TNPSC Thervupettagam

எத்தியோப்பியா காட்டும் உணவுப் பாதை

April 28 , 2022 831 days 501 0
  • நண்பர் ஒருவர், “இந்த வார இறுதியில் அட்டிஸ் போலாமா?” என்றொரு செய்தியை அனுப்பியிருந்தார்.
  • ‘அட்டிஸ்’ என்பது தான்சானியாவின் டார் எஸ் ஸலாம் பகுதியில் அமைந்துள்ள எத்தியோப்பிய உணவகம். எத்தியோப்பியாவின் தலைநகரான அட்டிஸ் அபாபா என்னும் பெயரின் சுருக்கம். உடனே ஒப்புக்கொண்டேன்.
  • எத்தியோப்பிய உணவில் மிக முக்கியமானது ‘இஞ்சிரா’ என்னும் உணவு வகை. தோசைக்கும், அப்பத்துக்கும் பிறந்த கலப்பு உணவு எனச் சொல்லலாம்.
  • தொழில் நிமித்தமாக அட்டிஸ் அபாபா செல்லும்போதெல்லாம் உண்ணும் உணவு இது.

ஆப்பிரிக்காவுக்கு ஏற்ற பயிர்

  • இஞ்சிராவைத் தயாரிக்கப் பயன்படும் சிறுதானியத்தை ஆங்கிலத்தில் ‘டெஃப்’ என அழைக்கிறார்கள். எத்தியோப்பியாவில் தோன்றிய இந்தச் சிறுதானியம், உண்மையிலேயே மிக மிகச் சிறிய தானியம்.
  • கடுகைவிடச் சிறியது. ஆனால், இதிலுள்ள புரதச் சத்துகளும் கனிமச் சத்துக்களும் மற்ற தானியங்களை ஒப்பிடுகையில் அதிகம்.
  • உலகில் கணிசமான  மக்களுக்கு கோதுமை உள்ளிட்ட பல தானியங்களில் உள்ள க்ளூட்டென் ஒவ்வாமை உண்டு.
  • இதில் க்ளூட்டென் இல்லை என்பதால், அவர்களுக்கு இது ஒரு பெரும் வரப்பிரசாதம். உலகச் சந்தைகளில், டெஃப் கிலோ 450 ரூபாய்க்கு விற்கிறது.
  • வறட்சியைத் தாங்கி வளரும் சக்தி கொண்ட டெஃப் தானியமானது, ஆப்பிரிக்கா போன்ற பாசன நீர்க் கட்டமைப்பு வசதியில்லா கண்டத்துக்கு மிகவும் ஏற்ற பயிர். இந்தியாவின் ராகி, கம்பு, சோளம், சாமை வரகுபோல.
  • உணவில் அதிக மாமிசமும், டெஃப்பால் செய்யப்பட்ட இஞ்சிராவும் உண்ணுவதால், எங்களில் உடல் பருமன் கொண்டவர்களை அதிகம் பார்க்க முடியாது என்பார்கள் எத்தியோப்பியர்கள். அது ஓரளவு உண்மைதான்.
  • எத்தியோப்பியர்கள் ஒல்லியாக உயரமாக, மற்ற ஆப்பிரிக்கர்களிடம் இருந்து மாறுபட்ட தோற்றத்தில் இருப்பார்கள். உடல் பருமன் கொண்டவர்களை அங்கே நான் அதிகம் கண்டதில்லை.
  • அட்டிஸ் உணவகம் ஒரு பழங்கால வீட்டின் முதல் தளத்தில், எத்தியோப்பியக் கலைப் பொருட்களுடன் அலங்கரிக்கப்பட்டு மிக அழகாக இருந்தது.
  • தொடக்க உணவாக, ரோஸ்ட்டட் இஞ்சிராவை ஆர்டர் செய்தோம். நம்ம ஊர் மைசூர் தோசைபோல பெரிபெரி (மிளகாய் சாஸ்) தடவி மிகச் சுவையாக இருந்தது.
  • ஆனால், அதைச் சாப்பிட்டு முடிப்பதற்குள்ளாகவே வயிறு நிறைந்துவிட்டது. பின்னர் வந்த இஞ்சிராவுடன் கூடிய காளானைக் கொஞ்சம் மட்டும் சாப்பிட்டுவிட்டு, பார்சலாக வாங்கிக் கொண்டோம்.

இக்ரிசாட்

  • திரும்ப வீட்டுக்கு வருகையில், அண்மையில் ஹைதராபாத்தில் உள்ள வறண்ட வெப்ப மண்டலத்துக்கான பன்னாட்டுப் பயிர் ஆராய்ச்சி நிறுவனம் (International Crop Research Centre for Semi-arid Tropics – ICRISAT – இக்ரிசாட்) வெளியிட்டிருந்த ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை நினைவுக்கு வந்தது.
  • அனிதா என்னும் மூத்த ஆராய்ச்சியாளர், நான்கு நாடுகளில் நடந்த எட்டு பரிசோதனைகளை ஒன்றிணைத்து வெளியிட்டிருந்த ஆராய்ச்சி முடிவுகள் பெரும் வியப்பை ஏற்படுத்துகின்றன.
  • இந்த ஆராய்ச்சிகள் சிறு குழந்தைகள், பால்வாடி செல்லும் குழந்தைகள், மற்றும் ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளிடையே, 3 மாதம் முதல் 4.5 ஆண்டுகள் வரை நடத்தப்பட்டவை.
  • இந்தப் பரிசோதனைகளில், ராகி, சோளம், சிறுதானியக் கலவை (ராகி, கம்பு, குதிரைவாலி, கோடோ தானியம்) கொண்ட உணவுகளை உண்ட குழந்தைகளின் வளர்ச்சி, அரிசியை உணவாக உண்ட குழந்தைகளுடன் ஒப்பிடப்பட்டது.
  • அரிசி உணவை உண்ட மாணவர்களைவிட, சிறுதானிய உணவை உண்ட மாணவர்களின், சராசரி உயரம் 28.2%, எடை 26%, புஜத்தின் சுற்றளவு 39%, மார்பளவு 37% அதிகரித்திருந்தன என அந்த ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.
  • ஆனால், இந்தியாவின் வேளாண் கொள்கைகள் கடந்த 70 ஆண்டுகளாக, நெல் மற்றும் கோதுமை சார்ந்தே உள்ளன.
  • இந்தியா விடுதலை பெற்ற காலத்தில், இருந்த உணவுப் பற்றாக்குறையை நீக்க, உடனடியாக அதிக உணவு உற்பத்தி, அதற்கான பாசனக் கட்டமைப்புகள், அரசுக் கொள்முதல் என ஏற்படுத்தி முதல் 20 ஆண்டுகளில் உணவுத் தன்னிறைவை அடைந்தோம்.
  • ஆனால், அதையே அடுத்த 50 ஆண்டுகளாக எந்த மீளாய்வும் செய்யாமல் தொடர்ந்து கொண்டிருப்பது சரியானதாகத் தெரியவில்லை.
  • சென்ற ஆண்டு, இந்தியா 300 மில்லியன் டன் உணவுத் தானியங்களை உற்பத்தி செய்துள்ளது. அதாவது 30 கோடி டன் – 30 ஆயிரம் கோடி கிலோ. 
  • தலைக்கு வருடம் 220 கிலோ உணவு தானியம் உற்பத்தியாகிறது. இது தேவைக்கு மிக அதிகம். இதற்காக மத்திய அரசு கொள்முதல் மானியமாக 1.80 லட்சம் கோடியைச் செலவிடுகிறது.
  • மாநில அரசுகளும் பெரும் செலவு செய்கின்றன. இதில் பாதி, நெல்லுக்குச் செலவிடப் படுகிறது. உணவு தானியங்களில், மிக அதிக நீரைக் கோருவதும், மிகக் குறைவான ஊட்டச்சத்து கொண்டதுமான தானியம் நெல்தான்.
  • பல மாநிலங்களில் நீராதாரங்கள் வரைமுறையின்றிச் சூறையாடப்படுகின்றன. இந்தச் செல்திசை நீடித்து நிலைக்கக் கூடியதல்ல.
  • எனவே, இந்தியாவின் வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்புக் கொள்கைகளை அரசுகள் மீளாய்வுக்குள்ளாக்க வேண்டியது உடனடித் தேவை.

தமிழ்நாடு செய்ய வேண்டியது என்ன?

  • தமிழ்நாட்டில், இந்த ஆண்டு வேளாண் பட்ஜெட்டில், சிறுதானிய உற்பத்திக்கெனத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
  • குழந்தைகளுக்கான சத்துணவுத் திட்டத்திலும் சிறுதானிய உணவு வகைகள் அறிமுகப் படுத்தப் படும் என அறிவித்திருக்கிறது அரசு.
  • இந்தத் திட்டத்தை அமல்படுத்துகையில், ஹைதராபாத்தில் உள்ள 'இக்ரிசாட்'டுடன் இணைந்து, அரிசி மற்றும் சிறுதானிய உணவுகளை ஒப்பிட்டு, எது மாணவர்களின் உடல் வளர்ச்சிக்கு அதிக உதவியாக உள்ளது என்னும் ஆராய்ச்சியைச் செய்யலாம்.
  • இக்ரிசாட்டின் ஆராய்ச்சி முடிவுகள் தமிழ்நாட்டிலும் உறுதிசெய்யப்பட்டால், தமிழ்நாட்டில் சிறுதானிய உற்பத்திக்கு மேலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, நல்ல கொள்முதல் விலை கொடுக்கப்படலாம்.
  • பொது விநியோகத்திலும், அரிசியின் பங்கு குறைக்கப்பட்டு, சிறுதானியங்களின் பங்கு அதிகப் படுத்தப்படலாம். எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் ராகிக்கு கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.25 ஆக உள்ளது.
  • ஆனால், கர்நாடகாவில் கிலோவுக்கு ரூ.35 ஆக உள்ளது. தமிழ்நாட்டிலும் இந்த அளவுக் கொள்முதல் விலை கொடுக்கப்பட்டால், அது தமிழ்நாட்டில் பின் தங்கியுள்ள மாவட்டங்களான தர்மபுரி, கிருஷ்ணகிரி உழவர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.
  • மக்களுக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருட்கள் கிடைப்பது அதிகரிக்கும். ராகி, கம்பு போன்றவை மிகக் குறைவான நீர்த் தேவை கொண்டவை.
  • இந்தியா விடுதலை பெற்ற காலத்தில் இருந்த உணவுப் பற்றாக்குறையை நீக்கும் நோக்கில் இந்திய வேளாண் கொள்கைகள் வடிவமைக்கப்பட்டன. இன்று நாம் தேவைக்கு அதிகமாக உணவை உற்பத்தி செய்கிறோம்.
  • எனவே, இன்று நாம், சத்தான உணவை உற்பத்தி செய்தல், உழவர்களுக்கான சரியான கொள்முதல் விலையைக் கொடுத்தல், வேளாண்மைக்கான நீர்ச் செலவைக் குறைத்தல் போன்ற அடுத்த நிலைக் குறிக்கோள்களை நோக்கி நகர வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.

நன்றி: அருஞ்சொல் (28 – 04 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்