TNPSC Thervupettagam

சுதந்திரச் சுடர்கள் 15

August 26 , 2022 713 days 403 0

தவிர்க்க முடியாததா பாகிஸ்தான் பிரிவினை

  • பிரிவினை ஏன்? அதைத் தவிர்த்திருக்க முடியாதா? இந்தக் கேள்விக்கு விடையளிப்பது மிகவும் கடினம், இந்தியத் துணைக் கண்டத்தை பிரிட்டிஷார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா – பாகிஸ்தான் என்று இரண்டு நாடுகளாகப் பிரித்த காலத்திலும் இதற்கு விடை காண்பது கடினமாகவே இருந்தது.
  • ஒருவேளை 1946இல் இந்தியா வந்த பிரிட்டிஷ் கேபினட் தூதுக்குழு முயன்றிருந்தால் இந்தியாவைப் பிளவுபடுத்தாமல் ஒரே நாடாக வைத்திருந்திருக்க முடியும். மத்திய அமைச்சரவையில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சம எண்ணிக்கையில் பதவிகளை அளிக்கலாம்; இந்தியாவைப் பல்வேறு மண்டலங்களாகப் பிரித்துவிட்டு வெளியுறவுத் துறை, ராணுவம், தகவல் தொடர்பு ஆகிய துறைகளைத் தவிர பிற அதிகாரங்கள் அனைத்தையும் அந்த மண்டலங்களுக்கு வழங்கலாம் என்கிற யோசனையை கேபினட் தூதுக்குழு தெரிவித்திருந்தது. அதை ஏற்க முடியாது என்று காங்கிரஸ் கட்சி நிராகரித்தது.
  • பிரிவினைதான் யதார்த்தம் என்றாலும், முஸ்லிம்களுக்கென்று தனி நாடு கோரிய முகம்மது அலி ஜின்னா, அனைத்துப் பகுதிகளுக்கும் ‘பொதுவான நிர்வாகத் தொடர்பு’ என்கிற அமைப்பை ஏற்றுக்கொண்டிருக்கக் கூடும். இந்தியாவை இரண்டாகப் பிரிக்க ஜவாஹர்லால் நேருவும் சர்தார் வல்லபபாய் படேலும் ஒப்புதல் தெரிவித்த பிறகு, ஜின்னாவைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததாக இந்தியாவின் கடைசி பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலான மவுண்ட் பேட்டன் பிரபு 1972 ஜனவரியில் என்னைச் சந்தித்தபோது நினைவுகூர்ந்தார்.
  • ஒன்றுபட்ட இந்தியாதான் தேவை என்று ஜின்னாவிடம் வாதிட்டேன்; அப்படி ஒரு ஒற்றுமையைப் பார்ப்பதுதான் தனக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய விஷயம் என்றாலும், இந்துக்களின் நடவடிக்கைகள்தான் அப்படியொரு நாட்டை அவர்களுடன் முஸ்லிம்கள் பகிர்ந்துகொள்ள முடியாத நிலையை ஏற்படுத்திவிட்டது என்றார் ஜின்னா”.
  • அவர் கூறியபடி, இந்துக்களின் நடவடிக்கைகள்தான் அதற்குக் காரணமோ இல்லையோ, ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரிந்தது: முஸ்லிம்கள் தங்களுடைய எதிர்காலம் குறித்து மிகுந்த கவலையும் பதற்றமும் கொண்டவர்களாக இருந்தார்கள். எந்தெந்த மாகாணங்களில் அவர்கள் பெரும்பான்மையினராக இருந்தனரோ, அங்கே சிறிதளவும் அச்சமில்லாமல் வாழ்ந்தனர்.
  • ஆனால் இந்தியா என்கிற முழு நாட்டில் தாங்கள் சிறுபான்மையினராக இருக்கும்பட்சத்தில், சுதந்திர இந்தியாவில் தங்களுடைய சமூகநிலை, பொருளாதார எதிர்காலம் ஆகியவை பாதுகாப்பாக இருக்காது என்று அவர்கள் கவலைப்பட்டனர்.
  • இந்தியாவைப் பிரிக்க நேர்ந்தது குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்களா” என்று மவுண்ட் பேட்டனைக் கேட்டேன்.
  • ஆமாம், ஆனால் எனக்கு வேறு வழியில்லை. இந்தியாவின் வைஸ்ராயாக வேவல் பிரபு இருந்தார், அவருக்குப் பிறகு நான் அங்கே அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டேன். அவருக்கு முன்னதாக அங்கு நியமிக்கப்பட்டிருந்தால் நாட்டை ஒற்றுமையாக வைத்திருப்பதில் வெற்றி பெற்றிருப்பேன்” என்றார்.

யார் பொறுப்பு?

  • இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையைத் தவிர்க்க 1937இல் ஒரு வாய்ப்பு கிடைத்தது. முஸ்லிம்களுக்கென்று தனி நாடு (பாகிஸ்தான்) வேண்டும் என்று லாகூரில் தீர்மானம் இயற்றுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அந்த வாய்ப்பு ஏற்பட்டது. தேசப் பிரிவினைக் காலத்தில், லண்டனிலிருந்து வெளிவந்த ‘டைம்ஸ்’ நாளிதழின் இந்திய நிருபராகப் பணியாற்றிய லூயி ஹெரனுடன் நிகழ்த்திய உரையாடல் அடிப்படையில் இதைக் கூறுகிறேன்.
  • தேசப்பிரிவினைக்கு நேருதான் பொறுப்பு, 1937இல் ஐக்கிய மாகாண காங்கிரஸ் அரசில் (இப்போது உத்தரப் பிரதேசம்) முஸ்லிம் லீகும் சேர்ந்துகொள்ள நேரு சம்மதித்திருந்தால் பாகிஸ்தானைக் கேட்டிருக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது” என்று முகம்மது அலி ஜின்னா தன்னிடம் கூறியதாக ஹெரன் நினைவுகூர்ந்தார்.
  • ஜின்னாவுடனான சந்திப்பை மீண்டும் நினைவுகூர்ந்து ஹெரன் எனக்கொரு கடிதத்தைக் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார். “ஒரு நாள் மாலை நானும் ஜின்னாவும் சந்தித்துக்கொண்டோம். பாகிஸ்தான் என்றொரு நாடு உருவாவதை ஏற்பதாகவும் அதற்கான அரசியல் அவசியத்தைப் புரிந்துகொள்வதாகவும் கூறிய நான், இந்திய துணைக்கண்டம் இப்படி இரண்டாகப் பிளவுபடுவது குறித்த வருத்தத்தையும் தெரிவித்தேன்.
  • பிரிட்டிஷார் உருவாக்கிய இந்திய ராணுவத்தையும் ஐ.சி.எஸ். என்கிற உயர் அதிகாரப் பணிப்பிரிவையும் பிளவுபடுத்துவதில் உள்ள துயரங்களையும் சுட்டிக்காட்டினேன். இவையெல்லாம் உண்மைதான் என்று வியப்பளிக்கும் வகையில் ஒப்புக்கொண்ட ஜின்னா, இந்தப் பிரிவினைக்கே காரணம் நேருதான் என்று லண்டனில் சந்தித்தபோதும் என்னிடம் கூறினார்” என்று கடிதத்தில் எழுதியிருந்தார் ஹெரன்.

நேரு மீது ஜின்னா பழி

  • தேசப் பிரிவினைக்குத் தான் பொறுப்பல்ல என்று காட்டுவதற்காகக் கூறினாரா அல்லது அடிக்கடி நேருவுடன் மோதிக் கொண் டிருந்ததால், அவர்தான் காரணம் என்று பழியை நேரு மீது போட்டாரா என்பதை எவர் வேண்டுமானாலும் ஊகித்துக்கொள்ளலாம். நேருவை ஜின்னா குற்றம்சாட்டியதெல்லாம், ஐக்கிய மாகாண அமைச்சரவையில் முஸ்லிம் லீக் கட்சிக்கு இரண்டு இடங்களைத் தர மறுத்தார் என்பதுதான். ஆனால், இது மிகப் பெரிய சிக்கலை, மிகவும் அற்பமானதைப்போலச் சித்தரிக்கும் முயற்சியாகும்.
  • 1937 பொதுத் தேர்தலில், மத அடிப்படையில் (வகுப்புவாரி) தேர்தல் நடந்தது. முஸ்லிம்கள், முஸ்லிம் வேட்பாளர்களுக்கும், இந்துக்கள் இந்து வேட்பாளர்களுக்கும் வாக்களித்தார்கள். ஐக்கிய மாகாணம் (உத்தரப் பிரதேசம்) தவிர பிற மாகாணங்களில் முஸ்லிம் வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர்.
  • 144 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய மாகாணப் பேரவையில் 36 முஸ்லிம் தொகுதிகளில் 29-ஐ முஸ்லிம் லீக் கைப்பற்றியது. அந்த மாகாணத்தில் மட்டும் காங்கிரஸும் முஸ்லிம் லீகும் ரகசிய உடன்படிக்கை செய்துகொண்டிருந்தன என்பது ஊர் அறிந்த ரகசியம். எனவே, இரண்டுமே புதிய அரசில் பங்கேற்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
  • முஸ்லிம் அமைப்புகளிலேயே வீரியம் மிக்கதாக இருந்த முஸ்லிம் லீகைத் தங்களுக்குள் இழுத்துவிட வேண்டும் என்று சில காங்கிரஸ் தலைவர்கள் விரும்பினார்கள். காங்கிரஸின் செயல்திட்டத்தை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்ட முஸ்லிம்கள், தங்களுடைய லீக் அமைப்பு தனித்தேதான் இருக்கும் என்றும் அமைச்சரவையில் தங்களுக்கு இரண்டு பிரதிநிதிகள் வேண்டும் என்றும் கோரினர்.
  • வகுப்புவாத சித்தாந்த அடிப்படையில் பிரதிநிதித்துவம் தர முடியாது என்று நேரு உறுதியாக அதை எதிர்த்தார். சட்டப்பேரவையில் மத அடிப்படையில் தனி அமைப்பு இருக்கக் கூடாது என்றும் வாதிட்டார்.
  • முஸ்லிம் லீக் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு அமைச்சரவையில் இடம் தருவேன், ஆனால் இனி லீக் தனியமைப்பாகச் செயல்படுவதை நிறுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.
  • இந்த நிபந்தனையை ஏற்காத முஸ்லிம் லீக் கட்சியினர், அரசில் சேராமல் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தனர். நேருவின் செயல், முஸ்லிம் லீகுக்குப் புத்துயிர் ஊட்டிவிட்டது என்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் அபுல் கலாம் ஆசாத் பெரிதும் வருத்தப்பட்டார்.
  • புருஷோத்தம்தாஸ் தாண்டன் (தீவிர இந்து தேசியவாதி) இந்த விவகாரத்தில் முக்கியப் பங்கு வகித்ததாகவும் நேருவின் தவறான முடிவுக்கு அவர் போட்ட தூபம்தான் காரணம் என்றும் அபுல் கலாம் ஆசாத் பிறகு குற்றஞ்சாட்டினார். இந்த விவகாரத்தில் எப்படிச் செயல்பட்டிருக்க வேண்டுமோ அப்படிச் செயல்பட மகாத்மா காந்தியும் தவறிவிட்டார் என்று கருதினார் ஆசாத்.

இசை: காந்தி பஜனுக்கு இளையராஜா இசை

  • `நம்ரதா கே சாகர்’ எனத் தொடங்கும் மகாத்மா காந்தியின் புகழ்பெற்ற பஜன் பாடலுக்கு இளையராஜா இசையமைத்து, இந்தியாவின் மதுரமான குரலுக்குச் சொந்தக்காரர்களான பீம்சென் ஜோஷி, அஜாய் சக்ரவர்த்தி ஆகியோரைப் பாடவைத்திருக்கிறார்.
  • 2008இல் உருவாக்கப்பட்ட இந்தப் பாடலுக்கான வீடியோவை ஜார்ஜ் மங்கலத் தாமஸ், அனூப் ஜோத்வானி ஆகியோர் எழுதி இயக்கியிருக்கின்றனர். இயற்கையான காட்சிப் பதிவுக்கு ஒத்திசைவாக ஓடை நீரின் ஜலதரங்க ஒலி பாடல் நெடுகிலும் நம் செவியைப் பரவசப்படுத்துகிறது.
  • வெறுமே பாடலுக்கான காட்சிகளை வெட்டி ஒட்டாமல், குழந்தைகளின் உலகத்தை, மகாத்மாவுக்குள் இருக்கும் ஒரு குழந்தையின் உள்ளத்தைச் சித்தரிக்கிறது இந்தப் பாடலின் காணொளி.
  • கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா போன்ற நதிகள் எப்படி அனைவருக்கும் உதவு கின்றனவோ அதுபோல் மக்களுக்குள் உதவி செய்யும் மனப்பான்மை வரவேண்டும். அனைத்து நதிகளும் எப்படி கடலில் சங்கமிக்கின்றனவோ, அதுபோல் அனைவரும் இந்த நாட்டில் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த நாடு செழிக்க வேண்டும். இந்த நாட்டுக்காகத் தியாகம் செய்தவர்களை நினைக்க வேண்டும். இந்த நாட்டின் மீது பக்தி வேண்டும் என்னும் காந்தியின் சிந்தனைகள் இந்த பஜனைப் பாடலில் வெளிப்படுகின்றன.
  • பாடலின் ஒட்டுமொத்த கருத்தையும் தன்னுடைய ஈர்ப்பான குரலில் நடிகர் அமிதாப் பச்சன் அறிவுறுத்துவதோடு பாடலின் காணொளி முடிகிறது. ஆனால், நம்ரதா கே சாகர் என்னும் பாடலின் வரிகள் மட்டும் அனிச்சையாக நம் மனத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன!

மருத்துவம்: போலியோவை ஒழித்த திட்டம்

  • போலியோவால் உடல் ஊனமுற்ற பெரியவர்களை இன்றும் நாம் காண முடியும். ஆனால், போலியோவால் ஊனமுற்ற ஒரு குழந்தையைக்கூட நாம் காண முடியாது. அதற்குக் காரணம் 1995இல் அறிமுகப்படுத்தப்பட்ட ‘பல்ஸ் போலியோ திட்டம்'.
  • இளம்பிள்ளைவாதம் என்கிற போலியோமைலிட்டிஸ் ஒரு தீவிரமான தொற்றுநோய். பெரும்பாலும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையே அது பாதிக்கும்.
  • இந்த வைரஸ் மனிதரிடமிருந்து மனிதருக்குப் பரவும். 1970-களில் போலியோவால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50,000 குழந்தைகள் ஊனமுற்றனர்.
  • இதைக் கட்டுப்படுத்தவே ‘பல்ஸ் போலியோ திட்டம்' தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பு உலகளவில் போலியோவால் பாதிக்கப்பட்டோரில், 60 சதவீதம் பேர் இந்தியாவிலிருந்தனர். போலியோ பாதிப்பை இந்தியாவால் கட்டுப்படுத்த முடியாது என்பதே உலக நாடுகளின் கணிப்பாக இருந்தது. ஆனால், பல்ஸ் போலியோ திட்டத்தின் கீழ் விரிவான பிரச்சாரம், விழிப்புணர்வு விளம்பரங்கள் மூலம், போலியோ பாதிப்பு இந்தியாவில் வெகுவாகக் குறைந்தது. உலக அளவில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட சுகாதாரத் திட்டங்களில் ஒன்று இது.
  • இந்தியாவை போலியோ இல்லாத நாடாக 2015இல் உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், 0-5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தற்போதும் வழங்கப்படுகிறது. போலியோ வைரஸ் தடுப்பூசியை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நாடு என்கிற பெருமையையும் இந்தத் திட்டம் இந்தியாவுக்குப் பெற்றுக்கொடுத்தது. கடைசியாக 2011 ஜனவரி 13 அன்று மேற்கு வங்கத்தில் போலியோ பாதிப்பு பதிவானது. கடந்த பத்து ஆண்டுகளில் போலியோ பாதிப்பற்ற நாடாக இந்தியா விளங்குகிறது. தமிழ்நாட்டு கடந்த 18 ஆண்டுகளாக போலியோ இல்லாத மாநிலமாக விளங்குகிறது.

திரையுலகம் அசல் இந்தியத் தாய்

  • அமெரிக்க எழுத்தாளர் கேத்தரீன் மேயோ எழுதிய ‘மதர் இந்தியா’ (1927) என்னும் நூல் இந்தியச் சமூகத்தையும் பண்பாட்டையும் மிகவும் மோசமாகச் சித்தரித்தது. அதற்கான மறுப்பாக ‘மதர் இந்தியா’ (1957) திரைப்படத்தைத் தயாரித்து இயக்கி வெளியிட்டார் மெஹ்பூப் கான்.
  • இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்போது நாட்டைத் தாய்க்கு இணையாகப் போற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக பாரதத் தாய் என்னும் உருவகம் பயன்படுத்தப்பட்டது.
  • மேயோ தன் புத்தகத்தில் இந்தியாவில் பெண்கள் மோசமாக நடத்தப்படுவதாகவும், அதனால் இந்தியாவுக்கு விடுதலை கொடுக்கக் கூடாது என்றும் எழுதியிருந்தார்.
  • மதர் இந்தியா’ திரைப்படம் சுயசார்புடன் இயங்கிய இந்தியத் தாயின் கதாபாத்திரத்தை முதன்மையாக வைத்து உருவாக்கப்பட்டது.
  • அதன் மூலம் தியாகம் உள்ளிட்ட இந்திய விழுமியங்களையும் ஒழுக்கத்தையும் அறநெறிகளையும் பின்பற்றுவதன் மூலம் இந்தியப் பெண்கள் சக்திமிக்கவர்களாக விளங்கினார்கள் என்று காண்பித்தது. அசலான இந்தியத் தாய் என்பதைச் சுட்டுவதற்காகவே நூலின் தலைப்பே படத்துக்கும் வைக்கப்பட்டது.
  • இந்தப் படத்தில் முதன்மைக் கதாபாத்திரமான ராதாவாக அப்போது இந்தி சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருந்த நர்கிஸ் நடித்திருந்தார்.
  • ஏழை விவசாயக் குடும்பத்தின் கடனை அடைக்கப் பாடுபடும் ஒற்றைத் தாயாக இந்தியப் பெண்களின் கடின உழைப்புக்கும் தியாகத்துக்கும் திரையில் அவர் உயிர்கொடுத்தார். அவருடைய கணவராக ராஜ் குமாரும் மகன்களாக ராஜேந்திர குமார். சுனில் தத் ஆகியோரும் நடித்திருந்தனர். நெளஷாத் இசையமைத்திருந்தார்.
  • இந்தியச் சுதந்திரத்தின் பத்தாண்டு நிறைவை கெளரவிக்கும் விதமாக 1957 ஆகஸ்ட்டில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம், இரண்டு மாதம் தாமதமாகவே வெளியானது. வசூலில் மிகப் பெரிய சாதனையைப் படைத்தது, பல திரையரங்குகளில் ஓராண்டுக்கு மேல் ஓடியது. அதுவரையிலான இந்திய சினிமாக்களில் மிகப் பெரிய பொருட்செலவில் உருவான இந்தப் படம், மிகப் பெரிய வசூலையும் குவித்தது.
  • விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட இந்தப் படம் ஆஸ்கர் விருதுக்காக இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட முதல் படம் என்னும் பெருமையைப் பெற்றது. சிறந்த இந்தித் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றது. இன்றளவும் கல்ட் கிளாசிக்காகக்கொண்டாடப்படும் ‘மதர் இந்தியா’, பெண்ணிய சிந்தனையின் தாக்கம் காரணமாக விமர்சனத்துக்கும் உள்ளாகிறது. ஆனால் இன்றளவும் சர்வதேச சினிமா விமர்சகர்களின் திறனாய்வுகளில் இந்தப் படத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவருகிறது.

தமிழ்நாடு: தமிழகத்திலிருந்து முதல் குடியரசுத் தலைவர்

  • தமிழ்நாட்டைச் (அன்றைய மதராஸ் மாகாணம்) சேர்ந்த சர்வபள்ளி ராதா கிருஷ்ணன் இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராக 1962 இல் பொறுப்பேற்றார். நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1952 முதல் 1962 வரை இரண்டு முறை பதவிவகித்தார்.
  • இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராக இருந்தார். இந்தியாவில் முதன்முறையாக இரண்டு முறை குடியரசுத் துணைத் தலைவராக இருந்தவர் என்கிற பெருமை அவருக்குக் கிடைத்தது.
  • 1957இல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலிலேயே டாக்டர் ராதாகிருஷ்ணனை வேட்பாளராக நிறுத்த பிரதமர் ஜவாஹர்லால் நேரு ஆர்வம் காட்டினார்.
  • ஆனால், அந்தத் தேர்தலில் டாக்டர் ராஜேந்திர பிரசாத் மீண்டும் போட்டியிட விரும்பியதால், ராதாகிருஷ்ணன் இரண்டாவது முறையாகக் குடியரசு துணை தலைவராக்கப்பட்டார்.
  • எனவே, இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் தேர்தல் 1962இல் நடைபெற்றபோது ஜவாஹர்லால் நேரு விரும்பியபடி, ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார்.
  • இத்தேர்தலில் ராதாகிருஷ்ணன் 5,53,067 வாக்கு மதிப்புகளைப் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்கள் சௌத்ரி ஹரி ராம் 6,341 வாக்கு மதிப்புகளையும், ஜமுனா பிரசாத் திரிசுலியா 3,537 வாக்கு மதிப்புகளையும் பெற்று தோல்வியடைந்தனர்.
  • பதிவான மொத்த வாக்குகளில் 98.2 சதவீத வாக்குகளை டாக்டர் ராதாகிருஷ்ணன் பெற்றார். இதன்மூலம் தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் என்கிற பெருமை டாக்டர் ராதாகிருஷ்ணனுக்குக் கிடைத்தது. 1967 வரை இப்பதவியில் அவர் இருந்தார். அவருடைய பிறந்த நாளான செப்டம்பர் 5 அன்று ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

நன்றி: தி இந்து (26 – 08 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்