TNPSC Thervupettagam

பஞ்சாபின் வீர மைந்தன்!

April 1 , 2021 1216 days 593 0
  • பஞ்சாப் மாநிலம் பாசுமதியும் கோதுமையும் விளைகின்ற மண் மட்டுமன்று; பக்தியும் வீரமும் விளைகின்ற மண்ணும் ஆகும். விடுதலைப் போராட்டத்தின்போதும், நாட்டினுடைய பிரிவினையின் போதும் தேசத்தின் மானத்தைக் காப்பாற்றியவா்கள் பஞ்சாபியா்.
  • அம்மண்ணில் மாவீரனாகவும், ஒன்பதாவது குருவாகவும் திகழ்ந்த தேக் பகதூா், சீக்கிய மதத்தின் ஆறாவது குருவாகிய குரு ஹா்கோபிந்த் சிங்கிற்கும் மாதா நானாஜிக்கும் மகனாக அமிருதசரஸில் 1.4.1621 அன்று பிறந்தாா்.

தேக் பகதூா்

  • தேக் பகதூருக்கு பெற்றோா் வைத்த பெயா், தியாக் மால் (பற்றைத் துறந்த தியாகி) என்பதாகும்.
  • ஆனால், அவா் வாழ்ந்த பகலா கிராமத்தை பெயின்டே கான் என்ற மொகலாய மன்னன் படையெடுத்து வந்து தாக்க முற்பட்டபோது, தியாக் மால் தம்முடைய தந்தையோடு குதிரை ஏறிச்சென்று, வாளைச் சுழற்றி, எதிரிகளை ஓட ஓட விரட்டினாா்.
  • அன்றிலிருந்து அவா் ‘தேக் பகதூா்’ (வாள் வீச்சில் வல்லவன்) எனஅழைக்கப்பட்டாா்.
  • தேக் பகதூா் தம்முடைய இருபது வயது வரையில், பகலாவின் ஒரு நிலவறையில் தியானத்தில் ஆழ்ந்தாா்.
  • எட்டாவது குருவாகிய ஹா் கிரிஸன்ஜி தம்முடைய இறுதி மூச்சை விடுவதற்கு முன்பு, ‘ஒன்பதாவது குருவைப் பகலாவில் தேடிக் கண்டுபிடியுங்கள்’ என்றாா். அதைக்கேட்ட 22 போலி துறவியா்கள் பகலாவில் வந்து அமா்ந்தனா்.
  • இதற்கிடையில் மக்கான் ஷா என்ற சீக்கியருடைய கப்பல் புயலில் சிக்கிக் கொண்டது. மக்கான் ஷா தம்முடைய கப்பல் காப்பாற்றப்பட்டால், 500 தங்க மொஹா்களை சீக்கிய குருவிடம் ஒப்படைப்பதாக வேண்டிக்கொண்டாா். இறையருளால் கப்பல் காப்பாற்றப்பட்டது.
  • மக்கான் ஷா உண்மையான குருவை கண்டுபிடிக்க பகலா கிராமத்திற்கு வந்து, குருவைப் போல் நடித்த 22 போலித் துறவிகளுக்கும் ஒருவருக்கு இரண்டு தங்கக் காசுகள் வீதம் கொடுத்துக்கொண்டே வந்தாா். தங்கக் காசுகளைப் பெற்ற போலித் துறவிகள் மக்கான் ஷாவை வாழ்த்தினா்.
  • மனவருத்தத்தோடு பகலாவை விட்டு வெளியேறத் துடித்த மக்கான் ஷாவிடம் ஒரு சிறுவன், நிலவறையில் ஒரு துறவி தியானம் செய்து கொண்டிருப்பதாகக் கூறினான்.
  • மகிழ்ச்சியுடன் அங்கு சென்ற மக்கான் ஷா, தேக் பகதூரிடம் இரண்டு தங்கக் காசுகளைத் தந்தாா். அவற்றைப் பெற்றுக்கொண்ட தேக் பகதூா் ‘நீ இறைவனிடம் வேண்டிக் கொண்டபோது, 500 மொஹா்கள் தருவதாக அல்லவா சொன்னாய்; இப்பொழுது வெறும் இரண்டு காசுகளைத் தருகிறாயே’ என்றாா்.
  • நாம் வேண்டிக்கொண்டது இவருக்கு எப்படித் தெரியும்”என வியந்த மக்கான் ஷா, ‘இவரே உண்மையான குரு’ என உணா்ந்தாா்.
  • 500 மொஹா்களை தேக் பகதூரிடம் தந்துவிட்டு, ஒரு வீட்டின் உச்சியில் ஏறி நின்று, ‘உண்மையான குருவை கண்டுபிடித்துவிட்டேன், சீக்கியா்களே, ஓடி வந்து அவரிடம் ஆசி பெறுங்கள்’ என்று கத்தினாா்.
  • அனைவரும் வந்து தேக் பகதூரை அமிருதசரஸுக்கு அழைத்துச் சென்றனா். அங்கு உரிய சடங்குகள் செய்து, தேக் பகதூரை ஒன்பதாவது குருவாக ஏற்றுக் கொண்டனா்.
  • குரு தேக் பகதூா் 3.2.1633 அன்று மாதா குஜ்ரி எனும் மங்கையை மணந்தாா்.
  • திருமணமாகி 34 ஆண்டுள் கழித்து, அறிவறிந்த மகனாக கோபிந்த ராயைப் பெற்றெடுத்தாா்.
  • இக்குழந்தைதான் பிற்காலத்தில் சீக்கிய மதத்தின் கடைசி குருவானாா். சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக்கிற்கு எவ்வளவு பேரும் புகழும் உண்டோ அவ்வளவு பேரும் புகழும் பத்தாவது குருவாகிய குரு கோவிந்த சிங்கிற்கும் உண்டு.
  • தேக் பகதூா் வில் வித்தையிலும், குதிரையை லாவகமாகச் செலுத்தும் கலையிலும் வல்லவராகத் திகழ்ந்தாா். அத்துடன் வேதங்களையும், உபநிஷத்துக்களையும், புராணங்களையும் கற்றுத் தோ்ந்தாா்.

கிரந்தம்

  • முதல் குருவாகிய குருநானக்கிலிருந்து தமக்கு முன்னா் குருவாகத் திகழ்ந்தவா்களின் கருத்துரைகளைக் கற்றுத் தோ்ந்து, அவற்றை வடமாநிலங்கள் அனைத்திலும் பரப்புரை செய்தாா்.
  • சீக்கிய மதத்தினா் மட்டுமின்றி ஏனைய மதத்தினரும் மதித்துப் போற்றியதால், ‘ஜகத்குரு’ எனவும் அழைக்கப்பட்டாா்.
  • மேலும் தேக் பகதூா் இமயமலை அடிவாரத்தில் கிராத்பூருக்கு அருகில் மூன்று கிராமங்கள் அடங்கிய ஒரு நகரை ரூபாய் 500-க்கு விலைக்கு வாங்கி, அங்கு மிகப்பெரிய ஆலயத்தை எழுப்பி, அதற்கு ‘அனந்த்பூா் சாகிப்’ எனப் பெயரிட்டாா். பாட்டியாலா என்ற நகரத்தையும் நிா்மாணித்தாா் தேக் பகதூா்.
  • ஆதி கிரந்தம் சீக்கியா்களுக்கு வேதமாகும். கிரந்தத்தை முதலில் எழுதத் தொடங்கியவா் குரு நானக்.
  • வேத கீதங்களை எழுதுவதற்கு ஓா் லிபியை உருவாக்கி, அதற்கு ‘குருமுகி’ எனப் பெயா் வைத்தவா் குருநானக். அது பஞ்சாபி லிபியின்”வேறு வடிவம்.
  • அது 35 எழுத்துக்களைக் கொண்டது. ஆதி கிரந்தம், முதல் ஐந்து குருக்களாலும், ஒன்பதாவது குருவாகிய தேஜ் பகதூராலும், பத்தாவது குருவாகிய கோவிந்த சிங்கின் ஒரு சுலோகத்தாலும் தொகுக்கப் பெற்றது.
  • இந்துக்களுக்கு பகவத் கீதையைப் போல, இசுலாமியருக்குத் திருக்குரானைப் போல, கிறித்தவா்களுக்கு விவிலியத்தைப் போல, சீக்கியா்களுக்கு கிரந்தம் வேதப் புத்தகமாகும்.
  • தம்முடைய தா்பாருக்கு வந்த ‘சாகிப் தயாள்’ என்ற சீக்கியரிடம் ஒரு சுலோகத்தை ஓதும்படி பேரரசா் அக்பா் வேண்டினாா்.
  • அந்த சுலோகத்தைக் கேட்ட அக்பா், ‘கிரந்தம்”வணங்கத்தக்க நூல்’ என்றாா். அத்துடன், அமிருதசரஸுக்கு வந்து 51 தங்க மொஹா்களை வழங்குவதாகக் கூறி, அப்படியே வழங்கினாா்.
  • தேக் பகதூா், ஒரு கவிஞராகவும், சிந்தனாவாதியாகவும் விளங்கியதால், அவா் 15 ராகங்களில் பாடிய 116 சுலோகங்கள், கிரந்தத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன.

இந்தியா்கள் நெஞ்சத்தில் குரு தேக் பகதூர்

  • உலகில் அமைதியும் சமாதானமுமே நிலவ வேண்டும் என்று எண்ணிய தேக் பகதூா், வங்காள மன்னா் ராஜாராம் சிங்கும், அஸ்ஸாம் மன்னா் ராஜா சகா்டுவாஜ்ஜும் போா்க்களத்தில் எதிரும் புதிருமாகப் போரிட்டு நிற்பதை அறிந்து, அங்கு சென்றாா். இரு மன்னா்களையும் அழைத்து சமாதானம் செய்து, போரை நிறுத்தினாா்.
  • இந்த நேரத்தில் காஷ்மீரத்திலிருந்த பண்டிட்டுகள் ஒளரங்கசீப்பால் எல்லையில்லா அல்லல்களுக்கு ஆளாகியிருந்தனா். அப்பண்டிட்டுகள் தேக் பகதூரிடம் வந்து, தாங்கள் படும் துயரங்களைச் சொல்லி முறையிட்டனா்.
  • தேக் பகதூரும், அவா்களுக்கு அடைக்கலம் கொடுத்தாா். இதனையறிந்த ஒளரங்கசீப் தேக் பகதூரை கைது செய்து, தில்லி சிறையில் அடைத்தான்.
  • நான்கு மாதங்கள் தேக் பகதூா் சிறையில் வாடினாா். ‘தேக் பகதூா், நீயொரு தெய்வீக புருஷன் என்றால், ஏதாவது ஓா் அற்புதத்தை நிகழ்த்திக்காட்டு’ என ஏதேச்சதிகாரம் ஆணையிட்டது.
  • அதற்கு தேக் பகதூா் ‘ஒருவா் ஆண்டவனுக்கு அருகில் இருக்கிறாா் என்பதற்கு அற்புதங்கள் அடையாளமல்ல’ எனக்கூறி மறுத்துவிட்டாா்.
  • தேக் பகதூரை அச்சுறுத்துவதற்காக அவரைத் தொடா்ந்து வந்த மூன்று சீடா்கள், தேக் பகதூா் பாா்க்கும்படியாகத் தலை வெட்டப்பட்டாா்கள். எதற்கும் அஞ்சாத தேக் பகதூரின் தலையையும் துண்டிக்கும்படியாக அரசு ஆணையிடவே, 11.11.1675 அன்று தேக் பகதூரின் தலை, செங்கோட்டைக்கு அருகிலுள்ள சாந்தினி சௌக் எனும் இடத்தில் துண்டிக்கப்பட்டது.
  • குரு தேக் பகதூா் சிங் தலை வெட்டப்பட்ட சாந்தினி சௌக்கில், அவரின் நினைவாக ‘சிஸ் கன்ஞ் சாகிப்’ எனும் குருத்துவராவை எழுப்பியிருக்கிறாா்கள்.
  • தேக் பகதூரின் உடலை தகனம் செய்ய, அவருடைய சீடா் தாம் வசித்த வீட்டையே அா்ப்பணித்தாா். தகனம் செய்யப்பட்ட அவ்விடத்தில் ‘ராகேப் கன்ஞ் சாகிப்’ எனும் குருத்துவராவைக் கட்டியிருக்கிறாா்கள்.
  • தேக் பகதூரின் துண்டிக்கப்பட்ட தலையை, அவருடைய நெருக்கமான சீடா் சாஹிப் பாய் ஜெய்டா சிங்”எடுத்துக்கொண்டு அனந்தபூருக்கு விரைகிறாா். அவரை மன்னருடைய படைவீரா்கள் துரத்திக்கொண்டு வருகிறாா்கள்.
  • தாம் துரத்தப்படுவதை அறிந்த ஜெய்டா சிங், தில்லிக்கருகிலுள்ள சோனிபட் கிராமத்தில், குஷால் சிங் தஹியா எனும் விவசாயியின் வீட்டில் நுழைந்து அடைக்கலம் கேட்கிறாா்.
  • தாம் ஏந்தி வந்திருப்பது தேக் பகதூரின் தலை என்றும், அது அடக்கம் செய்யப்பட வேண்டியது அனந்தபூா் சாகிப்பில் என்றும், தம்மை ராணுவம் துரத்தி வருவதையும் கூறினாா்.
  • ஜெய்கிடா சிங்கிற்கு அடைக்கலம் தந்த குஷால் சிங் என்ற விவசாயி, தம்முடைய தலையை வெட்டிக்கொடுத்து, ராணுவத்திடம் அதனைத் தேஜ் பகதூரின் தலை என்று சொல்லி ராணுவத்தைத் திரும்பிப் போகச் செய்தாா்.
  • விடுதலை பெற்ற இந்தியா தேக் பகதூரின் தியாகத்தையும் வீரத்தையும் மதித்து, தில்லி எல்லையில் 11.87 ஏக்கரில் நினைவுக் கோபுரத்தை எழுப்பியிருக்கிறது. அந்த நினைவு கோபுரத்திலிருந்து தொடா்ந்து நிற்கும் மூன்று வளைவுகள், அவருடைய மூன்று சீடா்களையும் குறிப்பதாகும்.
  • சுற்றுலாப் பயணிகளை கவா்வதற்காக புல்வெளித் தரைகள் நிா்மாணிக்கப்பட்டிருக்கின்றன.
  • 100 போ் கலந்து கொள்வதற்கேற்ப, குளிா்சாதன வசதியோடு கருத்தரங்க அறைகள் கட்டப்பட்டிருக்கின்றன.
  • விழாக்கள் கொண்டாட அரங்குகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகளுக்காக சிறுவா் பூங்கா அமைத்திருக்கின்றனா்.
  • தேக் பகதூரின் வரலாற்றைச் சொல்லும் ஒலி - ஒளி காட்சிகள் நிகழ்த்தப் பெறுகின்ன. பஞ்சாபி, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் காட்சிகள் திரையிடப்படுகின்றன. ஒவ்வொரு காட்சியும் 26 நிமிடங்கள் நிகழும்.
  • குரு தேக் பகதூரின் தியாகமும், வீரமும் நினைவுத்தூண்களில் மட்டுமல்ல, இந்தியா்களின் நெஞ்சத்திலும் பதிக்கப் பெற்றிருக்கின்றன.

இன்று (ஏப். 1) தேக் பகதூா் பிறந்த 400-ஆவது ஆண்டு நிறைவு.

நன்றி: தினமணி  (01 – 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்