TNPSC Thervupettagam

சுதந்திரச் சுடர்கள் 24

September 4 , 2022 705 days 428 0

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்…

கவி பாடும் கற்கள்

  • தமிழகத்தின் பழமையான கோயில்களில் பல, கலையழகுக்காகவும் கட்டுமானத்துக்காகவும் உலகப் புகழைப் பெற்றிருக்கின்றன. மதுரை மீனாட்சியம்மன் கோயில், தஞ்சை பெரிய கோயில், மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், ராமநாதபுரம் ராமநாத சுவாமி கோயில் பிரகாரம் போன்றவை பிரம்மிக்க வைக்கக்கூடியவை. ஆன்மிக, கலை, வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்ட இக்கோயில்கள் ஆச்சரியமூட்டும் சிற்பங்கள், கலையம்சம் நிறைந்த வேலைப்பாடுகள், தொன்மை வாய்ந்த அம்சங்களால் தனி அடையாளத்தைப் பெற்றுள்ளன.

வீரம் விளைந்த மண்

  • தமிழர்களின் மரபுவழி வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு என்று வேறு பெயர்களும் இதற்கு உண்டு. ஏறு என்பது காளையைக் குறிக்கும். காளையை ஓடவிட்டு இளம் காளையர்கள் அதன் திமிலைத் தழுவிப் பிடிப்பதே இந்த விளையாட்டு. மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் விளையாடப்பட்டாலும், மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுகள் உலகப் புகழ்பெற்றவை. ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை நீக்கக் கோரி 2017இல் நடைபெற்ற போராட்டங்கள் தேசிய அளவில் கவனம் ஈர்த்தன.

12 ஆண்டு அதிசயம்

  • உலகில் அதிசயங்களுக்குப் பஞ்சமில்லை. ஆனால், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சொல்லிவைத்தாற்போல் பூக்கும் இயற்கை அதிசயம் குறிஞ்சிப் பூ. பூப்பதற்கு எடுத்துக்கொள்ளும் நீண்ட காலத்தின் காரணமாகவே குறிஞ்சிப் பூ தனித்து அறியப்படுகிறது. பண்டைத் தமிழ் இலக்கியங்களில் இடம்பிடித்த குறிஞ்சிச் செடியில் நீலம், கரு நீல மலர்கள் எனப் பல வகைகள் உண்டு. தமிழகத்தில் உதகமண்டலம், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இவை பூக்கின்றன. கடைசியாக 2018இல் குறிஞ்சி மலர்கள் பூத்தன.

சுபநிகழ்வுகளின் அடையாளம்

  • விசேஷ நிகழ்வுகளுக்குப் பெண்களின் விருப்பத் தேர்வு பட்டுச் சேலை. அந்தஸ்து என்கிற அம்சத்தைத் தாண்டி கலாச்சார, ரசனை சார்ந்த வெளிப்பாடும் இதில் அடங்கும். தமிழகத்தில் காஞ்சிபுரம், ஆரணி, தர்மாவரம், திருப்புவனம், சின்னாளப்பட்டி ஆகியவை பட்டு நெசவுக்குப் பெயர்பெற்ற ஊர்கள். என்றாலும் தேசிய அளவில் காஞ்சிபுரம் பட்டு தனி அடையாளம் பெற்றிருக்கிறது. அங்கு நெய்யப்படும் பட்டுப் புடவைகள் பட்டு நூல், தங்க, வெள்ளி ஜரிகை மூலம் தயாரிக்கப்படுவதும், தனித்துவத் தையல் வடிவமைப்புமே இதற்குக் காரணம்.

சப்புக்கொட்ட வைக்கும் சுவை

  • தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊருக்கும் ஓர் அடையாள உணவு உண்டு. மாநிலம் எங்கும் பிரியாணி பிரியர்கள் உண்டு என்றாலும், ஆம்பூர் பிரியாணி தனி மகுடம் சூடிய ஒன்று. பொதுவாக பாஸ்மதி அரிசியில் சமைக்கப்பட்டாலும், தமிழ் மரபு அரிசி வகையான சீரக சம்பாவில் ஆம்பூர் பிரியாணி சமைக்கப்படுகிறது. இதே போல செட்டிநாடு உணவுக் கலாச்சாரமும் சிறப்புப் பெற்றது. தனித்துவ மசாலாக்களைக் கொண்டு உருவாக்கப்படும் இறைச்சி உணவு வகைகள் செட்டிநாட்டு உணவு வகைகளுக்கு அடையாளம் பெற்றுத் தந்துள்ளன. சென்னையின் புகழ்பெற்ற புகாரி ஹோட்டல் மூலம் அறிமுகமானதாகக் கருதப்படும் சிக்கன் 65, டிரை கோபி மஞ்சூரியன் வரை மற்ற உணவு வகைகளும் பெரும் தாக்கத்தை செலுத்தியிருக்கின்றன.

கடல் விழுங்கும் சூரியன்

  • கடற்கரை ஊர்களில் சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் காண முடியும். ஆனால், இவை இரண்டையும் பார்ப்பதற்காகவே ஒரு ஊரைத் தேடிப் பலரும் வருகிறார்கள் என்றால், அது கன்னியாகுமரிக்குத்தான். முக்கடலும் சங்கமிக்கும் புள்ளி என்பது ஒரு காரணமாக இருந்தாலும், இந்திய முதன்மை நிலப்பகுதியின் இறுதி முனை குமரி என்கிற தனிச் சிறப்பும் இதற்குக் காரணம். அதிலும் பௌர்ணமி அன்று சூரிய அஸ்தமனத்தையும் சந்திர உதயத்தையும் ஒரே நேரத்தில் காணக் கண் கோடி வேண்டும்.

இந்தியாவின் முதல் நவீன நகரம்

  • பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் பிரான்சிஸ் டேயும் ஆண்ட்ரு கோகனும் 17ஆம் நூற்றாண்டில் மதராசப்பட்டினத்துக்கு வந்தனர். தற்போது ஜார்ஜ் கோட்டை அமைந்திருக்கும் இடத்தை வணிகம் செய்ய அவர்கள் தேர்ந்தெடுத்தனர். குறுநில மன்னர் சென்னப்ப நாயக்கரிடமிருந்து அந்த இடம் வாங்குவதற்கான ஒப்பந்தம் 1639 ஆகஸ்ட் 22 அன்று இடப்பட்டது. 1644இல் புனித ஜார்ஜ் கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை இது. அது மட்டுமல்ல, பிரிட்டனுக்கு வெளியே ஆங்கிலேயர்கள் முதன்முதலில் அமைத்த மாநகராட்சியும் அன்றைய மதராஸே.

நீரின் மேல் நிற்கும் அற்புதங்கள்

  • காவிரியால் ஏற்படும் வெள்ள அழிவைத் தடுக்கவும், மிகுதியான நீரை பயன்படுத்தி பாசனப் பரப்பை அதிகரிக்கவும் கரிகாலச் சோழனால் கட்டப்பட்ட அணைதான் கல்லணை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அணை, தற்போது வெளியே தெரியும் அணைக்கு அடியில் இருக்கிறது. தற்போது நாம் பார்க்கக்கூடிய கல்லணையைக் கட்டியது ஆங்கிலேயப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன். ராமேஸ்வரம் தீவையும் முதன்மை இந்திய நிலப்பகுதியையும் இணைக்கக்கூடிய பாலம் தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் மற்றொன்று. பாம்பன் சாலைவழிப் பாலம் 1988இல் கட்டி முடிக்கப்பட்டது என்றால், பாம்பன் ரயில் பாலம் 1914இல் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. இந்த இரண்டு பாலங்களும் கடந்த நூற்றாண்டின் பொறியியல் அற்புதங்கள்.

பேரைக் கேட்டாலே வெடிக்கும்

  • பட்டாசை சீனா கண்டுபிடித்திருந்தாலும் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், உலகின் பல பகுதிகளுக்கும் அதைக் கொண்டுபோய் சேர்த்தது என்னவோ சிவகாசிதான். கொல்கத்தாவில் தீப்பெட்டித் தொழிற்சாலையைப் பார்த்த சிவகாசியைச் சேர்ந்த பி. ஐயன், ஏ. சண்முகம் ஆகியோர் 1928இல் சிவகாசியில் தீப்பெட்டி தொழிற்சாலையைத் தொடங்கினர். பின்பு பட்டாசுத் தொழிலுக்கும் சிவகாசி பெயர்பெற்றது. ‘குட்டி ஜப்பான்' சிவகாசிதான், இந்தியாவில் 90 சதவீத பட்டாசை உற்பத்திசெய்கிறது.

ஆசியாவின் டெட்ராய்ட்

  • இந்திய வாகன உற்பத்தித் துறையின் முன்னணி நகரம் சென்னை. அமெரிக்காவில் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள சிறிய நகரான டெட்ராய்ட், அமெரிக்க வாகன உற்பத்தித் துறையின் தலைநகராக விளங்கிவருகிறது. அதே போல் பிஎம்டபிள்யு, ஹூண்டாய், ரெனால்ட் நிஸ்ஸான், ராயல் என்ஃபீல்ட், அசோக் லேலண்ட், சுந்தரம் கிளேடன், டாஃபே உள்பட சென்னையிலும் அதிக எண்ணிக்கையிலான வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. அதனால்தான் ஆசியாவின் டெட்ராய்ட் என்று சென்னை அழைக்கப்படுகிறது. நாட்டின் வாகன உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு சென்னையில் நடைபெறுகிறது.

மருத்துவம்: சுகாதாரத்தில் உயர்ந்து நிற்கும் தமிழ்நாடு

  • கல்வி, சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றில் மட்டுமல்லாமல்; சுகாதாரத்திலும் தமிழ்நாடு மேம்பட்ட நிலையில் இருக்கிறது. இதற்கான அடிப்படை 1920களில் ஆட்சியிலிருந்த நீதிக் கட்சியின் முன்னெடுப்புகளிலிருந்து தொடங்குகிறது.
  • சுதந்திரத்துக்குப் பின்னர் தமிழ்நாட்டில் சுகாதாரக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டது. 1960களில் திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்னரே சுகாதாரத் துறையின் மேம்பாடு வேகமும் வீரியமும் பெற்றது. கடந்த 75 ஆண்டுகளில், இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மருத்துவக் கல்வி, மருத்துவ வசதி, சுகாதாரக் கட்டமைப்பு ஆகியவற்றில் தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சி சிறப்பானது.
  • இன்று தமிழ்நாட்டில் 32 மாவட்ட மருத்துவ மனைகளும், 278 மாவட்டத் துணை மருத்துவ மனைகளும், 4,285 உடல்நலம் - ஆரோக்கிய மையங்களும் (HWC) உள்ளன. தமிழ்நாட்டில் 26 அரசு கல்லூரிகள், 24 தனியார் கல்லூரிகள் என மொத்தமாக 50 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
  • கைக் குழந்தைகள் இறப்பு விகிதம் (IMR) இந்திய அளவில் 30 என்றிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் 15 ஆக இருக்கிறது. மகப்பேறு மகளிர் இறப்பு விகிதம் (MMR) இந்திய அளவில் 113 என்றிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் 60 ஆக இருக்கிறது. பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் (NMR) இந்திய அளவில் 23 என்றிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் 10 ஆக இருக்கிறது. சுகாதாரக் குறியீடுகளில் தமிழ்நாட்டின் நிலை உலக அளவில் பாராட்டைப் பெற்றிருக்கிறது. குறிப்பாக, கரோனா பெருந்தொற்றைத் தமிழ்நாடு அரசு பிற இந்திய மாநிலங்களைவிடச் சிறப்பாகக் கையாண்டதற்கு அதன் மேம்பட்ட சுகாதார அமைப்பே காரணம்.

ஆராய்ச்சி: இந்தியத் தத்துவவியலைப் புனரமைத்தவர்

  • இந்தியாவில் புதிய தத்துவம் முளைவிட்ட காலகட்டத்தில் உருவான முக்கியமான தத்துவவியலாளர் தேவி பிரசாத் சட்டோபாத்யாய. இந்தியத் தத்துவவியலை, பகுத்தறிவுரீதியில் அவர் அணுகினார். பிரபஞ்சம், பொருள்களால் ஆனது என்கிற ஆதாரபூர்வமான கருத்தை அவர் வலியுறுத்தினர். அதுவரை இந்தியாவில் நிலைகொண்டிருந்த கருத்துமுதல்வாதத்தை அவர் கேள்விக்கு உட்படுத்தினார். இந்தியத் தத்துவவியலில் பொருள்முதல்வாதத்தை முன்வைத்தார்.
  • மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் தேவி பிரசாத். இவரது தந்தை, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். இதனால் தேவி பிரசாத்துக்கும், அதில் ஆர்வம் உண்டானது. அந்தக் காலகட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்திய ஒருமைப்பாட்டைத் தொடர்ந்து தேவி பிரசாத்துக்கு இந்தியத் தத்துவவியலின் மீது ஆர்வம் வந்தது. கல்கத்தா பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் படித்தார். இந்தியத் தத்துவவியலாளர்கள் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனும் எஸ்.என்.தாஸ்குப்தாவும் தேவி பிரசாத்தின் பேராசிரியர்களாக இருந்திருக்கிறார்கள். விடுதலைப் போராட்டக் காலகட்டத்தில் தேசபக்தியுடன் பகுத்தறிவற்ற நம்பிக்கைகளும் நிலவிவந்ததைப் பற்றி பின்னால் அவர் எழுதினார். அவரது ‘லோகாயதா’ என்கிற நூல் இந்த வகையில் முக்கியமானது.
  • பொருள்முதல்வாதம், மார்க்சியம் எல்லாம் அந்நியக் கருத்தாக்கங்கள் என்று முன்வைக்கப்படுவதற்கு எதிராகவும் அவர் எழுதியுள்ளார். இந்திய அறிவியல் வளர்ச்சி, தொடக்க நிலையைத் தாண்டி வளராமல் போனதற்கான காரண காரியங்களை அவர் ஆராய்ந்துள்ளார். தேவி பிரசாத் சட்டோபாத்யாயவின் துணிபுகள், முழுமையான ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டவை. அவர் மறைந்துவிட்ட நிலையில் அவர் கருத்துகள் இன்றைய காலகட்டத்தில் முன்மொழியப்பட வேண்டியது அவசியமானது.

ஆளுமை: நவீன இந்தியாவைக் கட்டிய பொறியாளர்

  • இந்தியாவில் ‘பொறியாளர்கள் தினம்' மோக்‌ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா பிறந்தநாளில் கொண்டாடப்படுகிறது. பொறியாளராகவும் அறிஞராகவும் அரசியல்வாதியாகவும் அவர் தனி முத்திரையைப் பதித்திருக்கிறார்.
  • மைசூரில், படித்த நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். கட்டிடப் பொறியியல் படிப்பை முடித்து, பொதுப்பணித் துறையில் வேலைக்குச் சேர்ந்தார். இந்திய நீர்ப்பாசன ஆணையத்துக்கு அழைக்கப்பட்டு, சிக்கலான நீர்ப்பாசனத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தினார். விவசாயிகளுக்குப் பாசன நீர் வழங்கவும் தண்ணீர் வீணாகாமல் இருக்கவும் தடுப்பணைகளை அமைத்தார்.
  • தானியங்கி வெள்ள மதகை உருவாக்கி, அதற்குக் காப்புரிமையும் பெற்றார். 1903இல் புனேவுக்கு அருகே உள்ள கடக்வசாலா நீர்த்தேக்கத்தில் அவர் வடிவமைத்த வெள்ள மதகு நிறுவப்பட்டது. அதன் வெற்றியைத் தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு நீர்த்தேக்கங்களிலும் வெள்ள மதகுகள் அமைக்கப்பட்டன.
  • மைசூரின் தலைமைப் பொறியாளராக 1909இல் நியமிக்கப்பட்டார். ஹைதராபாத்தை வெள்ளத்திலிருந்து காப்பாற்றுவதற்குத் தடுப்பு முறையை அமைத்ததால், மக்களிடம் இவருடைய செல்வாக்கு அதிகரித்தது.
  • மைசூர் அரசின் திவானாக 1912இல் நியமிக்கப்பட்டார். பொருளாதார, சமூக மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு தொழில் வளர்ச்சிக்குப் பாடுபட்டார். காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டவும், மைசூருக்கு அருகில் உள்ள சிவசமுத்திரத்தில் நீர்மின் உற்பத்தி ஆலை அமைவதற்கும் காரணமாக இருந்தார். சந்தன எண்ணெய் ஆலை, பத்ராவதி எஃகு ஆலை, சோப்பு ஆலை, உலோகத் தொழிற்சாலை, தோல் பதனிடும் தொழிற்சாலை, மைசூர் பல்கலைக்கழகம், பெங்களூரு பாலிடெக்னிக் உள்பட இன்னும் பலவற்றை அமைத்தார். இதன் மூலம் சிறந்த பொறியாளர், சிறந்த நிர்வாகியாகப் பெயர்பெற்றார்.
  • பிஹாரில் கங்கை நதி மீது கட்டப்பட்ட மோகமா பாலத்துக்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை 90 வயதிலும் வழங்கினார். 101 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த விஸ்வேஸ்வரய்யாவின் புகழை இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களும் அணைகளும் தொழிற்சாலைகளும் சொல்லிக்கொண்டிருக்கின்றன

நன்றி: தி இந்து (04 – 09 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்