- தமிழில் கவிதை, சிறுகதை, அபுனைவு என நம்பிக்கை அளிக்கும் படைப்புகளைத் தருகிற இளம் எழுத்தாளர்களில் கவனம் பெற்ற சிலர்:
விடுதலை சிகப்பி
- திரைத்துறையில் உதவி இயக்குநர், எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர் ப. விடுதலை சிகப்பி. சிவகங்கையைச் சேர்ந்த இவரது கவிதைத் தொகுப்பை ‘எறிசோறு’ என்கிற தலைப்பில் நீலம் பதிப்பகம் இந்த ஆண்டு வெளியிட்டது. விளிம்பு நிலை மக்களின் குரலாக ஒலித்திருக்கிறது ‘எறிசோறு’. இளம் கவிஞரான விடுதலை சிகப்பியின் முதல் கவிதைத் தொகுப்பு இது. இந்த நூல் வெளியான பத்து நாள்களில் ஆயிரம் பிரதிகள் விற்று, வாசகர்களின் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
அரிசங்கர்
- புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் அரிசங்கர். சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். தன்னுடைய பதினேழாம்வயதிலேயே இதழ்களில் கதைகளை எழுதத் தொடங்கிவிட்டார். கடந்த 2019இல் தன்னுடைய புதுச்சேரி வாழ்க்கையை ‘பாரீஸ்’ எனும் குறுநாவலில் பதிவுசெய்தார். தொடர்ந்து சிறுகதைகள், நாவல்களை எழுதி வருகிறார். ‘உண்மைகள்’, ‘பொய்கள்’, ‘கற்பனைகள்’ போன்ற நாவல்களையும் ‘உடல்’, ‘ஏமாளி’ போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும் இவர் கொண்டுவந்திருக்கிறார்.
நன்மாறன் திருநாவுக்கரசு
- சென்னையைச் சேர்ந்தவர் நன்மாறன் திருநாவுக்கரசு. ஊடகத் துறையில் பணியாற்றிக் கொண்டே சினிமா, அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைதளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். பாலஸ்தீன அரசியல் வரலாற்றை விளக்கும் ‘சிதிலங்களின் தேசம்’, ‘உயிர் -ஓர் அறிவியல் வரலாறு’, ‘எலான் மஸ்க்’ வாழ்க்கை வரலாறு, ‘மிரட்டும் மர்மங்கள்’ ஆகியவை இவர் எழுதிய நூல்கள்.
சுஜித் லெனின்
- திருச்சியைச் சேர்ந்த எழுத்தாளர் சுஜித் லெனின். இவருடைய சிறுகதைகள் அச்சு இதழ்கள், இணைய இதழ்களில் வெளியாகியுள்ளன. இவர் எழுதிய ‘பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமரும்’ என்கிற சிறுகதைத் தொகுப்பினை எதிர் வெளியீடு கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியிட்டது.
பத்மகுமாரி
- கன்னியாகுமரி மாவட்டத்தில் ராமன்புதூரைச் சேர்ந்தவர் எழுத்தாளர் பத்மகுமாரி. சென்னையில் கணினி மென்பொருள் துறையில் பணிபுரிந்துகொண்டே இணைய இதழ்களுக்குச் சிறுகதைகளை எழுதி வருகிறார். இவருடைய முதல் சிறுகதை தொகுப்பான ‘நட்சத்திரம்’ 2024 ஜனவரியில் வெளியானது. இவரது சிறுகதைத் தொகுப்பில் பெரும்பாலான கதைமாந்தர்கள் பெண்கள் என்பது தனிச் சிறப்பு.
இஸ்க்ரா
- ‘இஸ்க்ரா’ என்கிற பெயரில் எழுதி வருகிறார் சதிஷ்குமார். தமிழ் ஆய்வு மாணவர், மொழி பெயர்ப்பாளர், எழுத்தாளரான இவர், குழந்தைகளுக்கான கட்டுரைகள், உரைத் தொகுப்புகள் ஆகியவற்றை எழுதி வெளியிட்டிருக்கிறார். உலகப் புகழ்பெற்ற தலைவர்கள், விஞ்ஞானிகளின் உரைகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகத்தின் ‘அக்கியானேவின் மாயக் கரங்கள்’ என்கிற கட்டுரைத் தொகுப்பு, ‘உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள்’ உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.
வினுலா
- மென்பொருள் துறையில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார் வினுலா. இவர் ‘மெட்ராஸ் பேப்பர்’ எனும் இணைய வார இதழில் தொடர்ந்து சர்வதேச அரசியல் கட்டுரைகளை எழுதி வருகிறார். உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பை ஆவணப்படுத்தும் விதமாக இவர் எழுதிய ‘யுத்த காண்டம்: உக்ரைன் போர்க்களமும் அப்பாலும்’ என்கிற நூல் 2023இல் வெளியானது. உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையே நிலவும் போரின் பின்னணியில் இயங்கும் அரசியல், பொருளாதார, ராணுவக் காரணங்களை விவரிக்கிறது இந்த நூல்.
ஜார்ஜ் ஜோசப்
- திருச்சியைச் சேர்ந்த ஜார்ஜ் ஜோசப், மெட்ராஸ் கிறித்துவக் கல்லூரியில் இயற்பியல் படிப்பில் பட்டம் பெற்றவர். சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்ட இவர், மொழிபெயர்ப்பு பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இவர் எழுதிய ‘எமெரால்ட்’ சிறுகதையையும் ’பூனைகளில்லா உலகம்’ என்கிற ஜப்பானிய நாவலின் மொழிபெயர்ப்பையும் சீர்மை பதிப்பகம் 2023இல் வெளியிட்டது.
நன்றி: இந்து தமிழ் திசை (19 – 01 – 2024)