TNPSC Thervupettagam

மதக் கோட்பாடுகளில் பொது சிவில் சட்டம் தலையிடாது

August 11 , 2023 346 days 194 0
  • "மதக் கோட்பாடு என்பது வேறு; மத நடைமுறை என்பது வேறு. பொது சிவில் சட்டம் மதக் கோட்பாட்டில் தலையிடாது" என்கிறார் பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன்.
  • “பொது சிவில் சட்டம் என்பது பாஜகவின் செயல்திட்டம் அல்ல. இது நமது அரசியல் சாசன முன்னோடிகள் பேசிய விஷயம். அரசியல் நிர்ணய சபையில் இது மிகப் பெரிய விவாதப் பொருளாக ஆகி இருக்கிறது. அரசியல் நிர்ணய சபை என்ன முடிவு எடுத்தது என்றால், நாடு சுதந்திரம் அடைந்ததும் உடனடியாக அதனை குடியரசு என அறிவிக்க வேண்டும் என்பதற்காக, விவாதம் நீண்டு கொண்டே சென்ற விஷயங்களை வழிகாட்டு நெறி முறைகளின் கீழ் கொண்டு வந்தது. அப்படி வழிகாட்டும் நெறிமுறைகளின் கீழ் கொண்டு வரப்பட்ட விஷயங்களில் ஒன்று தான் பிரிவு 44-ல் உள்ள பொது சவில் சட்டம். எனவே, அரசியல் நிர்ணய சபை முன்னோடிகளின் அங்கீகாரம் பெற்ற ஒரு விஷயம் இது. அரசியல் நிர்ணய சபையின் ஒப்புதல், அங்கீகாரம் இதற்கு உள்ளது.
  • நமது நாட்டின் நீதிமன்றங்களும் பொது சிவில் சட்டத்தை தொடர்ந்து வலியுறுத்தி இருக்கின்றன. உச்ச நீதிமன்றம் மட்டுமே இதுவரை 5 முறை பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. பல்வேறு உயர் நீதிமன்றங்களும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளன. சில நீதிமன்றங்கள், பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வராமல் இன்னும் ஏன் தாமதிக்கிறீர்கள் என்றுகூட அரசை நோக்கி கேட்டிருக்கின்றன. ஏனெனில், தற்போதைய நிலையில், பல்வேறு சிவில் வழக்குகளில் நீதிமன்றத்திடம் தீர்வு இல்லை. எனவே, பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று நீதிமன்றங்கள் வலியுறுத்துகின்றன.
  • அரசியல் சாசன அங்கீகாரம், நீதிமன்ற அங்கீகாரம் உள்ள ஒரு விஷயம் இது. பொது சிவில் சட்டம் கட்டாயம் தேவை என எங்கள் கட்சி கருதுகிறது. ஜனசங்கம் (பாஜகவின் முந்தைய வடிவம்) காலத்தில் இருந்தே இதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தேர்தல் அறிக்கைகளிலும், தீர்மானங்களிலும் இதை நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். புதிதாக தூங்கி எழுந்து கனவு கண்டு நாங்கள் இதைக் கூறவில்லை. எங்கள் செயல்திட்டத்தில் இது எப்போதுமே இருக்கிறது.
  • பொது சிவில் சட்டம் என்பது மத வழிபாட்டில், மத சுதந்திரத்தில் தலையிடக்கூடிய விஷயம் என்று சிலர் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். இது உண்மை அல்ல. பொது சிவில் சட்டம் என்பது திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், சொத்துரிமை, உயில் எழுதுவது, தத்துக் கொடுப்பது ஆகிய விஷயங்களில் பொதுவான சட்ட நடைமுறை இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தக் கூடியது மட்டுமே. முஸ்லிமோ, கிறிஸ்தவரோ, இந்துவோ அவர்கள் யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும், எந்த மத அடிப்படையில்; எந்த சடங்குகளின் அடிப்படையில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் எந்த தலையீடும் இருக்காது. எந்த ஒரு மதத்திலும் அதன் கோட்பாடுகளில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களில் பொது சிவில் சட்டம் தலையிடாது.
  • மதக் கோட்பாடு என்பதையும் மத நடைமுறை என்பதையும் இரண்டாகப் பிரிக்க வேண்டும். கோட்பாடுகளில் பொது சிவில் சட்டம் தலையிடாது. அதேநேரத்தில், மத நடைமுறை எனும் பழக்க வழக்கங்களில் இது மாறுதலை ஏற்படுத்தும். உதாரணத்திற்கு, இஸ்லாமியர்கள் பின்பற்றும் விவாகரத்து முறை என்பது மதக் கோட்பாட்டின் கீழ் வராது. உடனடி முத்தலாக் என்பது தங்கள் நடைமுறை என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். ஆனால், உடனடி முத்தாலாக்கை 17 முஸ்லிம் நாடுகள் தடை செய்துள்ளன. 18வது நாடாகத்தான் இந்தியா தடை செய்துள்ளது. ஏனெனில், இஸ்லாத்தில் அப்படி இல்லை. அதேபோல், முஸ்லிம் ஆண்கள் 4 திருமணம் செய்து கொள்ளலாம் என்பதும் அவர்களின் மத கோட்பாடு அல்ல. அவர்களின் வழக்கத்தில் வேண்டுமானால் அது இருந்திருக்கலாம். எனவே, இதில் தலையிடுவது என்பது மதத்தில் தலையிடுவதாக, மத சுதந்திரத்தில் தலையிடுவது என்பதாக ஆகாது.
  • இந்துக்களில்கூட கடந்த காலங்களில் 12 வயதில், 13 வயதில் திருமணங்கள் நடந்தன. குழந்தைத் திருமணங்களை தடை செய்து பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18; ஆண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21 என்று நாம் மாற்றினோம். இந்துக்களில் பலதார திருமண முறை இருந்தது. அதை ஒருதார திருமண முறையாக அம்பேத்கர் மாற்றினார். இந்துக்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஏனெனில், இதற்கும் மதத்திற்கும் தொடர்பு இல்லை. வழக்கத்தில் இருந்த ஒரு விஷயம்; அவ்வளவுதான். தீண்டாமை என்பதும் நடைமுறையில் இருந்தது. அதை தடை செய்து, மீறுபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.
  • சீக்கியர்களை எடுத்துக்கொண்டால், அவர்களின் குருவான குருகோவிந்த் சிங், சீக்கியர்களுக்கு எவை எல்லாம் அடிப்படை என்பதை சொல்லி இருக்கிறார். தாடி வைத்திருக்க வேண்டும், தலையில் நீண்ட சிகை வைத்திருக்க வேண்டும், கத்தி வைத்திருக்க வேண்டும், வெள்ளியில் கங்கணம் அணிந்திருக்க வேண்டும், கவுபீணம் (கச்சை) அணிந்திருக்க வேண்டும் என அவர் கூறி இருக்கிறார். ஒரு ஆண் இந்த ஐந்தையும் பின்பற்றினால்தான் அவர் சீக்கியர் என அந்த மதத்தில் வரையறுக்கப்பட்டிருக்கிறது. அரசு அதில் தலையிட முடியாது. ஏனெனில், அது அவர்களின் அடிப்படை மதக் கோட்பாடு. ஆனால், ஒரு சீக்கியர் எத்தனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது பற்றி குருகோவிந்த் சிங் எதையும் சொல்லவில்லை. எனவே, பலதார திருமண முறைக்கு அவர்கள் உரிமை கோர முடியாது. முஸ்லிம்களும் அப்படித்தான். பல முஸ்லிம் நாடுகள் பலதார திருண முறையை தடை செய்துள்ளன.
  • விவாகரத்து விஷயத்தில் இஸ்லாமியர்களுக்கு தனி நடைமுறை இருக்கிறது. விவாகரத்தில் பொதுவான நடைமுறை வர வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். இங்கு மதக் கோட்பாட்டையும், மத நடைமுறையையும் இரண்டாகப் பிரிக்க வேண்டும். இஸ்லாத்தில் ஒரு நடைமுறை இருக்கிறது என்று சொன்னால், அது இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று ஆகிவிடாது. காரணமே இல்லாமல் விவாகரத்து செய்யுங்கள் என்று நபிகள் நாயகம் சொல்லி இருக்கிறாரா? அது முஸ்லிம்களின் மத கோட்பாட்டில் வரக்கூடியதா? இல்லையல்லவா? அவர்கள் ஒரு வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். விவாகரத்து என்று வரும்போது அவர்களும் சரியான காரணம் சொல்ல வேண்டும் என்று சொல்லலாம் அல்லவா?
  • ஷா பானு வழக்கில் என்ன ஆனது? அவருக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதற்காக, அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தி சட்டத்தையே மாற்றினார் இல்லையா? அப்படி இருக்க வேண்டாம் என்று நாங்கள் சொல்கிறோம். ஜீவனாம்சம் கொடுக்க வேண்டுமா கூடாதா என்பதில் இஸ்லாத்தில் கடுமையான விதிகள் எதுவும் கிடையாது. அவர்கள் சில விஷயங்களை நடைமுறையில் வைத்திருக்கிறார்கள். அவற்றை காலத்திற்கு ஏற்றதுபோல மாற்றிக்கொள்ள வேண்டும்.
  • ஷரியத் சட்டம்தான் இஸ்லாமியர்களுக்கு இருக்க வேண்டும் என்று சிலர் வாதிடுகிறார்கள். ஆனால், ஷரியத் சட்டம் எப்போது வந்தது? 1937-ல்தான் ஷரியத் சட்டம் வந்தது. பிரிட்டிஷ் அரசுக்கும் ஜின்னாவுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சட்டமாக அது கொண்டு வரப்பட்டது. ஆயிரம் வருடங்களாக இந்தியாவில் இஸ்லாம் இருக்கிறது. 1937க்கு முன் இந்தியாவில் முஸ்லிம்களுக்கான சட்டம் எது? 1937க்கு முன் எந்த சட்டத்தின் அடிப்படையில் அவர்கள் சொத்துரிமை, ஜீவனாம்சம், திருமணம், விவாகரத்து ஆகியவற்றை மேற்கொண்டார்கள். அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில்கூட இந்தியாவில் ஷரியத் சட்டம் இல்லையே. ஜின்னாதான் அதை கொண்டு வந்தார்.
  • இது குறித்து அரசியல் சாசன சபையில் பேசிய அம்பேத்கர், 'ஆயிரம் ஆண்டுகளாக ஒவ்வொரு பகுதியிலும் முஸ்லிம்கள் வாழக்கூடிய இடத்தில் உள்ளூர் வழக்கம், நடைமுறை என்ன இருந்ததோ அதைத்தான் முஸ்லிம்களும் பின்பற்றினார்கள். உதாரணத்திற்கு, கேரளாவில் மறுமக்கள் தாயகம் என்ற முறை இருந்தது. அதாவது, அம்மா சொத்து மகளுக்குச் செல்லும், பிறகு பேத்திக்குச் செல்லும். அதாவது தாய்வழி முறைப்படி சொத்து உரிமை மாறும். அங்கு வசித்த மாப்ளா மஸ்லிம்கள் அதே முறையைத்தான் பின்பற்றினார்கள். ஷரியத் என்பது இப்போது வந்ததுதானே' என்று கூறி இருக்கிறார்.
  • தத்தெடுப்பதை இஸ்லாம் தடை செய்திருக்கிறது. முகம்மது நபி அதை தடை செய்திருக்கிறார். ஆனால், ஜின்னா அதை மாற்றி ஷரியத் சட்டப்படி தத்தெடுக்கலாம் என்று கொண்டு வந்தார். அதேபோல், இஸ்லாமிய சட்டத்தில் உயில் எழுதக்கூடாது என்று இருக்கிறது. உயில் எழுதலாம் என ஷரியத் சட்டத்தில் ஜின்னா கொண்டு வந்தார். இஸ்லாத்தில் பெண்களுக்கு சொத்துரிமை எப்படி இருக்க வேண்டும் என்பதை முகம்மது அலி ஜின்னா மாற்றி இருக்கிறார்.
  • அதேபோல், சொத்து விவகாரத்தில் நிலச்சுவான்தாரர்களுக்கு சாதகமாக ஷரியத் சட்டத்தை ஜின்னா கொண்டு வந்தார். ஏனெனில், இன்றைய பாகிஸ்தானில் முஸ்லிம் லீக்கை ஆதரித்தவர்களில் பலர் மிகப் பெரிய நிலச்சுவான்தாரர்கள். அவர்களுக்கு சாதகம் செய்ய வேண்டும் என்பதற்காக இஸ்லாத்தில் இருப்பதுபோல் இல்லாமல் சட்டத்தை ஜின்னா மாற்றினார். இஸ்லாத்தில் சொல்லப்படாத விஷயங்கள், இஸ்லாத்தில் மறுக்கப்பட்ட விஷயங்கள் பல ஷரியத் சட்டத்தில் இருக்கின்றன. இவை குறித்து நீதிமன்றங்களில், விவாத அரங்கங்களில் விவாதம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. முஸ்லிம்கள் தரப்பில் யாரும் இதை மறுக்கவில்லை.
  • 140 கோடி மக்கள் வாழக்கூடிய ஒரு நாட்டில், ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு நடைமுறை என்று இருக்கும்போது நிறைய சட்டச்சிக்கல்கள் ஏற்படுகின்றன. வழக்குகளை நடத்துவதில் சிரமங்கள் இருக்கின்றன. மதம் சார்ந்த காரணங்களுக்காக சொத்து சம்பந்தப்பட்ட ஆயிரக் கணக்கான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இவற்றுக்கு தீர்வு காண வேண்டுமானால், பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்” என்கிறார் ராம சீனிவாசன்.

நன்றி: இந்து தமிழ் திசை (11  – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்