TNPSC Thervupettagam

மத்திய நிதிநிலை அறிக்கை 2021-22

February 12 , 2021 1240 days 4444 0
  • 2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தாக்கல் செய்தார்.
  • இது டிஜிட்டல் வழியில் தாக்கல் செய்யப்பட்ட முதல் மத்திய நிதிநிலை அறிக்கையாகும்.
  • இந்த நிதியாண்டுக்கான திட்டங்கள் ஆறு கருத்துருக்களின் அடிப்படையில் முன் வைக்கப் பட்டுள்ளன. அவை
    • சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு,
    • நிதி மூலதனம் மற்றும் உள்கட்டமைப்பு,
    • இலட்சிய இந்தியாவை உள்ளடக்கிய வளர்ச்சி,
    • மனித மூலதனத்தைப் புத்துயிரூட்டல்,
    • புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, மற்றும்
    • குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுகை என்பவையாகும்.
  • சுதந்திர இந்தியாவின் முதல் நிதிநிலை அறிக்கையானது 1947 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப் பட்டது
  • நிதிநிலை அறிக்கையில் 2020-21 ஆம் ஆண்டை விட 2021-22 ஆம் ஆண்டில் சுகாதாரம் மற்றும் நல்வாழ்விற்கான செலவினம் 137% அதிகரிப்பைக் கொண்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் தூய்மை:

  • முதன்மை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதாரச் சேவை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக பிரதான் மந்திரி ஆத்மநிர்பர் ஸ்வஸ்திய பாரத் யோஜனா என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது.
  • 112 இலட்சிய மாவட்டங்களில் ஊட்டச்சத்து விளைவுகளை மேம்படுத்த மிஷன் போஷான் 2.0 என்ற திட்டம் தொடங்கப்படும்.

  • 32 விமான நிலையங்கள், 15 கடல்பகுதித் துறைமுகங்கள் மற்றும் நிலப்பகுதித் துறைமுகங்கள் ஆகியவற்றின் நுழைவுப் பகுதிகளில் 17 புதிய பொது சுகாதார அலகுகள் செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்படும்.
  • நாடு முழுவதும் சிறந்த நீர் விநியோகத்தை அளிப்பதை நோக்கமாகக் கொண்ட நகர்ப்புற ஜல் ஜீவன் என்ற திட்டம் தொடங்கப்படும்.
  • நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டம் வலுப்படுத்தப் படும்.

கல்வி:

  • 100 புதிய சைனிக் பள்ளிகள் அமைக்கப்பட உள்ளன.
  • பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் 750 ஏகலவ்யா பள்ளிகள் அமைக்கப்பட உள்ளன.
  • லடாக்கில் ஒரு மத்திய பல்கலைக்கழகம் வர உள்ளது.

உள்கட்டமைப்பு:

  • பழைய மற்றும் தகுதியற்ற வாகனங்களை வெளியேற்ற வாகன உடைப்புக் கொள்கை கொண்டு வரப்படும்.
  • இதன் கீழ் அனைத்து வாகனங்களும் ஒவ்வொரு 20 வருடங்களுக்கும் (தனிநபர் வாகனங்கள்) மற்றும் ஒவ்வொரு 15 வருடங்களுக்கும் (வணிக வாகனங்கள்) தானியங்கி தகுதி மையங்களில் தகுதிச் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
  • கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் நெடுஞ்சாலை மற்றும் சாலை மேம்பாட்டுப் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • சொத்துப் பணமாக்குதல் செயல்முறையைக் கண்காணிக்க தேசிய சொத்துப் பணமாக்குதல் என்ற திட்டம் தொடங்கப் படும்.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் எதிர்காலத்தின் தேவைக்கேற்ற வகையில் இரயில்வே அமைப்பைக் கொண்டு வர தேசிய இரயில் திட்டம் ஒன்று உருவாக்கப்படும்.

  • இரயில்வேயில் 100% மின்மயமாக்கல் 2023 ஆம் ஆண்டிற்குள் முடிக்கப்பட உள்ளது.
  • 27 நகரங்களில் புது மெட்ரோ ரயில் சேவைகள் அறிவிக்கப் பட்டுள்ளன, மேலும் அதோடு சேர்த்து கொச்சி மெட்ரோ, சென்னை மெட்ரோவின் 2ஆம் கட்டம், பெங்களூரு மெட்ரோவின் 2A மற்றும் B கட்டம், நாசிக் மெட்ரோ மற்றும் நாக்பூர் மெட்ரோ ஆகிய திட்டங்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு உள்ளது.
  • பசுமை ஆற்றல் மூலங்களிலிருந்து ஹைட்ரஜனை உருவாக்க தேசிய ஹைட்ரஜன் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
  • துறைமுகங்களின் மறுசுழற்சி திறன் 2024 ஆம் ஆண்டிற்குள் இரட்டிப்பாக்கப்பட உள்ளது.

  • ஜம்மு-காஷ்மீரில் எரிவாயு குழாய்த் திட்டம் அமைக்கப்பட உள்ளது.
  • மேலும் 1 கோடிப் பயனாளிகளுக்கு பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (எல்பிஜி திட்டம்) நீட்டிக்கப்பட உள்ளது.

வரி:

  • ஓய்வூதியம் மற்றும் வைப்புத் தொகையிலிருந்து வட்டி பெறும் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • வருமான வரி மதிப்பீடு தொடர்பான வழக்குகளை மீண்டும் விசாரிக்கும் வசதிக்கான காலக்கெடு 6 ஆண்டுகளிலிருந்து 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
  • இருப்பினும், கடுமையான வரி ஏய்ப்பு வழக்குகளில் (ரூ .50 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்டவை) இது 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம்.
  • மலிவு விலையில் அமைந்த வீட்டுவசதித் திட்டங்கள் ஒரு வருடத்திற்கு வரி விலக்கு பெறும்.
  • ரூ. 5 கோடிக்கு மிகாத மொத்த ஆண்டு வருவாய் கொண்ட சிறிய அறக்கட்டளைகளின் இணக்கச் சுமை எளிதாக்கப்பட உள்ளது.

  • தாமிரக் கழிவுகள் மீதான வரி 2.5% ஆக குறைக்கப் பட்டுள்ளது.
  • தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி விகிதங்கள் மாற்றி யமைக்கப்படவுள்ளன.
  • நாப்தா மீதான வரி 2.5% ஆகக் குறைக்கப் பட்டுள்ளது.
  • சோலார் இன்வெர்ட்டர்களுக்கான வரி 5% முதல் 20% வரை உயர்த்தப் பட்டது.
  • சூரியஒளி விளக்குகளின் வரி 5% முதல் 15% வரை உயர்த்தப் பட்டது.
  • அனைத்து நைலான் தயாரிப்புகளுக்கும் 5% சுங்க வரி விதிக்கப் படும்.
  • சுரங்க அகழெந்திரங்கள் 7% சுங்க வரியை ஈர்க்கும்.
  • பருத்தி மீதான சுங்க வரி 0% என்ற அளவிலிருந்து 10% ஆக உயர்த்தப் பட்டது.
  • யூரியா, ஆப்பிள், கச்சா சோயாபீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய், கச்சா பாமாயில், காபூலி சன்னா மற்றும் பட்டாணி உள்ளிட்ட பொருட்கள் மீது விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி முன்மொழியப் பட்டுள்ளது.

பொருளாதாரம் மற்றும் நிதி:

  • நிதிப் பற்றாக்குறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5% ஆக உள்ளது; இது 2021-22 ஆம் ஆண்டில் 6.8% ஆக இருக்குமென மதிப்பிடப் பட்டுள்ளது.
  • இந்த ஆண்டு மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 4% வரை கடன்களை உயர்த்த மாநிலங்களை அனுமதிக்கும் திட்டம் முன்மொழியப் பட்டு உள்ளது.
  • செபி சட்டம், டெபோசிடரிஸ் சட்டம் மற்றும் வேறு இரண்டு சட்டங்களின் விதிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் ஒரு ஒருங்கிணைந்த ஆவணச் சந்தைக் குறியீடு உருவாக்கப் பட உள்ளது.
  • அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை 49% என்ற அளவிலிருந்து 74% ஆக உயர்த்த முன்மொழியப் பட்டுள்ளது .
  • பாதிப்புக்குள்ளான கடன்களைக் கையகப்படுத்த ஒரு சொத்துப் புனரமைப்பு நிறுவனம் அமைக்கப்படும்.
  • வங்கி வைப்புத் தொகையாளர்களுக்கு வைப்புத் தொகைக்கானக் காப்பீடு ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ.  5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

  • இரண்டு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஒரு பொதுக் காப்பீட்டு நிறுவனத்திலிருந்து  இந்த ஆண்டு முதலீடு திரும்பப் பெறப்பட உள்ளது.
  • ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் ஆரம்பப் பொது பங்கு விடுப்புகள் இந்த நிதியாண்டில் அறிமுகம் ஆகும்.
  • BPCL, IDBI வங்கி, ஏர் இந்தியா ஆகியவற்றின் மூலோபாய விற்பனை முடிக்கப்பட உள்ளது.

வேளாண்மை:

  • வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக விவசாய உள்கட்டமைப்பு நிதி எளிதில் கிடைக்கும் வண்ணம் இருக்குமாறு நிறைவேற்றப் பட்ட உள்ளது.
  • மேலும் 1,000 மண்டிகள் தேசிய வேளாண் சந்தை இடத்தில் ஒருங்கிணைக்கப்பட உள்ளன.
  • சென்னை, கொச்சி, பாரதீப் உள்ளிட்ட இடங்களில் ஐந்து முக்கிய மீன்பிடி மையங்கள் உருவாக்கப்பட உள்ளன.
  • தமிழ்நாட்டில் ஒரு பல்நோக்கு கடற்பாசிப் பூங்கா நிறுவப்பட உள்ளது.

வேலைவாய்ப்பு:

  • நிறுவனம் சாரா நிரந்தரமற்ற தொழிலாளர்கள் (gig workers) மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் பற்றிய தகவல்களைப் பராமரிக்க ஒரு தளம் தொடங்கப்பட உள்ளது.
  • நிறுவனம் சாரா நிரந்தரமற்ற தொழிலாளர்கள் மற்றும் நடைபாதைத் தொழிலாளர்கள் ஆகியோருக்குச்  சமூகப் பாதுகாப்பு விரிவாக்கப்பட உள்ளது.

  • ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டத்தின் மூலம் கடன்களுக்குத்  தேவையான குறைந்தபட்ச மூலதனமானது எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் போன்றச் சமூகத்தினருக்கு 25% என்ற அளவிலிருந்து 15% ஆக குறைக்கப்பட உள்ளது.

- - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்