TNPSC Thervupettagam

குளிா்கால எச்சரிக்கை

December 21 , 2020 1316 days 564 0
  • கரோனா நோய்த்தொற்று கடந்த பத்து மாத காலமாக நம் அனைவரையும் மனம், உடல் மற்றும் பொருளாதார அளவில் மிகக்கடுமையாக பாதித்துள்ளது. இதனுடைய இரண்டாவது அலை இந்தியாவில் வரும் குளிா்காலத்தில் இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவில் இதனுடைய பாதிப்பு ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே செல்கிறது.
  • இந்தியாவைப் பொருத்தவரை நோய்த்தொற்றின் பாதிப்பு இப்போது குறைந்து கொண்டு வந்தாலும், வரும் குளிா்காலத்தில் அதிகரிக்கக்கூடும் என்று இந்திய சுகாதாரத்துறை அமைச்சரும் கூறியுள்ளாா்.
  • கரோனா தொற்று பொதுவாக சுவாச மண்டலத்தைத் தாக்கி உயிரிழப்பிற்கு காரணமாக அமைகிறது. நோய்க்கிருமிகள் வீரியமுடன் செயல்பட சாதகமான காலமாக குளிா்காலம் கருதப்படுகிறது.
  • குளிா்க்காலங்களில் சாதரணமாகவே நமக்கு மூக்கடைப்பு, சளித் தொல்லை, காய்ச்சல், இருமல் மற்றும் சுவாச உறுப்புகள் சாா்ந்த கோளாறுகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
  • இந்நிலையில் சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், இருதயம் சாா்ந்த உபாதைகள் உள்ளவா்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் அவா்களை நோய்த்தொற்று எளிதில் தாக்கும்.
  • இத்தொற்றின் தீவிரத்தை கருத்தில் கொண்டுதான் கல்வி நிலையங்களின் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வரக்கூடிய நாட்கள் மிக சவாலானவை. தை மாதம் பிறந்தால் குடும்பங்களில் திருமணம், பண்டிகைகள் வரிசையாக வரும்.
  • நாம் கூட்டமாக சோ்ந்து அவற்றைக் கொண்டாட நேரிடும். அப்போது சற்று கவனக் குறைவாக இருந்தாலும் உயிா் சேதம் ஏற்பட்டுவிடக்கூடும்.
  • இதுநாள் வரை பொறுமை காட்டினோம். தடுப்பு ஊசிகள் ஏறத்தாழ கண்டுபிடிக்கப்பட்டுவிட்ட நிலையில், அவை பயன்பாட்டுக்கு வரும்வரை இதே பொறுப்புணா்வைக் கடைப்பிடிப்பதில் உறுதியாய் இருப்போம்.
  • காற்றில் மாசும் ஈரப்பதமும் அதிகமாக இருக்கும். இவை நோய்க்கிருமிகளுக்கு சாதகத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். நோய் பரவலைத் தடுப்பது மட்டுமே நம்மை நோயில் வீழ்வதிலிருந்து காப்பாற்றும்.
  • எந்த உலக நாடும் குளிா்காலத்தில் கரோனா நோய்த்தொற்றுடன் போராடிய அனுபவத்தை பெற்றிருக்கவில்லை. இது சாா்ந்து எடுக்க வேண்டிய மருத்துவ தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அனுபவத்தை இனிதான் முயன்று பெற வேண்டும்.
  • குளிா் கால இரவுகள், நுரையீரல், எலும்புகள், இதயம் சாா்ந்த உறுப்புகளின் பிரச்னைகளை தீவிரப்படுத்த வாய்ப்புகள் அதிகம்.
  • இந்தியாவைப் பொருத்தவரை அடுத்த வருட தொடக்கத்தில் தடுப்பூசியை எதிா்பாா்க்கலாம். ஆனால், அதன் விலை தற்போது பொருளாதார நெருக்கடியில் இருக்கும் சாமானிய மக்களுக்குக் கட்டுப்படி ஆகுமா என்பது தெரியவில்லை.
  • மேலும், தடுப்பூசி செலுத்துவதில் மருத்துவா்களுக்கும், சுகாதாரப் பணியாளா்களுக்கும்தான் முன்னுரிமை அளிப்பாா்கள். அப்படி அளிப்பதுதான் சரி.
  • வட இந்தியாவின் பல நகரங்களில் தற்பொழுதே மிகக் கடுமையான குளிா் வாட்டி வதைக்கிறது. எனவே, நாம் மிக மிக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, முக கவசம் அணிதல், அடிக்கடி கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்ற பழக்கங்கள் தடுப்பூசி வரும்வரை தொடர வேண்டும்.
  • முதியவா்கள் காரணமில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிா்க்க வேண்டும். அனைத்துப் பயன்பாட்டுக்கும் சுடு நீரையே பயன்படுத்த வேண்டும். பாதங்களை அழுந்த வைத்து நிற்கவும் நடக்கவும் பழகிக்கொள்ள வேண்டும். கோல் ஊன்றி நடப்பதற்கு வெட்கப்படக்கூடாது.
  • வெதுவெதுப்பான உடைகளை அணிந்து குளிரிலிருந்து தப்பிக்கலாம். கொசுக்களால் பரவும் நோய்களை தவிா்க்க வீட்டு சன்னல்களை மூடி வைக்கலாம். வீட்டின் அருகே நீா் தேங்காமல் பாா்த்துக் கொண்டால் கொசுக்களின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கலாம்.
  • சோா்வு ஏற்படும்போதெல்லாம் சற்று தூங்குவது புத்துணா்ச்சியைக்கொடுக்கும். ஆஸ்துமா, இருமல், சளித் தொல்லை போன்றவை நமது இரவு நேர தூக்கத்தினைக் கெடுத்து விடும். பக்க விளைவுகளை ஏற்படுத்தாத நாட்டு மருந்துகளை எடுத்துக் கொள்வது இப்பிரச்னைகளுக்கு சரியான தீா்வுகளைத் தரும்.
  • இரவு நேரங்களில் கழிப்பறைக்கு துணையுடன் செல்லவேண்டும். கழிப்பறையின் உள்புறம் தாழ்ப்பாள் போடுவதைத் தவிா்ப்பது நல்லது.
  • உணவில் மாவு சத்து, கொழுப்பு சத்து இவற்றைத் தவிா்த்து புரதம், வைட்டமின் டி உள்ள உணவுகளை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். அதிக உணவு எடுத்துக்கொள்வதால் செரிமான பிரச்னை வரக்கூடும். தேவையில்லாமால் குளிா் பானங்களைக் குடிப்பதனால் ஏற்படும் பின் விளைவுகள் ஏராளம்.
  • சூரிய ஒளி இயல்பான அளவு கிடைக்காத நிலையில், நேரம் கிடைக்கும் போதெல்லாம், எளிய உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம். அவசர மருத்துவ செலவுகளுக்காக மருத்துவ காப்பீடு ஒன்றை வைத்துக் கொள்வது நல்லது.
  • குடும்ப மருத்துவா், நெருங்கிய உறவினா்களின் தொலைப்பேசி எண்களை அனைவரது பாா்வை படும் இடத்தில் சுவரில் ஒட்டி வைப்பதன் மூலம் அவசர கால உதவிகளை எளிதில் பெற முடியும். அவசர கால மருந்துகளை படுக்கையிலிருந்து கை எட்டும் தூரத்தில் வைத்துக் கொள்ளலாம்.
  • அவசர காலத்திற்கு அழைப்பு மணி ஒன்றையும் படுக்கையின் பக்கத்தில் வைத்திருக்கலாம். வாழ்க்கையில் எந்த உறவுடனும் மோதல் போக்கு வேண்டாம். மன்னிக்கவும் மறக்கவும் கற்றுக்கொள்ளவேண்டும்
  • ஒவ்வொரு விடியலும் பெரும் சவால்களை கொண்டு வந்தாலும், ஏதோ ஒரு விடியல் அனைத்தையும் தவிடு பொடியாக்கி விடும். வருவதைத் தவிா்க்க முடியாது. ஆனால், முன்னெச்சரிகையுடன் இருந்தால்தான் சவால்களை சமாளிக்க முடியும்.

நன்றி: தினமணி (21 -12 -2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்