கருத்தடையும் பெண் விடுதலையும்
- மறுஉற்பத்திக்கு ஏற்ப உற்பத்தி இல்லாதது; பஞ்சம், வறுமை, தொடர்ந்து பத்துப் பதினைந்து குழந்தைகளைப் பெற்றதால் இளம் வயதிலேயே கிழப்பருவம் அடைந்தது; தாய், சேய் உடல்நலம் குன்றுதல், மரித்தல்; குடும்பச் சொத்தைப் பாதுகாத்தல் போன்றவற்றால் பல பத்தாண்டுகளுக்கு முன்னர் பெண்களின் நிலை படுமோசமாக இருந்தது.
- மறுஉற்பத்திக்கான தொழிற்சாலை ஆக்கப்பட்ட பெண்ணுடல் கருவுறுதலைக் கட்டுப்படுத்தும் பெண் விடுதலை அரசியலை 1920களில் சுயமரியாதை இயக்கம் முதலில் முன்னெடுத்தது. “உண்மையான பெண்கள் விடுதலைக்குப் பிள்ளைபெறும் தொல்லை அடியோடு ஒழிந்துபோக வேண்டும்” எனப் பெரியார் 1928இல் ‘குடிஅரசு’ இதழில் தலையங்கம் தீட்டினார்.
- ‘பார்ப்பனரல்லாத மக்களில் ஏழைகள் படுந்துயரத்தை அறிந்த நாம் பிரஜா உற்பத்தித் தடைக்கு வேண்டிய வழிகளை நூல்கள் மூலமாகவும், சொற்பொழிவுகள் மூலமாகவும் மக்களுக்கு எடுத்துக்காட்டி அதனுடைய நன்மைகளைப் புகட்ட வேண்டும்’ என்று 1929 மே 25 அன்று நடைபெற்ற பட்டுக்கோட்டை சுயமரியாதை மாநாட்டில் எஸ்.குருசாமி வலியுறுத்தினார். ‘பெண்கள் விடுதலையடையவும் சுயேச்சை பெறவும் கர்ப்பத்தடை அவசியம்’ என்று 1930இல் ‘குடிஅர’சில் தலையங்கம் எழுதிய பெரியார், இது ‘ஆண்களையும் விடுவிக்கும்’ என்றெழுதினார்.
- இக்காலத்தில் கர்ப்பத் தடையைச் செயல்படுத்தக் கோரி சென்னை மாகாணப் பேரவையில் அறிமுகம் செய்யப்பட்ட மசோதாவைச் சுகாதார அமைச்சர் நிராகரித்தார். இதனால், ‘தென்னிந்தியத் தீண்டப்படாத கிறிஸ்துவ மகாஜன சபை’ திருச்சிராப்பள்ளியில் 1933 நவம்பர் 5 அன்று எஸ்.ராஜமாணிக்கம் தலைமையில் நடத்திய பொதுக்கூட்டத்தில், “கர்ப்பத்தடை தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உள்ள ஏழை மக்களுக்கு அவசியம் வேண்டும்” என்று எ.தைரியம், எ.தனசாமி, எம்.செபஸ்தியான், உ.அற்புதசாமி முதலியோர் பேசினர்.
- மேலும், “தீண்டப்படாதார், தாழ்த்தப்பட்டோர் எனப்படுகிற ஏழைகள் அதிக மக்களைப் பெற்று, அம்மக்களை ஆதரிப்பதற்குத் தகுதியான வழியில்லாமல் கஷ்டப்படுவதால், கர்ப்பத்தடை அவசியத்திலும் அவசியம். ஆதலால், அரசாங்கமும் ஏழை மேல் அனுதாபமுள்ள சட்டசபை அங்கத்தவர்களும், தாழ்த்தப்பட்ட ஏழை மக்கள் மேல் கிருபை கூர்ந்து, கல்யாணஞ் செய்யாமலும், குடும்பத்தின் கஷ்டத்தை அறியாதவர்களுமான ஒருசில சுயநலக்காரச் சிறுபான்மையோரின் எதிர்ப்பைக் கவனியாமல், கிறிஸ்துவ மதத்தில் 100க்கு 75 அதிகப்படியாயுள்ள பெரும்பான்மையான ஏழைகளின் வேண்டுகோளைக் கவனித்து அவசியம் கர்ப்பத்தடை மசோதா நிறைவேறி, சட்டமாக வேணுமென்று இக்கூட்டம் தாழ்மையாய் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்ளுகிறது” எனத் தீர்மானம் நிறைவேற்றினர்.
- அலகாபாத்தில் 1932 அக்டோபரில் நடைபெற்ற குவாலியர் மாதர் மகாநாட்டில், ‘கர்ப்பத்தடை போதனா நிலையங்கள் ஏற்படுத்த வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றினர். இது கர்ப்பத் தடை அரசியல் இந்தியா முழுமைக்கும் பரவியதைக் காட்டுகிறது.
கற்பித்தலும் கருவிகளும்:
- இக்காலத்தில், குடும்பத்தினர் படிக்கும் ‘மண வாழ்க்கையின் மர்மங்கள்’, ‘இன்ப வாழ்க்கையின் இரகசியங்கள்’, ‘இல்லற இன்பவிஜயம்’, ‘கர்ப்ப சாஸ்திரம்’ போன்ற நூல்கள் வெளியாயின. ‘கண்ணை மூடிக்கொண்டு விழுந்து பின் துக்கிக்க வேண்டாம். முன்னதாகவே கலியாண வாழ்வின் இரகசியத்தையும் விஷயத்தையும் கற்றுக்கொண்டு சுகமாய் வாழ ‘மண வாழ்க்கையின் மர்மங்கள் நூலை வாசிக்கவும்’ என்று விளம்பரம் செய்யப்பட்டது.
- கர்ப்பாட்சி அல்லது சுவாதீன கர்ப்பம்’ நூல் “கர்ப்பம் எப்படி உண்டாகின்றது? அதிகப் பிள்ளைகளைப் பெறுவதினால் உண்டாகும் கஷ்ட நஷ்டங்களென்ன? ஸ்தீரி புருஷர்கள் தங்களுடைய இன்ப சுகத்திற்கு இடையூறில்லாமல் போதுமான பிள்ளைகளைப் பெறுவதெப்படி? பிள்ளை வேண்டாம் என்று எண்ணுகிற காலம்வரையில் கர்ப்பம் வராமலே தடுத்து வைத்துக் கொள்ளுவதெப்படி? மறுபடியும் வேண்டும் போது கர்ப்பம் அடைவதெப்படி?” என்பது போன்றவற்றை எளிதில் வாசித்தறியத் தெளிவான தமிழிலும், ஆண் பெண் மர்ம அவயவச் சித்திரங்களும், கர்ப்பாட்சிக் கருவிகளின் சித்திரங்களும் அவற்றின் உபயோகங்களையும் விவரித்து ஒரு ரூபாய் விலையில் விற்கப்பட்டது.
- இந்நூல்களின் விளம்பரங்களில் கணவன் - மனைவி இருவரும் தலா இரு குழந்தைகளைத் தோளில் சுமந்துகொண்டு அவர்களைச் சுற்றிச் சில குழந்தைகள் நிற்கும் படத்தை வரைந்து, ‘கர்ப்பாட்சி இல்லாததனால் வந்த விபத்து’ என்கிற எச்சரிக்கையுடன், இந்நூல்கள் குடும்பத்தில் இருக்க வேண்டியவை என வலியுறுத்தப்பட்டது.
- கருத்தரித்தலைத் தடுக்கும் கருவிகளில், கர்ப்பத் தடைக்கு இன்றியமையாதது என்று மருத்துவர் மேரிடோப்ஸ் முதலானவர்கள் பரிந்துரைத்த மெல்லிய ரப்பர் பெஸாரியைப் பெண்கள் உபயோகிக்கலாம் எனவும், உபயோகிக்கும் முறையையும் விளக்கி ‘சில்க்ரெட்’, ‘சில்க்டேப்’ முதலிய வகைகளில் ரூபாய் 2-8-0 விலையிலும், ஆண்களுக்கான ‘இரகசிய சுகானந்தன்’ என்ற ரப்பர் குழாய்கள், “சம்போகக் காலங்களில் பெண்களிடமிருந்து நோய்களை வாங்கிக் கொள்ளாமல் தடுக்கும்.
- இதனால் கெடுதல் இல்லை” எனக் கூறி ரூபாய் 1-0-0 விலையிலும் புத்தகக் கடைகளில் விற்கப்பட்டன. இவற்றை உபயோகிக்காமல் கர்ப்பமடைந்தால், ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டு, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட ‘கருவைத் தடுக்கும் ஒளஷதம்’ உபயோகிக்கும் முறையுடன் ரூபா 2-0-0 விலையில் விற்கப்பட்டது.
எதிர்ப்பின் அரசியல்:
- மேற்கத்தியக் கருவிகளையும் மருந்துகளையும் சிலர் எதிர்த்தனர். ஒரு மருத்துவத் தமிழ் இதழில் ‘வம்ச விருத்தி அடக்குமுறை’ என்ற கட்டுரை வெளியானது. இது, “தடை மருந்துகள் இயற்கைக்கு விரோதமானவை; மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இம்மருந்துகள் வியாபாரம் சம்பந்தப்பட்டுள்ளதால் பணக்காரர்கள் பணத்தைக் குவிக்கவும், ஏழைகள் மேலும் ஏழையாகவும் நேரிடுமேயொழிய, வேறொரு பலனுமில்லை” எனக் கூறியது.
- மேலும், “காமத்தைத் தூண்டும் வெங்காயம், பூண்டு, முருங்கை, இறைச்சி, சாராயம் போன்ற சைவ, அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும்” என்றும் கூறியது. “இவை பாரம்பரிய முறைகள் என்பதால், தற்காலத்திய நாகரிக வழிமுறைகளுடன் இவை பொருந்தாது. ஆகவே, ஆடவர்கள் இச்சையை அடக்குதல் வழி வம்சா விருத்தியைத் தள்ளிப்போட வேண்டும்” என அறிவுறுத்தியது.
- “இம்மருந்துகளால் முதலில் செய்யப்படும் குற்றம் விபசாரமாகும். பால்ய விதவைகள் இக்குற்றத்திற்கு உள்ளாவார்கள். அவர்கள் மறுவிவாகம் செய்யக் கூடாது என்பதால், காம இச்சையை வெறுத்துத் தொண்டு செய்தும், வைதீகச் சடங்குகள் வழியிலும் காலத்தைக் கழித்தனர். தடை மருந்துகளால் கர்ப்பம் தரிக்காதென்கிற நம்பிக்கை விதவைகளின் சமூகப் பயத்தை ஒழித்து, அவர்களைத் துன்மார்க்க வழிகளுக்குத் தூண்டுகின்றன. கர்ப்பம் தரிப்போம் என்ற அச்சம், ‘ஜாதிக் கட்டுப்பாடு’ முதலிய ‘சன்மார்க்க’ வழிகளுக்கு உதவின. இவற்றைக் கருத்தடைக் கருவிகளும் மருந்துகளும் ஒழித்துவிடும்” என அக்கட்டுரை அஞ்சியது.
கருவிகளின் இருமுகங்கள்:
- சூரியன், நட்சத்திரங்கள், காற்று, மழை, ஆண்களின் பார்வை போன்றவற்றால் பெண்கள் கருத்தரிப்பதாக உலகெங்கும் உள்ள நம்பிக்கையை 1937இல் ‘கர்ப்பம்’ கட்டுரையில் வினோதினி விவரித்த நிலைக்கு மாறாக, 1920களிலேயே கருத்தரித்தலின் அறிவியலை அறிந்ததால், அது 1930களில் பெண் விடுதலைக்கான அரசியலாகவும் மக்கள்தொகையைக் குறைக்கவும் பயன்பட்டது. சுதந்திர இந்தியாவிலும் மக்கள்தொகையைக் குறைக்க 1952இல் தேசியக் குடும்பக் கட்டுப்பாடு திட்டமும், 1970களில் கட்டாயக் கருத்தடைத் திட்டமும் அரசாங்கத்தின் செயல்பாடாக மாறின.
- சமகாலத்திலும் அரசு மருத்துவமனைகளில் குழந்தைபெறும் பெண்களில் பெரும்பாலானோர் சுயவிருப்பத்தால் கருத்தடைக் கருவியைப் பொருத்திக்கொள்கின்றனர்; அறுவைசிகிச்சையும் செய்துகொள்கின்றனர். ஆனால், இது ஆண்களுக்கு எளிமையாகவும் அரசின் கொள்கையாகவும் இருந்தபோதிலும்கூட மறுஉற்பத்தியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் ஆண்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்வதில்லை.
- ஆண்களுக்காக 1920களில் அறிமுகமாக்கப்பட்டு 1990களில் பரவலாக்கப்பட்ட கர்ப்பத்தடைக் கருவிகள், “பாலியல் நோய்களைப் பெண்களிடமிருந்து வாங்கிக்கொள்ளாமல்” பாலியல் உறவை அனுபவிக்கும் சுதந்திரத்தைக் கொடுக்கின்றன. அறிவியலால் உருவான ஒரே வகைக் கருவிகள் ஆண்களின் சுதந்திரத்துக்கும் பெண்களைக் கட்டுப்படுத்தும் ஆயுதமாகவும் பயன்படுத்தும் அரசியலே ஆணாதிக்கம்.
நன்றி: இந்து தமிழ் திசை (06 – 03 – 2025)