TNPSC Thervupettagam

சுதந்திரச் சுடர்கள் 12

August 23 , 2022 716 days 452 0

ஒப்பிலாத் தீரன் ஒண்டிவீரன்

  • இந்திய விடுதலையின் அமுதப் பெருவிழா கொண்டாடும் நேரத்தில், விடுதலைப் போரில் பங்கேற்ற மாவீரர்களை நினைவு கூர்வது நம் கடமை. முதல் விடுதலைப் போராக அறியப்படும் 1857 இல் நடந்த ‘சிப்பாய் கலக’த்திற்கு 102 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ் மண்ணில் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்ட பாளையத் தலைவன் ஒண்டிவீரன் எனும் போராளியின் வீரமரணத்தின் 250 ஆவது ஆண்டை நினைவுகூர்கிறோம். அதனை கொண்டாடும்விதமாக, மத்திய அரசு ஆகஸ்ட் 20 அன்று தபால் தலை வெளியிட்டு சிறப்பித்தது.

நெற்கட்டான் செவ்வயல் பாளையம்

  • திருநெல்வேலிக்கு அருகில், சங்கரன்கோவிலி லிருந்து வடமேற்கில் பத்து கிலோமீட்டர் தொலை விலும், வாசுதேவநல்லூரிலிருந்து கிழக்கில் ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள, நல்ல விளைச்சல் நிலங்களை மிகுதியாகக் கொண்ட செழிப்பான ஜமீன் நெற்கட்டும் செவ்வயல்.
  • அந்த ஜமீன் பரம்பரையில் பொ.ஆ. (கி.பி.) 1710 ஆம் ஆண்டு பெத்த வீரன், வீரம்மா எனும் தம்பதியினருக்கு பிறந்தவர் ஒண்டிவீரன். இவர் சிறு வயதிலேயே வாள் வீசவும், கம்பு சுத்தவும், குதிரை சவாரி செய்யவும், பறையடிக்கவும், பாட்டுப் பாடவும், ஒயிலாடவும் மற்றும் தோல் வேலைகளையும் கற்றுத் தேர்ந்தார்.
  • இந்நிலையில் வீரனது தந்தை இறந்ததால், ஜமீன் பொறுப்பை வீரன் ஏற்றுக்கொண்டார். தமது நண்பரான பூலித்தேவனோடு சேர்ந்து ஆண்டுவந்தார். இந்த இருவரில் ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரின் வரலாற்றைத் தனித்துச் பேச முடியாது.
  • ஜமீன்முறை மாறிப் பாளையமாக மாற்றம் பெற்றபோது, சமூக அரசியல் சூழல் காரணமாக பாளையப் பொறுப்பை பூலித்தேவன் ஏற்றுக்கொண்டார். இருப்பினும், இருவரும் இணைந்தே பாளையத்தை ஆண்டு வந்தனர். ஒண்டிவீரன் படைத்தளபதியாக கூடுதல் பொறுப்பேற்றுக்கொண்டு, பகைவருக்கெதிரான போரை தலைமையேற்று நடத்திவந்தார்.
  • கிழக்கு இந்திய கம்பெனியர் இந்தியாவில் வணிகம் செய்ய நுழைந்து, மெதுவாக அரசியல் சதுராட்டம் ஆடத்தொடங்கிய காலகட்டம் அது. ஆங்கிலேயர் ஆற்காடு நவாப்பிற்கு ராணுவ உதவி செய்து, அதன் மூலம் பாளையங்களில் வரி வசூலிக்கும் பொறுப்பை ஏற்றனர். 1755 ஆம் ஆண்டு பூலித்தேவனும் ஒண்டிவீரனும், ஆங்கிலேயருக்கு ஏன் வரி கொடுக்கவேண்டும் என்று எதிர்த்தனர். நெல்லை கப்பமாக கட்ட மறுத்தனர். எனவேதான், நெற்கட்டும் செவ்வயல், “நெற்கட்டான் செவ்வயல்” என அழைக்கப்படலாயிற்று.

முதல் விடுதலைப் போர்

  • ஆத்திரம் அடைந்த ஆங்கிலேயர் நெற்கட்டான் செவ்வயல் பாயைத்தின் மீது போர் தொடுத்தனர். ஆற்காடு நவாபின் சகோதரர் மாபூஸ்கான் மற்றும் லார்ட் இன்னிங்ஸ் தலைமையிலான படையை நெற்கட்டான் செவ்வயல் பாளையத்தின் எல்லையிலேயே 1755 மே 22ஆம் நாள் தோற்கடித்தனர் ஒண்டிவீரனும் பூலித்தேவனும்.
  • மீண்டும் அதே ஆண்டு மாபூஸ்கான் மற்றும் ஆங்கிலேயப் படைத்தளபதி அலெக்சாண்டர் ஹெரான் தலைமையில் நெல்லை நோக்கி பெரும்படை புறப்பட்டது. வழியில் மணப்பாறையில் லட்சுமண நாயக்கர் அடிபணிந்தார்.
  • மதுரையும் ராமநாதபுரமும்கூட பணிந்தது. வீரபாண்டிய கட்டபொம்மனின் பாட்டனாரான பொல்லாப் பாண்டிய கட்டபொம்மன் (கெட்டி பொம்மு) கர்னல் ஹெரானிடம் கப்பம் கட்டிப் பணிந்துபோனார். தொடர்ந்து ஆங்கிலேயப் படை தென்மலையில் முகாமிட்டனர். ஆனால், அவர்களின் 2000 வீரர்களுடன் கூடிய பெரும்படையை மீண்டும் வென்று வெற்றிவாகை சூடினார் ஒண்டிவீரன்.
  • இதுவே ஆங்கிலேயருக்கு எதிரான நடந்த முதல் சுதந்திரப் போராகும், காலத்தால் மட்டும் அல்ல; பண்பாலும்! ‘சிப்பாய் கலக’த்திற்கான காரணங்களாக கருதப்படுபவை: நிலங்களை இழந்துவிடக் கூடாது என்ற சிற்றரசர்களின் தூண்டுதல், வங்காளப் படையில் நிலவிய சாதியத்தால் ஏற்பட்ட அயல்நாட்டிற்குச் சென்று போரிட விரும்பாத மனநிலை மற்றும் “என்ஃபீல்ட் ரைஃபிள்” துப்பாக்கி குண்டுகளால் உண்டான மத அடிப்படைவாதம் போன்றவையே! எனவே அக்கலகம் ஆங்கிலேயரை வெளியேற்றவேண்டும் என்ற நோக்கில் எழுப்பப்படவில்லை.
  • அக்கலகத் திற்கு யாரும் நேரடியாக தலைமை ஏற்கவும் இல்லை; கொள்கை எதுவும் கிடையாது. மாறாக சுயஉரிமைக்கான தன்னெழுச்சியே அக்கலகம்.

தென்பாண்டிச் சீமையின் சிம்மசொப்பனம்

  • மீண்டும் 1756 மற்றும் 1757 ஆண்டுகளிலும் போர் தொடுத்த ஆங்கிலேயரை தோற்கடித்தவர் ஒண்டிவீரன். எட்டயபுரம் உள்ளிட்ட சில தெலுங்கு பாளையங்கள் ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பலியாயின. அவற்றின் மீது போர்தொடுத்து, ஆங்கிலேயருக்கு எதிராக மற்ற பாளையங்களை அணிசேர்த்தனர் ஒண்டிவீரனும் பூலித்தேவனும். நாயக்கர் காலத்தில் 16 தமிழ் பாளையங்களும், 56 தெலுங்கு பாளையங்களும் இருந்தன. ஆழ்வார்குறிச்சி அழகப்பன் தோற்கடிக்கப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்டார்.
  • அழகப்பனுக்கு ஆதரவாக மருதநாயகம் என்ற கான்சாகிப் யூசுப்கான் களமிறங்கினார். 1759 ஜுலை 2 ஆம் நாள் அவர் ஊத்துமலை, சுரண்டை பாளையங்களைக் கைப்பற்றினார். நவம்பர் 6-ஆம் நாள் ஒண்டிவீரன் அவற்றை மீட்டெடுத்தார். கோபம் கொண்ட மருதநாயகம், தொண்டமான் படையுடன் இணைந்து வாசுதேவ நல்லூரைத் தாக்கினார்.
  • இருபது நாள் நடந்த போரில் பூலித்தேவனும் ஒண்டிவீரனும் இரு படை களாகப் பிரிந்து போரிட்டு வென்றனர். மீண்டும் கான்சாகிப் 1760 டிசம்பர் 20 அன்று நெற்கட்டான் செவ்வயலைத் தாக்கினார். அப்போரில் ஒண்டிவீரனின் துணை தளபதி வெண்ணிக்காலாடி வீரமரணம் அடைந்தார். இவர் தேவேந்திரர் குலத்தைச் சார்ந்தவர். ஆனாலும் இப்போரிலும் கான்சாகிப் தோல்வியையே தழுவினார்.

இறுதிப்போர்கள்

  • 1767 மே 13 அன்று ஆங்கிலேயப் படைத் தளபதி டொனால்ட் காம்பெல் தலைமையில் நெற்கட்டான் செவ்வயலின் இராணுவ தளமாக இருந்த வாசுதேவநல்லூர் கோட்டை தாக்கப்பட்டது. வீரம் செறிந்த தமிழ் மறவர்கள் பூலித்தேவன், ஒண்டிவீரன் தலைமையில் மிகக் கடுமையாக போரிட்டனர்.
  • திகைத்துப்போன காம்பெல் இது குறித்து கிழக்கிந்திய கம்பெனிக்கு 1767 மே 28 அன்று எழுதிய கடிதம் இன்றும் எழும்பூர் ஆவணக் காப்பகத்தில் இருக்கிறது. இருப்பினும், அவர்களின் பலம் வாய்ந்த பீரங்கிகள், துப்பாக்கிகள் முன் நம்மவர்களின் வாட்கள், வேட்கள் தோற்றுப்போயின.
  • அப்போது, சங்கரன்கோவில் ஆவுடை நாச்சியார் கோவிலுக்குள் சென்ற பூலித்தேவன் மீண்டும் திரும்பவில்லை. எனவே, ஒண்டிவீரன் மீண்டும் பாளையப் பொறுப்பை ஏற்று, பூலித்தேவனின் மூன்று பிள்ளைகளையும் நான்கு ஆண்டுகள் காத்துவந்தார். மீண்டும் களக்காடு, கங்கைகொண்டான், திருவில்லிபுத்தூர், புதுக்கோட்டை போன்ற இடங்களில் ஆங்கிலேயரை எதிர்த்திருக்கிறார் என்பது தெரியவருகிறது. இறுதியாக, 1771 ஆகஸ்ட் 20 ந்தேதி நடைபெற்ற தென்மலைப்போரில் மாவீரன் ஒண்டிவீரன் வீரமரணமடைந்தார்.

வரலாற்று மீட்டுருவாக்கம்

  • மேற்கண்ட ஒண்டிவீரன் வரலாறு கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் போன்ற வழக்கமான வரலாற்று ஆவணங்களில் பதிவு செய்யப்படவில்லை என்பதில் வியப்பேதும் இல்லை. ஏனெனில் ஒண்டிவீரன் இன்று தாழ்த்தப்பட்டவராக வகைப்படுத்தப்பட்டுள்ள அருந்ததியர் குலத்தில் பகடை எனும் பிரிவைச் சார்ந்தவர்.
  • வாய்மொழி வழக்காறுகளிலிருந்துதான் ஒடுக்கப்பட்டோரின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யவேண்டி இருக்கிறது. காஞ்ச அய்லையா, “மாதிகா (அருந்ததியர்) மக்களின் வாழ்வு வாய்மொழி வரலாறாகவே இருக்கிறது; அது எழுதப்பட்ட இலக்கியங்களில் இல்லை” என்கிறார்.
  • லூயிஸ் அல்தூசர், “வரலாற்றில் மறைக்கப்பட்டவை எவையும், எறிந்தால் திரும்ப வராமல் இருக்க, தூக்கி எறியப்பட்ட பழைய செருப்புகள் அல்ல. அந்த வரலாறுகள் வெளிக் கசிந்துகொண்டே இருக்கும். வெடிப்புற வெளிப்படவும் செய்யும்.” என்கிறார். “சமூகத்தில் எவையெல்லாம் தவறாக தீர்மானிக்கப்பட்டதோ, அவையெல்லாம் ஒருபோதும் முற்ற முடிவாக தீர்மானிக்கப்பட்டவை அல்ல. மாறாக, அவையெல்லாம் மீண்டும் மறுசீரமைக்கப்பட வேண் டும்.” என்கிறார் பி.ஆர். அம்பேத்கர்.
  • எனவே, ஒண்டிவீரன் வரலாற்றைக் கட்டமைக்க ‘ஒண்டிவீரன் கதைப்பாடல்’, ‘ஒண்டிவீரன் வில்லுப்பாட்டு’ மற்றும் ‘ஒண்டிவீரன் நாடகம்’ போன்ற வாய்மொழி இலக்கியங்களே சான்றாதாரங்கள் ஆகின்றன. ‘பூலித்தேவன் சிந்து’, ‘பூலித்தேவன் கும்மி’ போன்ற நாட்டார் பாடல்களில் ஒண்டிவீரன் வரலாறு கிளைக்கதைகளாக சொல்லப் படுகிறது.
  • இவ்விரண்டு மூலங்களும் நுணுக்கமாக முரண்படுவதும் நாம் அறிந்ததே! ந. இராசையா, எழில். இளங்கோவன் மற்றும் ச. சீனிவாசன் போன்றோரின் காத்திரமான ஆய்வுகள் ஒப்பிலாவீரன் ஒண்டிவீரன் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்திருக்கின்றன.

ஆளுமை : அரசியல்வாதியான கவிஞர்

  • இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மிக முக்கியமான ஆளுமையாகவும் கவிஞராகவும் அறியப்படுபவர் சரோஜினி. படித்த, செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்தவர். மெட்ரிகுலேஷன் தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றார்.
  • சிறு வயதிலேயே ஆங்கிலத்தில் கவிதைகளை எழுத ஆரம்பித்துவிட்டார். இவரது கவிதைகளைக் கண்ட ஹைதராபாத் நிஜாம், வெளிநாட்டில் படிப்பதற்கான உதவித்தொகையை வழங்கினார்.
  • லண்டனில் உயர்கல்வி பயின்றார். அப்போது முத்தியாலா கோவிந்தராஜுலு என்ற தொழில்முறை மருத்துவரை காதலித்து, சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார்.
  • 1905ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையின்போது சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தார். கோபால கிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர், முகமது அலி ஜின்னா, அன்னி பெசன்ட், காந்தி, நேரு ஆகியோரின் நட்பு அவருக்குக் கிடைத்தது.
  • வங்காளம், இந்தி, தெலுங்கு, தமிழ், ஆங்கிலம், பாரசீகம் ஆகிய மொழிகள் அவருக்குத் தெரியும் என்பதால் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு, வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த பெண்களை சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க வைத்தார். பெண்ணுரிமை குறித்துப் பேசினார். தன் பேச்சால் இளைஞர்களுக்கு உத்வேகம் ஊட்டினார்.
  • 1925இல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்பதவியை வகித்த முதல் பெண் என்கிற சிறப்பைப் பெற்றார். 1931இல் காந்தி, மதன்மோகன் மாளவியாவுடன் இணைந்து வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்றார்.
  • 1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று, 21 மாதங்கள் சிறைத் தண்டனை பெற்றார். அப்போது காந்தியிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
  • சுதந்திர இந்தியாவில் ஐக்கிய மாகாணத்தின் (இன்றைய உத்தர பிரதேசம்) ஆளுநராகப் பொறுப்பேற்றார் சரோஜினி. இதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் என்ற சிறப்பைப் பெற்றார். 'கவிக்குயில்’, 'இந்தியாவின் நைட்டிங்கேல்' என்றெல்லாம் அழைக்கப்பட்ட சரோஜினி, 1948ஆம் ஆண்டு மறைந்தார்.

உழவு: உச்சம் தொட்ட வேளாண்மை

  • உலகின் மிகப் பழமையான வேளாண் அமைப்புகளில் ஒன்றான இந்திய வேளாண்மை, பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுத் தொடர்ச்சியைக் கொண்டிருக்கிறது.
  • இந்தியப் பொருளாதாரத்தின் நீடித்த வளர்ச்சிக்கான முக்கிய அம்சமாக வேளாண் துறை திகழ்கிறது. 1950-51இல் 51 மெட்ரிக் டன்னாக இருந்த இந்தியாவின் ஒட்டுமொத்த உணவு தானிய உற்பத்தி, 2021-22இல் 314 மெட்ரிக் டன்னாக உயர்ந்திருக்கிறது.
  • கடந்த 75 ஆண்டுகளில் இந்திய வேளாண்மை பல உச்சங்களைத் தொட்டுள்ளது. வாழைப்பழ விளைச்சலில் சீனா, பிரேசில் ஆகிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி உலகின் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • இதே போல எருமைப்பாலில் முதலிடம், நெல், கோதுமை, கரும்பு, பச்சைக் காய்கறிகள், உருளைக்கிழங்கு, பருத்தி, பசும்பால் ஆகியவற்றில் உலகில் இரண்டாம் இடத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது. உணவு தானியங்களின் உற்பத்தி 6 மடங்கு, தோட்டக்கலைப் பயிர்கள் 11 மடங்கு, மீன் உற்பத்தி 18 மடங்கு, பால் 10 மடங்கு, முட்டை 53 மடங்கு உயர்ந்திருக்கிறது.
  • விடுதலை பெற்ற காலகட்டத்தில், இந்தியாவின் மக்கள்தொகை ஏறத்தாழ 36 கோடி; அப்போது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) வேளாண்மையின் பங்கு 51.9%. இந்தியாவின் தற்போதைய உத்தேச மக்கள்தொகை ஏறத்தாழ 139 கோடி.
  • ஆனால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP), வேளாண்மையின் பங்கு 2017இல் 15.4% ஆகக் குறைந்திருக்கிறது. பல்வேறு நெருக்கடிகள், சிரமங்களுக்கு உள்ளான போதும் 63 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு (45.6%) வேளாண்மைத் துறை மூலமே கிடைத்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கலை: திரையுலகம் வளர்த்த தீரர்

  • கலையுலகத்துக்கும் அரசியலுக்கும் இடையிலான உறவை, திராவிட இயக்கங்களுக்கு முன்னரே கட்டியெழுப்பிய காங்கிரஸ் தலைவர் தீரர் சத்தியமூர்த்தி. வழக்கறிஞரான அவரது பேச்சாற்றல், ஆங்கில மொழி யறிவு காரணமாக, காங்கிரஸ் கட்சியின் தேசியப் பிரிவுக்கு தலைவர் ஆக்கப்பட்டவர்.
  • சுகுண விலாச சபாவின் நாடகங்களில் நடித்த அனுபவம் கொண்டிருந்தவரான சத்தியமூர்த்தி, பிரிட்டிஷ் அரசின் கொள்கை களைச் சாடுவதற்கும், தேசிய உணர்வைப் பரப்புவதற்கும் நாடக மேடையும் நாடகப் பாடல்களும் சக்தி வாய்ந்த கருவி என்பதை உணர்ந்திருந்தார். அதனால் நாடக, சினிமா கலைஞர்களுடன் இணைந்து இயங்கத் தொடங்கினார்.
  • 1920இல் ஒத்துழையாமை இயக்கத்தில் அவர் தீவிரமாகப் பங்கெடுத்தபோது நாடக, சினிமா கலைஞர் களையும் போராட்டத்துக்குள் இழுத்தார். 1923இல் சென்னை சட்டமன்ற உறுப்பினராக ஆனபோது கலையுலகைச் சேர்ந்த பலரையும் கள அரசியலுக்கு அழைத்துவந்தார்.
  • பிரிட்டிஷ் அரசு சில நாடகக் குழுக்களுக்கு தடை விதித்தபோது, சென்னை சட்டமன்ற உறுப்பினராக இருந்த சத்தியமூர்த்தி, நாடக் கலைஞர்களுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தார்.
  • சினிமா பேசத் தொடங்கியதும், சமூக மாற்றத்துக்கான மகத்தான சாதனமாக அதைக் கண்ட சத்தியமூர்த்தி, ‘இந்திய மறுமலர்ச்சியில் பங்களிப்பு செய்யும்படி திரைப்படங்கள் தயாரிக்கப்பட வேண்டும்’ என்று கட்டுரை எழுதினார்.
  • தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தொடங்கப்பட்டபோது, அதன் முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட துடன், அந்த அமைப்புக்கான கொள்கைகளையும் அவர் வடித்துக்கொடுத்தார். அதேபோல் சுதந்திரத் துக்கு முன்னர் பம்பாயில் நடைபெற்ற முதல் இந்தியத் திரையுலக மாநாட்டுக்கு தலைமை வகித்து, தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தார்.
  • பின்னாளில் திராவிட இயக்கத்தில் சேர்ந்த எம்.ஜி.ராமசந்திரன், ‘கதரின் வெற்றி’ நாடகத்தில் நடித்ததும் காங்கிரஸ் அனுதாபியாக இருந்ததும் தீரர் சத்தியமூர்த்தி உருவாக்கிய தாக்கத்தின் நீட்சியே.

விளையாட்டு: ஆசியப் போட்டியும் அப்பு யானையும்

  • டெல்லியில் 1982 இல் இந்தியா நடத்திய ஒன்பதாவது ஆசிய விளையாட்டுப் போட்டி, வரலாற்றில் அழுத்தமாக பதிவானது. இந்தப் போட்டிகளின் நல்லெண்ணச் சின்னமான அப்பு யானை நாடெங்கிலும் புகழ்பெற்றது.
  • 1951இல் முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்திய இந்தியா, 31 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு வாய்ப்பைப் பெற்றது.
  • இந்தப் போட்டியைப் புதிய மைதானத்தில் நடத்துவதற்காக ஜவாஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் டெல்லியில் கட்டப்பட்டது. இப்போட்டிக்காக டெல்லி நகரம் ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டது அன்றைக்குப் பேசுபொருளானது. படகுப் போட்டிகள் மட்டும் மும்பை அருகே நடைபெற்றன.
  • 1982 நவம்பர் 19 முதல் டிசம்பர் 4 வரை நடைபெற்ற இப்போட்டியில் 33 நாடுகளைச் சேர்ந்த 3,400-க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த விளையாட்டுப் போட்டியில் 74 ஆசிய சாதனைகள் முறியடிக்கப்பட்டன.
  • 1982 ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீனாவும் ஜப்பானும் ஆதிக்கம் செலுத்தின. இரு நாடுகளும் தலா 153 பதக்கங்களை வென்றன. இந்தியா 13 தங்கம், 19 வெள்ளி, 25 வெண்கலம் என 57 பதக்கங்களை மட்டுமே வென்று பதக்கப் பட்டியலில் ஐந்தாம் இடத்தையே பெற்றது. ஆனால், மிகச் சிறப்பாக ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்தியதன் மூலம், ஆசிய நாடுகளின் இதயங்களை இந்தியா வென்றது.
  • இன்னொரு முக்கிய நிகழ்வாக, இந்தியாவில் முதன்முறையாக இந்த விளையாட்டுப் போட்டி வண்ணத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்தப் போட்டிகளுக்கு முன்னதாக ஆசிய விளையாட்டு கூட்டமைப்பு கலைக்கப்பட்டு, ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் உருவாக்கப்பட்டது. ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின்கீழ் நடத்தப்பட்ட முதல் போட்டியாக டெல்லி ஆசிய விளையாட்டுப் போட்டி அமைந்தது.

நன்றி: தி இந்து (23 – 08 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்