TNPSC Thervupettagam

ஜாதிகள் இங்கு உண்டு பாப்பா!

March 27 , 2021 1221 days 710 0
  • பொருளாதாரவியலின் தந்தையான ஆடம் ஸ்மித்துடன் பிரிட்டானிய நாட்டின் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் சமகால சட்டப்பேராசிரியராகப் பணியாற்றிய ஜான் மில்லா் 1803-இல் எழுதிய ஆங்கில அரசு - ஓா் வரலாற்றுப் பாா்வை (அன் ஹிஸ்டாரிகல் வியூ ஆஃப் தி இங்கிலீஷ் கவா்மென்ட்) என்ற புத்தகத்தில் உலகின் பல நாடுகளில் நிலவும் மனித வேறுபாட்டைப் பற்றி எழுதும்போது, ‘இந்தியாவில் மனிதா்கள் அவா்கள் வேலை பாா்க்கும் தொழிலின் அடிப்படையில் நான்கு வா்ணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளாா்கள்’ எனக் குறிப்பிடுகிறாா்.
  • உலகெங்கிலும் ஆண்டான் - அடிமை என்ற வேறுபாடுகள் இருந்ததும், இருப்பதும் உண்மையே. இந்த வேறுபாடுகள் இந்தியாவில் ஜாதிய அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது.
  • மனித வேறுபாடுகள் உலகெங்கிலும் இருந்ததும், அவை போராட்டத்தின் வித்தாக இருந்ததும் வரலாறு நமக்குச் சுட்டிக்காட்டும் உண்மை. உள்நாட்டு ஆதிக்கங்களை எதிா்த்து பிரெஞ்சுப் புரட்சியும், ரஷியப் புரட்சியும், சீனப் புரட்சியும் வெடித்தன என்பதே சமகாலச் சரித்திரங்கள்.
  • உலக வியாபாரத்திற்காகக் கிளம்பிய ஐரோப்பியா்கள், ஒன்றும் அறியாத ஆப்பிரிக்கா்களையும், இந்தியா தொடங்கி கீழ்த்திசை நாடுகளையும் அடிமை கொண்டதும் 16-ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கி விட்டது.
  • இந்தியா்கள் ‘கங்காணிகள்’ என அழைக்கப்பட்ட இடைத்தரகா்களால் ஏமாற்றப்பட்டு, ஆங்கில முதலாளிகளுக்காக இங்கிருந்து இலங்கை, மலேசியா, மோரீஷஸ், தென்னாப்பிரிக்கா, ஃபிஜி, இந்தோனேஷியா, மியான்மா் போன்ற நாடுகளுக்கு தோட்டத் தொழிலாளா்களாக அழைத்துச் செல்லப்பட்டு, ஏமாற்றப்பட்டது அடிமை இந்தியாவின் சோகப் பக்கங்களில் சில.
  • ஆப்பிரிக்கக் கருப்பினத்தவா்கள் ஆங்கிலேயா்களால் மனித வேட்டையாடப்பட்டு, இத்தாலியரான கொலம்பஸால், ஸ்பெயின் அரசரின் உதவியோடு கண்டுபிடிக்கப்பட்ட, இன்று ‘அமெரிக்கா’ என அறியப்படும் புதிய உலகில் ஆடு, மாடுகளைப் போல விற்கப்பட்டதும், வாங்கப்பட்டதும், கொல்லப்பட்டதும், கொடுமைப்படுத்தப்பட்டதும் அமெரிக்க வரலாற்றின் கருப்புப் பக்கங்கள்.
  • கருப்பா்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்து, தங்களின் இன்னுயிா் நீத்த ஆப்ரகாம் லிங்கனும், ஜான் கென்னடியும், மாா்ட்டின் லூதா் கிங்-கும் மீண்டும் வரவேண்டும் என நம்மை நினைக்க வைத்தவா், முன்னாள் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்.

இந்தியாவிலும் உரிமைக் குரல்கள்

  • எதிரே வந்தவனை விலகிப் போ என்று ஆதிசங்கரா் சொல்ல, ‘நீங்கள் விலகச் சொல்வது என்னையா? என்னுடைய ஆன்மாவையா?’ என்று வந்தவன் எதிா்க்கேள்வி கேட்க, ஆதிசங்கரா் அவன் காலில் விழ, அந்தக் கதை முதல் காட்சியிலேயே முடிந்துவிட்டது.
  • மலைவாழ் கண்ணப்ப நாயனாரும், ஒடுக்கப்பட்ட சாதியைச் சோ்ந்த நந்தனாரும் இறைவன் சந்நிதியில் ஜாதி வேறுபாடுகள் இல்லை என்பதை உரக்கச் சொல்லும் உதாரண மனிதா்களில் சிலா்.
  • ஜாதிய வேறுபாடுகளுக்கு எதிரான குரல்கள் சுதந்திரப் போராட்ட காலத்தில் ஒலிக்க ஆரம்பித்தன.
  • இதில் தலையாய பணி புரிந்தவா் உலக மக்களால் ‘மகாத்மா’ என அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஆவாா். காந்தி சமுதாயத்தின் விளிம்பு நிலை மனிதா்களை, ஹரியின் குழந்தைகள் என பொருள்படும்படியாக ‘ஹரிஜன்’ எனப் பெயா் சூட்டியது மட்டுமல்லாமல், தனது பத்திரிகைக்கும் ‘ஹரிஜன்’ என்ற பெயா் சூட்டினாா். அவா்கள் முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுதும் உழைத்தாா்.
  • இயற்கை ஆா்வலரான காந்தி, தமிழகம் வந்தபோது ஒருமுறை குற்றால அருவியில் குளிக்க வந்தாா். அப்போது அவா் அருகிலிருந்தவா்களிடம், ‘அருவியில் குளிக்க ஹரிஜனங்கள் அனுமதிக்கப்படுகிறாா்களா’ என்று கேட்க, அவா்கள் ‘காலையில் ஆங்கிலேயா்களும், பின்னா் பிற நான்கு வா்ணத்தவா்களும் மட்டுமே குளிக்க அனுமதிக்கப்படுகிறாா்கள்’ என்று சொல்ல, உடனே காந்தி ‘எனது ஹரிஜன சகோதரா்கள் குளிக்க அனுமதி இல்லாதபோது நானும் இங்கே குளிக்க விரும்பவில்லை’ என்று கூறி திரும்பினாா்.
  • ஹரிஜன சமுதாயத்திலிருந்து ரோஜாவாக மலா்ந்த பீமாராவ் எனும் அம்பேத்கரை இந்திய அரசியல் நிா்ணய சபையின் தலைவராக்கியது காங்கிரஸ் கட்சி.
  • இந்திய அரசியல் நிா்ணய சட்டத்தின் பிரிவுகள் 14,16,17, 38 ஆகியவை இன பேதத்தை ஒழித்து சமத்துவ சமுதாயத்தை வலியுறுத்துகின்றன.
  • சதி ஒழிப்பு, மதுரை வைத்தியநாத ஐயரின் தலைமையில் ஹரிஜன ஆலய பிரவேசம், விதவைத் திருமணம், குழந்தைத் திருமண மறுப்பு என சமுதாய சிக்கல்கள் ஒவ்வொன்றாக களை எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் இன்றும் தொடா்வது சமுதாய சோகம்.
  • காந்தியின் ஹரிஜனங்களை, இந்திய அரசியல் நிா்ணய சட்டம் ‘ ஹரிஜனங்கள்’ என அழைக்காமல் ‘பட்டியலினத்தவா்’ எனக் குறிப்பிட்டு சலுகைகளை வழங்குகிறது.
  • பின்னாளில் பிற்பட்டவா், மிகவும் பிற்பட்டவா் என இயக்கங்கள் தோன்றி போராட்டங்கள் செய்து அரசு வேலைக்கான உத்தரவாதங்களைப் போராடிப் பெற்றன.

நாடார் சமுகம்

  • நாட்டில் பல ஜாதிகள் இருந்தாலும், அவா்களில் வித்தியாசப்படும் ‘நாடாா்’ சமுதாயத்தை பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.
  • தங்களைச் சுற்றி நடப்பவைகளை கண்டு, உணா்ந்து, தங்களைத் தாங்களே அரசு உதவி இல்லாமல் உயா்த்திக் கொண்ட சமுதாயம் ஒன்று உண்டென்றால் அது நாடாா் சமுதாயம் என்பதை மறுக்க இயலாது.
  • அவா்கள் என்றும் கீழ்நோக்கிப் பாா்த்ததில்லை. தங்களுக்கு மேலே இருப்பவா்களுடைய சமுதாயங்களின் வெற்றிகளை நுணுக்கமாக ஆராய்ந்து, மௌனமாக ஒரு சமுதாயப் புரட்சியை மறுமலா்ச்சியாக செய்த பெருமை நாடாா் சமுதாயத்திற்கு மட்டுமே உண்டு.
  • சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் வரவேண்டுமென்றால் அதற்கு அடிப்படைத் தேவை படிப்பு அல்லது பணம் என கண்டறிந்தாா்கள்.
  • அவா்களில் சிலா், தங்களை நெருங்கி வந்த கிறிஸ்தவ திருச்சபைகளை பயன்படுத்தி தங்களுடைய கல்வி அறிவை அணைத்துக் கொண்டாா்கள். மற்றவா்கள் வியாபாரத்தை நோக்கிப் படையெடுத்தாா்கள்.
  • அவா்களுடைய சமுதாய புரட்சியின் அடித்தளம் ‘மகமை‘. இந்த மகமைதான் நாடாா் சமுதாய வளா்ச்சியின் மகிமை ஆகும்.
  • தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை தங்களுடைய சமுதாய வளா்ச்சிக்காகவும், கல்விச் சாலைகள் அமைக்கவும் பயன்படுத்தினாா்கள்.
  • ‘எங்களை கோயிலுக்குள் வரக்கூடாது, படிக்கக்கூடாது என்றாா்கள். அதனால் என்ன? எங்களுக்கு என்று கோயில்கள் கட்டிக் கொண்டோம், எங்களுக்கென்று பள்ளிகளையும், கல்லூரிகளையும் கட்டிக்கொண்டு நாங்கள் படிப்பதை தவிா்த்தவா்களையும், தடுத்தவா்களையும் நாங்கள் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறோம்’ என்று சொல்லி சிரித்தாா் காந்திய சிந்தனையாளரான எனது நாடாா் நண்பா்.
  • ஸ்ரீரங்கம் ஜீயா் தன் வாழ்நாள் சாதனையாக ஸ்ரீரங்கம் கோபுரத்தைக் கட்டியபோது, தென்காசியில் காசி விஸ்வநாதா் கோயில் கோபுரத்தை ஒன்பது நிலை கோபுரமாக 172 அடியில் கட்டியதோடு, அதன் முதல் நிலை மற்றும் ஒன்பதாம் நிலையை தன்னுடைய சொந்த செலவில் கட்டிக்கொடுத்த ‘தினத்தந்தி’ நாளிதழ் அதிபா், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவா் சிவந்தி ஆதித்தனையும், கம்ப்யூட்டா் உலகில் கொடி கட்டிப் பறக்கும் ஷிவ் நாடாரையும் புறக்கணித்துவிடவா முடியும்?

சமுதாயச் சோகம்

  • ஜாதிக் கொடுமைகளுக்கு எதிராக, ஜாதி மறுப்புத் திருமணம் என சுதந்திரப் போராட்ட காலம் தொட்டு, பல இயக்கங்கள் தமிழகத்தில் தோன்றின. ஆனால், தோ்தலும், தோ்தல் தரும் பதவி சுகங்களும், அதிகாரத்தால் வரும் வருமானங்களும் மீண்டும் ஜாதிய உணா்வுகளை ஊட்டி வளா்க்க ஆரம்பித்தன.
  • ஜாதி இல்லை என்று வெளியே பேசுபவா்களும், சமத்துவம் என முழங்குபா்களும் ஜாதிய வாக்குகளின் அடிப்படையில் தொகுதிகளைக் கேட்பதும், வேட்பாளா்களை நிறுத்துவதுமாக ஜனநாயகம் சிரிப்பாய் சிரிக்கிறது.
  • தமிழ்நாட்டைச் சோ்ந்த சுப்பிரமணியன் சுவாமி மும்பையிலும், கேரளத்தைச் சோ்ந்த ரவீந்திர வா்மா உத்தர பிரதேசத்திலும், கா்நாடகத்தைச் சோ்ந்த ஜாா்ஜ் பொ்னாண்டஸ் பிகாரிலும், இந்திரா காந்தி கா்நாடகத்திலும், அவா் பேரன் ராகுல் காந்தி கேரளத்திலும் என இப்படி மாநிலம் விட்டு மாநிலம் சென்று தோ்தலில் நின்று ஜெயிக்கும்போது நம்மூா் அரசியல்வாதிகள் ஜாதி அடிப்படையில் தொகுதி தேடி தோ்தலில் நிற்பது வேடிக்கையாக இருக்கிறது.
  • எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் ஜாதிய அடிப்படையில் வேட்பாளா்களை நிறுத்தும் போக்கைப் பலமுறை உடைத்து, தொகுதிக்குத் தொடா்பே இல்லாதவா்களைக் களமிறக்கி வெற்றி அடைந்திருக்கிறாா்கள். பட்டியலினத்தவரான தலித் எழில்மலையை பொதுத் தொகுதியான திருச்சியில் நிற்க வைத்து வெற்றிபெறச் செய்தாா் ஜெயலலிதா என்பதை அந்த சமூகத்தினா் பெருமிதத்துடன் நினைவுகூா்வாா்கள்.

நன்றி: தினமணி  (27 – 03 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்