TNPSC Thervupettagam

தமிழ் நாட்டின் ஒப்பந்தப் பண்ணையச் சட்டம்

November 16 , 2019 1693 days 4273 0

இதுவரை

  • வேளாண் மற்றும் விவசாயி நல அமைச்சகம் 2018 ஆம் ஆண்டு மே மாதம் முன்வைத்த மாதிரிச் சட்டத்தின் அடிப்படையில் ஒப்பந்தப் பண்ணையம் தொடர்பான சட்டத்தை இயற்றிய முதல் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
  • 2019 ஆம் ஆண்டின் தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்தப் பண்ணையம் மற்றும் சேவைகள் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டமானது கடந்த மாதம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலைப் பெற்றது.
  • ஒப்பந்தப் பண்ணையம் குறித்த மசோதாவை மாநிலச் சட்டமன்றம் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஏற்றுக் கொண்டது.

ஒப்பந்தப் பண்ணையச் சட்டம்

  • விவசாய விளைபொருட்களை/உற்பத்தியை உற்பத்தி செய்வதற்காக அல்லது கால்நடைகளை வளர்ப்பதற்காக விவசாயிக்கும் வாங்குபவருக்கும் இடையிலான ஒரு எழுதப்பட்ட ஒப்பந்தமாக இதனைச் சட்டம் வரையறுக்கின்றது.
  • இது முழு வேளாண் மதிப்புத்  தொடரிலும் அதாவது - முன் தயாரிப்புப் பணி முதல் உற்பத்திக்குப் பிந்தைய பணி  வரை அனைத்து முழு அளவிலான செயல்பாடுகளையும் உள்ளடக்கியுள்ளது.
  • மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் எதுவும் இச்சட்டத்தில் அனுமதிக்கப் படவில்லை.
  • இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது விவசாய விளைபொருட்களின் விலை, அளவு மற்றும் விநியோகப் பட்டியல் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
  • 110க்கும் மேற்பட்ட விவசாய விளைபொருட்களை உள்ளடக்கிய இந்தச் சட்டம், வாங்குபவர்கள் அனைவரும் தங்களை “அதற்கென நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரியின்” முன்னிலையில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
  • அதேபோல், ஒவ்வொரு ஒப்பந்தமும் சம்பந்தப்பட்ட அதிகாரியின் முன்னிலையில் பதிவு செய்யப்பட வேண்டும்.
  • இரண்டு வகையான ஒப்பந்தங்கள் இதில் உள்ளன
    • ஒன்று உற்பத்தி ஆதரவு (உள்ளீடுகள் வழங்கல் போன்றவை) மற்றும் கொள்முதல் குறித்த ஒப்பந்தம்
    • மற்றொன்று, வாங்குவதற்கு மட்டுமேயான ஒப்பந்தம்.
  • இந்தச் சட்டமானது, விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களை குத்தகைக்கு விடுவதற்கு அல்லது அதை வாங்குபவர்களுக்கு  அனுமதி அளிக்கும் அதே வேளையில், விவசாயிகளின் நிலங்களில் "எந்தவொரு நிரந்தரக் கட்டமைப்பையும் நிறுவுவதோ அல்லது எந்தவிதமான குத்தகை உரிமைகளையும் உருவாக்குவதையோ" தடை செய்கின்றது.
  • விவசாயிகள் அல்லது பொருள்களை வாங்குபவர்கள் என இரு தரப்பினருக்கும் இந்தச் சட்டத்தின் கீழான ஒப்பந்தங்களில் கையெழுத்திட எந்தவிதமான கட்டாயமும் இருக்காது.
  • இது "முற்றிலும் தன்னார்வ" அடிப்படையிலான ஒரு ஒப்பந்தமாக இருக்கும்.

சட்டத்தின்  உட்கூறுகள்

  • இந்தச் சட்டமானது விவசாயிகள், உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் விவசாய விளைபொருட்களை வாங்குபவர்கள் ஆகியோருக்கு அவர்களின் வணிகப் பரிவர்த்தனைகளுக்கான ஒரு சட்டப் பாதுகாப்பை வழங்குகின்றது.
  • தமிழ்நாட்டில் உள்ள பல விவசாயிகள் தங்கள் விவசாய விளைபொருட்களை தாவர அடிப்படையிலான அல்லது பயிர் சார்ந்த தயாரிப்புகளைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்கிறார்கள்.
  • விற்கப்படும் அளவு மற்றும் வாங்குவதற்குச் செலுத்தப்படும் ஒரு யூனிட்டிற்கான வீதம் (சிறிய அளவுகள், கிலோகிராம் அல்லது டன்) ஆகியவை பற்றி இந்த ஒப்பந்தங்கள் தயாரிப்பாளருக்கும் விளைபொருட்களை வாங்குபவருக்கும் இடையிலான வாய்மொழி உத்தரவாதத்தால் பொதுவாக முன்கூட்டியே தீர்மானிக்கப் படுகின்றன.
  • இருப்பினும், விளைபொருட்களை விற்பனை செய்யும் போது விவசாயிகள் எதிர்கொள்ளும் பொதுவான ஓர் பிரச்சனை என்னவென்றால், உற்பத்திப் பொருட்களின் விலை திறந்தவெளிச் சந்தையில் வீழ்ச்சியடையும் போது, நிறுவனங்கள் தங்கள் வாக்குறுதியை மதிக்காமல் திறந்தவெளிச் சந்தையில் இருந்து பொருட்களை வாங்க முடிவு செய்கின்றன.
  • அதிக அளவு  உள்ளீட்டுச் செலவுகள் காரணமாக இத்தகைய நிலைமை விவசாயிகளுக்கு பெருமளவில் விற்கப்படாத சரக்குகளையும் பெரும் இழப்புகளையும் ஏற்படுத்துகின்றது.
  • இந்தச் சட்டமானது விவசாயிகளுக்கு கடைசி நேர ஏமாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சட்டத்தைச் செயல்படுத்துவதை மேற்பார்வையிடும் அமைப்பான ஒப்பந்தப் பண்ணையம் மற்றும் சேவைகள் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) அதிகார அமைப்பை நிறுவுவதற்கும் இது வழிவகுக்கின்றது.
  • இந்த அதிகார அமைப்பில் ஒரு தலைவர் தலைமையில் வேளாண் தொழில் & விவசாயிகள் ஆகியோரின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயப் பொருளாதாரத் துறையில் சிறப்புமிக்க கள நிபுணர் ஒருவர் ஆகியோர் கொண்ட பத்து உறுப்பினர் இருப்பார்கள்.

இச்சட்டத்தின் கீழ் வரும் விளைபொருட்கள்

  • இந்த சட்டமானது விவசாயம், தோட்டக்கலை, தேனீ வளர்ப்பு, பட்டு வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு அல்லது வன நடவடிக்கைகளின் மூலமான விளைபொருள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • எவ்வாறாயினும், இந்தியாவில் சட்டவிரோதமான அல்லது சட்டத்தால் தடை செய்யப்பட்ட தயாரிப்புகள் எதுவும் இச்சட்டத்தில் இல்லை.

 

தமிழகம் உருவாக்கியத் தனிச் சட்டம்

  • ஒப்பந்தப் பண்ணையத்துக்கான ஒப்பந்தங்கள் குறித்த ஒரு பிரத்தியேக சட்டக் கட்டமைப்பு இல்லாதது, மாநிலத்தில் உள்ள அதிகாரிகளுக்கு பெரும் கவலை அளிப்பதாக இருந்தது.
  • அவர்கள் விவசாயிகள் மற்றும் வாங்குபவர்கள்/நிறுவனங்களுக்கு இடையில் பணம் செலுத்துவதில் தாமதம் தொடர்பான விஷயங்கள் உட்பட பல விஷயங்களில் தலையிடவும் பிரச்சனைகளைத் தீர்க்கவும் அடிக்கடி அழைக்கப்பட்டுக் கொண்டு இருந்தனர்.
  • மேலும், இந்த விஷயம் தொடர்பாக 1987 ஆம் ஆண்டின் மாநில வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்தல் (ஒழுங்குமுறை) சட்டத்தில் திட்டவட்டமாக எதுவும் குறிப்பிடப் படவில்லை.
  • இவை தவிர, கொடுக்கப்பட்ட சட்ட விதிகளின் கீழ், முறையான ஒப்பந்தப் பண்ணைய உடன்படிக்கைகள் தொடர்பான சர்ச்சைகளைத் தீர்ப்பதில் அவர்களுக்கு மிகக் குறைவான பங்கே இருப்பதாக அதிகாரிகள் கருதினர்.
  • சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களுக்கான நியாயம் எளிமையாக கிடைக்காது என்பதனால் வழக்குத் தொடர விரும்ப மாட்டார்கள்.
  • விவசாயச் சங்கம் மற்றும் தனியார் வர்த்தகர்கள் அல்லது நிறுவனங்களுக்கிடையேயான பரிவர்த்தனைகள் ஆகியவை பொதுவாக முறைசாராததாக இருப்பதால், மாநில அரசு, இந்தச் சட்டத்தை இயற்றுவதன் மூலம், அதை முறைப்படுத்த முயன்றது.
  • 2018 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில், தமிழக நிதியமைச்சர் தனது நிதிநிலை உரையில், “விவசாய உற்பத்தியைத் தக்க வைத்துக் கொள்வதற்கும், வேளாண் பதப்படுத்தும் தொழில்களை மேம்படுத்துவதற்கும்” ஒப்பந்தப் பண்ணையம் தொடர்பான ஒரு சட்டத்தை மாநில அரசு இயற்றப் போவதாக அறிவித்தார்.
  • விளைபொருட்களின் கடுமையான விலை ஏற்ற இறக்கக் காலங்களில் விவசாயிகளின் நலன்களை குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகளைப் பாதுகாப்பது, மற்றும் அவர்களது விளைபொருட்களுக்கு சிறந்த விலையை உறுதி செய்வது ஆகியவை இந்தச் சட்டத்தில்  உள்ள முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

சட்டம் பின்வருவனவற்றை கட்டாயப்படுத்துகின்றது

  • வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்தப் பண்ணையம் மற்றும் சேவைகள் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டத்தின் விதிகளின் படி, பயிர் உற்பத்தியாளர்கள் மற்றும் விளைபொருட்களை வாங்குபவர்கள் பரிவர்த்தனை விதிமுறைகளுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.
  • நூறு ரூபாய் மதிப்புள்ள முத்திரைத் தாளில் அதை மாவட்ட அளவில் நியமிக்கப்பட்ட அதிகாரி முன்னிலையில்  ஆவணப்படுத்த வேண்டும்.
  • இந்த ஆவணமானது இரு தரப்பினருக்கும் இடையிலான, சட்டத்தால் செயல்படுத்தக் கூடிய ஒரு ஒப்பந்தமாகக் கருதப்படும்.
  • இந்த ஒப்பந்தத்தில் விளைபொருட்களின் விற்பனை விலை மற்றும் பயிர் சுழற்சியின் முடிவில் வாங்குபவரின் வாங்கும் திறன் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.
  • இவற்றுடன் கூடுதலாக, பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ள தயாரிப்புகளின் குறிப்பிட்ட தரத்தையும் ஒப்பந்தத்தில் குறிப்பிடலாம்.

ஒப்பந்தத்தில் பிரச்சனை நிகழும் போது செய்ய வேண்டியவை

  • ஒப்பந்தத்தில் ஒரு பிரச்சனை இருக்கும் போது, இரு தரப்புகளும் பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் அல்லது மூன்றாம் தரப்பினரை மத்தியஸ்தம் செய்யுமாறு கேட்டுக் கொள்வதன் மூலம் இந்த விஷயத்தைத் தீர்க்கலாம்.
  • மாவட்ட துணைக் கோட்டப் பிரிவின் வருவாய்த்துறை அதிகாரி தலைமையில் ஒரு சமரச தீர்வுக் குழுவை அமைப்பதற்கும் இந்தச் சட்டம் அனுமதிக்கின்றது.
  • மேலும் இக்குழுவில் விவசாயிகள் அல்லது உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள், வேளாண் தொழில் மற்றும் ஒரு கள நிபுணர் ஆகிய மூன்று உறுப்பினர்களும் இருப்பார்கள்.
  • இரு தரப்புகளிடையே சமரசம் மற்றும் பேச்சுவார்த்தைகள் தோல்வியடையும் போது, பாதிப்புக்குள்ளான தரப்பானது, தீர்வுக்காக சமரசத் தீர்வுக் குழுவை அணுகலாம்.
  • இந்த விவகாரத்தை 30 நாட்களுக்குள் தீர்க்க இக்குழு கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் ஒரு சிவில் நீதிமன்றத்தின் ஆணைகளின் சக்தியைக் கொண்டுள்ளன.
  • குழுவின் முடிவில் இரு தரப்புகளும் மேல்முறையீடு செய்ய விரும்பினால், அவர்கள் மாவட்ட ஆட்சியரை அணுகவும் அனுமதிக்கப் படுவார்கள்.
  • நில வருவாயின் நிலுவைத் தொகையாக ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது.
  • மாவட்ட ஆட்சியரின் உத்தரவுகளை மாநில ஒப்பந்தப் பண்ணையம் மற்றும் சேவைகள் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) அதிகார அமைப்பின் மூலம் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தலாம்.

இந்தச் சட்டத்தில் விவசாயிகளுக்கு உள்ள சாத்தியக் கூறுகள்

  • இந்த சட்டத்தின் பிரிவு 22 (2) (1) என்பதின் படி, உற்பத்தி ஆதரவு மற்றும் கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் செயல்களைச் செய்தபின், விவசாய விளைபொருட்களின் ஒரு பகுதியை மற்றவர்களுக்கு விற்க விவசாயிகள் அனுமதிக்கப் படுகிறார்கள்.
  • இந்த விதியானது, தமிழக அரசின் அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த ஆண்டு தொடக்கத்தில் குஜராத்தின் உருளைக்கிழங்கு விவசாயிகள் மீது பெப்சிகோ நிறுவனம் வழக்குத் தாக்கல் செய்தது (பின்னர் அது திரும்பப் பெறப்பட்டது) போன்ற நிகழ்வுகளில் விவசாயிகள் அடுத்து மேற்கொள்ள வேண்டியவை குறித்து அறிய உதவும்.

ஒப்பந்தத்தை மீறுதல் அல்லது இணங்காமை 

  • ஒப்பந்தத்தை மீறுபவர் செலுத்த வேண்டிய இழப்பீடு மற்றும் சேதங்களைத் தவிர, எந்தவொரு தரப்பினராலும் ஒப்பந்தம் மீறப்பட்டால், இரு தரப்புகளும் அரசாங்கத்திற்கு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
  • விளைபொருட்களை வாங்குபவருக்கு ரூ.15000 வரை அபராதம் இருக்கும். விவசாயி/உற்பத்தியாளர் ஒப்பந்தத்தை மீறியதற்காக ரூ.1500 அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும்.

 

ó ó ó ó ó ó ó ó ó ó

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்