TNPSC Thervupettagam

கண்ணகியின் ‘புகாருக்கு’ நீதி கிடைக்குமா?

July 22 , 2021 1106 days 562 0
  • கீழடியில் மனித எலும்புக் கூடு, சிவகளையில் முதுமக்கள் தாழி என அடுக்கடுக்காய் அகழாய்வுக் கண்டுபிடிப்புச் செய்திகள் வெளிவருகின்றன.
  • வரலாற்றில் ஒரு புதிய கண்டுபிடிப்பு பழைய கண்டுபிடிப்புகளைப் புரட்டி வீசுகிறது. ஆனால், பூம்புகாரில் தொடங்கிய அகழ்வாராய்ச்சி மட்டும் முழுமை பெறாமலே போய் விட்டது.
  • மனித நாகரிகங்கள் அனைத்தும் நதிகளிலோ நதி கடலோடு கலக்கும் கழிமுகப் பகுதிகளிலோதான் தோன்றியுள்ளன.
  • நைல் நதிக்கரையில் எகிப்திய நாகரிகம், யூப்ரடீஸ், டைக்ரீஸ் நதிகளுக்கிடையில் சுமேரிய நாகரிகம், சிந்து நதியில் இந்திய நாகரிகம், மஞ்சள் நதியில் சீன நாகரிகம் என்பது போல, காவிரியின் கழிமுகத்திலும் பழம்பெரும் நாகரிகத்தின் வரலாற்றுச் சுவடுகள் இருக்கக்கூடும்.
  • பூம்புகாரில் அகழ்வாராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டால் அதை மெய்ப்பிக்கும் வலுவான சான்றாதாரங்கள் கிடைக்கக்கூடும்.

துவாரகையும் புகாரும்

  • கடலில் மூழ்கியதாகக் கூறப்படும் குஜராத்தில் உள்ள துவாரகையைக் கண்டறிய 1981-ல் கடல் அகழாய்வு நடந்தது. கோவா தேசிய ஆழ்கடல் ஆய்வு நிறுவனத்தினர் நவீனக் கருவிகள் மூலம் புவியியல் ஆய்வுகள் மேற்கொண்டனர்.
  • அப்போது, பூம்புகார் கடல் பகுதியில் 3 மீ உயரத்திற்குக் கூம்பு போன்ற மேடுகள் தெரிகின்றன எனவும் அவை 10 மீ அளவுக்கு அடிப்பரப்பைக் கொண்டுள்ளன எனவும் நீரில் மூழ்க வல்லவர்களை வைத்து இதனை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோவாவின் தேசியக் கடலாய்வு நிறுவன அமைப்பு கூறியிருந்தது.
  • துவாரகையில் ஆய்வு நடந்த 10 ஆண்டுகள் கழித்து 1991 பிப்ரவரியில் பூம்புகார் ஆய்வு நடந்தது.
  • பூம்புகார் கடலடி அகழாய்வுக்காக தமிழ்நாடு அரசு 1990-91-ல் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கியது. 1993-95களில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட அகழாய்வுகள் நடந்தன. இந்த ஆய்வின் முடிவுகளிலிருந்து உலகின் நவீன நகர நாகரிகங்களில் பூம்புகாரும் ஒன்றெனத் தெளிவானது.
  • எனினும் தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வைப் பாதியில் நிறுத்திவிட்டது.

பேசப்படாத நகரம்

  • தமிழ்நாட்டில் எங்கு தோண்டினாலும் தொன்மையின் சின்னங்கள் கிடைத்தபடியே இருக்கின்றன. எனினும், நமது தொன்மை நகரங்களில் ஒன்றான பூம்புகார் குறித்துப் போதிய அளவில் பேசப்படுவதே இல்லை.
  • காகந்தி, சம்பாபதி, பல்புகழ்மூதூர், மண்ணகத்து வான்மதி, சோழப்பட்டினம், கோலப்பட்டினம், கபேரிஸ் எம்போரியம் என்று எத்தனையோ பெயர்களில் அந்நகரம் அழைக்கப் பட்டிருக்கிறது. சோழர்களின் துறைமுகப் பட்டினமான பூம்புகாரில், உலகின் வாணிபப் பொருட்கள் யாவும் குவித்து வைக்கப்பட்டதாகப் பட்டினப்பாலை பேசுகிறது.
  • கிரேக்கர்கள், ரோமாபுரியினர், சீனத்தவர், அரேபியர், எகிப்தியர் உள்ளிட்டோரைப் புகார் நகரம் வாழ வைத்துள்ளது.
  • பல நாட்டுக் கைவினைஞர்கள் கூடிச்செய்த பசும்பொன் மண்டபம் அங்கு இருந்துள்ளது. புகாரின் நகர அமைப்பு மருவூர்பாக்கம், பட்டினப்பாக்கம், நாளங்காடி என்ற பிரிவுகளைக் கொண்டிருந்தது.
  • செந்தமிழ்ப் புலவர்கள் மற்றும் ஒளிவீசிய நாட்டியத் தாரகைகளின் தாய்நிலமாக புகார் விளங்கியது

பாண்டியர்களின் படையெடுப்பு

  • வரலாறு நெடுகிலும் தரைவழிப் படையெடுப்பு களாலும் இயற்கைப் பேரிடர் சீற்றங்களாலும் புகார் தொடர் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறது. மணிபல்லவம் சென்ற மணிமேகலை திரும்பிவந்தபோது, புகாரை உப்புக் கடல் மூழ்கடித்திருந்தது.
  • பூம்புகாரைக் கடல் கொண்டது பற்றி கலித்தொகை, முல்லைக்கலி, சிலப்பதிகாரம் ஆகியவை கூறுகின்றன. கி.பி. 12-13ம் நூற்றாண்டில் சோழ மண்டலத்தில் பாண்டியர் ஆதிக்கம் வலுத்தது.
  • சோழர்களின் தலைநகராக இருந்த உறையூர், தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், பழையாறை ஆகியவை நிர்மூலமாக்கப்பட்டன. இவற்றை மெய்க்கீர்த்திகளாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
  • மாறவர்மன் சுந்தர பாண்டியனின் படையெடுப்பின்போது பூம்புகாரும் தரைமட்டமாக்கப்பட்டது. பட்டினப்பாலை பாடிய உருத்திரங்கண்ணனார் கரிகாலனிடம் பரிசாகப் பெற்ற 16 கால் மண்டபத்தை அழிக்க மனமின்றி, அதை மட்டும் விட்டுவைத்ததாக திருவெள்ளறைக் கல்வெட்டு கூறுகிறது. கடைசியில், புகார் ஒரு சிற்றூராகச் சுருங்கியது.
  • சாயாவனத்து மூன்றாம் குலோத்துங்கனின் கல்வெட்டு புகாரை நாங்கூர் நாட்டுக் காவிரிப் பூம்பட்டினம் எனச் சிற்றூராக அறிமுகம் செய்கிறது. சோழநாட்டின் துறைமுக நகரம் உருத்தெரியாமல் போய்விட்டது.

மானுடத்தின் அடையாளம்

  • லண்டனை பூம்புகார் எப்போதோ விஞ்சிவிட்டதாக டி.வி.சதாசிவ பண்டாரத்தார் கூறியிருக்கிறார். 19-ம் நூற்றாண்டில் தெரிந்த லண்டனின் அழகைக் காட்டிலும் பன்மடங்கு கூடுதலாக 2,000 ஆண்டுகளுக்கு முன்பே பூம்புகார் திகழ்ந்ததாக அவர் எழுதியுள்ளார்.
  • மனித குலத் தொன்மை என்பது ஒரு நிலத்துக்கும், ஒரு இனத்துக்கும் மட்டும் சொந்தமானதல்ல. அது மானுடத்தின் ஒட்டுமொத்த அடையாளம்.
  • தமிழக நிலப்பரப்பில் காலம்தோறும் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. மதுரை இப்போது இருக்கும் இடத்தில் சங்க காலத்தின் மதுரை இல்லை.
  • இப்போதைய அரியலூர் அப்போது கடல் பகுதியாக இருந்தது எனப் புவியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
  • திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் புவி அறிவியல் துறை, சீர்காழியைக் கடலில் இருந்து விலகிய நிலப் பகுதி என்றும் புகாரைக் கடலில் மூழ்கிய நிலம் என்றும் கூறியுள்ளது. புவியியல் மாற்றங்களால் நிகழ்ந்த மாற்றங்களை அகழ்வாராய்ச்சிகளின் துணையோடுதான் அறிந்துகொள்ள முடியும்.
  • ஆதிச்சநல்லூர் ஆய்வின் அனுபவங்கள் பூம்புகாரில் மீண்டும் நிகழக் கூடாது. 1876-ல் ஜெர்மானியக் குழுவினால் ஆதிச்சநல்லூரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2004-ல்தான் மீண்டும் நடந்தது.
  • அந்த ஆராய்ச்சியின் முடிவுகளும்கூட உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வின் தலையீட்டின் காரணமாகவே 17 ஆண்டுகள் கழித்து 2021-ல் வெளியிடப்பட்டுள்ளன.
  • கடலில் மூழ்கிய புகார் நகரின் எஞ்சிய அடையாளங்களை நிலத்திலும் நீரிலுமிருந்து மீட்க வேண்டும். தொல்பொருள் அகழ்வாராய்ச்சி இப்போது புதிய வாய்ப்புகளைப் பெற்றுள்ளது.
  • நீர்மூழ்கிக் கப்பல்களைப் பயன்படுத்தியும், சோலார் உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தியும் பூம்புகாரில் அகழாய்வுகளைச் செய்ய வேண்டும்.
  • இதற்காக ஐநா அமைப்பின் உலகக் கடலடி ஆணையத்தின் உதவியையும்கூடப் பெறலாம். கண்ணகி பிறந்து வளர்ந்த நகருக்கு நீதி கிடைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (22 - 07 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்