TNPSC Thervupettagam

கி.ரா.வுக்கு அரசு மரியாதை

May 21 , 2021 1167 days 473 0
  • தமிழ் இலக்கிய வெளியில் இயங்கும் வெவ்வெறு சிந்தனைப் பள்ளிகளின் மையமாக இருந்த கி.ராஜநாராயணனின் (1923-2021) மறைவு தமிழுக்கு இந்த ஆண்டில் ஏற்பட்ட பேரிழப்பாகும்.
  • தமிழ் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான கி.ரா., நாட்டாரியலும் செவ்வியலும் நவீனவியலும் இயைந்த புள்ளியில் இயங்கினார் என்பதும், பேச்சுநடைக்கும் எழுத்துநடைக்கும் இடையே அவருடைய படைப்புகள் பாலமாக அமைந்தன என்பதும் அவருடைய தனித்துவம் ஆகும்.
  • தான் சார்ந்த கரிசல் மண்ணையும் அதன் மனிதர்களையும் தமிழ் இலக்கியத்தின் மையப் பரப்புக்கு கி.ரா. கொண்டுவந்த பிறகே தமிழகத்தின் வெவ்வேறு நிலப்பகுதிகளிலிருந்தும் மண்ணை மையமாகக் கொண்ட இலக்கிய இயக்கங்கள் உருவெடுத்தன.
  • தமிழிலிருந்து நோபல் பரிசுக்கும் ஞானபீட விருதுக்கும் முன்னிறுத்தக்கூடிய தகுதி படைத்த முதன்மைப் படைப்பாளிகளில் ஒருவராக அவர் திகழ்ந்தார்.
  • கி.ரா.வினுடைய முதல் கதை 1958-ல் ‘சரஸ்வதி’ இதழில் வெளியானது. இவரது ‘வேட்டி’, ‘கதவு’, ‘நாற்காலி’, ‘கன்னி’, ‘பேதை’ போன்ற சிறுகதைகள் பரவலான கவனிப்பைப் பெற்றன.
  • 1976-ல் வெளியான அவருடைய முதல் நாவலான ‘கோபல்ல கிராமம்’ இலக்கிய உலகில் கி.ரா.வின் இடத்தை உறுதிப்படுத்தியது.
  • இதன் தொடர்ச்சியாக கி.ரா. எழுதிய ‘கோபல்லபுரத்து மக்கள்’ நாவலுக்கு 1991-ல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.
  • இந்த வரிசை நாவல்களில் மூன்றாவதாக ‘அந்தமான் நாயக்கர்’ நாவலை எழுதினார்.
  • இவை தவிர ‘கிடை’, ‘பிஞ்சுகள்’ போன்ற குறுநாவல்களும், அபுனைவு நூல்களில் ‘கரிசல் காட்டுக் கடுதாசி’யும் முக்கியமானவை.
  • வெவ்வெறு தலைப்புகளில் சிறுசிறு நூல்களாக அவர் வெளியிட்ட நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகள் ‘நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்’ என்ற ஒரே நூலாக வெளியிடப் பட்டது.
  • தமிழுக்கு கி.ரா. அளித்த மாபெரும் கொடைகளுள் இந்நூலும் ஒன்று. ‘மழைக்காகத்தான் பள்ளிக்கூடத்தில் ஒதுங்கினேன், அப்போதும் மழையையே பார்த்துக்கொண்டிருந்தேன்’ என்று எழுதிய கி.ரா.வின் மகோன்னதத்தை உணர்ந்த புதுச்சேரி பல்கலைக்கழகம் அவரை சிறப்புப் பேராசிரியராக்கிப் பெருமை கொண்டது.
  • நாட்டார் மரபை ஆவணப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தன் எழுத்தில் அந்த மரபுக்கு செவ்வியல் அந்தஸ்தையும் கொடுத்த கி.ரா., இறுதிக் காலம் வரை தளராமல் எழுதிக் கொண்டிருந்தார். தமிழே அவர் மூச்சாக இருந்தது.
  • நிறைவாழ்வை முடித்துச் சென்றிருக்கும் கி.ரா.வின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப் பட்டிருப்பதும், அவருக்கு அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதும் தமிழகத்தில் மிகுந்த வரவேற்புக்குரிய ஒரு புதிய தொடக்கம்.
  • மக்கள் இலக்கியர் கி.ரா. இன்னொரு மரபின் தொடக்கத்துக்கும் விதையாகியிருக்கிறார். இது தமிழக அரசுக்கும் கௌரவம்!

நன்றி: இந்து தமிழ் திசை (21 - 05 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்