TNPSC Thervupettagam

பழங்கால புவி வெப்ப நிலைமையை கண்டுபிடிக்க உதவும் கடல்வாழ் உயிரினம்

January 12 , 2024 227 days 177 0
  • அந்தக்காலத்தில் வாழ்ந்த ஃபோராமினிஃபெரா (foraminifera) எனும் கடல் வாழ் உயிரினம் தன்னை சுற்றி CCaO3 எனும் கால்சியம் கார்பனேட் பொருளால் ஆன ஓடு கட்டி வாழும். மடிந்த பின்னர் கால்சியம் கார்பனேட் கடலடியில் வெங்காய தோல் போல அடுக்கு அடுக்காகப் படிந்து விடும். மேலே உள்ள அடுக்கு சமீபத்தில் இறந்த ஃபோராமினிஃபெராவின் ஓடுகளினால் ஆனது. கிழே உள்ள அடுக்குகள் காலத்தால் முந்தியவை.
  • கால்சியம் கார்பனேட் பொருளில் கார்பனும் உண்டு, ஆச்சிஜனும் உண்டு. இவற்றில் புவியின் வெப்பத்தை பொருத்து கார்பன்14 ஆக்சிஜன்18 ஆகிய ஐசோடோப்புகள் அளவு அமையும். கடலின் அடியில் உள்ள குறிப்பிட்ட கால்சியம் கார்பனேட் அடுக்கில் உள்ள கார்பன்14 அளவை வைத்து அந்த அடுக்கு உருவான முற்காலத்தில் வளிமண்டலத்தில் எவ்வளவு கார்பன் செறிவு இருந்தது என அறியலாம். அதிலிருந்து அந்தகால புவி வெப்ப நிலைமையை கண்டறியலாம். அதே போல குறிப்பிட்ட அடுக்கில் கூடுதல் அளவு ஆக்சிஜன்18 இருந்தால் புவி குளிர் நிலைமையில் இருந்தது என அறியலாம்.

ஊசலாடும் புவி வெப்பம்

  • இது தொடர்பாக விஞ்ஞானிகள் கணினிசிமுலேஷன் செய்து பார்த்தனர். வளிமண்டலத்தில் இந்தளவு கார்பன் டை ஆக்சைடு அந்த அளவு சல்பர் டை ஆக்சைடு இருந்தால் புவி வெப்பம் என்னவாகும் என சிமுலேஷன் வழியே கணிதம் செய்தனர்.
  • இதனை கடலின் அடியில் உள்ள கால்ஷியம் கார்பனேட் அடுக்கு தரவோடு பொருத்திப் பார்த்தனர். இதன் அடிப்படையில் வளிமண்டலத்தில் இந்த இரண்டு வாயுக்களின் விகிதம் எப்படி மாறி மாறி வந்துள்ளது என அறிந்தனர். இதன் வழியே அடுக்கடுக்காக உள்ள கால்சியம் கார்பனேட் அடுக்குகளில் உள்ள கார்பன்14 ஆக்சிஜன்18 அளவை அளந்து பார்த்த போது சுமார் 50,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை புவி வெப்ப நிலைமை கூடி குறைந்து ஊசல் ஆடியது வெளிப்பட்டது.
  • அதாவது தக்காண எரிமலை வெடித்துச் சிதறியபோது புவியை வெப்பம் அடைய செய்யும் கார்பன்டை ஆக்சைடு உமிழ்தலும் குளிர செய்யும் சல்பர் டை ஆக்சைடு உமிழ்தலும் ஒரு சேர ஒரே அளவில் நடைபெறவில்லை. மேல்கீழ் மாறி மாறிச் சாய்ந்தாடுகிற ஊஞ்சல் ஆட்டம் போல ஒன்று கூடுதலாகவும் பின்னர் குறைவாகவும் மாறி மாறி உமிழும் படியாக இருந்தது என புலனாகியுள்ளது.

பேரிடலிருந்து தப்பிய உயிர்கள்

  • படிப்படியாகப் புவியின் வெப்பநிலை மாறினால் அதற்கு ஏற்ற வகையில் உயிரினங்கள் தன்னை தானே தகவமைத்துக் கொண்டு பரிணாம படிநிலை வளர்ச்சி அடையும். ஆனால் எதிரும் புதிருமாக மாறி மாறி புவி வெப்பம் கூடி குறைந்தால் தாக்குப்பிடிக்க முடியாமல் டைனசோர்ஸ் போன்ற உயிரிகள் மட்டுமல்ல தாவரங்கள், தாவரங்களை மட்டும் உண்ணும் தாவர உண்ணிகள், தாவர உண்ணிகளை மட்டும் உண்ணும் புலால் உண்ணிகள் என சங்கிலித் தொடராக நான்கில் ஒரு பகுதி உயிரினங்கள் நசிந்து அழிந்தன.
  • பூச்சிகளை உண்ணும் உயிரிகள், மடிந்த உயிரிகளை உண்ணும் உயிரிகள் மற்றும் சிறு அளவில் உருவம் கொண்ட விலங்குகள் போன்றவை மட்டுமே எட்டு லட்சம் வருடம் தொடர்ந்த பேரிடரிலிருந்து தப்பி பிழைத்தன.
  • இந்த ஆய்வின் இறுதியில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போலத்தான் விழுந்த விண்கல் எனவும் டைனசோர்கள் போன்ற உயிரினங்களை அழித்து ஒழித்தது முக்கியமாகத் தக்காண பகுதியில் உருவான தொடர் எரிமலைதான் என முடிவுக்கு வந்துள்ளார்கள்.

நன்றி: இந்து தமிழ் திசை (12 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்