தமிழ்ச் சிந்தனை மரபில் ஒரு சுதேசி
- பேராசிரியர் தொ.பரமசிவன், தமிழ்ப் பண்பாட்டாய்வுகளில் எல்லையில்லாச் சுதேசியத்தைத் தேடியவர். அவர் முன்னெடுத்த ஆய்வு முறைகளும் பல்துறை சார்ந்த நுண்ணாய்வும், அவற்றின் வழி கண்டடைந்த வீச்சுகளும் மிகவும் தனித்துவமானவை. எந்த மேலைக் கோட்பாடுகளிலும் சிக்கிக் கொள்ளாமல் மண் சார்ந்தும் மக்கள் சார்ந்தும் பேருண்மைகளைக் காட்டியவர். தமிழியம் சார்ந்த இன்றைய இளம் தலைமுறை ஆய்வாளர் ஒவ்வொருவரும் தொ.ப.வை உள்வாங்க வேண்டியது அவசியமாகும். முன்னுதாரணமில்லா ஆய்வாளர் அவர்.
நுண்பொருள் ஆய்வாளர்:
- தொ.ப. தமிழ்ப் பண்பாட்டின் விழுமிய நுட்பங்களைப் பேசியவர். காலங்களைக் கடந்து புதைந்து கிடக்கும் வேர்களை அலசி ஆராய்ந்தவர். தமிழ் மரபின் விழுதுகளை விடவும் வேர்களைத் தோண்டி எடுத்தவர். இதில் என்ன இருக்கிறது? சாதாரண விடயம்தானே! என்று நினைக்கின்றவற்றில் நுட்பமான கருத்துகளை எடுத்துக் காட்டியவர்.
- அவருடைய பொருள்கோடல் முறை பிரமிக்க வைக்கக் கூடியது. புழங்கு பொருட்கள், சடங்கு சம்பிரதாயங்கள், உணவு, இன்ன பிற பண்பாட்டுக் கூறுகள் பற்றியும் வெகு நுட்பமான விசாரணைகளைச் செய்தவர் அவர். பாட்டாளிகள் சமைக்கும்போதே உப்பிட்டுச் சமைப்பார்கள். ஏன் தெரியுமா? வேலை செய்யுமிடங்களில் உப்பைத் தேட முடியாதல்லவா! வசதியான மக்கள் வாழை இலையில் உப்பு பரிமாறி சாப்பிடுவார்கள். உணவு முறையில் சாதியத்தை வெளிப்படுத்தியவர் தொ.ப.
- மணவறையில் அரசாணிக்கால் நடுவதன் வரலாற்றை விளக்குகிறார். அந்தக் காலத்தில் அரசிடம் அனுமதி வாங்கி நடத்திய திருமணங்களில் அரசாணிக்கால் நடப்பட்டதாம். அது இன்றும் தொடர்கிறது என்கிறார். “நமக்குச் சொல்லப்பட்டுள்ள வரலாறுகள் பிழையானவை. அவை யாவற்றையும் திருத்தி எழுத வேண்டும். நமது பண்பாட்டு வேர்களை நாட்டுப்புற மக்களிடம் கள ஆய்வு செய்து கண்டறிய வேண்டும்” என்கிறார் அவர். இது சார்ந்து எண்ணற்ற ஆய்வுகளைச் செய்திருக்கிறார்.
- இன்று மதுரைக்குப் பெருமை சேர்க்கும் அழகர் கோயில் ஆதியில் பௌத்தக் கோயில் என்று கட்டுடைத்துக் காட்டுகிறார். சமணத்தின் எச்சங்கள் பலவற்றை எடுத்துக் காட்டுகிறார். தைப்பூசம் பௌர்ணமி நாள்தான் தமிழர்களின் ஆண்டுத் தொடக்கம் என்கிறார். சல்லிக்கட்டை ‘மாடு அடக்குதல்’ என்று சொல்வது தவறு; ‘மாடு அணைதல்’ என்றே சொல்ல வேண்டுமென்பார். மைந்து விரட்டுதான் மஞ்சு விரட்டானது. மைந்து என்றால் வீரம் என்பது பொருளாம். பழந்தமிழர் வாழ்வியல் சேர நாட்டில் இன்றும் தொடர்கிறது என்பார். வழிபடும்போது தெய்வ உருவங்களை வண்ணப் பொடிகளால் தரையில் எழுதி வணங்கும் முறை இன்றும் கேரளத்தில் உள்ளது. இதனைக் ‘களம் எழுதுதல்’ என்பார்கள். வழிபாடு முடிந்த பிறகு அந்த உருவங்களைக் கலைத்து விடுவார்கள். இதனைக் ‘களமழித்தல்’ என்பார்கள். இந்த நிலை தமிழகத்தில் சற்று மாறியிருக்கிறது. வழிபாட்டின்போது கல் நட்டுச் சாமி கும்பிடுவார்கள். அதன் பின்னர் அதனைக் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவார்கள். இது ஆதி நிலை.
- இப்படிச் சில நூறு பண்பாட்டு நுட்பங்களைத் தொ.ப. அகழ்ந்து காட்டியிருக்கிறார். தமிழ்ப் பண்பாடு என்பது ஓடும் நதியாகவும் உள்ளது; உறை பனியாகவும் உள்ளது. இவ்விரண்டு துருவங்களிலிருந்தும் தமிழ்ப் பண்பாட்டை விளங்கிக் கொள்ள வேண்டுமென்கிறார்.
தொ.ப.வின் முறையியல்:
- தொ.ப.வின் நாற்பதாண்டுக் கால ஆய்வுத் தடம் ஒரு சகாப்தம். அவர் தொடங்கியது மார்க்சியம் என்றாலும், இறுதிவரை நின்றது பெரியாரியம். ஆனால், அதிகம் ஆய்வு செய்தது சமயம் பற்றி. அவர் எழுதிய கட்டுரைகளிலேயே மிகப் பெரியது ‘தெய்வம் என்பதோர்’. நாட்டார் தெய்வங்கள் கிராமியப் பொருளாதாரத்தோடும், உள்ளூர் உற்பத்திச் சக்திகளோடும் பின்னப்பட்டவை என்பதை நிறுவிக் காட்டியவர் தொ.ப.
- நாட்டார் வழிபாட்டில் தெய்வங்களின் இருத்தலைச் சாதிகள் காப்பாற்றுகின்றன. ஆனால், பெருந்தெய்வ வழிபாட்டில் சாதிகளைத் தெய்வங்கள் காப்பாற்றுகின்றன என்பதைத் தொ.ப. கட்டுடைத்துக் காட்டுகிறார். இறுதியாக, நாட்டார் சமயம் ஒரு ‘பயன்பாட்டுச் சமயம்’ என்பதை ஆழ்ந்து நோக்குகிறார். இதனால் தொ.ப. ஒரு ‘நவ பெரியாரியவாதி’யாகப் பரிணமிக்கிறார்.
- பெரியாரியம் அடிப்படையில் கட்டுடைப்புவாதம் சார்ந்தது. சாதி மறுப்பு, சமய மறுப்பு, தாலி மறுப்பு, சமூகச் சீர்திருத்தம், சமூக நீதி முதலான அனைத்தும் கட்டுடைத்தல் சார்ந்தவை. தொ.ப. மைய நீரோட்டத்தைக் கட்டுடைத்துக் கொண்டே இருந்தார். ஓர் எதிர்க்கதையாடலை உருவாக்கிக் கொண்டேயிருந்தார். அவர் அடிப்படையில் வாய்மொழி மரபுக்குரியவர். எழுதுவதைவிட பேசுவதையே விரும்பியவர். எங்கும் எப்போதும் எதையாவது பேசிக் கொண்டே இருப்பார். பெரியார் கையாண்ட ‘எதிர்க்குரல்’, ‘தூண்டுதலை நிகழ்த்துதல்’ ஆகிய இரண்டையும் தொ.ப. தொடர்ந்து செய்துகொண்டே இருந்தார்.
- ஆய்வுகளில் பலரும் நேர்க்கோட்டுத் தரவுகளைக் கொண்டு பொருள் விளக்கம் காண்பார்கள். ஆனால் தொ.ப. குறுக்கும் நெடுக்குமாகப் பல்வேறு தரவுகளை வெவ்வேறு தளங்களிலிருந்து கோத்துக் காட்டுவார். நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இணைத்துக் காட்டுவார். சான்றாதாரங்களைப் பல்வேறு திசைகளிலிருந்தும் அகழ்ந்தெடுப்பார். இதுவே அவரது புலமைப் பாய்ச்சலாகும்.
- ஆய்வு என்பது அனுமானமாக அமையக் கூடாது; ஆனால், அதனை அனுமானத்துடன் தொடங்க வேண்டும் என்பார். வழக்காடு மன்றங்களில் எடுத்துரைக்கும் நேர்க்கோட்டு தர்க்க முறையியலைத் தொ.ப. கையாள மாட்டார். பல இடங்ளில் முன்தொடர்ச்சி, பின்தொடர்ச்சி இல்லாத ஒரு தர்க்க முறையியலைக் கையாளுவார். இது அவருக்கே உரிய பாண்டித்தியமாகும். தொ.ப. ஒரு நுண்பொருள் ஆய்வாளர். நுட்பங்களின் மீதே அவருக்கு நாட்டம் அதிகம்.
தொ.ப.வின் பங்களிப்பு:
- தொ.ப.வின் ஆய்வுக் களங்கள் மிக விரிவானவை. சமூகம், சமயம், தத்துவம், வரலாறு, நாட்டார் வழக்காற்றியல், இலக்கியம், இலக்கணம், கல்வெட்டியல், தொல்லியல் முதலான துறைகளை இணைத்து நுட்பங்களைத் தேடியவர். ‘அறியப்படாத தமிழகம்’ வந்தபோது இவரை அறியாதவர்களே இல்லை. இன்று இருபதுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் இவருடைய நூல்கள் கிடைக்கின்றன. ஆனால் இவர் எழுதியவை பதின்மூன்று நூல்கள் மட்டுமே. கட்டுரைகளைப் பிரித்துப் போட்டுப் புதிய தலைப்புகளில் நூல்கள் வெளியாகின்றன.
- தொ.ப.வின் ஒட்டுமொத்த பங்களிப்பை இரண்டு நிலைகளில் சொல்லலாம். ஒன்று: தமிழ்ப் பண்பாட்டின் செவ்வியம் இந்திய அளவில் தனித்துவ விழுமியம் சார்ந்தது என்பதைப் பரக்கப் பேசினார். இரண்டு: தமிழ் மரபின் மீது கவ்வியிருந்த வைதிக மரபை அகற்றித் தமிழ்ப் பண்பாட்டை மீளுருவாக்கிக் காட்டியுள்ளார். இதன் மூலம் தமிழ்ப் பண்பாட்டு மரபின் தொன்மையையும் தொடர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் மரபின் மீது தாக்குதல் ஏற்படுத்திய வைதிக மரபை நிராகரித்து, நாட்டார் மரபை அடையாளப்படுத்தினார். நாட்டார் வைணவம், நாட்டார் சைவம், சமண, பௌத்த மதங்களின் வீழ்ச்சி முதலானவற்றை முன்னெடுத்தார். இவை சார்ந்து பண்பாட்டு வரலாறு எழுதினார்.
- சுருக்கமாகச் சொன்னால் தமிழ் மரபின் தனித்துவத்தை உயர்த்திப் பிடித்தார். உயிர்ப்பலித் தடைச் சட்டம், சல்லிக்கட்டுக்குத் தடை வந்தபோது அறிவுத் தளத்தில் உரக்கப் பேசினார். தன் சுதேசியத்தால் தமிழியம் சார்ந்த ஆய்வுலகில் தொ.ப. எப்போதும் உயர்ந்து நிற்பார்.
நன்றி: இந்து தமிழ் திசை (02 – 03 – 2025)