ஆங்காங்கே ஆட்களை மறித்து விசாரிப்பதும், கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு அபராதம் விதிப்பதும், வழிமறித்து திருப்பியனுப்புவதும் நல்ல பலன்களைத் தருகின்றன.
  • காலை 10 மணிக்குள் எல்லா கடைகளும் மூடப்படும் என்ற ஏற்பாடானது வணிகர்களுக்கும் அவதி; மக்களுக்கும் அலைக்கழிப்பு. இதனால், பெரும் கூட்டம் கடைவீதிகளில் கூடுகிறது.
  • கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாததால் தனிமனித இடைவெளியையும் யாராலும் பராமரிக்க முடியவில்லை.
  • சில மணி நேரங்களுக்குள் விற்க முடியாததால் வீணாகும் காய் – கனிகள் உண்டாக்கும் நஷ்டம் வணிகர்களில் தொடங்கி விவசாயிகள் வரை நீள்கிறது.
  • மேலும், காய்கறி – கனி வண்டிகளுக்கு முன்னதாக அனுமதிக்கப்பட்டிருந்தது விளிம்புநிலையினருக்கான வேலைவாய்ப்பாக அமைந்ததுடன் வீடு தேடி காய் – கனி வண்டிகள் சென்றதால் கடைவீதிகளில் கூட்டம் கொஞ்சம் மட்டுப்படவும் வழிவகுத்தது.
  • இப்போது அவர்களுக்கான தடை இரு தரப்புக்கும் இழப்பாகியிருக்கிறது. உணவுக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கும்போது டீக்கடைகளுக்கோ பழச்சாறுக் கடைகளுக்கோ அனுமதி மறுக்கப்படுவதில் நியாயமே இல்லை.
  • ஊரடங்கு காலத்தில் எல்லோரும் வீடடங்கி இருந்தாலும், பல்லாயிரம் முன்களப் பணியாளர்கள் பணியாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள்; மருத்துவமனைகளில் பெரும் தொகையினர் இருக்கிறார்கள்.
  • இவர்களுக்கெல்லாம் ஒரு டீ, ஜூஸ் வேண்டும் என்றாலும் அதற்கும் ஒரு கடை திறந்திருக்க வேண்டும் இல்லையா? வாகனங்களுக்குக் காற்று பிடிக்கும் கடைகள், பஞ்சர் ஒட்டும் கடைகளையும் அனுமதிக்க வேண்டிய பட்டியலில் சேர்க்கலாம்.
  • அதேபோல, அரசுக்கு வருவாய் அளிக்கக் கூடிய பதிவுத் துறை அலுவலகங்களும், பத்திரப் பதிவு சார்ந்த சேவைகளும் அனுமதிக்கப்படுவதில் எந்தத் தவறையும் காண முடியாது; நெரிசலுக்குரிய இடங்கள் அல்ல அவை. அரசு தன்னுடைய ஊரடங்கு விதிகளை மறுபரிசீலிப்பது அவசியம்.

நன்றி: இந்து தமிழ் திசை (19 - 05 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்